16/12/2021

இரு கதைகள்

-மகாகவி பாரதி



    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 80)


1. புதுப் பேய்

வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.

நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர், தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.

இவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.

‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவளைப் போலிருந்தது.
 
“காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா?” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா? வா வா, தூங்குகிறாயா? எழுப்ப வந்தேன், காளிதாசனா? ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.

“எப்படியிருந்த புத்தி!” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா? பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது?” என்று மறுபடியும் கேட்டேன்.

“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.

எதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.

“ஹா, ஹா, ஹா! எனக்கா விபூதி போட வந்தாய்? சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.

எலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.

எலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.

“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.

“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.

“புதுப் பேய்” என்றாள்.

யான்: என்ன வேண்டும்?

அவள்: விளக்கு.

யான்: என்ன விளக்கு?

அவள்: நெய் விளக்கு.

யான்: என்ன நெய்?

அவள்: புலி நெய்.

யான்: எங்கே கிடைக்கும்?

அவள்: காட்டிலே.

யான்: எந்தக் காட்டிலே?

அவள்: பொதியமலைக் காட்டிலே.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு; பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்” என்று பயமுறுத்தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.

பிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்:-

“நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.

“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை? காளிதாசன், காளிதாசன்! கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.

இதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையாது.

-சுதேசமித்திரன் (13 மே 1916 / நள சித்திரை 21)
***
2. வேப்ப மரம்


இளவேனிற்காலத்தில் ஒரு நாள். காலை வேளையில் நான் மலயகிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுந்தூரம் சுற்றிய பி்றகு என் உடம்பிலே சற்றே இளைப்புண்டாயிற்று. அந்த இளைப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக்குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன். இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக்குள் கண்ணயரந்து நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன்.

நான் தூங்கிக் கொண்டிருக்கையிlல், “ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு; எழுந்திரு” என்று அமானுஷிகமாக ஒலியொன்று கேட்டது. இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணை விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதாவது விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன்.

விழித்து, “யார் கூப்பிட்டத்து?” என்று கேட்டேன்.

“நான் தான் வேப்பமரம்; நான் தான் கூப்பிட்டேன்; எழுந்திரு” என்று மறுமொழி உண்டாயிற்று.

உடனே நான் யோசிக்கலானேன்:-

“ஓஹோ, ஓஹோ! இது பேயோ, பிசாசோ, யக்ஷர், கிந்நரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதியாரோ, வனதேவதைகளோ, யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்பமரம் எங்கேனும் பேசுவதுண்டோ? அட, போடா, பேயாவது? அதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை யன்றோ? நாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ர நிலையடையவில்லை. இன்னும் கனவு நிலையிலே தானிருக்கின்றோம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனையொலி” – இங்ஙனம் நான் யோசனை செய்துகொண்டிருக்கையில், “ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு” என்று மறுபடி சத்தமுண்டாயிற்று.

“நீ யார்?” என்று பின்னுங் கேட்டேன்.

“நான் வேப்பமரம். என் அடியிலே தான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்” என்று மறுமொழி வந்தது.

அப்போது நான்:- “சரி, நமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லியி்ருக்கிறார். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ்விஷயம் நமக்கு இதுவரை தெரியாமலிருக்கலாம். ஆதலால் இந்த மரத்துடன் ஸம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்” என்றெண்ணிக் கண்ணைத் திறந்துகொண்டெழுந்து நி்ன்றேன்.


(உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)

எழுந்து நின்று கொண்டு:- “வேப்பமரமே. உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிரதைப்போல் நெஞ்சு, வாய், தொண்டை, அண்ணம், நாக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாத போது மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே? எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர்களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே. அடி நாக்கில்லாதவர்கள் ஊமையாய்ப் போகிறார்களே. அப்படியிருக்க நீ மனித சரீரமே யில்லாமல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?” என்று கேட்டேன்.

அப்போது வேப்பமரம் சொல்லுகிறது:-

“கேளாய், மானுடா. மனிதனுக்கு ஒரே வாய்தானுண்டு. எனக்கு உடம்பெல்லாம் வாய். மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக்கருவிகள் மனிதரைப் போலவே யிருத்தல் அவசியமென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண ஸ்திதியில் அவை அவசியந்தான். ஆனால், நான் ஸாதாரண மரமில்லை. நான் அகஸ்த்ய முனிவரின் சிஷ்யன். தமிழ் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது…”

வேப்பரம் பி்ன்னுஞ் சொல்லுகிறது:

“நடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடா, கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதானாகிறது. நான் இளமரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒரு நாள் வஸந்த காலத்தி்ன்போது இராவேளையில் ஆச்சர்யமான நிலா வீசிக்கொண்டிருந்தது. நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இராவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக்கொண்டு பிரமாநந்தத்தில் மூழ்கியிருந்தேன். அப்போது பதினாறு வயதுடைய, மிகவும் அழகான மனித ஆண் பிள்ளையொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ்விருவரும் ஸாமான்ய மனிதரில்லையென்பது எனக்குத் தெளிவாய்விட்டது. சிறகுகளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில் அகஸ்திய மஹரிஷியும் தாம்ரபர்ணியம்மனும். அகஸ்தியர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனால் அவர் காமரூபி. அதாவது, நினைத்தபோது நினைத்த வடிவந் தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ரபர்ணியம்மனும் அப்படியே. ஆதலால் அவ்விருவரும் அப்போது அதி சுந்தரமான மனுஷ்ய ரூபந்தரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால் தாம்ரபர்ணி மறைந்துவிட்டாள்….”

வேப்பமரம் சொல்லுகிறது::- “கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். தாம்ரபர்ணியம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள் அகஸ்தியர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில் இப்போது நீ நிற்குமிடத்தில் படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர். எனக்கு அந்த ஸமயத்தில் அகஸ்த்யருடைய சக்திகளெல்லாம் நன்றாகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்திலிருக்கி்றாரென்பதை அறியாமல் ஜலக்கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையி்லிருக்கிறாரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று. அப்போது அதோ, உனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார் – அந்த மரத்தின் கீழேயுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்லபாம்பு ‘ஹுஸ்’ என்ற சீத்காரம் செய்துகொண்டு அகஸ்தியர் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன். ஐயோ; இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமானால் தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கிவிடுவார்” என்றெண்ணி அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர் மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பும் அவரை நெருங்கி வந்து அவருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. மூன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று. அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல் எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையைச் சுற்றிக்கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரம ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணை யெடுத்துப் பூசினார். புண் உடனே ஆறி்ப்போய் சாதாரணத் தோலாய்விட்டது. இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்கியதையில்லாமல், ஊமை மரமாய்ப் பிறந்து விட்டோமே என்றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பி அவர் காலின்மீது சில மலர்களையும் இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்தி என்னை நோக்கி;-

‘வேப்பமரம்’ என்று கூப்பிட்டார்.

வேப்பமரம் பின்னுங் கதை சொல்லுகிறது:- கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். இங்ஙனம் என்னை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னையறியாமல் என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், ‘ஏன் முனிவரே?’ என்ற தமிழ் சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகிதமாய் விட்டது. மாற்றிப் பிறக்க வகையறிந்து கொண்டேன். வேப்பமரப் பிறவி போய் எனக்கு மனிதப் பி்றவி யுண்டாயிற்றென்று தெரிந்து கொண்டேன். உடம்பு மாறவில்லை. உடம்பு மாறினாலென்ன, மாறாவிட்டாலென்ன? நாம் உடம்பில்லை. நான் ஆத்மா. நான் போதம். நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சி்த்தம் மாறிப்போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்துவிட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமா? கோடி ஜன்மங்களில் நான் பெற்றிருக்க வேண்டிய பயனை அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார். எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல் அவருடைய பாதத்தின் மீது வர்ஷித்தேன். அவர் மி்கவும் மகிழ்ச்சி பூத்தவராய் ‘ஏ, வேப்ப மரமே, நேற்றிரவு நானும் தாம்ரபர்ணியும் இங்கு ராம நதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த காலத்தில் நீ பார்த்து பெரு மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினாய். அதை நான் ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால் சிறி்து, நேரத்திற்கு முன்பு நான் யோக சமாதியிலிருந்த போது இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி என்னை எழுப்பும் பொருட்டாக என் மீது நின் இலைகளையும் பூக்களையும் சொரிந்தாய். இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மாறாக உனக்கு நான் ரிஷிபோதம் கொடுக்கிறேன். இதனால் உனக்கு ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸமமான பார்வையும் ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறுவாய்’ என்றார். அது முதல் நான் அவர் கூறிய சக்திகளெல்லாம் பெற்று யாதொரு கவலையுமில்லாமல் யாதொரு பயமுமில்லாமlல் ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன்” என்று வேப்பமரம் சொல்லிற்று. உடனே நான் அந்த வேப்பமரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன். “உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டது. அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி:- “உனக்கெப்படி அகஸ்தியர் குருவோ அப்படியே நீ எனக்கு குரு. அந்த முனிவர் உனக்கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை நீ எனக்கருள் புரியவெண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

“கொடுத்தேன்” என்றது வேப்ப மரம்…

இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூங்கந் தெளிந்து கண்ணை விழித்தெழுந்த் நின்றேன்; எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் கருவிகளும் வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும் ஒந்திகளும் ஆடியோடிக்கொண்டிருந்தன. காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும் ஒளிக்கடலிலே களித்தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன. கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும் ஒரு பெண் குயிலும் ஒன்றுக் கொன்று காதற் பாட்டுகள் பாடிக்கொண்டிருந்தன.

ஆண்குயில் பாடுகிறது:-

“துஹூ, துஹூ, துஹு
துஹூ, துஹூ, துஹு
ராதா ரே.”

[இதன் பொருள்:-

நீ, நீ, நீ
நீ, நீ, நீ
ராதை யடீ.]

“துஹூ, துஹூ, துஹு
ராதா க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.”

வேப்பமரம் தனது புதிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது. “என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்” என்றெண்ணி யெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று. வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

-சுதேசமித்திரன் (26 ஜூன் 1919  /சித்தார்த்தி ஆனி 7)


No comments:

Post a Comment