16/08/2020

இலக்கியத்தின் எதிரிகள்

-ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம்


ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது, குறை மட்டுமல்ல குற்றமுமாகும்.

பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூகச் சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்ல முடியாது. ஆம், அந்தத் திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது.

இலக்கியத் துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ரா.வுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.

ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ரா.வுக்கு அவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்ப முடியும்?

ஆயினும், இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், 'ஆராய்ச்சி' என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் ஈ.வெ.ரா-வுக்குத் தொழிலாகிவிட்டது. வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.

இப்போது ஈ.வெ.ரா., கம்பராமாயணத்தையும் அதில் கடவுளாக வர்ணிக்கப்படும் ராமனையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யப் புறப்பட்டிருக்கிறார். முன்னொரு முறையும் அவர் கம்ப ராமாயண எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், கண்டனக் கணைகள் உடலைத் துளைத்ததால் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டார். இப்போது அரசியல் துறையில் அவருடைய வட்டாரத்திற்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு விட்டது. பொருளாதாரத் துறையோ அவருக்குப் புரியாத விஷயம். பூர்ஷ்வாக்களின் நண்பரான அவருக்கு அது பிடிக்காத விஷயமுமாகும். சமூக சீர்திருத்தத் துறையிலும் அவருடைய 'சரக்குகளு'க்கு மார்க்கெட் இல்லை. ஆகவே, இடைக்கால இயக்கமாக கம்ப ராமாயண எதிர்ப்பு நாடகத்தை நடத்தப் புறப்பட்டிருக்கிறார். அதற்கு ஆரம்ப ஒத்திகையாக ராமன் சிலைகளை உடைக்கப் போகிறாராம்.

சிலை உடைப்பு ஒருபுறம் இருக்கட்டும். கம்ப ராமாயணத்தை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வோம். அயோத்தி ராமனை 'மன்னன்' என்று மட்டுமே வால்மீகி சொன்னாராம். ஆனால், தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் ராமனைக் கடவுளாக்கி விட்டாராம். ஆகவே வால்மீகி ராமாயணப் பிரசாரம் செய்வதன் மூலம் கம்ப ராமாயணத்தின் கடவுள் தன்மையை எதிர்க்கப் புறப்பட்டிருக்கிறார் ஈ.வெ.ரா.

ராமன் சாதாரண மன்னனா? சர்வ லோகத்தையும் படைத்துக் காத்து அருள் புரியும் கடவுளா? இந்த விவாதத்தில் நான் இங்கு ஈடுபடப் போவதில்லை. அது சமயப் பிரசாரகர்களின் வேலை. ஆனால், தமிழ் மக்களுக்கு ராமனைக் கடவுளாக அறிமுகப்படுத்திய முதற் கவிஞர் கம்பர் அல்லர். அவருக்கு முன்பே அகில இந்தியாவிலும்- ஏன்? நமது தாயகமாம் தமிழகத்திலும் ராமன் கடவுளாகவே கருதப்பட்டு வந்திருக்கிறான்.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ, கம்பருக்கு முற்பட்டவர். ஆம், கம்பர் தோன்றி ராமாயணத்தைத் தமிழில் எழுதுவதற்கு முன்பே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது
மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!
-என்ற வரிகள் சிலப்பதிகாரத்துள் 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகின்றன. இவ்வரிகளில் இராமன் 'திருமால்' என்ற தெய்வமாகவே அறிமுகப்படுத்தப் படுகின்றான். மற்றும் 'ஊர்காண்காதை'யில்,
தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ?
என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, "அவர் நான்முகனைப் பெற்ற திருமால்" என்றே தெரிவிக்கின்றார். மற்றும், ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.

பெரியார் ஈ.வெ.ரா. சிலப்பதிகாரத்தைக் கருத்தூன்றிப் படித்திருப்பாராயின், ராமனைக் கடவுளாக்கியது கம்பர்தான் என்று கூற மாட்டார்.

சிலப்பத்காரத்துக்கு முன்பே இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் கூட ராமனைப்பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிலும் ராமன் வழிபடும் கடவுளாகவே வர்ணிக்கப்படுகின்றான்.

கடவுள் மனித உடல் தாங்கி மண்ணுலகில் பிறப்பதில்லை என்பது மதவாதிகளும் அறிந்த உண்மைதான். ஆனால்; மண்ணுலகில் வாழ்வாங்குவாழ்ந்த மனிதர்களை விண்ணுறையும் தெய்வமாக எண்ணுவது மதவாதிகளின் மரபு. அந்த மரபு வழிதான் மண்ணாண்ட மன்னனான ராமபிரான், தம்முடைய ஒழுக்கம், உயர்குணம், ஏகபத்தினி விரதம், அரக்கத் தன்மையை அழித்த ஆற்றல், அரசுரிமையைத் துறந்த தியாகம் ஆகியவற்றிற்காகத் தெய்வமாக எண்ணப்பட்டான். பெரியார் ஈ.வெ.ரா. போற்றிப் புகழும் திருக்குறளும்,
வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
-என்றே கூறுகின்றது. இதற்காக ஈ.வெ.ரா. திருக்குறளுக்கும் தீ வைப்பாரா? அல்லது இந்தக் குறளையேனும் எடுத்தெறிவாரா? முடியாதே!

சிலப்பதிகாரத்துள் கதாநாயகியான கண்ணகிதேவி மனித வடிவந்தாங்கி மாநாய்க்கனுக்கு மகளாய்ப் பிறந்தவள்தான். ஆயினும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெண்ணுலகத்திற்குப் பெருமை தேடிய காரணத்தால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டாள்.

"அயோத்தி வேந்தன் தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகின்றதே, இது அடுக்குமா? பெண்ணுலகம் அங்கீகரிக்குமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் ஈ.வெ.ரா. வடமொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகியும் சரி; அந்தக் காப்பியத்தின் கட்டுக்கோப்புக் குலையாமல் தமிழில் எழுதிய கம்பரும் சரி; தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை "மணந்து வாழ்ந்த" சம்பவத்தைச் சிறப்பித்துக் கூறவில்லை, உண்மையில், அது நிகழ்ந்த சம்பவமும் அல்ல; கவிஞன் வால்மீகியின் கற்பனைச் செய்தியே. அதைக் கம்பனும் அப்படியே ஒலிபரப்பி யிருக்கிறான். இதை மெய்யென்று நம்பிய ஈ.வெ.ரா.வின் அறிவுக்கு எனது அனுதாபம் உரித்தாகுக!

வரலாற்றுச் சம்பவங்களும், கவிஞனின் கற்பனைகளும் கலந்துதான் காப்பியம் உருவாகின்றது. ராமாயணக் காப்பியம் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. காப்பியத்தில் வரும் செய்திகளையெல்லாம் உண்மைச் சம்பவங்களாக நம்பிவிடுவது அப்பாவித்தனம். காப்பியப் புலவன் நடந்த சம்பவங்களை மட்டுமே கூறும் சரித்திர ஆசிரியன் அல்லன். நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, நடக்க வேண்டும் என்று தாம் விரும்பும் நல்ல எண்ணங்களையும் அவற்றோடு இணைத்து விடும் லட்சியவாதி,

கவிஞனுடைய கற்பனைகள் இருவகைப்படும்.

நிகழாத, ஆனால் மனித சக்தியால் நிகழ்த்தக்கூடிய கற்பனைகள் ஒருவகை. நிகழாதது மட்டுமல்லாமல், மனித சக்தியால் நிகழ்த்த முடியாததுமான கற்பனைகள் இன்னொரு வகை. அவற்றில், தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்ததாகக் கூறப்படும் செய்தி, இரண்டாவது வகையைச் சேர்ந்த- மனித சக்தியால் சாத்தியமில்லாத - கற்பனையாகும். இதை ஈ.வே.ரா. புரிந்துகொள்ள வேண்டும். மனித சக்தியை மீறிய கற்பனைச் சம்பவத்தை வால்மீகி போன்ற பெரும் புலவர், ராமாயணம் போன்ற பெருமை மிக்க காப்பியத்தில் சேர்க்கக் காரணம் என்ன?

24 ஆயிரம் சுலோகங்களால் பிரம்மாண்டமான காப்பிய மாளிகையைக் கட்டி முடித்த வால்மீகியும் சரி, பன்னீராயிரம் கவிதைகளில் ராமாயணத்தைத் தமிழில் எழுதிய கம்பரும் சரி, ஈ.வெ.ராவை விட அறிவில் குறைந்தவரல்லர். பொய் சொல்லிப் பணம் திரட்ட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்க முடியாது.

பின் எதற்காக நடக்க முடியாத சம்பவத்தைக் கற்பனை செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது கஷ்டமல்ல; சுலபந்தான்.

ராமாயண காப்பியத்தின் தலைவன் ராமனே ஒழிய, அவன் தந்தை தயரதன் அல்லன். ஆகவே காப்பியத்தின் கருப்பொருளை- அதன் பயனை ராமனிடம் காண முயல வேண்டுமேயன்றி, தயரதனிடம் காண முயற்சி செய்யக் கூடாது.

ராமனிடம் காணும் நற்பண்புகள் பலவற்றுள்ளும் தலையாயது அவன் கடைப்பிடிக்கும் ஏகபத்தினி விரதமே. காப்பியத் தலைவனிடம் காணப்படும் இந்த உயர் பண்பையே காப்பியத்தின் கருப்பொருளாகவும் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், ஏக பத்தினி விரதத்தை மனித சமுதாயத்திற்கு, குறிப்பாக அரச பரம்பரைக்கு அறிவுறுத்தவே வால்மீகி முனிவர் ராமாயணத்தை இயற்றினாரென்று சொல்லலாம்.

மேலும், ராமாயணம் இயற்றப்படும் காலம் வரை இல்வாழ்க்கையில் 'ஒருத்திக்கு ஒருத்தன்' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதுபோல, 'ஒருத்தனுக்கு ஒருத்தி' என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆம், பெண் கற்பு வற்புறுத்தப்பட்டதேயன்றி ஆண் கற்பு வற்புறுத்தப்படவில்லை. இந்தக் கொடுமைக்கு எதிராக ஆண் கற்பைப் போதிக்கின்றது ராமாயணம்.

தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்தவன்; மைந்தன் ராமனோ எகபத்தினி விரதன்! இல்வாழ்க்கைப் பண்பில் எத்தகைய புரட்சிகரமான மாற்றம்!

இவர்களில், ஈ.வெ.ரா, பின்பற்ற வேண்டியது தயரதனை அல்ல. ராமபிரானையே! அப்படியிருக்க, ராமனை மறந்து தயரதனை நினைத்துக் கொள்வானேன்?

ராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப்படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். 'பலதார மணம்' என்ற தவறின் சிகரத்தில் தயரதனை எற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களேயன்றி ஆத்திரப்பட மாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார்.
அவருடைய ரஸிகத்தன்மையை என்னென்பது!

ராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாதென்கிறார் ஈ.வெ.ரா. எவ்வளவுதான் உயர் குணத்தவனாயினும் மனிதனை தெய்வமாகக் கருதுவது கூடாது என்றால், அந்த வாதத்திற்கு மதிப்புத் தரலாம். தெய்வ வழிபாடே கூடாதென்றாலும், அதை நாத்திகத் தத்துவமாகவேனும் கணக்கில் வைக்கலாம். ஆனால், ராமன் வடநாட்டான்; ஆகவே தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாது என்று வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமேயன்றி அறிவுவழிப் போராட்டமன்று.

மொழிவழி இனத்தின் உரிமைகளுக்கு எல்லை இருப்பது போல அதன் பண்புகளுக்கும் எல்லையுண்டு. ஆனால், சமயவழிப் பண்புகளுக்கு எல்லை கிடையாது. சர்வ உலகத்திலும் அது வியாபித்திருக்கிறது. சமயம் தெய்வீக சக்தியின் நிழலாகத்தானே கருதப்படுகின்றது! தங்கள் அரசியலுக்கும் மொழிக்கும் எல்லை கண்ட பண்டைத் தமிழ் மூவேந்தர் கூட தெய்வ வழிபாட்டுக்கும் சமய நெறி வளர்ச்சிக்கும் எல்லை கண்டார்கள் இல்லை. சங்ககாலத் தமிழகத்திலேயே வேங்கடத்திற்கு வடக்கே நிலவி வந்த சகல சமயங்களும், சமயக் கடவுளர்களும் தெற்கே நம் தமிழகத்திலும் பரவியிருந்ததுண்டு. காரணம், சமயம் தனிப்பட்ட மனிதனின் புனிதமான உரிமையாகக் கருதப்பட்டதுதான். அதனாற்றான், மன்னர் குலத்தின் மாணிக்கமான ராமனையும் தமிழ்நாட்டவர் தங்கள் தெய்வமாகக் கருதினர். தெய்வ வழிபாட்டில் தவறில்லை என்றால் இதிலும் தவறிருக்க முடியாது. ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. தெய்வ வழிபாட்டிலேயே நம்பிக்கை அற்றவர். ஆகவே, அவர் ராமனைத் தெய்வமாக ஏற்க மறுப்பதைக் கண்டு வியப்பதற்கில்லை. ராமன் வடநாட்டுத் தெய்வம் என்று அவர் கூறுவது தமிழ் நாட்டவரின் இன உணர்ச்சியை நாத்திகப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் தந்திரமாகும்.

ஈ.வெ.ரா. தற்போதைக்கு ராமாயணத்தை மட்டுமே எதிர்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் எனப்படும் எல்லா நூற்களுக்குமே அவர் எதிரிதான். முன்னொரு சமயம், சேக்கிழார் இயற்றிய சைவ சமயக் காப்பியமான பெரிய புராணத்தை எதிர்த்தார்; தீயிலிட்டுக் கொளுத்தவும் தேதி நிச்சயித்தார். பின்னொரு கலத்தில் சிலப்பதிகாரத்தைத் தமிழாகக் கழகத்தார் போற்றுகின்றார்கள் என்பதற்காக ஈ.வெ.ரா. வாயில் வந்தபடி தூற்றினார். இதற்கெல்லாம் முன்பு பெண்கள் அடிமைப் பட்டதற்கே திருக்குறள்தான் காரணம் என்று அவர் நூல் எழுதியதும் உண்டு. ஆம், சுருங்கச் சொன்னால், ஈ.வெ.ரா. இலக்கியங்களின் எதிரி - கடவுள் நெறியின் எதிரி, ஒரு வார்த்தையில் சொன்னால் நாட்டில் நடைமுறையிலிருக்கும் நல்லதற்கெல்லாம் எதிரி!

பழைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்துமே வரலாற்று நிகழ்ச்சிகளென்று நாங்கள் நம்பி விடுவதில்லை. அதுபோல, இலக்கியத்தில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே கற்பனை என்றும் நாங்கள் எண்ணுவதில்லை. வரலாற்றுச் செய்திகளும், கவிஞனின் கற்பனைகளும் கலந்ததுதான் காப்பியம் என்பது தமிழரசுக் கழகத்தாரின் திடமான கருத்து. இந்தக் கண்ணோட்டத்துடன்தான் நாங்கள் கம்பராமாயணத்தைக் காண்கிறோம்.

கம்பர், பல தெய்வங்கள் உண்டென்று நம்புவோருக்கு எதிராக ஒரே தெய்வக் கொள்கையை வற்புறுத்தி இருக்கின்றார்.

கம்பரின் கடவுள் நெறி
உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே!
-என்பது கம்பர் இயற்றிய ராமாயண நூலின் துவக்கத்திலுள்ள காப்புச் செய்யுள். இதில் சமயவாதிகள் இட்ட வேலிகளுக்கும், புராணங்கள் புகல்கின்ற நாம- ரூப பேதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரே தெய்வத்தையே வழிபடுகின்றார் கம்பர். அதையும் 'தலைவர்' என்ற பொதுப் பெயராலேயே குறிப்பிடுகின்றார்.

பால காண்டத்திலுள்ள உலாவியற் படலத்திலும். ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்து,
தோள்கண்டார் தோளேகண்டார்
தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார்
உருவு கண்டாரை ஒத்தார்!
-என்று பாடுகின்றார். இந்தப் பாடலிலும், தெய்வங்கள் பல உண்டு என்று நம்புவோரின் கொள்கையைக் கம்பர் நையாண்டி செய்கிறார். ஆம், கடவுட் கொள்கையில் கம்பர், வள்ளுவரையே பின்பற்றுகிறார். ஆகவே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உடைய தமிழரசுக் கழகத்தார் அந்தக் கொள்கைவழிக் காப்பியம் எழுதிய கம்பனைப் போற்றுவதில் தவறு இருக்க முடியாது அல்லவா?

சமூகக் காப்பியம் 

கம்ப ராமாயணம் வைணவருக்கு மட்டுமே உரிய சமயக் காப்பியம் அன்று. சமுதாயம் முழுவதுக்கும் பயன்படத்தக்க சமூகக் காப்பியம் ஆகும். இது தமிழரசுக் கழகத்தாரின் நம்பிக்கை மட்டுமன்று; நாட்டின் நடைமுறைச் சம்பவங்களால் உறுதிப்படும் உண்மையுமாகும்.

ஒரு கூட்டத்தார் கம்ப ராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதை எதிர்த்துத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார் பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை.

கம்பருடைய காப்பியத்தின் சுவைகளையெல்லாம் திரட்டி 'கம்ப ராமாயண சாரம்' என்ற பெயரால் நூல் இயற்றினார் வெ.ப.சுப்பிரமணிய முதலியார்.

கம்பருடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்வதற்கென்றே தம் வாழ்நாட்களை யெல்லாம் அர்ப்பணம் செய்தார் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்.

கம்பர் தமிழில் இயற்றிய ராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகுக்கும் அறிவித்தார் வ.வே.சு.ஐயர்.

இந்தப் பெரியார்களெல்லாம் சைவர்களேயன்றி வைணவர்களல்லர். அவர்கள் கம்ப ராமாயணத்தை வைணவ சமயக் காப்பியமாக அல்லாமல்,சைவருக்கும் உரிய சமூகக் காப்பியமாகவே எண்ணினர் என்பது வெளிப்படை. அவர்கள் மட்டுமல்ல. இஸ்லாமிய, கிறித்துவ சமயங்களைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பலரும் கம்ப ராமாயணத்தைப் போற்றிப் புகழ்கின்றனர்.

சர்வதேசக் கண்கொண்டு பழைய காப்பியங்களை ஆராயும் மனப்பான்மை உடைய மார்க்ஸீய வாதிகள்கூட, கம்பனுடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்கின்றனர் என்றால், தமிழரசுக் கழகத்தார் கம்பரைப் போற்றுவதில் அதிசயம் என்ன இருக்கிறது!

கம்ப ராமாயணம் தமிழில் தோன்றிய மூல காப்பியமன்று. வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டதுதான். இதை தமிழரசுக் கழகத்தார் அறிவர். உலகில் மொழிவழி நாடுகளும் இனங்களும் பலவாயினும் மனித சமுதாயம் ஒரே உலக லட்சியத்தை நோக்கியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாட்டினரின் கருத்துக்களையும் கதைகளையும் இன்னொரு நாட்டினர் விரும்பி ஏற்பது வெறுக்கத் தக்கதன்று. ஆகவே, கம்பர், வால்மீகி ராமாயணக் கதையையொட்டி தமிழில் ராமாயணம் எழுதியது தவறன்று.

கம்பர் சிறந்த பகுத்தறிவாளர். அதனாற்றான், வால்மீகி ராமாயணத்திலுள்ள சம்பவங்கள் ஒவ்வொன்றையும் வரலாற்று நிகழ்ச்சிகளாக நம்பிவிடாமல், தமிழகத்தின் நெறிக்கும் தான் வாழ்ந்த காலத்தின் நிலைமைக்கும் ஏற்ப அக்காப்பியத்தைத் திருத்தியமைத்தார்.

பெண்ணுரிமைப் பிரகடனம்

சங்ககாலத் தமிழகம் பெண்ணடிமை பேணாதது. ஆனால், கம்பர் காலத்திலே தமிழகத்தில் ஆண்களின் ஆதிக்கம் அரும்பெடுத்து விட்டது. ஆகவே, கம்பர் ராமாயணத்தின் மூலம் பெண்ணுரிமைப் பிரகடனம் செய்தார்.
பெருந் தடங்கண் பிறைநுத லார்கலெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே.
-என்ற பாடலில் பெண்கள் செல்வத்திலும் கல்வியிலும் ஆண்களோடு சரிநிகர் சமானமென இருந்ததாகக் கூறுகின்றார். இது அயோத்தியில் கம்பன் கண்ட காட்சியன்று. வருங்காலத் தமிழகத்துப் பெண்கள் எப்படியிருக்க வேண்டுமென்று கூறும் லட்சியக் கற்பனையே.

கம்பர் செய்யும் பெண்ணுரிமைப் பிரகடனம் தமிழரசுக கழகத்தார் காண விரும்பும் புதிய தமிழகத்தில் அமுல் நடத்தப்படும். ஆகவே, இவ்விஷயத்தில் கம்பர் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டி.

கம்பர் குடியரசுவாதி

கம்பர் முடிமன்னர் ஆட்சியில் பிறந்து வாழ்ந்தவர். அவர் காலம் வரை தமிழகம் குடிமக்களுக்குத் தீங்கிழைத்த கொடுங்கோலரைக் கண்டதில்லை. ஆயினும் கம்பரின் உள்ளம் முடியரசு முறைக்கு எதிரான குடி அரசையே நாடியது.

தயரத மன்னன் குடிமக்கள் வழிபட்ட கோவேந்தன் என்பதை,
வயிரவான் பூணணி மடங்கன் மொயம்பினான்
உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்
செயிரில வுலகிற் சென்று நின்றுதீர்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
-என்ற வரிகளில் நமக்கு நினைப்பூட்டுகின்றார். அயோத்தியில் மன்னன் ஆட்சி நடப்பினும் மக்களில் ஒவ்வொருவரும் தாம் தாமே முடிசூட்டிக் கொண்டு ஆள்வது போல நினைத்தனராம். இதை,

"தத்தமக்குற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்" என்ற வரிகளில் சுட்டிக் காட்டுகின்றார்.

காப்பிய முறைப்படி கம்பர் தமது குடியரசு லட்சியத்தை அயோத்தி மன்னன் மீதும், மக்கள் மீதும் வைத்துக் கூறியிருபபினும், குடியாட்சி முறையில் தமக்குள்ள ஆவலையே இங்கு உணர்த்துகின்றார்.

எனவே தமிழரசுக் கழகத்தார் மட்டுமல்லாமல் குடியரசுக் கொள்கையில் நாட்டமுடைய ஒவ்வொருவரும் கம்பருடைய காப்பியத்தில் வரும் லட்சியக் காட்சிகளைக் கண்டு மகிழ்வது இயற்கை.



குறிப்பு:

தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என்ற பெயரில் சில நீசர்கள் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் தமிழ் இலக்கியங்களையும் இழிவு செய்வதைத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சமுதாயம் கோபம் கொண்டு வெடித்திருப்பதையும் காண்கிறோம். 

இந்நிலையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னம், இதே நாத்திகப் பிரசாரத்தை மேற்கொண்ட ஈ.வெ.ரா.வுக்கு தனது ‘தமிழ் முரசு’ பத்திரிகையில் சாட்டையடி கொடுத்தார், தமிழர் தலைவர் திரு. மபொ.சிவஞானம். அவரது கட்டுரை இங்கு நன்றியுடன் பிரசுரிக்கப்படுகிறது.


காண்க:


No comments:

Post a Comment