17/10/2020

கல்வியே கடவுளாகும்! (கவிதை)

 -பொன்.பாண்டியன்



பல்லவி

கல்வியே அனைத்து மாகும்- என்றும்

        கற்பதே  கடமை யாகும்!


அனுபல்லவி

அறம், பொருள், இன்பம், வீடு

        அளித்திடும் ஆன்ற கல்வி!


சரணங்கள்

கல்வியே விழியும் ஆகும்- மெய்க்

        காட்சியின் விழியும் ஆகும்!

கல்வியே செவியும் ஆகும்- ஞானப்

        பசிக்கு நல் அமுதம் ஆகும்!


கல்வியே சுவாசம் ஆகும்- நறும்

        புகழ்மணம் பரப்பும் எங்கும்!

கல்வியே தலைமை ஆகும்- தெளிந்த

        சிந்தனை செழுமை ஆகும்!


கல்வியே உயிர தாகும்- ஒழுக்கப்

        பண்பினில் வாழ வைக்கும்!

கல்வியே செல்வம் ஆகும்- கற்றுக்

        கருத்துடன் சேர்ப்போம் நாளும்!


கல்வியே வலிமை யாகும்- உயர்

        மிடுக்குடன் பயில்வோம் நாமும்!

கல்வியே அழகும் ஆகும்- எழில்

        கலைகளாய்ப் புனைவோம் வாரும்!


கல்வியே துணைய தாகும்- உற்ற

        பொழுதெல்லாம் உதவி செய்யும்!

கல்வியே அரண தாகும்- என்றும்

        விழிப்புடன் நம்மைக் காக்கும்!


கல்வியே மருந்து மாகும்- மடப்

        பிணியெலாம் தீர்த்து வைக்கும்!

கல்வியே உறுதி யாகும்- உழைத்(து)

        உலகெலாம் வாழச் செய்வோம்!


கல்வியே கடவுள் ஆகும்- அன்னை

        கலைமகள் பாதந் தன்னை

நல்மனம், மொழி, மெய்யாலே

        வணங்கி நாம் வாழ்வோம் என்றும்!


 

குறிப்பு: 


திரு.பொன்.பாண்டியன், குடியாத்தத்தில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர்.


 

No comments:

Post a Comment