13/11/2020

நிஷ்காம்ய கர்மம்!

– கவிஞர் வாலி

கவிஞர் வாலி
(பிறப்பு: 1931 அக். 29 - மறைவு: 2013 ஜூலை 18)


 

‘கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலையைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

‘காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கைதொழும் தெய்வம் அம்மா!’

– ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் –

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’! ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து – தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத் திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள் அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான் கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு -அவர் பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும் சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது – ‘நிஷ்காம்ய கர்மம்’; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த சம்பந்தம், படத்தளவே!

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’. இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு பாட்டு எழுதினேன்.

‘ஆண்டவன் எந்த மதம்?
இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

– என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப் பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து! இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’!

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப் பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு –

அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.

அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’; அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான்.

‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன்!

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில் இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

பி.ஆர்.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர் உருதுக் கவிஞர்!

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் –
கதைகளில் காணுகின்ற
சமயத்துக் கேற்றபடி;
‘சமயத்துக் கேற்றபடி’ அல்ல!

குறிப்பு: 

ஆனந்த விகடனில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு.

நன்றி: விகடன் இணையதளம்.



No comments:

Post a Comment