17/07/2021

கருப்பூரம் நாறுமோ? (கவிதை)

- ஆண்டாள் நாச்சியார்



(கலிவிருத்தம்)


567:
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1


568:
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2
 

569:
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3


570:
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4


571:
உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5


572:
போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.


573:
செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7


574:
உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8


575: 
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9


576: 
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே.  10

ஆதாரம்: 
நாலாயிர திவ்ய பிரபந்தம் / நாச்சியார் திருமொழி                   (ஏழாம் பத்து)  
காண்க:


No comments:

Post a Comment