20/09/2020

ஸ்ரீ கிருஷ்ணகானம் (கவிதை)

- ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்



ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ


பல்லவி

தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணங்கள்

1. 
காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே)

2. 
அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

3. 
எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்
சங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
"உங்கள்மகன் நான் என்றான்! - சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி - எண்ணித் தவிக்கின்றார்! - நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)

4. 
தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு - "அம்மே" என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் "உன் செல்வமகன்!"
பட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ! (தாயே)

5. 
சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)

6. 
வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)

7. 
முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)

***

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
- ஓர் அறிமுகம்


ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (16 அக்டோபர் 1700 - 1765) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞராவார்.

திருவாரூர் மாவட்டத்தில் தக்ஷண துவாரகை என்னும் மன்னார்குடியில் பிறந்தார். இவர் வளர்ந்த க்ஷேத்திரம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும்.இந்த ஊர் திருவாருர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவில் கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரின் தந்தையார் ராமச்சந்திர வாதுளர். இவரது தாயார் கமலநாராயணி. அவதார காலம் ஆவணி மாதம்- மக நட்சத்திரம். இவரது காலம் தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்பன் காலம். இவரது சன்மார்க்க குரு கிருஷ்ண பரமாத்மா. 

வெங்கட சுப்பையருக்கு இளமையிலேயே இசையில் ஆர்வம் காணப்பட்டது. நீடா மங்கலத்தில் வாழ்ந்து வந்த நடேச ரத்தின பாகவதரிடம் இவர் இசை பயின்றார். மிக விரைவிலேயே பயிற்சி முடிவுற்றது. எனக்குத் தெரிந்தவையெல்லாம் சொல்லித் தந்துவிட்டேன், வேறு ஆசிரியரிடம் மேலும் கற்றுக் கொள் என குரு சொல்லி விட்டதும் வேறு ஆசிரியரைத் தேடினார். வேறு குரு கிடைக்காத நிலையில் தாயின் சொற்படி ஸ்ரீ கிருஷ்ணனையே குருவாகக் கொண்டு கலையைப் பயின்றார். நாளுக்கு நாள் தெய்வத் தன்மை தோய்ந்து தெய்வத்தன்மையான பாடல்களைப் புனைந்தார்.

கண்ணனின் திருவிளையாடல்களைப் புனைந்து எண்ணற்ற பாடல்களை இயற்றத் தொடங்கினார். சில காலத்தின் பின்னர் தாயார் இறந்ததும் உலக வாழ்வில் பற்றற்று இறுதி வரை துறவியாகவே வாழ்ந்தவர். பல காலத்தின் பின் தற்போது பெரிய இசைக்கலைஞர்கள் முதல் இளங்கலைஞர்கள் வரை அனைவரும் இவரது பாடல்களைப் பயின்று மேடைகளிலும் பாடி வருகின்றனர்.

1966-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது 266வது ஜயந்தி கொண்டாடப்பட்டது. இவரது ஒரே மாணவர் ருத்திர பசுபதி நாயனக்காரர். மற்ற மாணவர்கள் குடும்பத்திலுள்ள சகோதரர், புத்திரிகள். இவரது சகோதரர் காட்டுக் கிருஷ்ணய்யருடைய பெண் வழியே 6வது தலைமுறையில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், வெங்கட சுப்பையரின் பாடல்களைப் பாடியும், தொகுத்தும், வெளியிட்டும் பணியாற்றி வருகிறார்.

காட்டுக் கிருஷ்ணய்யர் பெண் வழியே இன்னொரு கிளையிலே தோன்றிய கல்யாணசுந்தரம், இராஜகோபாலன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் கூடி ஊத்துக்காடு சோதரர் என்ற பெயரில் வெங்கட சுப்பையரின் பாடல்களைப் பிரபல்யப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.




No comments:

Post a Comment