பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

25/01/2020

மன்னித்துவிடு மகாத்மா!

- ஆதலையூர் த.சூரியகுமார்

மகாத்மா காந்தி
(பலிதான தினம்: ஜனவரி 30, 1948)

(நினைவஞ்சலிக் கவிதை)

புயலொன்று புறப்பட்டுவந்தபோது,
ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க.
அணைகள் கட்டிப் பார்த்தார்கள் தடுக்க.
நீ மட்டும்தான் பூவாக நின்று போராடினாய்.

அன்னியர்கூட்டம் அணு ஆயுதம் ஏந்தி நின்றபோது
நீ மட்டுமே அன்பை ஆயுதமாக ஏந்தி நின்றாய்.
முரட்டுக் கூட்டங்களுக்கு முன் நீ முன்வைத்ததெல்லாம்
முன்பு யாரும் சொல்லாத மந்திரம்.
அடக்குமுறைக் கரங்களுக்கு
அஹிம்சையைப் பரிசளித்தாய்.
விலங்கு பூட்டிய கைகளுக்கு
விருதுகள் கொடுத்தாய்.
தேசத்தைப் பிடித்தவர்களை
நேசத்தைக் கொட்டி விரட்டினாய்.
உலக வரலாற்றில் நீ மட்டுமே
புதிய பக்கத்தைப் புரட்டினாய்.

உன் நடைபாதை
எங்கள் புனிதப் பயணத்துக்கு வழிகாட்டியது.
உன் உடைபாதை
எங்கள் பொருளாதார வாழ்வுக்கு ஒளி கூட்டியது.

உன் வெள்ளைக் கதர் ஆடையை சில
கருப்பு மனிதர்கள் அணிந்திருப்பதற்காக
நாங்கள் வேதனைப்படுகிறோம் மகாத்மா.
அது மட்டுமல்ல-

எங்களை மன்னித்துவிடு.
தேசத்துக்கே ஊன்றுகோலான
உன் கைத்தடியைத் தொலைத்துவிட்டு
திண்டாடி நிற்கும் எங்களை மன்னித்துவிடு.

No comments:

Post a Comment