16/06/2021

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்பு!

-ஆசிரியர் குழு



இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 75 பேருக்கு ஆறு மாதங்களுக்கு தலா ரூ. 50,000  உதவித்தொகையுடன் இலக்கியப் பயிற்சி அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் சர்வதேசத் தரத்தில் இலக்கியங்களை படைக்கவும் வழிகாட்டும் வகையில், மத்திய ஊக்கத் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், 30 வயதுக்கு உட்பட்ட,  இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய கலாசாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசித்தும், அறிந்தும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உலகில் அதிக இளைஞர்களைப் பெற்றிருக்கும் நாட்டில், தற்போதுள்ள சூழலில், இளைஞர்களின் சிந்தனையை மேம்படுத்தி ஆரோக்கியமான எதிர்காலத்தை திட்டமிடும் வகையில், இது செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு கீழ்க்கண்ட இணையதள பக்கத்தின் வழியாக விண்ணப்பித்து, அடுத்த மாதத்துக்குள் தங்களின் படைப்புகளை  இளைஞர்கள் பதிவேற்ற வேண்டும்.


தேசிய அளவிலான போட்டியில், தகுதியான 75 படைப்புகளை, இந்திய அரசின்  என்.பி.டி. என்னும் தேசிய புத்தக அறக்கட்டளையின் வல்லுனர் குழு தேர்வு செய்யும். அந்தப் படைப்புகள், வரும் சுதந்திர தினத்தில், இந்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றப்படும். 

அடுத்த ஆண்டு இளைஞர் தினமான, ஜன. 12-இல் நுாலாக வெளியிடப்படும். சிறந்த படைப்புகளை எழுதிய 75 பேருக்கு மூன்று மாத இலக்கியப் பயிற்சியை, தேசிய அளவில் சிறந்த எழுத்தாளர்கள் அளிப்பர்.

மேலும், புத்தகக் கண்காட்சி, மெய்நிகர் புத்தகக் கண்காட்சி, கலாசாரப் பரிமாற்றம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும். அத்துடன், ஆறு மாதங்களுக்கு தலா ரூ. 50,000 உதவித்தொகை வழங்கி, சிறந்த இலக்கியங்களைப் படைக்கும் வகையில், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். 

பின்னர், இந்த எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புகள் தேசிய புத்தக நிறுவனத்தின் சார்பில் நுால்களாக்கப்பட்டு, இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும். அந்த புத்தகங்களின் விற்பனையில் 10 சதவீதம் காப்புரிமையாகவும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் எழுத்தாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால், அதிக அளவில் பங்கேற்று, தமிழின் தொன்மை, தமிழகக் கலாசாரத்தை இளைஞர்கள் வெளிப்படுத்தலாமே?



No comments:

Post a Comment