13/03/2020

மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி

-முத்துவிஜயன்


ராம் மனோகர் லோகியா
(பிறப்பு: 1910, மார்ச் 23 – மறைவு: 1967, அக்டோபர் 12)


அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. ‘சோஷலிசம்’ எனப்படும் இத் தத்துவம், அரசே அனைவரது வாழ்வையும் சமமாகவும் நலமாகவும் பேண வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது. இத் தத்துவத்தை பாரத மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தவர் இந்திய சோஷலிச அரசியல்வாதிகளின் குருவாக மதிக்கப்படும் ராம் மனோகர் லோகியா. இவரது வாழ்வே ஒரு வேள்வி போன்றது; இளைய தலைமுறையினர் அறிய வேண்டியது.

.
பிறப்பும் வளர்ப்பும்:

உத்தரபிரதேசத்தின் அக்பர்பூரில், காங்கிரஸ் தலைவர் ஹீராலாலுக்கும் ஆசிரியை சாந்தாவுக்கும் 1910, மார்ச், 23 ல் மகனாகப் பிறந்தார் ராம் மனோகர் லோகியா. சிறுவயதிலேயே தாயை இழந்த ராம், தந்தையால் வளர்க்கப்பட்டார். தந்தையின் தேசியப் பணிகளை பாலகனாக இருந்தபோதே கண்ணுற்ற ராம், இயல்பாகவே தேசியவாதியாக வளர்ந்தார்.

மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியாக இருந்த ஹீராலால், அவரை அடிக்கடி சந்திப்பார். அப்போதெல்லாம் தனது மகன் ராமுடன் செல்வார். அப்போதே காந்தி மீது ராமுக்கு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவரது சுய கட்டுப்பாடு, ஆன்மிக வலிமை, தேசிய சிந்தனை ஆகியவை ராமுக்கு வழிகாட்டின. தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம்!

மராட்டிய சிங்கம் பால கங்காதர திலகர் மறைவை (1920) அடுத்து சிறு கடையடைப்பு நடத்தியதே ராமின் முதல் விடுதலைப் போராட்ட பிரவேசம். அப்போது அவருக்கு வயது 10! அடிக்கடி காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த ராம், 1921 ல் ஜவஹர்லால் நேருவை சந்தித்தார். அவரது முற்போக்கு சிந்தனைகள் ராமை வசீகரித்தாலும், சில கருத்துக்களில் முரண்பட்டார். நேருவுடனான கொள்கை மாறுபாடுகளை வாழ்வின் இறுதிவரை ராம் மனோகர் லோஹியா வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் இருவரும் ஒத்த சிந்தனைகளுடன் இயங்கினர்.

1928 ல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவுக்கு ‘டொமினியன்’ அந்தஸ்து வழங்கலாமா என்று ஆராய வந்தது தான் சைமன் கமிஷன். அதாவது இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு சுயாட்சியுடன் பிரிட்டனின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம். மாணவராக இருந்த ராம், ‘சைமனே திரும்பிப் போ’ போராட்டத்தை தனது பகுதியில் நடத்தினார்.

1929 ல் காசி ஹிந்து பலகலைக்கழகத்தில் இன்டர்மீடியட் படிப்பை முடித்த ராம், தனது பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (வித்யாசாகர் கல்லூரி) முடித்தார். பிறகு, ஜெர்மனியிலுள்ள பெர்லின் பலகலைக்கழகத்தில் படிக்க விரும்பினார். அதற்காக ஜெர்மானிய மொழியைக் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால், தனது மேல்படிப்புக்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.

அநீதிக்கு எதிரான போராளி:

.
ஐரோப்பாவில் ராம் இருந்தபோது, ‘லீக் ஆப் நேஷன்ஸ்’ எனப்படும் நாடுகளின் கூட்டமைப்பு ஜெனீவாவில் கூடியது. அதற்கு பிகானீர் ராஜாவின் பிரதிநிதியாக ராம் சென்றார்; ஆனால் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து வாயில் அருகிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திய ராம், அந்நாட்டு பத்திரிகைகளில் தனது கண்டனத்தை வெளியிட்டார். தொடர்ந்து கடிதம் மூலமாக தனது போராட்டத்தைத் தொடர்ந்த ராம், ஜெனீவாவில் இந்தியருக்கு ஏற்பட்ட அவமத்திப்பை அம்பலப்படுத்தினார். அதன்மூலமாக, இந்தியாவில் அவரது புகழ் பரவியது.

அதையடுத்து, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று உணர்ந்த ராம், அதற்காக, ஐரோப்பிய இந்தியர் சங்கத்தை நிறுவினார். இந்தியாவுக்கு வெளியே செயல்பட்ட இந்தியர்களின் இயக்கங்களை ஒருங்கிணைப்பதை அந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

தனது மேற்படிப்பின் முடிவில், முனைவர் பட்ட ஆய்வுக்காக, ‘உப்பு சத்யாகிரகம்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தியின் சமூக- பொருளாதாரக் கோட்பாடுகளை விளக்கி ஆய்வைப் பூர்த்தி செய்தார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றார். 1932 ல் நாடு திரும்பினார் ராம்.

விடுதலைப் போரில் பங்கேற்பு:

நாடு திரும்பிய ராம், காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஆயினும், காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைளில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. பெரும்பாலும் நில உடைமையாளர்களும் பெரும் தனவந்தர்களுமே காங்கிரஸ் தலைவர்களாக இருந்த நிலையில், நாட்டின் ஏழை மக்கள் குறித்து சிந்தித்தார் ராம். வெளிநாட்டுக் கல்வியால் அவர் ‘சோஷலிசம்’ குறித்த கனவுகளுடன் நாடு திரும்பி இருந்தார்.

தனது கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே, ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’யை ஸ்தாபித்தார் (1934). அதன் பத்திரிகையான ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ இதழில் தொடர்ந்து பல அற்புதமான அரசியல் கட்டுரைகளை ராம் எழுதினர்.

1936 ல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம், கட்சிக்குள் வெளிவிவகாரத் துறையை உருவாக்கினார். அதன் முதல் தலைவராக நேருவால் ராம் மனோகர் லோகியா நியமிக்கப்பட்டார். அந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர (?) இந்தியாவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருதுகோள்களை வரைந்தார்.

1939 ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவு அளிக்கலாம்; கூடாது என்ற இருவேறு குரல்கள் காங்கிரசில் எழுந்தன. அதில், இரண்டாவது அணியில் ராம் இருந்தார். போரைப் பயன்படுத்தி, இந்தியாவிலுள்ள பிரிட்டீஷ் நிர்வாகத்திற்கு சிரமம் ஏற்படுத்தி அவர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ராமின் கருத்தாக இருந்தது. அரசு நிறுவனங்களை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தால் கைது செய்யப்பட (24.05.1939) ராம், மாணவர்களின் எதிர்ப்புக்கு பயந்து மறுநாளே விடுவிக்கப்பட்டார்.

விடுதலையடைந்த ராம் மனோகர் லோகியா, காந்தியின் பத்திரிகையான ‘ஹரிஜன்’ இதழில் (01.06.1940) ‘இன்றைய சத்யாகிரகம்’ என்ற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையில் ராஜதுவேசம் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்த ஆங்கில அரசு, ராம் மனோகர் லோகியாவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அப்போது ‘லோகியா முதல்தரமான அறிஞர்; பண்பட்ட பெரிய மனிதர்; சுதந்திரமான சிந்தனையும் உயர்ந்த சீலமும் வாய்ந்தவர்’ என்று குறிப்பிட்டார் தண்டனை வழங்கிய நீதிபதி!

ராம் மனோகர் லோகியாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மகாத்மா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய காந்தி, ”டாக்டர் ராம் மனோகர் லோகியா சிறைக்குள் இருக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவரைப் போன்ற துணிவும் எளிமையும் கொண்ட மனிதர் வேறு யாரையும் நான் கண்டதில்லை.அவர் வன்முறையை பிரசாரம் செய்யவில்லை. அவர் என்ன செய்தாரோ, அது அவரது மேன்மைக்கு மேலும் மெருகூட்டுவதாகவே அமைந்திருந்தது” என்றார்!

சிறையில் ஆங்கில அதிகாரிகளால் மனரீதியான கொடும் சித்ரவதைக்கு ராம் ஆளானார். இந்நிலையில் உலகப்போரில் காங்கிரசின் ஆதரவைப் பெற போராட்ட வீரர்கள் பலரும் அரசால் விடுவிக்கப்பட்டனர். அப்போது ராம் மனோகர் லோகியாவும் விடுதலை ஆனார் (டிசம்பர் 1941).

‘வெள்ளையனே வெளியேறு’ தளகர்த்தர்:

1941 ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நாடு முழுவதும் துவங்கியது. காந்தி, நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். அப்போது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் முக்கியத்துவம் வெளிப்பட்டது. ராம் மனோகர் லோகியாவின் தலைமைப் பண்பு ஒளிவீசியது.

வெளிப்படியாக இயங்க முடியாத நிலையில் தலைமறைவுப் போராட்டத்தில் ராம் ஈடுபட்டார். ரகசிய இடங்களில் இருந்து பிரசாரத் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த குழுவில் ராமும் இருந்தார்.உஷா மேத்தாவுடன் இணைந்து மும்பையில் ராம் நடத்திய ரகசிய வானொலியான ‘காங்கிரஸ் ரேடியோ’ மூன்று மாதங்கள் வெற்றிகரமாக இயங்கியது! சுதந்திரப் போரில் ரகசிய வானொலி பயன்படுத்திய நிகழ்வு அரசையே அதிர்சிக்குள்ளாக்கியது.

முன்னணித் தலைவர்கள் இல்லாதபோதும் காங்கிரசின் மாதாந்திரப் பத்திரிகையான ‘இன்குலாப்’ இதழை அருணா ஆசப் அலியுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார் ராம் மனோகர் லோகியா.

ஆயினும் அரசு ராமின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்தது. போலீசார் சுற்றி வளைத்த நிலையில், கொல்கத்தாவுக்கு தப்பிய ராம், அங்கு வெவ்வேறு பெயரில் மாறுவேடத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிய ராமுக்கு நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கொய்ராலா சகோதரர்களுடன் ராமுக்கு ஏற்பட்ட நட்பு, அவரது வாழ்வின் இறுதிவரை நீடித்தது.

அங்கிருந்து நாடு திரும்பி மீண்டும் தலைமறைவு இயக்கத்தில் ஈடுபட்ட ராம் 1944 ல் மும்பையில் கைதானார். சித்ரவதைக்கு பெயர்பெற்ற லாகூர் சிறைக்கு அனுப்பப்பட ராம், அங்கு கடுமையான சித்ரவதைக்கு ஆளானார். அதனால் ராமின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் தலையீட்டால் ராம் மனோகர் லோகியாவும் அவரது சீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் விடுதலை ஆயினர்.

ஓய்விலும் போராட்டம்:

விடுதலைக்குப் பின், ஓய்வுக்காக கோவா சென்ற ராம், அங்கும் அமைதியாக இருக்கவில்லை. கோவாவை ஆண்ட போர்ச்சுக்கீசிய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்ததைக் கண்டித்து, ராம் போராடினார்.

அதன் விளைவாக கைது செய்யப்பட்டார். ஆயினும், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை கோவா அரசு நீக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. இன்றும் கோவா மக்களின் நாட்டுப்புறப் பாடல்களில் ராம் மனோகர் லோகியாவின் வீரப் பிரதாபங்கள் பெருமையுடன் பாடப்படுகின்றன.

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் கிளர்ந்த இந்து- முஸ்லிம் வேற்றுமை ராமுக்கு வேதனையை ஏற்படுத்தியது. நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவதற்கு ராம் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மதரீதியில் பிளவுபட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் அஹிம்சை நெறியை முன்னெடுத்து, மக்களை ஒன்றுபடுத்த முயன்றார்.

1947 ல் நாடு விடுதலை பெற்று, மக்கள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்த வேலையில், தனது ஆதர்ஷ குருநாதரான மகாத்மாவின் அடியொற்றி, மதக்கலவரங்களில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மயான பூமிகளில் அமைதி திரும்ப பாடுபட்டுக் கொண்டிருந்தார் ராம் மனோகர் லோகியா.

சுதந்திர நாட்டிலும் போராட்டம்:

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய தேவையை உணர்ந்தார் ராம் மனோகர் லோகியா. நாட்டின் முன்னேற்றத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரசாரம் செய்த ராம், தானே அதற்கு முன்மாதிரியாக விளங்கினார். மக்களே கால்வாய்களையும் சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கூறிய ராம், ‘பணியாரி’ நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து அணைக்கட்டு ஒன்றைக் கட்டினார். அது இன்றும் ‘லோகியா சாகர் அணை’ என்ற பெயருடன் உள்ளது.

“ஆக்கப்பூர்வமான கட்டமைப்புப் பணிகள் அல்லாது செய்யப்படும் சத்யாகிரகம் என்பது வினைச்சொல் இல்லாத வாக்கியம் போன்றது” என்பது ராம் மனோகர் லோகியாவின் புகழ்பெற்ற பொன்மொழி. பொதுப்பணிகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதிபட நம்பினார். சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் ராம் பெரும்பங்கு வகித்தார்.

ஜனநாயக நாட்டில் மக்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிய வேண்டியது அவசியம் என்ற ராம், அதற்காக ‘ஜனவாணி தினம்’ என்ற ஒருநாளை அறிமுகப்படுத்தினார். அந்நாளில் மக்கள் தங்கள் குறைகளை பிரதிநிதிகளிடம் முறையிட வாய்ப்பளித்தார். அம்முறை இன்றும் நாடாளுமன்றத்தில் நடைமுறையிலுள்ளது.

நாட்டின் பொதுமொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று ராம் விரும்பினார். ”நம்மிடையே உள்ள ஆங்கிலப் பயன்பாடு நமது அசலான சிந்தனைகளை மழுங்கச் செய்கிறது; நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது; தவிர, படித்தவர்களுக்கும் பிறருக்கும் இடையே பெருத்த இடைவெளியை உருவாக்குகிறது. எனவே ஹிந்தி மொழியை அதன் புராதனப் பெருமையுடன் புதுப்பிக்க வேண்டும்” என்பது லோகியாவின் கருத்து.

திட்டக்குழு மாயையைத் தகர்த்தவர்:

.
1963 ல் நாடாளுமன்றம் சென்ற ராம் மனோகர் லோகியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரை மூன்று பொது தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான் ஒருகட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை ராம் எதிர்த்தார். ”பிரதமர் நேருவுக்கு ஒருநாள் செலவிடப்படும் தொகை ரூ. 25 ஆயிரம்; அதே சமயம் நாட்டின் ஏழைக் குடிமகனுக்கு 3 அனா வருமானத்திற்கும் கூட வழியில்லை” என்ற ராம், நமது அரசின் திட்டமிடலை கடுமையாக விமர்சித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் நேரு,  “ஏழ்மையை ஒழிக்க திட்டக் குழு செயல்படுகிறது. அதன் புள்ளிவிபரப்படி, நாட்டின் சாமானியக் குடிமகனின் சராசரி தினப்படி வருமானம் 15 அனா ஆகும்” என்றார் (அந்நாளில் இதன் மதிப்பு ஒரு ரூபாயை விட சற்றே குறைவு).

இந்தப் புள்ளிவிபரத்தைச் சாடிய லோகியா, சிறப்பு விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். விவாதத்தில் பேசிய லோகியா, தனது புகழ்பெற்ற நாடாளுமன்றப் பேசான ‘தீன் (3) அனா – பந்த்ரா (15) அனா’ விவாதத்தில் நாட்டின் திட்டக்குழு நடத்தும் நாடகங்களை விலாவாரியாக விளக்கி அதன் முகத்திரையைக் கிழித்தார். அதன்மூலமாக, திட்டக் குழு முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் மாயையானவை என்று நிரூபித்தார். இறுதியில் ராம் மனோகர் லோகியா கூறுவதே உண்மை என்பதை நாடு உணர்ந்தது. இந்த விவாதம் திட்டக்குழுவின் பணிகளை செம்மைப்படுத்த உதவியது.

ஜாதிகளுக்கு இடையிலான வேற்றுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக ராம் கூறினார். ”ஜாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையை குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது; ஜாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும்” என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்த்ட்டிலுள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டிலுள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும் என்பது ராமின் கருத்து. உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே ஜாதியை ஒழிக்கும் என்றும் ராம் அறிவுறுத்தினார்.

புரட்சிகரமான சிந்தனையாளர்:

பொதுவுடைமையை விரும்பினாலும் கம்யூனிசத்தை லோகியா ஏற்கவில்லை. கம்யூனிசமும் (பாட்டாளிகளின் சர்வாதிகாரம்) காப்பிட்டலிசமும் (முதலாளிகளின் ஏகாதிபத்தியம்) உலகின் பிரச்னைகளைத் தீர்க்காது என்று அவர் தீர்க்கமாக உரைத்தார். இரண்டுமே இயந்திர மயமானவை என்ற அவர், பெரும் தொழிற்சாலைகளை அமைப்பது மூன்றாம் உலகத்தை அமைக்க உதவாது என்று எச்சரித்தார்.

‘மார்க்சிசம் ஐரோப்பாவின் ஆசியா மீதான கடைசி ஆயுதம்’ என்றே லோகியா வர்ணித்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு முதலாளித்துவமும் கம்யூனிசமும் அல்லாத மாற்று அரசியல் தத்துவங்கள் தேவை என்று ராம் சொன்னார்.

1962 ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தபோது, ”இந்தியா, பிற நாடுகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டுமானால், தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால், அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும்” என்று கூறி நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கினார். ஆனால், அவர் அன்று சொன்னது இன்று நியாயம் என்று உணரப்பட்டிருக்கிறது. ராம் மனோகர் லோகியாவின் தீர்க்க தரிசனங்கள் நெல்லிக்காயாக துவர்ப்பை அளித்ததால் அக்காலத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால், பின்பு இனிக்கும் நெல்லியின் இயல்பு அவரது அறிவுரைகளில் மிளிர்ந்தது.

அரசின் அதிகாரங்களை குறைத்து மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக வேண்டும் என்ற ராம், ‘ஹிந்த் கிசான் பஞ்சாயத்’ அமைப்பை நிறுவி, விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள உதவினார்.

உலக அளவில் உள்ள அனைத்து சோஷலிஸ்ட்களையும் ஒருங்கிணைத்து, ஓர் அமைப்பாக வேண்டும் என்று லோகியா கனவு கண்டார். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றிய லோகியா, உலக அரசு குறித்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார்.

தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் என புதிய இளம் தலைமுறையுடன் விவாதித்து காலம் கழித்தார். புதுதில்லியில் 1967, அக்டோபர் 12 ல் மறைந்தார். அப்போது அவருக்கென்று சொந்தமான வங்கிக் கணக்கோ, சொத்தோ ஏதும் இருக்கவில்லை.

ஒரு உண்மையான பொதுவுடைமைவாதியாக வாழ்ந்து மறைந்த ராம் மனோகர் லோகியா, இன்றைய தேவையாக நம் முன் ஆதர்ஷமாக உள்ளார்.



No comments:

Post a Comment