13/02/2021

மாசி- 2021 மின்னிதழ்



 உள்ளடக்கம்

1. அமுதமொழி- 14

-வீர சாவர்க்கர்

2. மாசித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் -2021

-ஆசிரியர் குழு

3.பெருமாள் திருமொழி (கவிதை)

-குலசேகர ஆழ்வார்

4. அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள்- 6

-பொன்.பாண்டியன்

5. அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள்- 5

-பொன்.பாண்டியன்

6. தேடப்படும் சமுதாயநீதி

-சி.ரத்தினசாமி

7. நூல் அறிமுகம்: அழகிய இந்தியா

-பி.ஆர்.மகாதேவன்

8. இந்திய அரசியலை மாற்றியமைத்த ஞானி

பேரா.பூ.தர்மலிங்கம்

9. நாணமும் வெட்கமும்...

-முரளி சீதாராமன்

10. ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

-ஆசிரியர் குழு



அமுதமொழி- 14


 எனது அன்புத் தாயகமே!

உனக்காக தியாகம் செய்வதே வாழ்க்கை!

நீ இன்றி வாழ்வது என்பது மரணமே ஆகும்!


-வீர சாவர்க்கர்

மாசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு


கவிக்குயில் சரோஜினி நாயுடு


மாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய

ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், மாசித் திங்கள்  (13.02.2021-13.03.2021)

பெருமாள் திருமொழி (கவிதை)

-குலசேகர ஆழ்வார்




எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

647 
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே . 1

648 
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த
வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்
மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்
கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே . 2

649 
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்
எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்
தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்
கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே . 3

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 6

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1


14. நக்கீரர்

 

 இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு குகையில் ஒரு பூதம் வாழ்ந்து வந்தது. அதன் பெயர் அண்டாபரணன். அது ஒரு விரதம் மேற்கொண்டு இருந்தது. அஃது என்னவெனில், யார் ஒருவர் சிவத்தியானம் செய்யும்பொழுது இறைவன்மேல் கவனம் செலுத்தாமல் கவனத்தைச் சிதறடிக்கிறார்களோ அவர்களைப் பிடித்து உண்பது என்பதாகும்.

அதிலும் ஒரு சிறு உட்பிரிவு யாதெனில், அவ்வாறு தியானம் வழுவியர்கள் 1000 பேர் சிக்கிய பிறகுதான் அவர்களை ஒட்டுமொத்தமாக  உண்பது என்பதாகும். ஏதோ ஒரு யுக்தியைப் பயன்படுத்தி அந்தப் பூதம் இதுவரை  999 பேரைப் பிடித்து விட்டது.

அவர்களை குகையில் அடைத்து விட்டு ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தது அந்தப் பூதம். அந்தவேளையும் வந்தது.

மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். குளக்கரையில் சிவத்தியானத்தில் அமர்ந்தார். அப்போது பூதம் ஓர் இலையைக் கிள்ளி நக்கீரர்மேல் வீசியது. அந்த இலை அப்படியே காற்றில் தவழ்ந்துபோய் நக்கீரரை உரசிச்சென்று குளத்தில் விழுந்தது. எப்படி விழுந்தது தெரியுமா? பாதிப்பகுதி நீரிலும் மீதிப்பகுதி நிலத்திலும் விழுந்தது.

சிறிதுநேரத்தில் நீரில் விழுந்த பகுதி மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி சிறு பறவையாகவும் மாறியதுஇருவேறு உருவங்களும் ஒட்டிக்கொண்டிருந்ததால் அந்த உயிர் வானத்தில் பறக்கவும் இயலாமல் நீரில் நீந்தவும் இயலாமல் தத்தளித்தது. 

சிவத்தியானம் சிதறிய நக்கீரர் அதன் நிலைகண்டு மனம் இரங்கினார். மேலும் அந்த நிகழ்வை வாழ்க்கையோடு இணைத்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். இதுதான் சமயம் என்று பூதம் அவரைப் பிடித்துவந்து குகையில் அடைத்தது. 

அதுவரையில் குகையில் சொகுசாக இருந்த மற்ற தவசிகள் மிகுந்த வருத்தம் அடைத்தனர். ஏனெனில் நக்கீரரோடு எண்ணிக்கை 1000 ஆனதே. பூதமானது மிகுந்த ஆச்சாரம் உடையது.  "நீராடிவிட்டு வந்து உங்களை உட்கொள்ளுகிறேன் என்று கூறி குகையை அடைத்துவிட்டுச் சென்றது. எல்லோரும் நக்கீரரிடம் முறையிட்டனர். நக்கீரர் உடனே, 

முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே  - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 

-என்று சில காப்புச்செய்யுள்களைப் பாடி 'திருமுருகாற்றுப்படை' என்னும் நூலை இயற்றிப் பாடி முருகப் பெருமானை மனமுருகி வேண்டினார். அவர்தம் தமிழுக்கு மகிழ்ந்து முருகப் பெருமான் தோன்றி அந்தப் பூதத்தை வதம்செய்து தவசிகளை விடுவித்தார். 

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 5

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1



13. பரணர்

(கடைச்சங்கப் புலவர் )

 சங்கத்தமிழ்ப் புலவர்களில் மின்னும் தாரகைகள் பலர். அவர்களில் கண்கவரும் நட்சத்திரங்களில் பரணர் முதன்மையானவர். கபிலரும் பரணரும் நண்பர்கள். இருவரும் இணைந்து பல இடங்களுக்குச் சென்று தமிழ் வளர்த்தனர். 

மற்றைய புலவர்களின் பாடல்களைவிட பரணரின் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பொதிந்திருக்கும். இவரை ஒரு 'வரலாற்றுப் புலவர்' என்று அழைப்பதும் மிகையன்று. இவர் அகத்துறைக்

கருத்துகளோடு அரசியல் மற்றும் பிற கருத்துக்களை

இணைத்துப் பாடுவதில் வல்லுநர் ஆவார்.

அதற்குச் சான்றாக அகநானூற்றின் 322-ஆவது பாடலைக் குறிப்பிடலாம்.  அஃது என்னவெனில் 

"ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்

........................................

புகலரும் பொதியில் போலப்

பெறலருங் குரையள்எம் அணங்கியோளே." 

அதாவது அடைவதற்கரிய திதியனின் பொதிகை மலைச்சிகரத்தைக் கூட அடைந்துவிடலாம். தலைவியை அடைவது மிகவும் கடினம் என்பதாகும். 

இவ்வாறு பல பாடல்கள் உள்ளுறையாக வருவதைச் சான்று காட்டலாம். இவர் பாணர் மரபினர் என்பதை இவர்தம் சில பாடல்கள் மூலம் உணர முடிகிறது. 

' பரண்' என்ற சொல் தாங்குதல் என்ற பொருளைத் தருகிறது. பரணரும் அறத்தைத் தாங்கினார்.  அதனால்தான் அவர் பரிசிலுக்காகப் பாடாமல் சரியான செயல்களையும் தவறான செயல்களையும்

காய்தல்- உவத்தல் இன்றிப் பாடியுள்ளார். அதற்கான சான்றுகளைப் பிறகு காணலாம். 

தேடப்படும் சமுதாய சமநீதி


-சி.ரத்தினசாமி


ஜனாதிபதியிடம் தனது அறிக்கையை அளிக்கிறார்
திரு. பி.பி.மண்டல்


(உலக சமூகநீதி நாள்: 20/02/2021)


“பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’’ என்பது வள்ளுவரின் சமூதாய சமநீதிக் கோட்பாடு. அவர் மனித இனத்தை மட்டுமே குறித்து சொல்லாமல் இந்த உலகில் தோன்றும் எல்லா ஜீவராசிகளுக்குமே இந்த பூமிப்பந்து மட்டுமே அல்லாமல் அண்டம் முழுதும் சம உரிமைகள் உண்டு எனச் சொல்கிறார்.

ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே சமூகநீதி. சமூகநீதி என்பது ஒரு அரசியல் மற்றும் தத்துவக் கோட்பாட்டினை உள்ளடக்கியது. இது குடிமையியல் அல்லது குற்றவியல் சட்டம், பொருளாதார வழங்கல் மற்றும் தேவை அல்லது பாரம்பரிய தார்மிகக் கட்டமைப்பின் கொள்கைகளையும் தாண்டி நீதி என்ற கருத்துக்கான பரிமாணங்களை வலியுறுத்துகிறது. சமூகநீதி என்பது தனிநபர்களின் நடத்தை அல்லது தனிநபர்களுக்கான நீதிக்கு மாறாக சமூகத்திற்குள் உள்ள குழுக்களுக்கு இடையிலான நியாயமான உறவுகளில் அடிப்படை அவசியமானது.

சமூகநீதியின் ஐந்து முக்கிய கொள்கைகள்: வளங்கள், சமபங்கு, பங்கேற்பு, பன்முகத்தன்மை, மனித உரிமைகளுக்கான அணுகல் ஆகியவை. நாம் காணும் சமூகநீதி யாவையும் சமத்துவத்தைப் பற்றியது. சமூகரீதியாக, நீதியாக இருக்க, ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தால் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, உலகெங்கிலும், இந்த கற்பனாவாத லட்சியமானது நிதர்சனத்தில் வெகு தொலைவில் உள்ளது. சமூக அநீதிகள் சிறிய மற்றும் உலகளாவிய அளவீட்டைப் பொருத்த வரை, பள்ளிகளிலும், முழு மாறுபட்ட குழுக்களாலும் நிகழலாம். சமூகநீதி என்பது சோஷலிச பொருளாதார அமைப்புகளுக்கு அடிப்படையாக அமைவதுடன் சில மத மரபுகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பொதுவாக, சமூகநீதி என்பது குடிமக்களுக்கான பல்வேறு வகையான முன்முயற்சிகள் மூலம் சம உரிமைகளை ஆதரிக்கும் ஒரு பரந்த கருத்தாக உருவானது. சமூக நீதி என்பது மோதல் கோட்பாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையது. குழுக்கள் மற்றும் சமூகத்தின் சில பகுதிகளுக்கு இடையிலான கடந்த காலங்களில் நடந்த அல்லது தற்போது நடந்துகொண்டிருக்கும் மோதல், கருத்து வேறுபாடுகளை, தவறுகளைச் சரிசெய்தல்.பெரும்பாலான நேரங்களில் அந்த மோதல்களின் ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுகின்றனர் அல்லது அவர்கள் ஒருவிதத்தில் ஒடுக்குமுறையாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.

சமுதாயம் என்பது மனித இனத்தை மட்டுமே கொண்டதாக நாம் பொருள் கொள்கிறோம். சமுதாய சமநீதி என்பதன் கருத்தாக்கம் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்குமுள்ள சமமான உறவைக் குறிப்பது. இதன் வேறுபாட்டினை, தனிநபரின் பொருளாதாரம், அதனால் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், சமூகச் செல்வாக்கு இவற்றைக் கொண்டு கணக்கிடலாம். ஆனால், இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களினால் இந்த ஏற்றத் தாழ்வுகளை மாற்றுவதிலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை தகர்ப்பதிலும் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு தற்கால சமுதாயம் மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஓரளவிற்கு சமுதாயப் பாதுகாப்பும் அதிகரித்துக் கொண்டும் வருகிறது. ஆனாலும், வேலைவாய்ப்பின்மை, இதனால் ஏற்பாடும் வறுமை போன்றவை சமூகநீதிக்கு எதிர்க் காரணிகளாக உள்ளன. இந்த எதிர்க் காரணிகளை ஒழித்து சம உரிமைளையும் ஒழுங்காற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசு மற்றும் அரசு சாரா சமூக அமைப்புக்களின் முதன்மைப் பணியாக இருத்தல் வேண்டும். உடல்நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகக் காப்பீடு (Social Security), தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள், சந்தை வாய்ப்பு போன்ற உரிமைகள் இந்த சமூகநீதி கட்டமைப்பின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தப் பகிர்ந்தளிப்பில் சமூகம் என்ற ஒன்றைத் தவிர மற்றவற்றை எந்த நிலையிலும் பொருட்படுத்தப்படாமல் இருத்தலே சமூகநீதி.

நூல் அறிமுகம்: அழகிய இந்தியா

-பி.ஆர்.மகாதேவன்




அழகிய இந்தியா
-தரம்பால்
(தரம்பால் படைப்புகளின் முன்னுரைகளின் தொகுப்பு)
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

கிழக்கு பதிப்பகம், சென்னை - அதர் இந்தியா வெளியீடு

விலை ரூ 300/-


***

1. அழகிய நதி
(Volume I- Indian Science and Technology in the Eighteenth Century),


2. அழகிய போராட்டம்
(Volume II - Civil Disobedience in Indian Tradition),


3. அழகிய மரம்
(Volume III - The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century),


4. அழகிய கிராமம்
( Volume IV - Panchayat Raj and India’s Polity)

-இந்த நான்கு புத்தகங்களும் தரம்பால் உதிரியாக, தனியாக எழுதிய பல கட்டுரைகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் தரம்பால் என்று மொத்தம் ஐந்து புத்தகங்கள் அதர் இந்தியா பிரஸ் மூலம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அரசியலை மாற்றியமைத்த ஞானி

-பேரா. பூ.தர்மலிங்கம்


பண்டித தீனதயாள் உபாத்யாய

இந்திய அரசியல் வானை மாற்றியமைத்த அரசியல் கட்சியான பாஜகவின் முன்னோடி, பாரதிய ஜனசங்கம். அதன் தலைவராக அனைவராலும் அறியப்பட்டவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா. இவரது நினைவுநாள் : பிப்ரவரி 11.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர்; மனஉறுதி கொண்ட தேசியவாதி; சிறந்த தத்துவ அறிஞர்; பொருளாதார வல்லுநர்; சமூகவியல் அறிஞர்; வரலாற்றாசிரியர்; இதழாளர்; அரசியல் அறிவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்; அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர்.

இவர், 1937-இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினராக இணைந்து, 1942-ஆம் ஆண்டிலிருந்து தன்னை முழுநேர ஊழியராக அர்ப்பணித்துக் கொண்டவர். இன்றைய பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக, தலைவராக இவர் இருந்த காலகட்டத்தில்தான் கட்சி நாடு முழுவதும் வளர்ச்சி பெற்றது. ஆயினும், 1968-இல் மர்மமான மரணத்தால் இவரது தேசிய வாழ்க்கை மிகக் குறைந்த காலத்தில் சரிந்து போனது.

தீனதயாள், தனது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காக அர்ப்பணம் செய்தவர். சமூகப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர். பாரதத்தின் நாகரிகம் சார்ந்த அரசியல் பயணத்துக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பாரதத்தின் இயல்பு மற்றும் பாரம்பரியத்துடன் இணக்கமான ஓர் அரசியல் தத்துவத்தை உருவாக்க தீனதயாள் விரும்பினார். இது பாரதத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதி செய்வதாக அமைந்தது.

நாணமும் வெட்கமும்

-முரளி சீதாராமன்



நாணம் - வெட்கம் இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருந்தாலும் மிக நுட்பமான வித்தியாசம் உண்டு!

இந்த நுட்பமான வித்தியாசத்தை மிக லாகவமாக இரண்டே வரிகளில் விளக்கித் தூக்கி எறிந்து விட்டுப் போய்விடுவார் கண்ணதாசன்!

அசந்து போனேன் நான் - கவியரசரின் வல்லமையைப் பார்த்து! ஆழந்த தமிழ்ப் புலமையும் தொட்டவுடன் கொட்டிவரும் தமிழ் ஊற்றும் வாய்க்கப் பெற்றாலே இது சாத்தியம்!

வெட்கம் என்பது வெளியாரோடு தொடர்பு உடையது - வெளியாரின் பரிகசிப்பால் வருவது!

"வெளியில் சொன்னால் வெட்கக் கேடு - வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு"- என்கிறோமே தவிர...

"வெளியில் தெரிந்தால் 'நாணக்' கேடு "- என்று சொல்வதில்லை!

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

-ஆசிரியர் குழு



மதுரை வைத்தியநாத ஐயர்

(மறைவு: பிப். 23, 1955)


தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ.வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே.

தஞ்சாவூரில் 1890-இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் வைத்தியநாதன். மேற்படிப்புக்குப் பிறகு மதுரையில் வழக்கறிஞராகப் பணி புரிந்த வைத்தியநாதன், அந்நாளைய தேசபக்தர்கள் போலவே சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். 1922-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற அவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கை முழுவதும் போராடினார்.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.