13/04/2020

மாவீரர் சத்ரபதி சிவாஜி

-டி.எஸ்.தியாகராசன்.




இவ்வுலகில் வாழ்ந்த மிகப் பெரிய வீரர்களின் வரிசையில் மகாகவி பாரதி பாராட்டிய சிங்க மராட்டிய வீரர் சத்திரபதி சிவாஜி மகாராஜாவுக்கு பிரதான இடமுண்டு.

உலகை வென்று உலா வர புறப்பட்ட கிரேக்கப் பேரரசன் மகா அலெக்சாண்டர் (பொ.யு.மு.  356-323). இதே காலத்தில் பாரதத்தில் வரலாற்று ஆசிரியர்களால் இந்துக்களின் பொற்காலம் என புகழாய்ந்த சந்திர குப்த மௌரியர் (பொ.யு.மு.  321-298), தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற மாமன்னர் இராஜராஜன் (பொ.யு 985-1014) கடற்படை கொண்டு நாடுகள் பலவென்று வாகை சூடிய இராஜேந்திர சோழன் (பொ.யு. 1044-1070). இதற்கு பின்னர் முன்னை சீனர்கட்கு சிம்ம சொப்பனமாகத்  திகழ்ந்த மங்கோலியப்  புயல் செங்கிஸ்கான் (பொ.யு. 1162-1227). போன்றவர்களுக்குச் சளைக்காத வீரம் சிவாஜி மகாராஜாவுடையது.

அதன் பிறகு சில நூற்றாண்டுகள் வளர்ந்த பின்னர் பாரதத்தின் மேற்கு எல்லையில் மூன்று புறம் சுல்தான்கள் அணிவகுக்க டில்லியில் மொகலாயப்  பேரரசன் ஒளரங்கசீப் ஆட்சியில் இருக்க,  மராட்டிய மண்ணில் சிங்கக் குட்டியொன்று சிலிர்த்து எழுந்தது. லட்சக்கணக்கான பகைவீரர்களை தனது வலிமை மிக்க சொற்ப்ப படைகொண்டு வீழ்த்திய சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் அரிய வீர தீர, விவேக மதிநுட்பத்தை இன்றும் உலகம் வியந்து போற்றுகிறது.

ஷாஹாஜி போஸ்லே -   ஜீஜா பாய் தம்பதிக்கு இன்றைய பூனா மர்வட்டத்தின் ஜீனார் நகருக்கு அருகில் இருந்த ஷிவநேரி கோட்டையில் 1630 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் சிவாஜி பிறந்தார். 

இவரது தந்தை பீஜப்பூர், அகமத்நகர், கோல்கொண்டு சுல்தான்களின் தளபதியாகப்  பணி புரிந்தார். இவரும் ஒரு ஜாகிர்தார் என்பதால் தன்வசம் சிறிய படையொன்றை வைத்திருந்தார். இவரது மனைவி தேவகிரி அரச வம்சத்தைச் சார்ந்தவர்.

இவர்களது குல தெய்வமான ‘ஷிவாய்’  என்ற பெயரை நினைவுகூர்ந்து தங்களது புதல்வனுக்கு “சிவாஜி” என்ற பெயர் சூட்டினர். சிவாஜி தனது மழலைப் பருவம் தெர்டங்கியது முதற்கொண்டு தனது அன்னையாரிடம் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப்  பயின்றார்.

காகுத்தனின் கல்யாண குணங்கள், வீர அபிமன்யு, அர்ச்சுனன், பீமன் போன்றோரின் வீர, தீரச்  செயல்கள் எல்லாம், சிவாஜியின் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்து,  தெய்வ பக்தியும், தேசபக்தியும் முகிழ்த்தன. 

தந்தை சிவாஜிக்கு கல்வி, கேள்வி, போர்முறைப்  பயிற்சிகளைப்  பயிற்றுவிக்க தாதோஜி கொண்டதேவ் என்ற முதுபெரும் வீரர் தலைமையில் பல்துறை ஆசிரியர்களை அமர்த்தினார். மேற்படிப்பு போல நால் வகை படைகளின் நுணுக்கங்களை மேலும் கற்க கன்கோஷி ஜெட்கி பாஜி பசால்கர் என்பவரை நியமித்தார். சிவாஜிக்கு பத்தாவது வயதில் திருமணமும் நடந்தேறியது.

ஷிவநேரி கோட்டைக்கு அருகில் உள்ள சிறிய, பெரிய மலைகள்,    கணவாய்கள், அடர்ந்த காடுகள் எல்லாம் இவரது போர்ச்   சிந்தனைக்கு உரம் ஊட்டின. தனது 15ஆம் வயதில் மாவல் பகுதி வீரர்கள் சிலரை தனது நண்பர்களாக்கிக் கொண்டார். அப்போதுதான் மராட்டிய மண்னை மாற்றான் ஆள்வதா என எண்ணத் தெர்டுங்கினார். 1645இல் பீஜப்பூர் சுல்தான் வசம் இருந்த ‘டோரா’வை இன்யத்கானடமிருந்தும்,  ‘சக்கான்’  பகுதியை பைரான் கோஜி நர்சாலா என்பவரிடமிருந்தும்,   ‘கொண்டுனர்’ என்ற நிலப்பகுதியை கவர்னர் அடில் ஷாஹித்திடமிருந்தும் கைப்பற்றிய அவர்,  ‘சிம்மகட்’, ‘புரந்தர்’ போன்ற  பகுதிகளையும் தன் வசமாக்கினார். 

சிவாஜியின் இந்த  தொடர் நடவடிக்கைகளைக் கண்ட சுல்தான் முகமது அடில் ஷா சிவாஜியின் தந்தையை 1648இல் சிறையில் அடைத்தான். பின்னர் மேற்கொண்டு சிவாஜி தன் ராஜ்ய எல்லைகளை கைப்பற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன், சிவாஜியின் தந்தையை விடுதலை செய்தான். 

ஆனாலும் சிவாஜி தனது தொடர் நடுவுடிக்கையாக 1656இல் சந்திரராவ் மோர் என்ற பீஜப்பூர் ஜாகீர்தாரிடம் இருந்து ‘ஜாவளி’   குன்று பிரதேசங்களைக் கைப்பற்றினார். இதனால் ஆத்திரமடைந்த பீஜப்பூர் சுல்தான் தனது ராணுவத்தில் வலிமை வாய்ந்த தளபதி அப்சல்கானை பெரும் படையோடு  சிவாஜியை கைதுசெய்ய அனுப்பினான். அவன் வலிமையான உடற்கட்டும், மிக உயரமான உருவமும் கொண்டவன்; அஞ்சா நெஞ்சினன். அவனோடு போர் புரிய எவரும் அஞ்சுவர். அவன் வலிமையான குதிரைப் படையோடு 3000 வீரர்களையும் அழைத்துச் சென்றான். அப்போது சிவாஜி  ‘பிரதாப்காட்’ என்ற கோட்டையில்  இருந்தார். 

 அப்சல் கான் சிவாஜியின் குலதெய்வ கோயிலான பவானி அம்மன் கோயிலையும் விட்டோபா கோயிலையும்    சேதப்படுத்தினான். இந்த இரண்டு கோயில்களும் இந்துக்களின் புனிதத்தலங்களாக இருந்து வந்தவை. இதை அறிந்த சிவாஜி சினத்தின் உச்சத்துக்குச் சென்றார்.

அப்சல் கான் சிவாஜி இருந்த கோட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை பல் நாள் நீடித்தும் கோட்டைக்குள்  நுழைய முடியவில்லை. பின்னர்  “நாம் இருவரும் தனிமையில் சந்தித்து பேசலாம்” என சிவாஜிக்கு தூது அனுப்பினான். சிவாஜியும் அதற்கு  சம்மதித்தார். மலையடி வாரம் ஒன்றில் ஒரு இடத்தில் இருவர்ம் சந்திக்க முடிவாயிற்று. சிவாஜி அவனது வஞ்சகத் திட்டத்தை ஒருவாறு ஊகித்து,   தன் மார்பில் உலோக போர்க்   கவசம் தரித்து, இடுது கை விரல்களில் உலோக புலி நகங்களை பொருத்திக் கொண்டு இடையில்  ஒரு சிறிய குறுவாளோடு, மேலங்கியைப்   போர்த்திக் கொண்டு அப்சல் கானைச் சந்தித்தார். அப்போது அப்சல்கான் சிவாஜியை ஆரத்தழுவி வரவேற்பதுபோல நடித்து தனது குறுவாளால் சிவாஜியின் மார்பில் பாய்ச்சினான். கண் இமைக்கும் நேரத்தில் சிவாஜி தனது இடது கரத்ததால் அவன் வயிற்றை கிழித்தும், வலக்கரத்துக்   குறுவாளால் முதுகில் குத்தியும் அவனை கொன்றார். 

அப்சல் கான் என்ற மாமிசமலை கீழே விழுந்ததும் “ஜெய் பவானி” என்ற குரல் எழுப்பியதும், சிவாஜியின் படை வீறு கொண்டு எழுந்து தளபதி இல்லாத பகைவரின் படையை நிர்மூலமாக்கி 3000 பகைவர்களையும் கொன்று குவித்தது. சிவாஜி அப்சல் கானின் இரண்டு மகன்கள், முக்கிய வீரர்கள் பலரை சிறைப்பிடித்தார். சில தினங்கள் கழித்து அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்து விடுதலை செய்தார். தன் படையினரு தக்க வெகுமதிகளையும்   வழங்கினார். 

பிறகு பீஜப்பூர் சுல்தான் மற்றொரு படையை குஸ்தம் ஜமான் பாஷல் கான் தலைமையில் அனுப்பினான். அவனும் சிவாஜியின் படைகளோடு போர் புரிய முடியாமல் தோற்று தப்பியோடினான். 

மீண்டும் 1660இல்  அடில்ஷா சித்திக் ஜாகுர் என்ற ஜெனரலை அனுப்பி,   சிவாஜி தங்கியிருந்த  ‘பான்கலர்’ கோட்டையின் தெற்குப்   பகுதியில் முற்றுகையிட்டான். மொகலாயப் படை வடக்குப் பகுதியில் முற்றுகையிட்டது. அடில் ஷா சித்திக் ராய்ப்பூரில் இருந்த ஆங்கிலேயரிடம் இருந்து வாங்கிய வெடி மருந்துகளைக் கொண்டும், ஆங்கிலேய கூலிப்படையினரைக் கொண்டும் கோட்டையைத் தகர்க்க முயன்றான்; தோல்வியைத் தழுவினான். 

 பின்னர் சிவாஜி ஆங்கிலேயரைப்  பழிவாங்க, ராய்ப்பூரில் இருந்த அவர்களது தொழிற்சாலையைத்  தகர்த்து பலரை சிறைப்படுத்தினார். அடுத்து, மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட அகமத் நகர், ஜூனார் போன்ற இடங்களில் இருந்து 3 லட்சம்  ரொக்கம்,  200 குதிரைகளை சிவாஜி கைப்பற்றினார். 

இதை அறிந்த ஔரங்கசீப்,    தன் தாய் மாமன் ஷெயிஸ்ட கான் தலைமையில் 1,50,000 வீரர்கள், பீரங்கிகள் கொண்ட படையொன்றை அனுப்பினார். இந்தப் படையோடு பீஜப்பூர் சுல்தான் அனுப்பியிருந்த 80,000  வீரர்கள் கொண்ட படையும் அடில் ஷா சித்திக் ஜாகுர் தலைமையில் சேர்ந்து கொண்டது.

சிவாஜி அப்போது பூனே கோட்டையில் இருந்தார். பூனே சுற்றி வளைக்கப்பட்டது. ஒன்றரை மாத முற்றுகைக்குப் பின் சக்கன் கோட்டை பகைவர் வசமாயிற்று. ஆனால், சிவாஜி தனது படையோடு வெளியேறி விட்டார். ஷெயிஸ்டகான் சிவாஜியின் பூனே அரண்மனையான லால் மகாலில் குடியேறினான். 

இந்நிலையில்,  சில தினங்கள் கழித்து யாரும் எதிர்பாராத நேரத்தில் சிவாஜி சிறிய படையோடு வீரர்களோடு அரண்மனைக்குள் நுழைந்து ஷெயிஸ்ட கானின் மனைவிகள் பலரைக் கொன்று எல்லோரையும் பீதியடையச் செய்தார். அப்போது நடந்த சண்டையில் ஷெயிஸ்ட கானின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தப்பி,  நகருக்கு வெளியில் முகாமிட்டு இருந்த தன் படையினரோடு சேர்ந்தார். 

 பின்னர் ஔரங்கசீப் மாமனைத்   தண்டித்து வங்காளத்திற்கு அனுப்பினார். அவுரங்கசீப் மீண்டும் ரஜபுத்திர ராஜா ஜெய் சிங்கை 15,000 குதிரைப் படைவீரர்களோடு அனுப்பினார். ஜெய் சிங் சிவாஜியின் ஆட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை தனது குதிரைப் படையால் சேதப்படுத்தி வந்தார். இதை அறிந்த சிவாஜி ஜெய் சிங்கோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். தான் கைப்பற்றியிருந்த 23 கோட்டைகளில் 11 கோட்டைகளைத் திருப்பி தரவும்,  நஷ்ட ஈடாக 4 லட்சம் பொன்னைத  தரவும்  இணங்கினார். 

அதன்  பின்னர் ஔரங்கசீப் அழைப்பை ஏற்று தனது 9 வயது மகனோடு ஆக்ரா சென்றார். 1666 ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள் ஔரங்கசீப்பை தர்பார் மண்டபத்தில் சந்தித்தார். ஆனால், ஔரங்கசீப் சிவாஜியையும் அவரது மகனையும் சரியான மதிப்புடன் வரவேற்கவில்லை. அதனால் கோபமுற்று தர்பார் மண்டபத்திலிருந்து சிவாஜி வெளியேறினார். உடனே  அவரை வீட்டுக்காவலில் சிறைப்படுத்தினார் ஔரங்கசீப். ஆனால் சில தினங்களிலேயே சிவாஜியும் அவரது மகனும் தந்திரமாக தப்பித்துச்  சென்றார்கள். அது ஒரு தனி சாகசம். 

சில காலம் கழித்து ஔரங்கசீப் மொகலாய சர்தார் ஐஸ்வந்த் சிங் மூலம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். சிவாஜி நான்கு மாத காலத்தில் தான் இதுவரை இழந்து இருந்த கோட்டைகள், பிரதேசங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றினார். பம்பாயில் இருந்த ஆங்கிலேயர்கள் சிவாஜிக்கு ஆயுதங்கள் தர மறுத்ததால் அவர்களை 1670இல் கடுமையாகத்   தாக்கினார். 

ஒரு சமயம் வெறும் 300 வீரர்களைக் கொண்டு மிகப் பெரிய எதிரிப்படைகளை வென்றது உலக சாதனையாக இன்றும் கருதப்படுகிறது. இப்படி பல பேர்களில் கொரில்லா முறைகளில் பகைவர்களை வென்றிருக்கிறார் சிவாஜி. 

1674 ஜூன் 6ஆம் நாள்,  ராய்கர் கோட்டையில், 50 ஆயிரம் மக்கள் முன்னிலையில்,  காசி நகர வேதவிற்பன்னர் காகப்பட்டர்,  சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி,  நர்மதா,  கிருஷ்ணா போன்ற புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை தங்கக் கலசங்களில் நிரப்பி முறையாக வேள்வி நடத்தி, சிவாஜியை நீராட்டி தங்க கீரீடத்தைச்  சூட்டி மராட்டி மண்ணின் ராஜாவாக அறிவித்தார்.

இதுவரை எந்த ஒரு நாட்டிற்கும் மன்னர் என்று பெயர் பெற்றிராத ‘சிவாஜி’ சத்திரபதி சிவாஜியாக மராட்டிய மன்னராக மாறினார். அவுரங்கசீப்பும் இவரை மன்னர் என்று வேறு வழியின்றி அங்கீகரித்தார். 

மாமன்னர் சிவாஜி தனது அரசில் பல்துறை வித்தகர்கள் எண்மரை அமைச்சர்களாக நியமித்தார். இவர்கள் அன்றாட அலுவல் தொடங்கி, நிதி, நிர்வாகம், ராணுவம், வெளியுறவு, நீதி, வரி வசூல், பாதுகாப்பு வரை எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்தனர். இவர்களுக்கு ‘அஷ்டப்பிரதானிகள்’ என்று பெயர். மராத்தி-  அரசின் அனுவல் மொழியாகவும், சமஸ்கிருதம்-    பொது மொழியாகவும் இருந்தன. பாரதத்தின் மேற்கு பகுதியில் முதன் முதலாக   ‘இந்து சாம்ராஜ்யம்’ அமைத்தார்.

எந்தக் காரணம் கொண்டும் சமயம் தொடர்பான அம்சங்களில் சிவாஜி சமாதானம் செய்து கொண்டாரில்லை. அதே சமயம் முஸ்லிம் மத சம்பந்தமான விஷயங்களில் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்தார். சாதி,  மதப் பாகுபாடுகளை முற்றிலுமாகக்  களைந்தார்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்; பெண்களுக்கு எதிராக குற்றச் செயல் புரிபவர்களை மிகக் கடுமையாகத்   தண்டித்தார். அண்டை முஸ்லிம் நாடுகளின் ஆக்கிரமிப்புகளைத்  தடுத்து நிறுத்தினார். 

1667-ல் போர்த்துகீசியர்கள்  ‘பார்டுஷ்’ என்ற பகுதியில் ஏழை, எளிய இந்துக்களை கிறித்துவர்களாக கட்டாய  மத மாற்றம் செய்வதை அறிந்து சிவாஜி அங்கே நேரில் சென்று கத்தோலிக்கப் பாதிரியார்கள் மற்றும் பல கிறித்துவர்களைக்  கொன்றார். அப்போது மேலும் கிறித்துவர்களை கொல்ல வேண்டாம் என்று அம்புரோஸ் என்ற கத்தோலிக்க பாதிரி ஒருவர் சிவாஜியிடம் மண்டியிட்டு வேண்டினார். அப்போது “இவர் ஒரு உண்மையான பாதிரி” என்று சொல்லி மன்னித்து, வீடு திரும்பினார் சிவாஜி. 

அப்போது டில்லியில் இருந்த ஔரங்கசீப் இந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார். முஸ்லிம் மதத்தைத்   தழுவாத ஏனைய இந்ததுக்களின் மன உறுதியைக்   குலைப்பதற்காக  ‘ஷியா’ என்ற புதிய வரியை விதிக்கிறார் என்று கேள்விப்பட்டு அவுரங்கசீப்புக்கு ஒரு கடிதத்தை சிவாஜி மகராஜா 1679 ஏப்ரல் 3 ஆம் நாள் அனுப்பினார். 

அதில் “நீங்கள் இந்துக்கள் மீது விதித்து இருக்கும் புதிய ஷியா வரி,  நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பானது. இந்துக்களை அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும்,  கடவுள் பக்தி கொண்ட உங்களுக்கு நியாயமன்று. உங்களுக்குத்   துணிவு இருந்தால் முதலில் ராஜா ஜெய் சிங் மீது வரி விதியுங்கள். எறும்புகளும், ஈக்களுமாக உள்ள எளிய மக்களுக்கு வரி விதிக்க ஆர்வமோ, துணிவோ தேவையில்லை. உங்களுக்கு குரான் மீது நம்பிக்கை இருந்தால் இறைவன் முஸ்லிம் மக்களுக்கு மட்டும்தான் என்று எண்ண மாட்டீர்கள். உங்களின் மத வெறியை மற்ற மதத்தினர் மீது காட்டுவது புனித நூலின் வாசகங்களுக்கு மாறானது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சிவாஜியின் சம காலத்தில் வாழ்ந்த கவிஞர் கவிபூஷண்  “சிவாஜி மகராஜா இல்லாது இருந்திருந்தால் காசி தனது பாரம்பரியத்தை இழந்திருக்கும். மதுரா மசூதியாக மாறியிருக்கும். எல்லோருக்கும் சுன்னத் செய்திருப்பார்கள்” என்றார். 

 சிவாஜியின் கடற்படையும் வலிமையாக இருந்தது. அவரிடம் 1657இல் 160 போர்க் கப்பல்கள் இருந்ததாக ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

சிவாஜியின் வீர, தீர, சாகசப் போர்கள் குறித்து, ஆங்கில, பிரஞ்சு, டச்சு, போர்ச்சுகீசிய, இத்தாலி நாடுகளின் வரலாற்று ஆய்வாளர்கள் எல்லாம் அலெக்சாண்டர், ஹானிபால், ஜூலியஸ் சீசர் போன்றோரோடு சிவாஜியை இணை வைத்துப் பாராட்டினர்.

சிவாஜி மலைக்குன்றுகளில் மறைந்திருந்து எதிரிகளைத்  தாக்குவதிலும், எதிரிகள் வசம் சிக்காமல் இருப்பதிலும் நிபுணராக இருக்கும் சிவாஜியைக் கண்ட ஔரங்கசீப், அவரை  ‘மலை எலி’ என வர்ணித்தார். சிவாஜி அரசு வசம் சுமார் 280 முதல் 300 கோட்டைகள் வரை இருந்ததாக மற்றவர்கள் மதிப்பீடு செய்துள்ளார்கள்.

தனது   வாழ்வில் வெற்றிக் கனிகளை மட்டுமே பறித்துக் கொண்டும், அனைத்து மக்களையும் அரவணைக்கும் அரண் போல ஆட்சி செய்தும் வந்தவர் சிவாஜி. இவர் 1680 ஏப்ரல் 3 ஆம் நாள் கடுமையான வயிற்றுப் போக்காலும், சுரத்தாலும் ராய்க்கர் கோட்டையில் உயிர் நீத்தார். 

இவரது ஆட்சித் திறத்தையும், நுண்மான் நுழைபுலத்தையும் கருதி  ‘மேலாண்மைக்கு குரு சிவாஜி’  என்ற பாடப் பகுதியை பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வைத்துள்ளார்கள். 

சிவாஜியின் மறைவையொட்டி நடந்த நமாஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற மொகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப்,   “காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் சுல்தான்கள் ஆட்சியை நிறுவியது. பல நாடுகளை என் படைகள் வென்றுள்ளன. ஆனால் இந்தியாவில் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்துவிட்டார். என் சக்தி முழுவதையும் செலவிட்டும் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அல்லாவே! எனக்கு பயமில்லாத துணிச்சலான ஒரு எதிரியை கொடுத்து விட்டாய். இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னுடன் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத்  திறந்து வைத்திரு” என்று இரங்கற்பா வாசித்தாராம்.


(இக்கட்டுரை, தினமணி நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

No comments:

Post a Comment