13/04/2021

கூற்றாயினவாறு விலக்கலீர்! (கவிதை)

-திருநாவுக்கரசர் நாயனார்

திருநாவுக்கரசர் நாயனார்


கூற்றாயின வாறுவி லக்ககிலீர் 
    கொடுமைபல செய்தன நானறியேன் 
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
     பிரியாது வணங்குவன் எப்பொழுதும் 
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
     குடரோடு துடக்கி முடக்கியிட 
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 1
 


நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் 
     நினையாதொரு போதும் இருந்தறியேன் 
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் 
     வயிற்றோடு துடக்கி முடக்கியிட 
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை 
     நணுகாமல் துரந்து கரந்துமிடீர் 
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 2


பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் 
     படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் 
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் 
     சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் 
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் 
     பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் 
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மனே. 3


முன்னம்மடி யேன்அறி யாமையினான் 
     முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் 
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் 
     சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் 
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ 
     தலையாயவர் தங்கட னாவதுதான் 
அன்னநடை யார்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 4


காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் 
     கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி 
நீத்தாய கயம்புக நூக்கியிட 
     நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் 
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் 
     வயிற்றோடு துடக்கி முடக்கியிட 
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 5


சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 
     தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
     உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் 
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் 
     உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் 
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 6


உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் 
     ஒருவர்தலை காவலி லாமையினால் 
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் 
     வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் 
பயந்தேயென் வயிற்றின கம்படியே 
     பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் 
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
     வீரட்டா னாத்துறை அம்மானே. 7


வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் 
     வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் 
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் 
     சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் 
கலித்தேயென் வயிற்றி னகம்படியே 
     கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன 
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 8


பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் 
     புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் 
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை 
     நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் 
என்போலிக ளும்மை இனித்தெளியார் 
     அடியார்படு வதிது வேயாகில் 
அன்பேஅமை யும்மதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 9


போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 
     புறங்காடரங் காநட மாடவல்லாய் 
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் 
     அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் 
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் 
     என்வேதனை யான விலக்கியிடாய் 
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே.  10


குறிப்பு: திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலம் நடு நாட்டிலுள்ளது. இங்குள்ள சுவாமி வீரட்டானேஸ்வரர்; அம்பாள் திரிபுரசுந்தரி. இப்பதிகம் சூலை நோய் தீர அப்பர் ஓதியருளியது.  

திருமுறை: நான்காம் திருமுறை (04.001)
பண்: கொல்லி

No comments:

Post a Comment