16/09/2021

குயில் பாடிய குயில் (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 9)

ஓராயிரம் குயில்கள்
    உட்காரும் சோலையிலே
ஒருகுயில் கண்டானடி- பாரதி
    உடன் குயிலானானடி!

தேராயிரம் தவழும்
    செந்தமிழ் வீதியிலே
தேரொன்று கொண்டானடி- பாரதி
    சிலையென் றமர்ந்தானடி!

காராயிரம் மிதக்கும்
    ககனத்திலே பறந்து
காரினுள் ஒளிந்தானடி-பாரதி
    கவிமழை பொழிந்தானடி!

தானென்றகந்தை கொண்டு
    தலைசாய்க்கும் மன்னர் முன்னும்
நானென்று நின்றானடி- பாரதி
    நாட்டினை வென்றானடி!

பத்துவிரல்களுள்ளும்
    பாட்டினை ஊற்றிவைத்து
முத்தாய் உதிர்த்தானடி- பாரதி
    முடிகொண் டமர்ந்தானடி!

காணி நிலத்தை எண்ணிக்
    கனிந்து கிடந்த மன்னன்
மாநிலம் பெற்றானடி- மேலும்
    வானையும் தொட்டானடி!

பாரதி பாடிவைத்த
    பாடலுக் கீடுவைக்க
யார்கவி செய்வாரடி- பாவலர்
    வேறெதைச் சொல்வாரடி?

  • காண்க: கவியரசு கண்ணதாசன் 

No comments:

Post a Comment