13/11/2020

முதல் குடியரசுத் தலைவர்

 -சேக்கிழான்

பாபு ராஜேந்திர பிரசாத்

பாபு ராஜேந்திர பிரசாத்

(பிறப்பு: 1884, டிச. 3 - மறைவு: 963, பிப். 28)



பாரதக் குடியரசு அமைந்ததில் பெறும் பங்கு வகித்தவர் பாபு ராஜேந்திர பிரசாத். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக வீற்றிருந்து அவர் ஆற்றிய பணிகளுக்காக, குடியரசு என்ற முறையில் நாடு அவருக்கு என்றும் நன்றி செலுத்தும்.


பிகார் மாநிலத்தில், ஷிவான் மாவட்டத்தில், ஜிரதே கிராமத்தில், 1884, டிச. 3-ஆம் தேதி பிறந்தவர் ராஜேந்திர பிரசாத். இவரது தந்தை மகாதேவ சஹாய், பெர்சிய மொழியிலும் சமஸ்கிருதத்திலும் நிபுணர். தாய் கமலேஸ்வரி தேவி.

தனது துவக்கக் கல்வியை சாப்ரா மாவட்ட பள்ளியில் பயின்ற ராஜேந்திர பிரசாத், பாட்னாவிலுள்ள டி.கே. கோஷ் அகாதெமியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். இதனிடையே அவரது 12-வது வயதில், ராஜவன்ஷி தேவி என்ற நங்கையை திருமணம் செய்துகொண்டார்.

கொல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் முதலிடத்தில் தேறிய பிரசாத், அதற்காக மாதம் ரூ. 30 உதவித்தொகை பெற்றார். 1902 ல் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லலூரியில் சேர்ந்தார். அங்கு ஜெகதீச சந்திர போஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோரின் மாணாக்கராக இருந்தார். 

முதுகலை- பொருளாதாரம் பட்டம் பயின்ற அவர், 1908-இல் பீகார் மாணவர் மாநாடு என்ற அமைப்பு உருவாவதில் பெரும்பங்கு வகித்தார். அந்நாளில் மாணவர் சங்கம் அமைப்பதில் முன்னோடியான நடவடிக்கை என்று அது கருதப்படுகிறது. பின்னாளில் பீகார் முதல்வரான அனுக்ரக நாராயன் சின்ஹா, பீகார் கேசரி கிருஷ்ண சிங் உள்ளிட்ட பல தலைவர்களை அந்த அமைப்பே உருவாக்கியது.

1908-இல் முசாபர்பூரில் பூமிகர் பிராமின் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு முதல்வராகவும் அவர் உயர்ந்தார். எனினும், சட்டக் கல்வி பயில்வதற்காக ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். 1915 ல் சட்டக் கல்வியில் முதுகலை (எம்.எல்) பட்டம் பெற்றார். அதன்பிறகு, பகல்பூரில் (1916) வழக்கறிஞராக பணியைத் துவங்கினார். பிகார் மற்றும் ஒரிசா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக அவர் திறம்படப் பணிபுரிந்தார். குறுகிய காலத்தில் அத்தொழிலில் முத்திரை பதித்தார்.

அப்போதுதான் ‘சம்பாரன் சத்யாகிரகம்’ என்ற விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி பிகாரில் தீவிரம் அடைந்தது. விவசாய சாகுபடிக்கு விதிக்கப்பட்ட ஆங்கிலேய அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உழவர்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு ஆதரவாக மகாத்மா காந்தி சம்பாரன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள நிலையைக் கண்டறிந்து வருமாறு ராஜேந்திர பிரசாத்தை காந்திஜி பணித்தார்.

அதனை ஏற்று, உண்மை அறியும் குழுவை வழிநடத்திய ராஜேந்திர பிரசாத், அரசுக்கு முக்கியமான பரிந்துரைகளை செய்தார். பின்னாளில் அவை சம்பாரன் விவசாய சட்டத்தில் (1918) இடம் பெற்றன. இதன்மூலமாக, மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பாரதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது. இதுவே ராஜேந்திர பிரசாத் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அவர் விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவரானார்.

அக்காலத்தில் விடுதலை வீரரும் புரட்சியாளருமான ஞானி ராகுல சாங்கிருத்தியாயனுடன் (வால்காவிலிருந்து கங்கை வரை- நூலை எழுதியவர்) ராஜேந்திர பிரசாத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. பிகார் வெள்ளச் சேதத்திற்கு ஆளானபோதும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோதும், ராஜேந்திர பிரசாத் மீட்டுப் பணிகளில் முன்னின்றார். 

தொடர் சுற்றுப்பயணம், விடுதலைப் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜேந்திர பிரசாத், 1934 ல் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியபோதும், மீண்டும் தலைவாரானார் ராஜேந்திர பிரசாத். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் ‘பாபுஜி’ என்று அழைத்து மகிழ்ந்தனர்.

1947-இல் பாரதம் விடுதலை பெற்றது. அதன் பிறகு, இந்தியாவுக்கான தனித்த அரசியல் சாசனத்தை வகுக்கும் பணி துவங்கியது. அதற்கான குழுவுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்றார். அப்போது ஹிந்து சிவில் சட்டம் தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டபோது, நடுநிலைமையுடனும் தேசநலம் குறித்த சிந்தையுடனும் பாபுஜி பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு சிக்கல்களை தீர்த்துவைத்தார்.

1950, ஜனவரி 26-இல் இந்தியா குடியரசு நாடானது. அதனையடுத்து, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஆனார், பாபு ராஜேந்திர பிரசாத். 1962, மே 13 வரை நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவியை வகித்த அவர், வயது காரணமாக தானாகவே ஓய்வு பெற்றார். 

தனது பதவிக் காலத்தில் குடியரசுத் தலைவர் என்ற அரசியல்சாசனப் பதவிகேற்ற பல முன்னுதாரணங்களை அவர் ஏற்படுத்தினார். 1962-இல் அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 1963, பிப். 28-இல் பாபு ராஜேந்திர பிரசாத் மறைந்தார்.

ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவாரக இருந்த காலம், நேரு பிரதமராக இருந்த காலமாகும். நேருவின் பல தவறான முடிவுகளை மாற்றியமைத்ததில் பாபுஜிக்கு இன்றியமையாத பங்குண்டு. நேருவின் மக்கள் செல்வாக்கு நாட்டிற்கு தீங்கு விளைவிக்காமல் கட்டுப்படுத்தியவர் பாபுஜி. இந்தியக் குடியரசை நாகரிகத்துடனும் உறுதியாகவும் கட்டியமைத்தவர் என்று பாபு ராஜேந்திர பிரசாத் போற்றப்படுகிறார்.




No comments:

Post a Comment