பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

உலகநீதி (கவிதை)

 -உலகநாதர்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
      ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
      போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!      

#1

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
      நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
      நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
      அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!     

#2

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
      மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
      தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
      சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!      

#3

குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
      கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
      கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
      கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!      

#4

வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
      மனையாளை குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
      வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
      தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!      

#5 

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
      முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
      வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன்ஒரு வள்ளிபங்கன்
      திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!      

#6 

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
      கணக்ழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
      பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
      எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
      குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!      

#7 

சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
      செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
      உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
      பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!      

#8 

மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
      மனம்சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
      காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
      புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கை உமைமைந்தன் எங்கோன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!      

#9 

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
      வாதாடி வழக்ழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
      தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
      ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளிபங்கன்
      குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே!      

#10 

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
      அதுஏது இங்குஎன்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
      சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்றுத்த மருத்துவச்சி கூலி
      மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
      ஏதெது செய்வானோ ஏமன்றானே!      

#11 

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
      கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
      துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
      வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!      

#12 

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
      அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
      உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
      கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
      பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே!      

#13 

***

குறிப்பு:

உலகநாதர்

தமிழ் நீதிநூலான உலகநீதியை இயற்றியவர் உலகநாதர்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகநாத பண்டிதர் இந்த நூலை இயற்றினார் என்ற கருத்தும் உண்டு.

இந்நூலில் 13 விருத்தப்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளது.

இந்நூல் கூறும் அறிவுரைகள், எதனைச் செய்ய வேண்டாம் என்று  எதிர்மறையாக அமைந்துள்ளன. (எ.கா: ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்).

 

 

No comments:

Post a Comment