25/01/2020

பாரத சமுதாயம்

-மகாகவி பாரதி



(ராகம் - பியாக்;  தாளம் - திஸ்ர ஏகதாளம்)

பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய (பாரத)

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)


சரணங்கள்

மனித ருணவை மனிதர் பறிக்கும்
      வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி 
லந்தவாழ்க்கை இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
     எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த 
நித்தம்கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத)

இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்’’
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத) 

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)


No comments:

Post a Comment