14/06/2020

திருப்பல்லாண்டு (கவிதை)

-பெரியாழ்வார்



திருப்பல்லாண்டு பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய கவிதை நூல் ஆகும்.
இது 12 பாடல்களால் ஆனது. வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.
காப்பு
(குறள்வெண்செந்துறை)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு!  (1)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2).

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்*
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்*
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை*
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே.* (3)

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)

அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி*
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மின. (5)

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)

தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8)

உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்*
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9)

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து *ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10)

அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன்* அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (11)

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே. (12)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

No comments:

Post a Comment