13/04/2020

ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்

-ஆசிரியர் குழு

ஆதி சங்கரர்
(திருநட்சத்திரம்: சித்திரை- திருவாதிரை)

மஹத் புண்யத்தால் சம்பாதிக்கப்பட்ட மனுஷ்ய ஜன்மா செய்ய வேண்டியதை வேதம் கூறும். ''மாத்ரு தேவோ பவ'' - மாதா என்ற தெய்வத்தை உபாசிக்கிறவனாக இரு என்று கூறியதற்கிணங்க ஸ்ரீ பகவத் பாதாள் தனது தாய் முக்தியடையும் நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து ப்ரம்ம ஞானியான ஆதிசங்கரர் கூறியது ‘மாத்ரு பஞ்சகம்’ . அந்த சுலோகங்களின் தமிழாக்கத்துடன் அதற்கான விளக்கங்களூம் அருளியவர் காஞ்சி மாமுனிவர் அருள்மிகு சந்திரசேகர ஸரஸ்வதி சுவாமிகள். இதோ அந்தப் பாடல்கள்...

ஆஸ்தாம் தாவதியம்ப்ரஸூதி ஸமயே துர்வார சூலவ்யதா|
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ|
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய யஸ்யாக்ஷம:|
தும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை ஜனன்யை நம:||
பொருள்: 

தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் பொழுது அரும்பாடுபட்ட கஷ்டத்திற்கு நான் அதற்குப் பதில் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனோ? அது இருக்கட்டும்; பிரசவ சமயத்தில் போக்க முடியாததும், பொறுத்துக்கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கின்றேனா? அதுவுமிருக்கட்டும்; என்னைப் பெற்றதும், என்னை ரக்ஷக்க ருசியில்லாத பொருளைச் சாப்பிட்டு ஜீவித்த எனது தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தனது சரீரத்தை இளைக்கச் செய்வதும், தூக்கமில்லாமலும், எனது மலத்திலேயே படுத்து ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் காப்பாற்றிய குழந்தைகளில் எவனாவது தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன். ஏற்றுக்கொள்.

குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வமுச்சை:|
குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்
ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: ||

நான் வித்யாப்யாஸம் செய்யச் சென்றபொழுது அம்மா, நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். தூக்கத்தில் நான் சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறியது குருகுலவாசிகளும் கதறும்படிச் செய்த அம்மா, உனக்கு நமஸ்காரம்.

ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த விதினா|
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் ||
அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில், உனக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால் ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக் கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதால், மனம் தவிக்கின்ற உனது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகின்றேன்.

முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வாம் |
இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்
ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம் ||

அம்மா! என்னைக் காணும்போதெல்லாம், என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டுமென்று எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொல்லும் தாரையினால் என்னைச் சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன். இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா உன்னைச் சரணடைகிறேன்.

அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்
ப்ரஸுதி காலே யதவோச உச்சை |
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்
யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி: ||

அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் அம்மா! அப்பா! சிவபெருமானே என்றும்; கிருஷ்ணா, கோவிந்த, ஹரே முகுந்தா என்று அழைத்த அந்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து, உன்னைச் சரணடைகின்றேன்!

இவ்வாறு பாடி தனது தாய்க்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் துறவியான ஆதி சங்கரர்.

நன்றி: தாசானுதாசன்



No comments:

Post a Comment