17/07/2021

நாட்டு வணக்கம் (கவிதை)

-மகாகவி பாரதி


பாரத நாடு - சுதேச வந்தனம்
(ராகம்: காம்போதி; தாளம்: ஆதி)


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ? 
1


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே -  தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடிஇல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?
2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் தூன்றமுள் ஈட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

3

No comments:

Post a Comment