13/11/2020

நான் மனுவை ஆதரிக்கிறேன் (கவிதை)

-பி.ஆர்.மகாதேவன்


நான் மனு தர்மத்தை
நேற்று ஆதரித்தேன்;
இன்று ஆதரிக்கிறேன்;
நாளையும் ஆதரிப்பேன்.

ஏனென்றால்,
அது கிரிக்கெட் ஆணாதிக்க மாஃபியாபோல
பெண்களை அரை ஆடைகளுடன்
ஒவ்வொரு நான்குக்கும் ஒவ்வொரு ஆறுக்கும் ஆடச் சொல்லாது.

அது திரையுலக ஆணாதிக்க ரெளடிகளைப் போல 
பெண்களை டூ பீஸ் உடைகளுடன்
குத்தாட்டம் போடச் சொல்லாது. 
கண்ணகியாக நடிக்கவேண்டுமா
கதாநாயகனுடன் படு, 
பத்தினியாக நடிக்க வேண்டுமா
படத் தயாரிப்பாளனுடன் படு, 
இல்லத்தரசியாக நடிக்க வேண்டுமா
இயக்குநனுடன் படு, 
பாட்டுப் பாடவேண்டுமா
பாடல் எழுதுபவனுடன் படு, 
என்று சொல்லாது.

விளம்பர மாடல்கள் என்றும், 
உலக அழகிகள் என்றும், 
உடலைக் காட்டுவது மட்டுமே
உன்னால் முடிந்த திறமை என்றும், 
பெண்களை போகப் பொருளாய் கடைவிரிக்காது.

அது திராவிட அரசியல் அயோக்கியர்களைப் போல 
பெண்களைப் பொது வெளியில் துகில் உரிக்காது. 
பொதுக் கூட்டங்களில் அவமானப்படுத்தாது. 
உரிய பிரதிநிதித்துவம் இன்றி ஓரங்கட்டாது. 
தரையில் உட்காரச் சொல்லி அவமதிக்காது.

என் ஜாதியினரின் மிடுக்கைக் கண்டு அலையும்
உன் ஜாதிப் பெண்கள் என்று இகழாது. 
மாற்று மதத்தினரின் பெண்களை அடிமைகளாக்கு; 
பாலியல் பலாத்காரம் செய்; 
கொன்று குவி -
என்று சொல்லாத புனித நூல் அது.

சொந்த மதத்துப் பெண்களையே
சூனியக்காரிகள் என்று சொல்லி
தீவைத்துக் கொளுத்தாத புண்ணிய நூல் அது.

மனு தர்மம்- 
பெண்களை தெய்வங்களாகப் போற்றியது. 
பெண்கள் இன்றி யாகங்களில்லை; 
பெண்கள் இன்றி தானங்கள் இல்லை; 
பெண்கள் இன்றி புண்ணிய நீராடல்கள் இல்லை; 
பெண்கள் இன்றி புனித க்ஷேத்ராடனம் இல்லை; 
குடும்பம் இன்றி சமூகம் இல்லை; 
பெண்கள் இன்றி குடும்பம் இல்லை என்றது.

சனாதன தர்மம்- 
நதிகளை... பூமியை... தேசத்தை
பெண்ணாக மதித்துப் போற்றியது.

நேற்று- 
போர்க்களத்தில் மயங்கி விழுந்த மன்னனைக் காத்து
போரை வெல்லக் கற்றுத் தந்திருந்தது; 
ஞானவான்களின் தர்க்க மோதலுக்கு
நடுவராக அமர வைத்தது; 
சிறைவைக்கப்பட்ட ஒரு பெண்ணை மீட்கவும்
அவமானப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின்
அவிழ்ந்த கூந்தலைமுடிக்கவும்
ஒட்டு மொத்த ஆண் குலமும் எழுந்து வந்தது; 
குடும்பத்தை நிர்வகிக்க வைத்தது; 
கலைகளை வளர்க்க வைத்தது.

இன்றைய உலகில்- 
மனு தர்மத்தை மதித்துப் போற்றும்
மடாலயங்கள் நடத்தும் மருத்துவமனைகள்
கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்திலும்
ஆசிரியைகளாக, 
தலைமை ஆசிரியைகளாக, 
மருத்துவர்களாக, 
நிறைந்திருப்போர் பெண்களே.

இன்றைய இந்தியாவில்- 
விமான ஓட்டிகளாக, 
போர்ப் படைப் பிரிவுகளாக, 
பொறியாளர்களாக, 
மருத்துவர்களாக, 
ஆன்மிக வழிகாட்டிகளாக, 
அர்த்த நாரிகளாக,
 அனைத்தையும் ஆள்கிறார்கள் அவர்கள்.

அதனால்தான், 
நான்
மனுவை நேற்றும் ஆதரித்தேன்
இன்றும் ஆதரிக்கிறேன்
நாளையும் ஆதரிப்பேன். 


குறிப்பு:

திரு. பி.ஆர்.மகாதேவன், சென்னையில் வசிக்கும் எழுத்தாளர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்.



No comments:

Post a Comment