14/02/2020

குடியுரிமை திருத்தச் சட்டம்: அவசியம்! அவசியம்! அவசியம்!

-முத்துவிஜயன்

குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 தொடர்பான முறையான விவாதங்கள் ஒருபுறமும், தவறான பிரசாரம் மறுபுறமும் தற்போது தேசம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. அகதிகளுக்கு வழங்கப்படும் விசேஷ குடியுரிமைக்கும், இந்த நாட்டில் வாழும் குடிமக்களின் இயல்பான குடியுரிமைக்கும் வேறுபாடு தெரியாத சிலர் நாட்டில் பொய்ப் பிரசாரம் மூலமாக அமைதியைக் கெடுத்து வருகிறார்கள். 

சில சுயநல அரசியல்வாதிகளோ, இந்தச் சட்டம் தொடர்பான முழு விவரங்களையும் அறிந்திருந்தபோதும், தவறான விளக்கம் அளித்து, இஸ்லாமிய மக்களைத் தூண்டிவிட்டுஅவர்களை வன்முறைப் பாதைக்கு மடைமாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக சில மாநிலங்களில் வன்முறையால் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்கு வங்கி அரசியலில் நாட்டமுள்ள சில அரசியல் கட்சிகள், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தத் துடிப்பது தெரிகிறது. அவர்களுக்கு பொட்டில் அடித்தது போல விளக்கம் அளித்தாக வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவது நமது கடமை.

1. இந்திய குடியுரிமை சட்டம் (Indian Citizens Act) என்பது என்ன?

இந்திய அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையில் உள்ள முதல் பட்டியலில் குடியுரிமை பற்றி விவரிக்கப்படுகிறது. குடியுரிமை தொடர்பான முழுமையான விளக்கங்கள் அப்போது கொடுக்கப்படவில்லை. எனினும் நாடாளுமன்றம் குடியுரிமை தொடர்பாக சட்டம் இயற்ற, சாசனத்தின் 11வது ஷரத்து முழு அதிகாரம் அளித்துள்ளது. அதன்படி 1955இல் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் குடியுரிமைச் சட்டம், இந்தியாவில் யார் குடிமகனாக இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அந்த விதிமுறைகள்:
  • 1949 நவ. 26 இல் இந்திய எல்லைக்குள் பிறந்தவராகவோ, அதற்குப் பின் பிறந்தவராகவோ இருப்பவர் தானாகவே இந்தியக் குடிமகன் ஆகி விடுகிறார் (Citizenship at the commencement of the Constitution of India).
  • பிறப்பின் அடிப்படையிலும் குடியுரிமை (பிரிவு 3- பிறப்பு அடிப்படை Citizenship by birth) தீர்மானிக்கப்படுகிறது. 1950 ஜன. 26க்குப் பின் இந்திய மண்ணில் பிறந்தவர் இந்தியக் குடிமகன் ஆவார்.
  • இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் இருப்பவரின் 1950, ஜன. 26க்குப் பிறகு பிறந்த குழந்தையும் வம்சாவளி அடிப்படையில் (பிரிவு 4- வம்சாவளி அடிப்படை Citizenship by Descent) குடியுரிமை பெறலாம்.
  • குடியுரிமை சட்டத்தின் 5வது பிரிவின்படி, மத்திய அரசுக்கு 7 விதமான விதிமுறைகளுக்கு உள்பட்ட மக்கள் பதிவுக்கு விண்ணப்பித்து (பதிவு அடிப்படை- Citizenship by Registration) குடியுரிமை பெறலாம்.
  • இந்த நாட்டில் 11 ஆண்டுகள் வசித்த வெளிநாட்டவர் குடியுரிமை சட்டத்தின் 6 (1) விதிமுறைக்கு உள்பட்டவராக இருந்தால் அவர் இயல்பாக குடியுரிமை பெற முடியும் (பிரிவு 6- இயல்பாக்கம்- Citizenship by Naturalization).
2. குடியுரிமை சட்டத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் யாவை?

குடியுரிமை சட்டத்தைப் பொருத்த மட்டிலும், காலத்தின் தேவைக்கேற்ப நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தைத் திருத்திக் கொள்ளலாம் என்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசனத்தில் பாகம்-2, ஷரத்துகள் 5-11 இல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் இச்சட்டம் இதுவரை 6 முறை (1986, 1992, 2003, 2005, 2015, 2019) திருத்தப்பட்டுள்ளது.

  • இச்சட்டத்தில் 1986இல் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடிமகன் ஆகலாம் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, பெற்றோரில் ஒருவரேனும் இந்தியக் குடிமகனாக இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.
  • அடுத்த திருத்தம் 1992இல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 1950 முதல் 1992 வரை இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவரது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்றால் அவர் இந்திய குடியுரிமை பெறுவார். இது வம்சாவளி அடிப்படையில் குடியுரிமையை உறுதி செய்தது.
  • 2003இல் மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில்தான் ஊடுருவல்காரர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படலாகாது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) குறித்தும், குடிமக்கள் அடையாள அட்டை குறித்தும் இந்த சட்டத் திருத்தம் கூறியுள்ளது.
  • 2005இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் யார் என்பதற்கான வரையறைகளைத் திருத்தியது. அரசியல் சாசனம் எழுதப்படுவதற்கு முன்னரோ (1950), நாடு சுதந்திரம் பெற்ற பிறகோ (1947), முந்தைய இந்தியாவில் வசித்தவர்கள் பிற நாடுகளில் குடிமக்களாகி இருந்தால் அவர்களும் அவர்களது வாரிசுகளும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எனக் கருதப்படுவார்கள் என்பதே அந்த வரையறை.
  • பதிவு அல்லது இயல்புரிமையின் அடிப்படையில் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கான விதிகளில் சில தெளிவான மாற்றங்களை 2015 சட்டத் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, பதிவு வேண்டுபவரின் பெற்றோர் இந்தியக் குடிமகன்களாக இருந்திருந்தால், அவர்கள் பதிவு விண்ணப்பத்துக்கு ஓராண்டுகாலம் முன்னர் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
  • 2019ஆம் வருடத்திய குடியுரிமை சட்டத் திருத்தம், இந்தியாவின் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய (இஸ்லாமிய) நாடுகளில் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து புகலிடம் தேடி இந்தியா வந்துள்ள, அந்நாடுகளின் சிறுபான்மை மத மக்களுக்கு அடைக்கலமும், குடிமகன் என்ற உரிமையும் அளிக்க வகை செய்கிறது.
3. 2019ஆம் வருடத்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

பாரதத்தின் அங்கமாக இருந்து வேறு நாடுகளாகப் பிரிந்து சென்று தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று மதரீதியானவையாக அறிவித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்து உயிராசையுடன் தப்பி ஓடிவந்துள்ள, ஹிந்து, சீக்கியம், சமணம், பௌத்தம், கிறிஸ்தவம், பார்சி ஆகிய ஆறு மதங்களைச் சார்ந்த பல்லாயிரக் கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டத் திருத்தம் இது.

அதற்கு அவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (முன்னர் இந்த இயல்பாக்கக் காலம் 11 ஆண்டுகளாக இருந்தது); 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்தவராக இருக்க வேண்டும்; அவர்கள் ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மை (எந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்தார்களோ அந்த நாட்டில்) மக்களாக இருக்க வேண்டும். அவர்கள் முறைப்படி அரசுக்கு விண்ணப்பித்து, இந்தியக் குடியுரிமைப் பதிவு பெறலாம் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம்.

4. இந்தச் சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை?

இந்தக் கேள்வியே அடிப்படைப் புரிதல் அற்றது. ஏனெனில் அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அவர்களால் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்தான் அடைக்கலம் நாடி இந்தியா வருகின்றனர். அவர்களையும், அவர்களை அந்த நாடுகளில் கொடுமைப்படுத்திய பெரும்பான்மை மதத்தினரையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்கக் கூடாது.

ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய ஆறு மதத்தினருக்கு விசேஷமாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அடைந்துள்ள பாதிப்பின் அடிப்படையில் மட்டுமே.

இந்த நாடுகளில் நடைபெறும் இஸ்லாமியர்களின் வன்முறையும், சிறுபான்மையினரின் வேதனையும் உலகம் அறிந்த உண்மை. 1947இல் இந்நாடுகளில் இருந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையையும் இப்போதைய எண்ணிக்கையையும் ஒப்பிட்டாலே ஆபத்தின் வீரியம் புரியும். இந்த நாடுகளில் நிம்மதியாக வாழ முடியாமல், உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்ள சொத்துக்களையும் உறவுகளையும் இழந்து தப்பியோடி வரும் அபலைகள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அவர்களுக்கு உதவுவது நமது கடமை.

5. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்நாட்டில் ஏற்கனவே குடிமக்களாக உள்ளோரின் குடியுரிமை பறிபோகுமா?
குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளுக்கானது மட்டுமே. மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என்பதை, இந்தியாவில் குடிமக்களாக ஏற்கனவே வாழ்ந்துவரும் சுமார் 18 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமையே மறுக்கப்பட்டதுபோல சிலர் துஷ்பிரசாரம் செய்திருக்கின்றனர். அதன் விளைவே எதிர்க்கட்சிகளின் தேவையற்ற போராட்டங்களும், சமூக விரோதிகளின் மோசமான வன்முறைகளும்.

6. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது என்ன?
இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை வரையறுப்பதே தேசிய குடிமக்கள் பதிவேடு. 1951ஆம் வருடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1955ஆம் வருடத்திய குடிமக்கள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் பதிவேடு இது.

ஒவ்வொரு நாட்டிலும் யார் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் இருக்கும். நமது நாட்டில் இதுவரையிலான அரசுகள் இம்முயற்சியை மேற்கொள்ளாததால், 1955ஆம் வருடத்திய தேசிய குடிமக்கள் பதிவேடே (National Register of Citizens-NRC) இறுதியானதாக உள்ளது.

உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் அரசின் அலட்சியம் காரணமாக இந்தப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளியார் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது. எனவேதான், தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்தது. தற்போது தேர்தலில் வென்ற பிறகு ஜனநாயக முறையில் அதற்கான முயற்சிகளில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக இறங்கி இருக்கிறது.

எனினும் அரசு அதிகாரப்பூர்வமாக இந்தப் பதிவேட்டை உருவாக்கும் பணியை இன்னமும் துவக்கவில்லை. இந்தப் பதிவேட்டில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்கின்றனர். அதில் எள்ளளவும் உண்மையில்லை. சிறுபான்மையின மக்களிடையே நிலவும் சந்தேகங்கள் போக்கப்பட்ட பிறகே தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும் தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஏன்?
அஸ்ஸாம் மாநிலம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இந்த சட்டம் செல்லாது. அதற்கு அப்பகுதியில் விசேஷ புவியியல் அம்சங்களும் பழங்குடியினருக்கான விசேஷ விதிகளுமே காரணம்.

1985இல் அஸ்ஸாம் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அப்போதைய மத்திய அரசுக்கும் (ராஜீவ் காந்தி பிரதமர்) அஸ்ஸாம் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்துக்கான தே.கு.பதிவேடு உருவாக்கப்பட்டு, 1971 மார்ச் 25க்குப் பின்னர் அம்மாநிலத்தில் நுழைந்தவர்கள் அந்நியர்களாகக் கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் மிகுந்த அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா ஆகிய மாநிலங்களில், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின்படி, இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பகுதியளவு செல்லாது. அதாவது, இம்மாநிலத்தவர் அல்லாத ஒருவர் புதிதாக இம்மாநிலங்களில் குடிமகனாக முடியாது.

அதேபோல, உள்நுழைவு உரிம அனுமதிச் சட்டம் (Inner Line Permit) கொண்டுள்ள அருணாசல பிரதேசம், நாகலாந்து, மிஸோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

8. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தச் சட்டத்தின்கீழ் ஏன் குடியுரிமை அளிக்கப்படவில்லை?

இந்த சட்டத் திருத்தம் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டதாகும். இலங்கையைப் பொருத்த வரை, அங்குள்ள மொழி அடிப்படையிலான, இன அடிப்படையிலான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள்; ஆனால், பெரும்பான்மை சிங்களவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் நாடுகளில் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடக் கூடாது. தவிர, தமிழகத்தில் அகதியாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் (இலங்கை) திரும்பவே துடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வது அவர்களது பல்லாண்டுக்கால உரிமைகளை தங்கள் சொந்த நாட்டில் இழப்பதாகிவிடும்.

ஏற்கனவே, இலங்கையிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழர்களுக்கு 1964ஆம் வருடத்திய சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழக்க வேண்டும் என்ற சிந்தனை இப்போது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்பட்ட விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

9. இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சிலர் கூறுகிறார்களே?

கண்டிப்பாக இல்லை. அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணைப்படி, குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் வரம்புக்கு உள்பட்டது. இதைத் திருத்த அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள 11வது ஷரத்தின்படி, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. யாருக்கு குடியுரிமை வழங்குவது என்பது தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல் சாசனம் கூறுகிறது. அதாவது அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை வலிமை கொண்ட மோடி அரசு தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை (Citizenship Amendment Bill- CAB) நிறைவேற்றி, சட்டமாக்கி (CAA) இருக்கிறது. இதனைத் தடை செய்ய முடியாது என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து.

அடுத்த குற்றச்சாட்டு மதரீதியான பாரபட்சம் தொடர்பானது. இந்திய அரசியல் சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும். இதனையும் குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) மீறவில்லை. இதில் எந்த இடத்திலும் மதப் பாகுபாட்டுக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.

10. இந்தச் சட்டத்தை தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனரே?

குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. அரசியல் சாசனத்தின் 245வது பிரிவின் 2வது உள்பிரிவின்படி, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை மாநிலங்கள் எதிர்க்க முடியாது. இதை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாநில அரசுகள் அதற்கான விலையை அரசியல் சாசனப்படி (பிரிவு 356) கொடுக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. இதேபோலத் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணிகளையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கவோ, தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.

11. அண்டை நாடான மியான்மரில் மதக்கலவரங்களால் வெளியேறும் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏன் இந்தச் சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

ரோஹிங்க்யா முஸ்லிம்களால் மியான்மரில் ஏற்பட்ட பிரச்னைகளால்தான் அங்கு கலவரம் ஏற்பட்டது; அந்நாட்டு அரசும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தது. அதனால் அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை அண்டை நாடான பங்களாதேஷ் (அது ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும்) ஏற்கவில்லை. மற்றொரு முஸ்லிம் நாடான மலேசியாவும் அவர்களைத் துரத்துகிறது. எனவே அவர்கள் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர்.

அவர்கள் முறைப்படி வந்த அகதிகள் அல்லர். எனவே மியான்மர் நாட்டுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதே முறையானது. அந்நாட்டு அரசும் அவர்களை திரும்ப ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது. ரோஹிங்க்யா முஸ்லிம்களை பாகிஸ்தானோ, பங்களாதேஷோ கூட வரவேற்காத நிலைக்குக் காரணம் என்ன என்று நாம் யோசிக்க வேண்டும்.

அகதிகள் விவகாரம் உலகளாவிய பிரச்னையாகி வருகிறது. இதனைத் தீர்க்க இந்தியா மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.

12. தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) என்பது என்ன?

நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின் பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.

2003இல் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதில் உள்ள ஆதாரத் தகவல்களின் அடிப்படையில்தான் 12 இலக்க ஆதார் அடையாள அட்டைகள் நாட்டிலுள்ள 125 கோடி (96 சதவீதம்) மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த இந்தப் பதிவேடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

2021 பிப்ரவரி முதல் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதையொட்டி தேசிய மக்கள்தொகை பதிவேடு-2021 ஐப் புதுப்பிக்க உள்ளதாக தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதனையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளும் எதிர்க்கட்சியினர் இதனை எதிர்க்கின்றனர்.

இந்த நாட்டில் வசிக்கும் அனைவரையும் பட்டியலாகத் தொகுப்பது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR). இது நாடு முழுவதும் 2010லேயே தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவர்கள் அனைவரும் குடிமகன்களா என்பதை உறுதிப்படுத்தித் தொகுப்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC). இப்போதைக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பதிவேடுகளின் அடிப்படை ஆதாரங்கள் வேறானவை.

13. தலைவர்களின் உறுதிமொழி…

1947 செப். 26இல் மகாத்மா காந்தி கூறியது:
பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களும் சீக்கியர்களும் அங்கு வாழ விரும்பாவிடில், அங்கு அவர்கள் வாழத் தகுதியற்ற சூழல் நிலவுமானால், அவர்கள் எப்போது வேண்டுமாயினும் இந்தியா வரலாம். அவர்களை ஏற்க இந்தியா தயங்காது. இதில் சந்தேகமே தேவையில்லை.

1947 ஆகஸ்ட் 15இல் நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசிய ‘விதியுடன் ஒரு ஒப்பந்தம்’ என்ற பேச்சிலிருந்து…

இங்கு நாம் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, அரசியல் எல்லைகள் மாறுபட்ட ஒரே காரணத்தால் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்ட (ஹிந்து, சீக்கிய) சகோதர சகோதரிகளின் வேதனையை நினைவுகூர்கிறோம். அவர்கள் என்றும் நம்மவர்கள். எது நடந்தாலும் அவர்களும் நம்மவர்களே. அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் பெரும் பொறுப்பு நமக்கு உண்டு…

1950 ஜன. 26இல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறியது:

இந்த நாட்டிலிருந்து நிலப்பகுதி பிரிந்து சென்றதால் நம்மைப் பிரிந்துசென்ற மக்களுக்கு நிவாரணம் வேண்டும். அங்கு அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு இடையே வாழ்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம்.

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கர் கூறியது:

முஸ்லிம்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கு பல வழிகள் உள்ளன. அவர்கள் உலகின் எந்த முஸ்லிம் நாட்டிலும் தஞ்சம் பெற முடியும். ஆனால், ஹிந்துக்கள், சீக்கியர்கள், இந்திய புத்த மதத்தினர், ஜைனர்கள், போன்றவர்களுக்கு பாரதத்தை விட்டால் செல்வதற்கு வேறு எந்தத் தேசமும் இல்லை.

நாட்டின் முதல் துணைப் பிரதமர் வல்லபபாய் படேல் 1948இல் கூறியது:

இந்நாட்டின் விடுதலைப் போரில் பெரும் பங்களித்தவர்கள் (அண்டை நாட்டில் உள்ள) நமது நண்பர்கள். அவர்கள் திடீரென வெளிநாட்டவர் ஆகிவிட மாட்டார்கள். புவியியல் எல்லைகள் மாறலாம். ஆனால் அவர்களுடன் நமது உறவு அறுபடாது.

-இந்த தேசத் தலைவர்களின் வாக்குறுதியை நம்பி பிளவுபட்ட பாரத தேசத்தின் இஸ்லாமிய பெரும்பான்மைப் பகுதிகளுக்கு வாழச் சென்ற மக்களும் நம்மவர்களே. இன்று அநத மக்கள் அந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினரால் கொடுமைக்கு உள்ளாகி, சொத்துக்களை இழந்து, கபல கொடிய சித்ரவதைகளை அனுபவித்து, அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு அகதிகளாக வருகின்றனர். இந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருப்பதுதான் 2019ஆம் வருடத்திய குடியுரிமை திருத்தச் சட்டம்.

அந்த அகதிகள் கோருவது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான குடியுரிமை மட்டுமே. அவர்கள் நமது பூர்வீக குடிமக்களும் கூட. அவர்களுக்கான உரிமையை அளிக்கிறது நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசு. அதனைத் தடுக்கவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

அகதிகளாக வாழும் நமது சொந்த சகோதரர்கள் வாழ்வில் மேன்மையுற நாமும் கைகொடுப்போம்! விவரம் தெரியாமல் பொய்ப்பிரசாரம் செய்வோருக்கு தகுந்த விளக்கம் அளிப்போம்!

No comments:

Post a Comment