15/05/2021

ஸ்ரீ குருஜி (கவிதை)

-சேக்கிழான்


குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்


டாக்டர்ஜி நிறுவிய
அஸ்திவாரத்தில்
பிரமாண்டமான
சங்க மாளிகையை எழுப்பிய
விஸ்வகர்மா.

மோட்சம் தேடிய
துறவிகள் மத்தியில்
தேசம் நாடிய
தேவ விரதர்.

இன்புறு வாழ்வை
சந்தனம் போல
தாய்நாட்டுக்கே
தாரை வார்த்த
ததீசி.

பாரத உயர்வே
பாரின் உயர்வென
பட்டென உரைத்த
‘விஸ்வா’மித்திரர்.

தடைகள் அனைத்தையும்
தவிடெனத் தகர்த்து
சங்க கங்கையை
ஓடவிட்ட
பகீரதர்.

நாடு முழுவதும்
பயணம் செய்து
சமுதாயத்தைப் பிணைத்த
சங்கரர்.

ஞானச் செழுமையால்
யாகம் வளர்த்து
தேசிய உணர்வை
தேனென ஊட்டிய
சாணக்கியர்.

வலிமை வாய்ந்த
இளைஞர் படையை
நனவாய் ஆக்கிய
விவேகானந்தர்.

தேசம் மீண்டும்
மலர்ந்திடச் செய்ய
துறைகள் தோறும்
துடிப்பினை அளித்த
திலகர்.

தீண்டாமை இருளைத்
தீய்ப்பதற்காக
தீபம் ஏற்றிய
அம்பேத்கர்.

தேசமே உயிர்
மூச்செனக் கொண்ட
ஸ்வயம்சேவகர்.



குறிப்பு: 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரான ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர், ஸ்ரீ குருஜி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். அவரது நினைவு நாள: 05.06.1973.

No comments:

Post a Comment