16/08/2021

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி (கவிதை)

-மகாகவி பாரதி




(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு - 3)


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்
    புன்மை யிருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
    லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
    வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

1

புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
    பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்!
    வீதியெ லாம் அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
    சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
    ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

2


பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
    பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்; 
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
    கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்; 
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
    சொல்லரு மாண்பின ஈன்றனை
அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
    நிர்மலையே பள்ளி யெழுந்தரு ளாயே!

3


நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
    நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ;
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
    பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செயது எத்தனை காலம்
    ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
    இன்னுயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

4


மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
    மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
    கோமகளே! -- பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
    வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
    ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

5


காண்க: 


No comments:

Post a Comment