13/11/2020

சி.வி.ராமனைத் தெரியுமா?

-ஸ்டான்லி ராஜன்


சர். சி.வி.ராமன்



தமிழனுக்கு அறிவில்லை அவன் முட்டாள்; அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம், ஈரோட்டுக்காரன் சொல்லி காஞ்சிபுரத்தான் கூலிக்கு பேசிய பொய்.

அங்கு கல்லணை, பெரிய கோயில் காட்டும் அளவு அறிவாளிகள், மருத்துவம் முதல் மகா ரகசியங்களை எளிதாகச் சொன்னவர்கள் இருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் இருந்தார்கள்.
அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடப்பட்டார்கள்.

ஸ்ரீனிவாச ராமானுஜன் போலவே கொண்டாடப்பட்ட தமிழர் சி.வி.ராமன்; சந்திரசேகர வெங்கட்ராமன். திருச்சி, திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவிரிக் கரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்.

இயற்பியலில் அவர் மேதை. சென்னை, விசாகபட்டினம் என படித்தவர்தான்.  ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது. பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரைக் கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கௌரவித்தது.
ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்.

அதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகிறது; அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன‌. 

இந்த முடிவு பௌதிக உலகை புரட்டிப்போட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கப்பட்டது. 1930-இல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது.

அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சி.வி.ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது.
சாதாரண சாதனை அல்ல அது.

இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.
அதன்பின் உலகின் எல்லா விருதுகளும் தேடி வந்தன. இங்கிலாந்து வழங்கிய சர் பட்டமும் கூட. இத்தாலி, அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின.‌

தன் முதுமைக் காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கௌரவப்படுத்தியது.
பின்னாளில் மாநிலப் பிரிவினை வரும்பொழுது அவர் மைசூர்வாசியானார். அதனால் அவர் பிறப்பால் கன்னடன் என சொல்லிவிட முடியாது. பிறந்ததும் கற்றதும் தமிழகத்தில்தான்.

உலகெல்லாம் கொண்டாடப்பட்ட ராமன் ஒரு தமிழர்; தமிழர் அறிவின் உச்சம்.
ஆனால் இத் தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி,எம்.ஜி.ராமசந்திரன் போல அடையாளப்படுத்தப்பட்டாரா என்றால் இல்லை.
ஏன்? ஏனென்றால் அவர் பிராமணர்.

தமிழ்நாட்டில் பிறந்த அறிவுச் சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கப்பட்டார். எல்லாம் திராவிடப் புரட்டு; வெறும் வறட்டு அரசியல்.
அறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் கொண்டாட மறுக்கப்பட்டோம் அல்லது மறக்கடிக்கப்பட்டோம். அதன் விளைவு, பெரும் விபரீதங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன‌.

அதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்
ராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தைக் கண்டுபிடித்து நோபல் வாங்கினார்?
விஷயம் ஒன்றுமல்ல; சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம். 
விஞ்ஞானம் வந்து சூரிய ஓளியில் 7 வண்ணங்கள் உண்டு என்று சொல்வதற்கு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் எப்படி 7 குதிரைகள் என சொன்னார்கள் என்ற வியப்பு அவருக்கு வந்தது.
7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார். அது என்ன கண்ணன் நீல நிறம் என்பது அவரைச் சிந்திக்க வைத்தது. அதிலே ஆராய்ச்சியைச் செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையைக் கண்டறிந்தார்.

ஆம், நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது. வானமும் கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்குப் புரிந்தது. இந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா என்பது விளங்கிற்று.

இந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞ்ஞான விளக்கத்தைக் கொடுத்தார் ராமன், உலகம் அவரைக் கொண்டாடியது. இப்படி இன்னும் எத்தனை விஞ்ஞானத் தத்துவம் இந்து மதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது. இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்.

பகுத்தறிவு எனச் சொல்லி தமிழகத்தில் அந்தத் தமிழனின் புகழ் மறைக்கப்பட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது. 
இன்றும் அது ‘ராமன் விளைவு’  என்றே கொண்டாடப்படுகின்றது.
 
மாறாக, தமிழக திராவிட கட்சிகள் சினிமாவை வளர்த்தன, பின்னர் அவனது நிற ஆராய்ச்சி எப்படி இருக்கும்?  “ஊதா கலரு ரிப்பன்”, “பச்சை தமிழன்”,  “கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” , “சிகப்பு கலரு ஜிங்குச்சா” என்ற அளவில்தான் இருக்கும்.

இந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த அந்த மேதைக்கு நினைவிடம் இருக்கிறதா? அவர் பெயரில் பல்கலைக்கழகம் உண்டா? கல்லூரி உண்டா? இல்லை விருதுதான் உண்டா? என்றால் இல்லை. பின்னர் எப்படி உருப்படும் தமிழகம்? நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் எப்படி வருவார்கள்?

பகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மதப் புறக்கணிப்பு எனச் சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத் தான் வேண்டும்.

எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான். அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மானிய விஞ்ஞானிகளுக்கு சரிநிகர் சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம். 

இப்பொழுதும் வந்து, பிராமணர் திராவிடர் அல்ல; இந்து மதம் அவர்களால் தமிழர் மீது திணிக்கப்பட்டது; அவர்கள் தமிழர் அல்ல‌;  தமிழருக்கு மதமில்லை; ஆக இவர் தமிழராக மாட்டார், திராவிடர் ஆக மாட்டார் என சிலர் சொல்வார்கள் பாருங்கள். அவர்களைத் திருத்தவே முடியாது.  

இந்துமதத்தை ஏன் கொண்டாடுகின்றோம் என்றால், இம்மாதிரி அறிவியல் கலந்த மதம் , ஆன்மிக அறிவியல் உலகில் எங்குமே இல்லை, அது இந்த மண்ணின் மதத்துக்கு மட்டும் சாத்தியம்.  

இந்து மதம் என்பது மூட நம்பிக்கை அல்ல; அது அறிவுலகின் கூடாரம், ரகசியங்களின் மையம்; புதையலின் நுழைவாயில்; அதிசயங்களின் மதம், விஞ்ஞானத்தின் மறைபொருள். இந்துவாய் இருப்பதே வரம்; அதுதான் அறிவுடைமையும் கூட.



குறிப்பு:

திரு. ஸ்டான்லி ராஜன் பிரபல முகநூல் பதிவர். 

No comments:

Post a Comment