15/03/2021

பங்குனி -2021 மின்னிதழ்


 உள்ளடக்கம்

1. அமுதமொழி- 15

-பங்கிம் சந்திர சட்டர்ஜி

2.  திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் (கவிதை)

-காரைக்கால் அம்மையார்

3.  பங்குனித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

4.  குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)

-வ.வே.சு.ஐயர்

5.  பத்திரிகை துறையின் வழிகாட்டி!

-முத்துவிஜயன்

6.  வந்தேமாதரம்- கவிதை (தமிழாக்கம்)

-மகாகவி பாரதி

7.  அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 7

-பொன்.பாண்டியன்

8.  அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் -8

-பொன்.பாண்டியன்

9.  துர்க்கா ஸுக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு

10.  சமண சமய ஸ்தாபகர்

-சேக்கிழான்

11. யாழ்நூல் வழங்கிய துறவி!

-ஆசிரியர் குழு



.

அமுதமொழி- 15

 




இறைவனின் படைப்பினில் பெண்ணே 
மிகச் சிறந்த மணிமுடி போன்றவள்.
பெண்ணே ஒளி; ஆண் அவளது நிழல்!


-பங்கிம் சந்திர சட்டர்ஜி




.

திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் (கவிதை)

-காரைக்கால் அம்மையார்

 

 கொங்கை திரங்கி நரம்பெழுந்து

  குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்

  நீள்கணைக் காலோர்பெண்பேய்

தங்கி அலறி உலறுகாட்டில்

  தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  1

பங்குனித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு


பகத் சிங்

பங்குனி மாதm அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், பங்குனித் திங்கள் 
 (14.03.2021 - 13.04.2021)

குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)

-வ.வே.சு.ஐயர்


(தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை)

வ.வே.சு. ஐயர்


அறிமுகம்:

தேசபக்தரும், பன்மொழி அறிஞருமான வ.வே.சு.ஐயர் அவர்களின் இச்சிறுகதை தமிழ்ச் சிறுகதைகளுக்கான முன்னோடி. இவருடைய இந்தக் கதை விவேகபோதினி என்ற மாத இதழில் 1915 செப்டம்பர், அக்டோபர் இதழ்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. 

சிறுகதைகள் வெளிவந்த காலத்தில் அதன் போக்கு எங்ஙனம் இருந்தது என்பதை அறிய இச்சிறுகதை பெரிதும் உதவுகிறது. இப்பகுதியில் கதைச்சுருக்கம், படைப்பாளர் சிந்தனை, இலக்கியத் தரம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

கதைச் சுருக்கம்:

கதையை, குளத்தங்கரையில் இருக்கும் அரச மரம் ஒன்று கண்டும், கேட்டும் கூறுவதுபோல் திரு.வ.வே.சு.ஐயர்  எழுதியுள்ளார். பிராமணக் குடும்பத்திலிருக்கும் சிக்கல், சமூகச்சிக்கலாக வெளிப்படுத்தப்படுகிறது. கதைத்தலைவியின் அன்பு, பண்பு, அழகினை அரசமரம் ரசனையுடன் கூறுவதன் மூலம் நம் மனத்தில் பதிய வைக்கிறார் கதாசிரியர். 

கதைத் தலைவி ருக்மணிக்கு அவளின் 12ஆம் வயதில் நாகராஜனுடன் திருமணம் நிகழ்கிறது. அவளுக்குத் திருமண உறவு நிகழும் முன்னரே அவள் தந்தைக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழையாகி விட, நாகராஜன் வீட்டார் அவளைத் தள்ளி வைத்துவிட்டு அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்து விடுகின்றனர். இதுபற்றி ருக்மணி நாகராஜனிடம் பேசும்போது, ‘தாய், தந்தையின் வார்த்தைகளைத் தட்ட முடியாது. ஆனால் நான் உன்னைக் கைவிட மாட்டேன்’ என்று ஆறுதல் கூறுகிறான். நாகராஜனின் எண்ணம், பெற்றோரின் பேச்சை மதிப்பதுபோல நடந்துகொண்டு, அந்தத் திருமணத்தை நிறுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதேயாகும்.

ஆனால் அவன் இந்தத் திட்டத்தைத் தன் நண்பனிடம் மட்டுமே கூறுகிறான். விளையாட்டிற்காக ருக்மணியிடம் கூறாமல் மறைத்து வைக்கிறான். இதையறியாத நிலையில், மென்மை உள்ளம் கொண்ட ருக்மணி அவன் கைவிட்டு விட்டான் என்று கருதிக் குளத்தில் மூழ்கி உயிரை விட்டு விடுகிறாள். இறுதியில் தன் விளையாட்டுத்தனத்தால் மனைவியை இழந்து விட்டோம் என்று வருந்தி நாகராஜன் சன்யாசம் வாங்கிக் கொள்வதோடு கதை நிறைவடைந்துள்ளது.

படைப்பாளனின் மனத்தை நெருடிய செய்திகளே சிறுகதையாய் வெளிப்பட்டுள்ளன. படைப்பாளர் கதையின் இறுதியில் மென்மை உள்ளம் கொண்ட பெண்களுக்கு விளையாட்டிற்காகக் கூடத் துன்பம் ஏதும் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். இதிலிருந்து படைப்பாளர் இச்சிறுகதையைச் சமூக நோக்கோடு படைத்திருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறாக, தமிழ்ச் சிறுகதையின் முதல் கதையின் போக்கு அமைந்திருந்தது.

இனி சிறுகதைக்குச் செல்வோம்...

பத்திரிகை துறையின் வழிகாட்டி!

-முத்துவிஜயன்

ராம்நாத் கோயங்கா
(1904 ஏப். 18 – 1991 அக். 5) 


இந்திய பத்திரிகை உலகின் பிதாமகர் திரு. ராம்நாத் கோயங்கா (1904 ஏப். 18 – 1991 அக். 5) மக்களாட்சி முறையின் நான்காம் தூண் பத்திரிகைகள் என்பதை தனது செயல்பாடுகள் மூலமாக நிலைநாட்டியவர். அவர் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதிலும், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும் முன்னணியில் நின்று, பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் தில்தர் நகர் என்ற கிராமத்தில் 1904 ஏப். 18 -இல் பிறந்த கோயங்கா, ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டதால், அத்தை வசந்தாலால் கோயங்கா என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். வாரணாசியில் தனது தொடக்கக் கல்வியை முடித்த பின், வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்த கோயங்கா, மூங்கிபாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தொழில் நிமித்தமாக 1926-இல் சென்னை வந்த கோயங்கா, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். இவரது செயல்களால் கவரப்பட்ட சென்னை நிர்வாகம் 1926-இல் ராம்நாத் கோயங்காவை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக நியமித்தது.

வந்தேமாதரம்- கவிதை (தமிழாக்கம்)

-மகாகவி பாரதி


பங்கிம் சந்திர சட்டர்ஜி
(1838 ஜூன் 26 - 1894 ஏப். 8)


(வங்கக்கவி பங்கிம் சந்திர சட்டஜி
எழுதிய  ‘வந்தேமாதரம்’ பாடலுக்கு
மகாகவி பாரதி வழங்கிய இரண்டாவது தமிழ் வடிவம்)

ஜாதிய கீதம்- 2


1. 
நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! 
(வந்தே)

2.
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை 
(வந்தே)

3.
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்
‘கூடு திண்மை குறைந்தனை’என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை
 (வந்தே)

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 7

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1



15. ஔவையார்

பாரத நாட்டுப் பெண்மணிகள் அறிவிலும் பிற ஆற்றல்களிலும் தொன்றுதொட்டு சிறந்து விளங்கி வருகின்றனர். அவருள் தமிழ்ப் புலமையில் தன்னேரில்லாத் தகைமையாளராக விளங்குபவர் ஔவையார் ஆவார்.

ஔவை என்பது பெண்பாற் பெயர்ச்சொல் ஆகும். அதன் பொருள் முதிர்ந்தவள் என்பதாகும். அறிவால் முதிர்ந்தவள்; வயதால் முதிர்ந்தவள்; தவத்தால் முதிர்ந்தவள் எனவும் கொளலாகும்.

இங்கு நாம் காணும் ஔவை இளமைநலம் ததும்பும், புலமைத்திறம் முதிர்ந்தவர் ஆவார். சின்னஞ்சிறுவனுக்குப் பெரியண்ணன் என்றும் பெரிய மூதாட்டிக்கு சின்னப்பொண்ணு என்றும் பெயரிடுவதில்லையா? அதுபோலத்தான் இந்த ஔவைப் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 8

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1


16. நல்லந்துவனார்

‌‌நமது சங்கப்புலவர்கள் ஒவ்வொருவரும் பாடல் இயற்றுவதில் ஒவ்வொரு தனித்தன்மையை உடையவர்களாக விளங்கியுள்ளனர். அந்தத் தன்மையின் அடிப்படையில் பார்த்தால் நல்லந்துவனார் தாம் இயற்றிய எல்லாப்பாடல்களிலும் கற்பொழுக்கத்துக்கு முன்னுரிமை தந்து அகச்சுவை கலந்து அளக்கும் துகளை வழங்கியுள்ளார். காதல் உணர்வு பொதிந்துள்ள பாடல்களிலும் அறமும் ஆன்மிகமும் கொண்ட கருத்துகள் இழைய இவர் பாடியிருக்கும் விதமே அலாதியானது.

' அந்துவம்' என்னும் சொல் யானையைப் பிணைத்துவைக்கும் சங்கிலி என்ற பொருளைத் தருகிறது. யானைகளுக்குச் சிறப்பிடம் பெற்ற சேர மன்னர்கள் அந்துவன் என்ற இணைப்புப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் கொங்குநாட்டுப் பகுதிகளில் அந்துவன் குழு என்ற மக்கட் சமுதாயமும் உண்டு. எனவே குழுப்பெயரைத் தம்பெயராகத் தோற்றி இவர் நல்லந்துவனார் என அழைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

இவர் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். எனவே அவர் தம் ஊர்ப்பெயரோடு சேர்த்து மதுரைத் திருப்பரங்குன்றத்து நல்லந்துவனார் என அழைக்கப்படுகிறார். புலவர் மதுரை மருதன் இளநாயனார் அகநானூறு பாடல்-59ல்-

“சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை”

-எனப் பாடியதிலிருந்து இவர் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகிறது.

துர்க்கா ஸுக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு



    சம்ஸ்க்ருத மூலத்தில் உள்ள வேத மந்திரங்களை தமிழாக்கம் செய்து, தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. அவரது துர்க்கா ஸுக்தம் - தமிழாக்கம் இங்கே...
-ஆசிரியர் குழு


***

யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது. இந்த இரண்டு பொருள்களிலும் இச்சொல் இந்த ஸூக்தத்தில் பயின்று வருகிறது.

அக்னியையும், இந்திரனையும் வேண்டுவதும், அவர்களுடைய சக்திக்கு அதிதேவதையான துர்க்கையிடம் வேண்டுவதும் ஒன்றேயாகும் என்பதும், வைஷ்ணவீ என்று விஷ்ணு ரூபமாக இலங்குவதும் தேவியின் சக்தியே என்பதும் இந்த ஸூக்தத்தினால் பெறப்படுகிறது. இதன் கடைசி மந்திரம் துர்க்கா தேவிக்கு உரிய காயத்ரி மந்திரமாக உள்ளது.

சமண சமய ஸ்தாபகர்

-சேக்கிழான்

மகாவீரர்

(மகாவீரர் ஜயந்தி: சித்திரை திரயோதசி- ஏப் 25, 2021)

பாரதப் பண்பாட்டு வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் சமண சமயத்திற்கு பெரும் பங்குண்டு. , கொல்லாமை, அஹிம்சை, வாய்மை உள்ளிட்ட பாரதத்திற்கே உரித்தான குணநலன்களை சமயம் வாயிலாக மக்களிடம் பதிவு செய்தவர்கள் சமணர்களே.

சமண சமயத்தைப் பரப்ப உதித்தவர்கள் ‘தீர்த்தங்கரர்கள்’ எனப்படுகின்றனர். அதன் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.

பாரதத்தின் வடபகுதியில், (தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில்) லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில், சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் மகனாக, பொது யுகத்திற்கு முன் 599-ஆம் ஆண்டில், சைத்ர மாதம், வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (பங்குனி உத்திரம்) வர்த்தமானர் பிறந்தார்.

அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில் வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது; அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14 சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன. உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்) அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர். 

யாழ்நூல் வழங்கிய துறவி!

-ஆசிரியர் குழு


சுவாமி விபுலானந்தர்
(பிறப்பு: மார்ச் 27, 1892)


சுவாமி விபுலாநந்தர் பிறந்து சுமார் 128 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பணியும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சி பெறுவதற்கு முதற்படியை அமைத்துக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே என்றால் அது மிகையாகாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார்.

இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே.