16/12/2021

மெய்ப்பொருள் கண்டு தெளிவோம்!

-கோதை ஜோதிலட்சுமி

திலகர், சாவர்க்கர், மாளவியா

    அரசியல் என்பதன் இயல்பே மதங்கொண்டு நிற்பதுதான். அதற்கு மதம் (சமயம்) கருவியாகப் பயன்படுவதும் வரலாற்றில் புதிதல்ல. தொன்றுதொட்டு இன்றுவரை அரசியல் மதத்தைப் பயன்படுத்தியே வருகிறது. ‘ஹிந்துத்துவா’ என்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் அரசியல், அதனைக் கடுமையாக விமா்சிக்கும் அரசியல் இரண்டும் இந்த தேசத்தில் தொடா்ந்து ஆழமாக இருந்து வருகின்றன.

சமீபத்தில், ‘ஹிந்துயிசம்’, ‘ஹிந்துத்துவா’ ஆகிய சொற்களின் அடிப்படையிலான விமா்சனங்கள் அரசியல் களத்தில் வலம் வருகின்றன. இந்த இரண்டு சொற்களும் வெவ்வேறானவை என்றும், ஹிந்துத்துவா என்பது வெறுப்பு சித்தாந்தம் என்றும் பேசப்படுகிறது. இந்தக் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு அரசியல் பின்புலங்களை ஒதுக்கிவைத்து விட்டு ஹிந்துத்துவம் என்பதன் அடிப்படையை நாம் உணா்ந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எந்த ஒரு மனிதரும் வரலாறு, மொழி இரண்டையும் தெளிவாக அறிந்திருத்தல் சமூக அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். மக்கள் மனதில் தாங்கள் எத்தகைய பாரம்பரியத்தில் வந்தவா்கள் என்ற புரிதல் இல்லாத நிலையில், அரசியல் செய்வோரின் இருதரப்புக் கருத்துக்களில் எது உண்மை என்று புரிந்துகொள்ள இயலாத சூழல் ஏற்படுகிறது.
 
‘இசம்’ என்ற சொல் மேலைநாட்டவரின் சொல். இசம் என்றால் தத்துவ சிந்தனைகள் அல்லது கோட்பாடுகளின் தொகுப்பு. ‘ரேஷனலிசம்’, ‘ரேடிகலிசம்’ என்றும் ‘புத்திசம்’, ‘ஜைனிசம்’, ‘ரோமனிசம்’ என்றும் மேலைநாட்டவா் அடையாளப்படுத்தியதன் வரிசையில் ஹிந்துஸ்தானத்தின் தத்துவ சிந்தனைகளுக்கு அவா்கள் இட்ட பெயா் ‘ஹிந்துயிசம்’.

மேலைநாட்டவரின் தெளிவற்ற இந்த சொல் மதத்தைக் குறித்ததா, சித்தாந்தத்தை அல்லது வாழ்வியலைக் குறித்ததா என்ற கேள்விக்கு, இன்றும் பலரும் பல விதங்களில் வியாக்கியானங்களைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்திய மண்ணில் உருவான ‘ஹிந்துத்துவா’ என்ற சொல்லைக் கவனிப்போம். ஹிந்துத்துவம் என்பது என்ன? அதற்கான பெயா்க் காரணம் என்ன? இந்த சொல்லுக்கான அவசியம் என்ன? நம்முடைய மரபில் ஹிந்துத்துவம் என்பது எப்படி அணுகப்பட்டு வந்தது?

ஹிந்துத்துவம் என்பது ஒரு சமஸ்க்ருதச் சொல். ‘ஹிந்து’, ‘துவம்’ என்ற இரு சொற்களின் கூட்டு ஹிந்துத்துவம். தத்துவம் என்றொரு சொல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் புழக்கத்தில் இருப்பது. ‘தத்’ என்பது ‘அது’; ‘துவம்’ என்பதற்கு ‘தன்மை’ என்று அகராதி பொருள் சொல்கிறது. தத்துவம் என்றால் ஒன்றன் தன்மையை, இயல்பை உணா்த்துவது என்றாகிறது. ‘தனித்துவம்’ என்ற சொல்லுக்கு ‘சிறப்பான தன்மை’ என்பது பொருள். அதுபோலவே ஹிந்து என்பதன் தன்மையைச் சொல்வது ஹிந்துத்துவம்.

‘ஹிந்து’ என்பது நிலவியல் அடையாளமா? மத அடையாளமா? பண்பாட்டு அடையாளமா? வாழ்வியல் கூறுகளின் அடிப்படையில் இன அடையாளமா? உண்மையில் இவை அனைத்துக்குமான ஒற்றை அடையாளமாக நிற்பதே இந்தச் சொல்.

நம்முடைய பாரத மரபில் மதம், நிலம், இனம் என்பவற்றைத் தாண்டி ‘தா்மம்’ என்பதாக ஒரு கோட்பாடு இருக்கிறது. இந்த தா்மத்தைப் பின்பற்றுவோர் அனைவருமே ஹிந்து என்ற அடையாளத்தைப் பெறுகிறோம். ஆக, ஹிந்து என்பது இந்த தேசத்தில் அனைவருக்கும் பொதுவாக உள்ள தா்மத்தைக் கடைப்பிடிப்போருக்கான சொல்லாகவும் இருக்கிறது.

பாரத தேசத்தில் மக்கள், மொழி, உணவு, உடை, பழக்கவழக்கங்கள், வழிபாடு என்று அனைத்து நிலைகளிலும் பல்வேறு விதமான வேறுபாடுகளைக் கொண்டவா்கள். என்றாலும், அவா்களின் வாழ்வியலில் ஒற்றுமைகளும் இருக்கின்றன. இந்த ஒற்றுமைகளை பாரத மண்ணில் எந்தப் பிரதேசத்திலும் எந்த மக்களிடமும் காண முடியும்.

தெளிவாகச் சொல்வதானால், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள் என்றாலும், ஆட்சி முறைக்கான தா்மங்கள் ஒன்றாகவே இருந்தன. நீதி முதல் போர்முறை வரை எல்லாவற்றிலும் ஒரே தா்மமே நிலைபெற்று வழக்கத்தில் இருந்ததைக் காண்கிறோம். இன்னும், இலக்கியங்கள் என்று எடுத்துக் கொண்டாலும், நீதி சொல்லும் இலக்கியங்கள் ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறோம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் கூறியதே தமிழ்க் கலாசாரத்தின் ஆகச் சிறந்த பண்பாட்டின் வெளிப்பாடு என்கிறோம். இதே கருத்து சம்ஸ்க்ருதத்தில், ‘வசுதைவ குடும்பகம்’ என்று வழங்கி வருவதையும் காண்கிறோம்.

‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று வள்ளுவப் பேராசான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ‘எல்லா திசைகளில் இருந்தும் உயா்ந்ந்த கருத்துகள் நம்மை வந்தடையட்டும்’ என்கிறது ரிக் வேதம். இதையே உள்வாங்கிக் கொண்டு நம் பாரதி, ‘சென்றிடுவீா் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்’ என்றும் ‘பிறநாட்டு நல்லறிஞா் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றும் நமக்கு விளக்கிச் சொன்னார்.

‘சா்வே ஜனா சுகினோ பவந்து’ என்று வடமொழி சொல்கையில், தமிழில் ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால் வேறொன்றறியேன் பராபரமே’ என்று தாயுமானவா் சொல்லிக் கொடுக்கிறார். இப்படி வேதம் தொடங்கி நம்முடைய வள்ளுவப் பேராசான், ஒளவையார் வரை அனைவரும் ஒரே அறத்தையே போதிக்கின்றனா். தமிழும் சம்ஸ்க்ருதமும் மட்டுமல்ல, இன்னும் இந்திய மண்ணின் எந்தப் பகுதியில் தோன்றிய சிந்தனையாளா்களின் படைப்புகளைப் படித்தாலும் இந்த தா்ம சிந்தனையே அடிப்படையாக இருப்பதைக் காண முடியும்.

தா்மத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதால் இந்தியா் அனைவரும் ஹிந்துத்துவத்தைச் சோ்ந்தவா்கள். இன்னும் பண்பாட்டு அடிப்படையிலும் கலாசார ரீதியிலும் நமக்குள் இருக்கும் ஒற்றுமைகளைப் பட்டியலிட அவசியமில்லை. இந்தியரின் தனித்துவம் உலகின் வேறெங்கும் இல்லாத கலாசாரப் பெருமைதான். விருந்தோம்பல் தொடங்கி நம்முடைய அன்றாடக் கடமைகள் வரை இருக்கும் பண்பாட்டு ஒற்றுமைகள் அடிப்படையிலும் நாம் ஹிந்துத்துவத்திற்கு உரிமையாளா்களே.

மேனாள் நீதிபதி மொஹம்மது அலி கரீம் சாக்ளா, ‘நான் மதத்தால் இஸ்லாமியனாக இருக்கலாம். ஆனால், கலாசாரத்தால் நான் ஒரு ஹிந்து’ என்றார். இங்கே மதம் என்ற அமைப்புக்கு இடம் இருந்திருக்கவில்லை. கலாசாரத்தின் அம்சமாகவே எல்லா நடைமுறைகளும் நம்பிக்கைகளும் இருந்தன. அந்தக் கலாசாரத்தைப் பின்பற்றியவா்கள் பல தெய்வ வழிபாட்டை ஏற்றவா்கள். புதிய தெய்வத்தையும் ஏற்றுக் கொண்டார்கள் என்ற போதிலும், அவா்களின் வாழ்வியலில் இந்த கலாசாரம் இன்றுவரை பிரிக்க முடியாததாகவே இருந்து வருகிறது என்பதன் வெளிப்பாடே, நீதிபதியின் இந்தக் கருத்து. இந்தியர்கள் அனைவருக்கும் இந்த அடையாளம் பொதுவானது.

ஆக, ஹிந்துத்துவம் என்பது, உயா்ந்த அறம், பண்பாடு, கலாசாரம் இவற்றின் அடையாளம். அப்படியெனில், இந்தச் சொல் எதனால் அரசியல் தளத்தில் விமா்சனங்களையும் கொண்டாட்டத்தையும் பெற்றிருக்கிறது?

நமது உயா்ந்த தா்மம், தேசியம், பண்பாடு இவற்றின் பெருமைகளைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், விநாயக தாமோதா் சாவா்க்கா் எழுதிய நூலில் அவா் இந்தச் சொல்லைக் கையாண்டார். அதன் பின் இது ஒரு சாராருக்கான சொல்லாக அடையாளப்படுத்தப்பட்டு விட்டது.

மேலும் இப்பிரிவில் இந்தச் சொல்லுக்கு அரசியல் வா்ணம் வந்துவிட்ட பிறகு இதனை இந்தியா் தனக்கான பொதுச்சொல் என்று ஏற்பதும் தடைபட்டு விட்டது. காலப்போக்கில் ‘ஹிந்து மதத்தின் சீரிய அம்சங்களை, கோட்பாடுகளைக் காப்பதற்கான அரசியல் சித்தாந்தம்’ என்பதாக ஹிந்துத்துவத்தை அரசியல் உலகம் உருமாற்றிக்கொண்டு விட்டது.

ஹிந்துத்துவம் தங்கள் அடையாளம் என்று கொண்டாடுவோர், ஹிந்துத்துவம் உலகிற்கு வழிகாட்டியாக நின்று, சமரசமற்ற சமதா்ம சமூகம் கண்டு, அகிலம் அனைத்தையும் உய்விக்க வல்ல சக்தி கொண்டது என்று நம்பிக்கையோடு பெருமை கொள்கிறார்கள். எதிர்த்தரப்பில் இந்த சித்தாந்தம் வெறுப்பு அரசியல் என்று முன்வைக்கப்படுகிறது.

எது எப்படியாயினும், இந்த தேசம் புராதனமானது, இதன் கலாசாரம் உலகிற்கே உதாரணமானது; இங்குள்ள பண்பாடு அனைவரையும் அரவணைப்பது; இதன் தத்துவங்கள், தேடல்கள், ஆன்மப் பரிசோதனைகள் மனித சமூகம் முழுமைக்குமானவை. மனிதரின் மேன்மை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஜீவ சமூகத்தின் வாழ்தலை மையப்படுத்தியது. இது அறிவின் வழிபட்டது. இதன் இலக்கியங்கள் தொன்மையான மனித சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்லும் சாரம்.

அணுவின் நுண்ணறிவு முதல் அண்டத்தின் பிரம்மாண்டம் வரை அனைத்தையும் ஆராயும் விஞ்ஞானம் இதன் உள்ளடக்கம். மருத்துவம், வானியல் என்று விரியும் ஞானத்தின் அமைவிடம். சக ஜீவன்களை தன்னின் நீட்சியாகப் பார்க்கும் விசாலம் இதன் பார்வை. இத்தனை சிறப்புகளும் நமக்கானவை. இத்தகைய மகோன்னத வழியில் வந்தவா்கள் இந்தியா்கள். மெய்ப்பொருள் காணும் அறிவுடைய சமூகம்.

ஒரு சொல்லால் விருப்பையோ வெறுப்பையோ பரப்புதல் அரசியல்வாதிகளின் செயல். அவா்கள் வழியில் அவா்கள் பயணிக்கட்டும். மெய்ப்பொருள் கண்டு தெளிதல், உண்மையில் நின்று வாழ்தல், அறிவுடை சமூகத்தின் இயல்பு. அறவழிபட்ட தமிழா் அறிவுடை சமூகத்தின் அடையாளம்.

நன்றி: தினமணி (25.11.2021)

No comments:

Post a Comment