16/11/2021

கலெக்டர் வின்ச் - வ.உ.சி. சம்பாஷனை (கவிதை)

-மகாகவி பாரதி

வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: 1872 செப். 5 - மறைவு: 1936 நவ. 18)


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 46)

1

கலெக்டர் வின்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்


நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
    நாட்டினாய்—கனல்—மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
    மாட்டுவேன்—வலி—காட்டுவேன். 1
(நாட்டி) 

கூட்டங் கூடி வந்தே மாதரமென்று
    கோஷித்தாய்—எமை—தூஷித்தாய்,
ஓட்ட நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
    ஓட்டினாய்—பொருள்—ஈட்டினாய் 2
(நாட்டி) 

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
    கூறினாய்—சட்டம்—மீறினாய்,
ஏழைப் பட்டிங் கிறத்த லீழிவென்றே
    ஏசினாய்—வீரம்—பேசினாய் 3
(நாட்டி) 

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
    ஆக்கினாய்—புன்மை—போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
    மீட்டினாய்—ஆசை—யூட்டினாய்  4
(நாட்டி) 

தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத்
    தூண்டினாய்—புகழ்—வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
    காட்டினாய்—சோர்வை—யோட்டினாய் 5
(நாட்டி) 

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
    ஏவினாய்—விதை—தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
    செய்யவோ?—நீங்கள்—உய்யவோ? 6
(நாட்டி) 

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
    சொல்லுவேன்—குத்திக்—கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
    தள்ளுவேன்—பழி—கொள்ளுவேன்.  7
(நாட்டி) 


2.
கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி


சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
    துஞ்சிடோம்—இனி—அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
    ஏற்குமோ—தெய்வம்—பார்க்குமோ? 1

வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
    வாழ்த்துவோம்—முடி—தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
    ஈனமோ ?—அவ—மானமோ ? 2

பொழுதெல்லா மெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு
    போகவோ?—நாங்கள்–—சாகவோ?
அழுதுகொண் டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
    அல்லமோ?—உயிர்—வெல்லமோ? 3

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
    நாய்களோ?—பன்றிச்—சேய்களோ?
நீங்கள் மட்டு மனிதர்க ளோவிது
    நீதமோ?—பிடி—வாதமோ? 4

பார தத்திடை யன்பு செலுத்துதல்
    பாபமோ?—மனம்—தாபமோ?
கூறு மெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
    குற்றமோ—இதிற்—செற்றமோ? 5

ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
    தோர்ந்திட்டோம்—நன்கு—தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
    மலைவுறோம்—சித்தம்—கலைவுறோம் 6

சதையைத் துண்டுதுண் டாக்சினு மன்னெண்ணம்
    சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே விலங்கு மஹாபக்தி
    யேகுமோ?—நெஞ்சம்—வேகுமோ? 7



No comments:

Post a Comment