16/12/2021

வேளாண் சட்டங்கள் ரத்து: நஷ்டம் அரசுக்கல்ல!

-சுந்தர்ராஜசோழன்



நாடு முழுவதும் விவசாயிகள் காலம் காலமாக எதற்குப் போராடினார்களோ, அதற்கு நல்விடையாகத்தான் மோடி வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தார். காங்கிரஸ் கொண்டுவர நினைத்தும் செயல்படுத்த முடியாத சட்டம். வாக்கரசியலை விட மக்களின், தேசத்தின் நலமே முக்கியமென பல முடிவுகளை நரேந்திர மோடி எடுத்தது போலவேதான் இந்த சட்ட நிறைவேற்றத்தையும் செய்தார்.

ஆனால் சீக்கிய ஜாட்டுகளின் எதிர்ப்புப் போராட்டம் அளவிற்கு ஹிந்து விவசாயிகளின் ஆதரவு வலிமை வாய்ந்ததாக இல்லை என்பது புரிகிறது. இதனை திரும்பப் பெறுவதாக பிரதமர் கூறியபோதே,  தெளிவாகச் சொல்லியுள்ளார் –  ‘இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை மொத்த விவசாயிகளில் வெகு குறைவு. நாட்டில் உள்ள 80 % குறு விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தின் நன்மையை எங்களுக்கு அவர்களால் புரியவைக்க முடியவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீக்கியர்களின் மத உணர்ச்சியும், ஜாதிய மற்றும் பிரிவினை உணர்ச்சியும் காலிஸ்தானிகளால் தூண்டப்பட்டது. இது முழு விஷமாக மாறுவதற்கு முன்,  நாட்டின் நலன் கருதி தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடி சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். இதில் மோடிக்கோ,பாஜகவுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. அவருடைய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்து கொண்டேதான் போகிறது.

ஆனால் இந்த அரசு தங்களுக்காகக் கொண்டுவந்த சட்டங்களை வலிமையாக ஆதரித்து, மோடியோடு திரள மறுத்த ஹிந்து விவசாயிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளும் பணியைச் செய்கிறார்கள். ஜனநாயகத்தின் தடாகத்தில் பூத்த மலர்களின் சுகந்தத்தை அனுபவிக்க விரும்பாத மலச்சிக்கல்காரனாக அவர்களைத் திசைமாற்றுகிறது சுயலாப அரசியல்.

நரேந்திர மோடி நமக்காக நிற்கிறார். இந்த தேசத்தின் முதுகெலும்பில் சூழ்ந்திருக்கும் வியாதியை அறுவை சிகிச்சை செய்ய நினைக்கிறார். அதை தள்ளிப்போட வைக்கும் குரூரம் பிடித்த எதிரிகளிடமே நாம் அதன் உடலை அடைக்கலம் வைக்க விரும்பினால் சரியா?

ஒரு குறுங்குழு தனது போராட்டத்தால், லாபியால், கருத்துருவாக்கத்தால் இந்தியாவின் பெரும்பான்மை ஜனங்களின் அரசின் உள்நோக்கமற்ற நற்செயலைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நமக்கு திரளத் தெரியவில்லை; தலைமையை நம்புவதில் சந்தேகமும், நடுநிலை என்று காயடிப்பு கோழைத்தனமும் வாட்டி வதைக்கிறது நம்மை.

நான் திரும்பவும் சொல்கிறேன். நாடாளுமன்ற வெற்றி, ராணுவத்தை வைத்து மட்டுமே எல்லாவற்றையும் வென்றெடுத்துவிட முடியாது. நவீன உலகின் ஜனநாயக அலகு, போர்த் தந்திரம் எல்லாமே மாறிவிட்டன என்பதை நாம் புரிந்துகொள்ள மறுத்தோமானால் சேதம் நமக்கு மட்டுமே. என்னைத் திட்டுவதன் மூலமாவது நீங்கள் ஒரு தரப்பாக மாறுவீர்களா? அதிலாவது நமது வலிமையை நிரூபிப்பீர்களா என்று தனது ஆதரவு தரப்புகளையே மோடி நோட்டம் விடுகிறார். ஆனால் அதிலும் நமக்குத் தெளிவில்லை.  

பலர் உள்துறையின் மீது பழிபோடுகிறார்கள். “அமித் ஷாவுக்கு நிர்வாகம் தெரியவில்லை தோல்வியே நமது மந்திரமாக உள்ளது. ராஜ்நாத் சிங் சிறப்பாகச் செயல்பட்டார், ஆனால் அமித் ஷாவுக்கு அனுபவமில்லை” என்கிறார்கள்.இதிலும் நான் மாறுபடுகிறேன்.

2019 க்கு முன் உள்ள இந்தியா அல்ல இதுவென்பதை உணர மறுத்தால் நிலைமை புரியாது. 2019 க்கு பிறகு 370 நீக்கம் – ராமர்கோவில் – முத்தலாக் – CAA – வேளாண் சட்டத்திற்கு பின்பும் இந்தியா இப்படி இருப்பதே நல்ல நிர்வாகத்தின் அறிகுறிதான். ஒரு உள்நாட்டு கலகத்தை வலுவாக எல்லாவற்றையும் பயன்படுத்தி தேக்கியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இதெல்லாம் ராஜ்நாத் சிங்கை வைத்துக் கொண்டு செய்ய முடியாது என்றில்லை. வெறும் அரசு நிர்வாகம் மட்டுமே போதுமானதல்ல, இந்த சட்டங்களுக்குப் பிறகான இந்தியாவை ஆள. அணிசேர்ப்பு, சமரசம் என பலதரப்பட்ட அரசியல் லாபத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த விதத்தில் அமித் ஷா சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

தேசம் பதில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் இது எதிர்பார்த்த ஒன்றே. நாம் கருத்தியலாகத் திரளாத வரை, நமது நன்மைக்கு நிகழ்த்தப்படுபவற்றை இரண்டற்ற மனநிலையில் ஆதரிக்காத வரை நமது தோல்வி நம்மோடே வாழ்கிறது. பானிப்பட்டில் இருந்து தோற்றுக் கொண்டேதான் இருக்கிறோம்..

ஆனாலும் சிறுபோரில் தோற்பதே பெரும்போரை வெல்ல உதவியாக இருக்கும் என்ற வியூக தத்துவத்தை நம்புவோம். குருநானக் ஜெயந்தி அன்றுதான் இந்திரா காந்தியின் பிறந்தநாளும். அந்த நாளில் சீக்கியர்களின் போராட்டத்திற்கு மோடி கொடுத்த வெற்றி ஆழமான செய்தியைச் சொல்கிறது.

*** 
ஒருவிதத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டத்தக்கவர். வேளாண் சட்டத்தின் நன்மையை உணர்ந்து, உண்மையான ஹிந்து விவசாயியாக அதை ஆதரித்தார். பாஜக கூட்டணியில் இருந்த எந்தக் கட்சியை விடவும் அவர் வலிமையாக ஆதரித்தார். ஒரே காரணம் அது விவசாயிகளுக்கு நலம் பயக்கும் என்பதாலே.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அவர்தான் இந்தச் சட்டங்களை ஆதரித்தார். இப்போது பலர் எடப்பாடி பழனிசாமியையும் அதிமுகவையும் கேலி பேசுகிறார்கள். உண்மையில் இதற்கு இவர்கள் யாரும் தலைகுனிய வேண்டியதில்லை..

சரியான ஒன்றை ஆதரித்தோம். அது நாட்டின் பாதுகாப்பு மேலுள்ள கவலையினால் வீழ்ந்திருக்கிறது. நில கையகப்படுத்தல் மசோதாவை செல்வி.ஜெ வலுவாக ஆதரித்தார். அதையும் கைவிட வேண்டிய நிலைதான் பாஜக அரசுக்கு வந்தது.

குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்டத்தை ஆதரித்தவர்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் தலைநிமிரும் சூழலே வரும். அந்த நாள் நிச்சயம் வந்தே தீரும்.

***

மோடி ஒன்றும் மோடுமுட்டி அல்ல. அரசியலும் நிர்வாகமும், ஸ்பைடர்மேன் அல்லது ரஜினி படமும் அல்ல. நகர்வுகளும் பதில் நகர்வுகளும்தான் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எவ்வளவு திட்டமிட்டாலும் ஒரு தனிநபர் மட்டுமே ஆடுகிற விளையாட்டல்ல இது.

குதிரை, யானை, மந்திரி என எல்லாவற்றையும் இழந்தாலும் ராஜாவை இழக்கக் கூடாது. இப்போது குதிரையை வெட்டு என்று நகர்த்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதை வைத்து வெட்டுகிறார்கள், நாம் எதைக் குறி வைக்கிறோம் என்பது, இந்த சதுரங்கத்தில் பொறுமையாகவே தெரியும்..

இப்போது வெளியில் தெரிவது என்ன? வேளாண் சட்டத்தில் ஒரு தீர்வு வருகிற போது பாஜகவோடு கூட்டணி என்று கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் செய்தி தொடர்பாளர் சொன்னார் முன்பு. இப்போது அதை உறுதிப்படுத்திவிட்டார் கேப்டன். இதற்கும் மேல் பஞ்சாபிற்கு யாரும் எதையும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

பின்னடைவு பாஜகவிற்கோ அல்லது மோடிக்கோ அல்ல. உண்மையான விவசாயிகளுக்குத் தான்.  



No comments:

Post a Comment