16/08/2021

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 3

 -பேரா. பூ.தர்மலிங்கம்

தேசிய உணர்வு

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நமது ரத்தத்தின் ரத்தம், சதையின் சதை. நாம் அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என்ற உணர்வை மக்கள் பெறும் வரை ஓய்வெடுக்க மாட்டோம். இந்த வார்த்தைகள் உண்மையாக நிறைவேறும் வண்ணம், அன்னை இந்தியாவை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றுவோம்.

***
தேச உணர்வு

நமது தேசியவாதத்தின் அடிப்படையானது வெறுமனே 'பாரத்' அல்ல, 'பாரதமாதா' என்பதாகும். மாதா என்ற வார்த்தையை நீக்குங்கள். பாரத் என்பது ஒரு நிலமாக மட்டுமே இருக்கும். நமக்கும் இந்த நிலத்திற்கும் இடையிலான உறவு தாயின் உறவோடு மட்டுமே உருவாக்கப் பட்டுள்ளது. நிலத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் இடையிலான உறவு தாய் மற்றும் மகனுக்குமான உறவாக இல்லாதவரை எந்த நிலத்தையும் ஒரு நாடு என்று அழைக்க முடியாது.

***
தேச சிந்தனை

ஒரே குழுவினராக, ஒரே இலக்கு, ஒரே கொள்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து ஒரு குறிப்பிட்ட நிலத்தைத் தனது தாய்நாடாகக் கருதும்போது அது தேசமாகிறது. கொள்கை மற்றும் தாய்நாடு ஆகிய இரண்டில் ஏதேனும் ஓர் உணர்வு இல்லையென்றாலும் பின்னர் எந்த தேசமும் இல்லை. 

***

***
அரசும் தேசமும்

அரசு என்பதும் ஒரு நிறுவனம் ஆகும்; தேசம் இதை உருவாக்குகிறது. மேற்கத்திய நாடுகளில் அவர்கள் அரசை தேசத்துக்கு ஒத்ததாகக் கருதினர். ஆயின், தேசமும் அரசும் ஒன்றல்ல. நமது நாட்டில், சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின்படி அரசு உருவாக்கப்பட்டது. முற்காலத்தில் எந்தவொரு அரசும் அரசனும் இருக்கவில்லை. கிருதயுகத்தில் அரசோ அரசரோ இல்லையென மகாபாரதம் விவரிக்கிறது. இருப்பினும், சமூகம் தர்மத்தைக் கடைப்பிடித்ததன் மூலம் நீடித்தது மற்றும் பாதுகாக்கப்பட்ட து. எனவே அரசு ஒரு முக்கியமான நிறுவனம் என்றாலும் எல்லாவற்றிற்கும் (தேசம், தர்மம் உள்ளிட்டவை) மேலானது அல்ல. 

***
இஸ்லாமியர்களின் சிக்கல்

முஸ்லிம் சமுதாயத்தின் பிரிவினைவாத மற்றும் தேச விரோத அணுகுமுறை அகண்ட பாரதத்துக்கு மிகப் பெரிய தடையாகும். பாகிஸ்தான் உருவாக்கம் இந்த அணுகுமுறையின் வெற்றி எனலாம். அகண்ட பாரதம் குறித்து சந்தேகம் உள்ளவர்கள், தங்களது கொள்கையை முஸ்லிம்கள் மாற்ற மாட்டார்கள் என நினைக்கிறார்கள். அப்படியானால், இந்தியாவில் தொடர்ந்து வசித்து வருகிற ஆறு கோடி முஸ்லிம்களின் நலனுக்கு அது தீங்கு விளைவிக்கும். முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என எந்த காங்கிரஸ்காரராவது கூறுவாரா? இல்லையெனில், நமது நாட்டின் தேசிய வாழ்க்கையில் அவர்கள் இணைக்கப்பட வேண்டும். ஒற்றுமை உணர்வின்மையால் நமது நாடு பிரிக்கப்பட்டிருந்தால், அதே ஒற்றுமை உணர்வால் மீண்டும் அதை ஒன்றாக இணைக்க முடியும். இதற்காக நாம் பாடுபட வேண்டும்.
***

***
நான் அல்ல- நாம்

மனிதன் என்பவன் தனிமனிதன் மட்டுமே அல்ல. உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றை உள்ளடக்கியவர் ஆவார். அவர்  ‘நான்’ என்ற ஒருமையில் மட்டுமல்ல,  ‘நாம்’ என்ற பண்மையுடனும் இணைந்தே இருக்கிறார். எனவே, தனிமனிதனை மட்டுமின்றி குழு அல்லது சமூகத்தைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
***
சமூக உருவாக்கம்

‘தனி மனிதன் சமுதாயத்தை உருவாக்கினான்’ என்பது தவறானது. சமூகம் பல தனி மனிதர்களைக் கொண்டிருக்கிறது. ஆயினும் இது தனி மனிதர்களாலோ, அல்லது பல தனி மனிதர்கள் ஒன்றிணைவதன் மூலமோ உருவாகவில்லை. நமது சமூகம் இயற்கையானது. தனி மனிதரைப் போலவே சமூகமும் இயற்கையாக உருவாகிறது, மக்கள் உருவாக்கவில்லை.

***
அடையாள மீட்பு

கடவுளின் மிக உயர்ந்த படைப்பான மனிதன் தனது அடையாளத்தை இழக்கிறான். நாம் மனிதனை சரியான நிலையில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். தனது சிறப்பை அவன் உணருமாறு செய்ய வேண்டும். அவனது திறன்களை மீண்டும் எழுப்ப வேண்டும். மேலும் அவனது உள்ளார்ந்த ஆளுமையின் மிகச் சிறப்பான இடத்தை அடைவதற்கு அவனை ஊக்குவிக்க வேண்டும். இதை ஒரு பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலமே நிறைவேற்ற முடியும். 
***

***
நிறைவான பொருளாதார அமைப்பு

நம்முடைய மனிதாபிமானப் பண்புகளின் அல்லது நாகரிகத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய, மற்றும் எல்லா வகையிலும் மனநிறைவு தரக்கூடிய பொருளாதார அமைப்பு நம்மிடம் இருக்க வேண்டும். நமது மனிதாபிமானப் பண்புக்கு ஊறு விளைவிக்காததாகவும், நம்மை அதன் செயல்பாடுகளுக்கு அடிமையாக்காததாகவும் ஓர் அமைப்பினை நாம் பெற்றிருக்க வேண்டும். இக்கருத்தின்படி, வளர்ச்சியின் விளைவாக மனிதன் கடவுளுக்கு ஒப்பான முழுமை பெறுகிறான். எனவே, அத்தகைய பொருளாதார அமைப்பையும், கட்டமைப்பையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். இதன்மூலம் மனிதனின் உள்ளார்ந்த திறன்களையும், அதிக அளவிலான மனநிறைவையும் காண இயலும். 
***
கலாச்சாரமே அடிநாதம்

நமது அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான வலிமையை நமக்குக் கொடுப்பதே நமது முதல் நோக்கம். இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சியின் எந்தவொரு திட்டமும் நமது ஜனநாயக அமைப்புக்கு ஒரு தடையாக இருப்பின் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றாவதாக, நமது வாழ்க்கையில் சில கலாச்சார விழுமியங்களைக் கொண்டிருக்கிறோம். அவை நமது அடிப்படை மற்றும் தேசிய வாழ்க்கையின் அளவீடாகும். மேலும், முழு உலகிற்கும் அவை மிகவும் மதிப்பு மிக்கவையாகும். இந்தக் கலாச்சாரத்துடன் உலகை அறிவது நமது உயர்ந்த தேசிய இலக்காக இருக்க வேண்டும். இந்த கலாச்சாரத்தை இழந்து நாம் செழிப்பைப் பெற்றோமென்றால் அது உண்மையான செழிப்பன்று.

***

தர்மத்துக்கே முதன்மை

இங்கிலாந்தில் இருப்பதைப் போலவே எல்லா இடங்களிலும் பாரம்பரிய மரபுகள் மதிக்கப்படுகின்றன. நாமும் அரசியலமைப்பை எழுதியுள்ளோம். இந்த எழுதப்பட்ட அரசியலமைப்பும் கூட இந்த நாட்டின் பாரம்பரிய மரபுகளுக்கு மாறாகச் செல்ல முடியாது. இது நம்முடைய பாரம்பரிய மரபுகளுக்கு முரணாகச் சென்றால், இது தர்மத்தை நிறைவேற்றுவதில்லை. தேசத்தை நிலைநிறுத்தும் அந்த அரசியலமைப்பு தர்மத்துடன் ஒத்துப் போகிறது. தர்மம் தேசத்தை நிலைநிறுத்துகிறது. தர்மம் இறையாண்மையாகக் கருதப்படுவதால், நாம் எப்போதும் தர்மத்திற்கு முதன்மையான முக்கியத்துவத்தை அளிக்கிறோம். 
 
***
சுதந்திரத்தின் அடிப்படை

சுதந்திரம் என்பது ஒருவரின் சொந்த கலாச்சாரத்துடன் நெருக்கமான தொடர்புடையது. கலாச்சாரம் சுதந்திரத்தின் அடிப்படையை உருவாக்கவில்லையென்றால், சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கம் என்பது சுயநல மற்றும் அதிகார வர்க்கப் போராட்டமாகச் சுருங்கிப் போகும். 
 
***

கலாச்சாரமே இணைக்கிறது

நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் தத்துவ வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு இந்திய அரசியலைச் சிந்திக்க முடியாது. இந்தியக் கலாச்சாரமானது ஓர் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் மேலோட்டமாகக் காணப்படுகின்ற வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டாலும் கூட, இந்தியக் கலாச்சாரம் அவர்களிடையே இருக்கின்ற ஒற்றுமையைக் காண்பதற்கு விளைகிறது;  மற்றும் அவற்றை ஒருங்கிணைக்கிறது. 
 
***
பரஸ்பர ஒத்துழைப்பு தேவை

உலகம் உருவாக்கப்பட்டு இயங்குவது  ‘கணவனுக்கும் மனைவிக்கும்’ இடையிலான மோதலால் அல்ல. மாறாக, அவர்கள் ஒருவரையொருவர் சார்த்திருப்பதால் ஆகும். எனவே அனைத்துச் செயல்களும் வர்க்கப் போராட்டம் மற்றும் விரோதத்தின் அடிப்படையால் அல்லாமல், ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல், நிரப்புத்தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டும்; மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். 
 
- பண்டிட் தீனதயாள் உபாத்யாய

No comments:

Post a Comment