18/10/2021

புறப்பாடு ஒரு புதிர்

-திருநின்றவூர் இரவிக்குமார்


(அரவிந்தம்- 150)

புரட்சியாளரான அரவிந்த கோஷ் அரசியலில் இருந்து விலக நினைத்தார். தொடர்பே இல்லாத அலிப்பூர் சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு யோக சாதனைகளால் கிடைத்த தரிசனமும் இறைக் கட்டளையும் அவரது வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. அதுபற்றி அவர் உத்தரபாரா என்னும் இடத்தில் நிகழ்த்திய உரை தெளிவாக்குகிறது. ஆனாலும் அவர் தயங்கினார். தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இறை விருப்பத்தைச் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலையை அதுவே ஏற்படுத்தியது. முதலில் கொல்கத்தாவுக்கு அருகில் இருந்த பிரெஞ்சுப் பகுதியான சந்திர நாகூருக்கு அரவிந்தரைப் போக வைத்தது. பிறகு அங்கிருந்து அவர் புதுச்சேரிக்கு வந்தார்; அரசியலில் இருந்து முற்றிலும் விலகி யோக சாதனையில் ஈடுபட்டார்.

மனிதனின் உடல்ரீதியான பரிணாம வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட வளர்ச்சி மனித மனத்தை அதிமனமாக்குவது. அதற்கு இறை சக்தியை மனித மனத்தில் இறக்குவது என்பது அரவிந்தரின் ஆன்மிக தரிசனம். அதற்காக மனித மனத்தையும் உடலையும் தயார் படுத்துவது என்பது அவரது பணி.
இறை சக்தியை இறங்குவதற்கான மையமாக, முதலில், அவர் தன்னை ஆக்கிக் கொண்டார். அவர் தொடர்பில் வந்தவர்கள் மூலம் அந்த சக்தி பகிரப்பட்டது. எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் அவரது தரிசனம் பரவியது.

அவரது தரிசனத்தை ஏற்றுக்கொண்டு அவருடன் யோக சாதனையில் இணையாகப் பயணித்தவர் ஸ்ரீ அன்னை (மிர்ரா அல்பாசா). அவர் ஸ்ரீ அரவிந்தருடன் பேசும்போது, ஒரு முறை இறைசக்தியை மனிதரிடம் இறக்க பூவுலகைக் கடந்து செல்வது தேவையென்று தான் உணர்ந்து உள்ளதாகவும், தாம் முதலில் செல்வதாகவும் கூறினார். அதற்கு உறுதியாகத் தடை கூறிய அரவிந்தர் தானே முதலில் செல்வதாகக் கூறி உள்ளார். இது நிகழ்ந்தது 1940-களில்.

சாதாரணமான மனிதர்களுக்கு அது மரணம்; யோகிகள், சித்தர்கள், மகான்களுக்கு அது முக்தி நிலை அல்லது சமாதி நிலை என்கிறோம். அதாவது நம் புலன்களுக்கு எட்டாத நிலையில் அவர்கள் சாந்நித்தியம் கொள்கிறார்கள். அந்த நிலையை அவர்கள் விரும்பியபோது அடைகிறார்கள். அந்த நிலையிலிருந்து நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்; நம் வேதனையைப் போக்குகிறார்கள்; நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

தானே முதலில் செல்வதாகக் கூறிய அரவிந்தர் எப்போது என்று கூறவில்லை. அதுமட்டுமன்றி இது அவர்கள் இருவரிடையே நிகழ்ந்த பரிமாற்றம். ஸ்ரீ அன்னையின் பதிவுகளில் உள்ள செய்தி.

ஸ்ரீ அரவிந்தருடன் பலகாலம் உதவியாளராகவும் மருத்துவராகவும் உடனிருந்த டாக்டர் நிரோத்பாரன் கூறுகிறார்:

“கொல்கத்தாவில் இருந்த பிரபல ஜோதிடர் நாராயணன் என்பவர் அரவிந்தரைப் பற்றிய ஜோதிடக் கணிப்பை அனுப்பியிருந்தார். அதில் பல விஷயங்கள் சரியாக இருந்தன. ஒரே ஒரு விஷயம்தான் சரியாக இல்லை. அதாவது அரவிந்தரின் 63 வயதில் அவருக்கு கண்டம் என்றும் அதை அவரது யோக சக்தியால் வென்று விடுவார்; அதன்பிறகு அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்று கூறியிருந்தார்…

“இதை அவருக்குப் படித்துக் காட்டியபோது அவர், ‘பார் நான் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்’ என்று புன்முறுவலுடன் கூறினார். ஸ்ரீ அரவிந்தரைப் பொருத்த வரையில் இவ்வுலகில் அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை என்ற கூற்றை ஏற்பதில்லை. எதுவும் மாறலாம். குறிப்பாக யோகிகள் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி படைத்தவர்கள். தங்கள் வாழ்வில் மட்டுமல்ல, மற்றவர்கள் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டவர்கள் என்பார் அவர். ஆனாலும் எங்களுக்கு பயமாக இருந்தது. காரணம் அப்போது அவர் உடல் நோயுற்று இருந்தது…

“ஸ்ரீ அன்னையிடம் இதுபற்றிக் கூறியபோது, ‘இத்தனை ஆண்டுகள் ஸ்ரீ அரவிந்தருடன் இருந்த பிறகும் நீ பயப்படுகிறாயா?” என்றார். ‘ஸ்ரீ அரவிந்தர் ஆச்சே’ என்றேன். ‘அதேதான் நானும் சொல்கிறேன். அவரைப் பற்றி பயப்படலாமா? அவரது சக்தி உன்னோடு இருக்கிறது. உனக்கு பலமுறை உதவி இருக்கிறது என்பது உனக்குத் தெரியாதா? அப்படியிருக்க நீ பயப்படலாமா? பயம் வேண்டாம்’ என்று கூறினார்”.

இது டாக்டர் நிரோத்பாரன் பதிவு. அவர் வேறு ஒரு விஷயத்தையும் பதிவு செய்துள்ளார் 1948 வாக்கில் அரவிந்தரின் சீடரும் அவரது தனி மருத்துவருமான டாக்டர் பிரபாத் சன்யால் அரவிந்தரைத் தரிசிக்க கொல்கத்தாவிலிருந்து புதுச்சேரி வந்தார். அவர் அரவிந்தருக்கு விதைப்பை புற்றுநோயின் (புராஸ்டேட் வீக்கம்) ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சோதித்துக் கூறியிருந்தார்.

அது ஒரு பிரச்னை இல்லை என்றும், அதற்காக மருந்து உட்கொள்ளத் தேவையில்லை என்றும் அரவிந்தர் கூறிவிட்டார். நோயின் தாக்கம் அதிகரிக்கவில்லை. ஆனால் ஜோதிடரின் கணிப்பைப் படித்துக் காட்டிய பிறகு அரவிந்தரின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்கிறார் டாக்டர் நிரோத்பாரன்.

அதுவரை எல்லாவற்றிலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் அரவிந்தர். ஆனால் அதன் பிறகு ‘சாவித்திரி’யை சீக்கிரம் முடிக்க வேண்டும் எனத் துரிதப்படுத்தினார். நிரோத்பாரனுக்கு ஆச்சரியம். ஆனால் சரஸ்வதி அரவிந்தரின் நாக்கில் அமர்ந்துகொண்டாள்; சரளமாக வந்து விழுந்தன காப்பிய கவிவரிகள். வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் பணி செய்ய வேண்டியிருந்தது நிரோத்பாரனுக்கு.

சாவித்திரி முடிந்தது. ‘ஹா, அது முடிந்து விட்டதா?’ என்று புன்முறுவல் பூத்தார் அரவிந்தர். ‘அடுத்து என்ன?’ என்று கேட்டார். ‘மரணமும் முடிவுரையும்’ என்ற நூலில் பாக்கி இருக்கிறது’ என்று நிரோத் பாரன் கூறியபோது, ‘ஹோ, அதுவா? அதை பிறகு பார்த்து கொள்ளலாம்' என்று கூறிவிட்டார். அரவிந்தர் பூவுலக வாழ்க்கையில் கடைசியாக எழுதி முடித்தது ‘சாவித்திரி’.

அரவிந்தரின் ஆரம்பகால சீடர்களில் ஒருவரான கே.டீ.சேத்னா என்பவர் வேறொரு கண்ணோட்டத்தைத் தருகிறார்:

“நவம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோதிடரின் கணிப்புப் பற்றி அரவிந்தருக்குப் படித்துக் காட்டப்பட்டது. அதில் ‘1950-ஆம் ஆண்டின் கிரக நிலையின் படி அரவிந்தர் தானே தன் உடலை நீக்கம் செய்வார். அப்படி இல்லாவிட்டால், 1964-ம் ஆண்டு ஒரு பெரிய அதிசயம் நடக்கும். அரவிந்தரின் ஆன்ம சக்தி வெளிப்படும். அதை அனைவரும் காண்பார்கள். அவர் தனது 93-வது வயதில் தன் லட்சியம் நிறைவேறியதும் உடலைத் துறப்பார்’ என்று அந்த ஜோதிடக் கணிப்பு கூறியது…

“அதைக் கேட்டதும் அரவிந்தர் தன் கையை உயர்த்தி, ‘93 வயதா, என் லட்சியம் நிறைவேற அவ்வளவு காலம் ஆகுமா?’ என்பதுபோல கேலியாகச் சொன்னார். ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகால இடைவெளியில் அவர் வாழ்வில் முக்கியமான நிகழ்வு நடந்துள்ளதை சீடர்கள் நினைவு கூர்ந்தார்கள்…

“1926 ல் அரவிந்தர் அதிமனம் என்னும் உயர்ந்த உணர்வு நிலையில் சித்தி பெற்றார். பன்னிரண்டு ஆண்டு கழித்து 1938 இல் அவர் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தது. அதன் பிறகு அவர் அறையை விட்டு வெளியே வருவது நின்றுபோனது. அடுத்த பன்னிரண்டாவது ஆண்டு 1950-இல் அவர் உடலை உகுக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் ஜோதிடரோ 93-வது வயதைப் பற்றி அதிக அழுத்தமாகக் கணித்துள்ளார்…

“இதைக் கேட்ட அரவிந்தர், ‘அந்த ஜோதிடர் கூறுவதில் உண்மை இருக்கிறது’ என்றார். ‘நீங்கள் இந்த வருடம் எங்களை விட்டுப் போகப் போகிறீர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அது முட்டாள்தனமாக இல்லையா?’ என்று கேட்டதற்கு, ‘ஏன்?’ என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்தார். அந்த வார்த்தையைக் கேட்டதும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். நீண்ட வாழ்நாள் என்பது அதிமனம் என்ற அவருடைய யோகக் கருத்தியலின் ஒரு அங்கம் என்று அனைவரும் கருதினர்…

“இரண்டாவதாக தன் உதவியாளர்களிடம் அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி. அரவிந்தர் அன்பானவர் என்றாலும் அதை அவர் மிக மறைவாகவே வெளிப்படுத்துவார். ஆனால் தன் இறுதி நாட்களில் அவர் தன் உதவியாளர்களிடம் வெளிப்படுத்திய அன்பும் மென்மையும் அதுவரை காணாதது…

“மூன்றாவது, கடைசி இரண்டு மாதங்களில் அவர் ‘சாவித்திரி’யை நிறைவுசெய்யக் காட்டிய வேகம். இந்த மூன்று விஷயங்களையும் பார்க்கும்போது அரவிந்தரின் முடிவு அவரே தேர்வு செய்தது”

 -என்கிறார் சேத்னா.

‘புதுச்சேரியில் இருந்து வந்த அழைப்பு’ என்ற பதிவில், யோகி அரவிந்தரின் இறுதிக் கணங்களை விபரமாகப் பதித்துள்ளார் அவரது தனி மருத்துவரான டாக்டர் பிரபாத் சன்யால்.

“29 நவம்பர் 1950-இல் எனக்கு ‘பறந்து வா – அவசரம்’ என்ற தந்தி ஸ்ரீ அன்னையிடம் இருந்து வந்தது. ஐந்து மணி நேரத்தில் சென்னை வந்து சேர்ந்தாலும் புதுச்சேரி போவதில் சிக்கல். அது பிரஞ்சு நாட்டுப் பகுதி. போலீஸை சரிக்கட்டி, கார் ஓட்டுநருக்கு அதிகப் பணம் கொடுத்து, எப்படியோ புதுச்சேரி வந்து சேர்ந்தேன். டாக்டர் நிரோத்பாரன், டாக்டர் சத்யாசென் ஆகியோர் நிலைமையை எனக்கு எடுத்துக் கூறினார்கள்…

“அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியபோது அரவிந்தர், ‘டாக்டர்களுக்கு நோய், மருந்து தவிர வேறென்ன தெரியும்? எல்லாவற்றிற்கும் அப்பால் ஒரு அறிவு உள்ளது. சிகிச்சை தேவையில்லை’ என்றார். ஸ்ரீ அன்னையும் கத்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்…

“அவருக்கு காய்ச்சல் நின்றுவிட்டது. சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். எல்லா அறிகுறிகளும் சாதாரண நிலையைக் காட்டின. படுக்கையில் கண்மூடிக் கிடந்தார். அவ்வப்போது கண் விழித்து, நேரம் என்ன என்று கேட்டார். அன்னை அருகில் இருந்தால் அவருக்கு பழச்சாறு ஊட்டுவார்…

“அன்னைக்குப் புரிந்துவிட்டது. அவர் என்னிடம் ‘எனக்குத் தெரியவில்லை. அவர் விழிப்புணர்வுடன்தான் இருக்கிறார். தன்னைப் பற்றி அக்கறையற்று இருக்கிறார்’ என்று சொன்னார். அவரை தொல்லைப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; நான் போகிறேன் என்றேன். அன்னை பேசவில்லை, ஆனால் கவலையுடன் பார்த்தார். சரி நான் இருக்கிறேன், என்றேன். அவர் இயல்பானார். இது நடந்தது டிசம்பர் மூன்று…

“டிசம்பர் நான்காம் தேதி காய்ச்சல் நின்றது. சுவாசம் வழக்கம்போல சகஜமானது. வழக்கமாக அமர்வது போல அமர்ந்தார். ஸ்ரீ அன்னை காலை உணவை ஊட்டினார். அவரது உடல்நிலை சகஜமானதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பத்து மணி வாக்கில் வங்காளத்தில் நிலவும் சூழ்நிலை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். மதியம் மீண்டும் காய்ச்சல். மாலை அது குறைந்தது. மீண்டும் வழக்கமான உடல்நிலையாக மாறியது. அன்று இரவு 1.26 மணிக்கு அதாவது டிசம்பர் ஐந்தாம் தேதி துவக்கத்தில் அவர் சுவாசத்தை நிறுத்திக் கொண்டார் .”

-என்கிறது டாக்டர் சன்யாலின் பதிவு.

பிரெஞ்சு அரசு சட்டப்படி, தலைமை மருத்துவர் டாக்டர் பார்பெட் வந்து சோதித்து இறப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டார். பிரெஞ்சு சட்டப்படி 48 மணி நேரத்துக்குள் எரிக்கவோ புதைக்கவோ செய்ய வேண்டும். ஆனால் அவர் உடல் மாற்றமடையாமல், சீர் கெடாமல் அப்படியே ஜீவகளையுடன் இருந்த அதிசயத்தை மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்து உறுதி செய்தனர். ‘அவருடல் தங்க நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது’ என்கிறார் டாக்டர் சன்யால். உடலில் லேசான மாற்றம் தெரியத் துவங்கியதும் டிசம்பர் ஒன்பதாம் தேதி அரவிந்தரின் யோகமேனி அடக்கம் செய்யப்பட்டது.

“ஸ்ரீ அரவிந்தர் முன்பு சிலகணங்கள் நிற்பதற்காக நாலாயிரம் மைல்கள் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் அந்தப் பயணம் முற்றிலும் பயனுள்ளது என்பதை அவர் முன்பு நின்ற சிலகணங்கள் நிரூபித்தன” என்கிறார் அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரடெரிக் ஸ்பீல்பெர்க். இவர் ஒரு யூதர்.

அவர் கூற்றைக் கேட்டு அதைச் சோதிக்க வந்தார் ரோடு பி லீ கோக் என்ற அமெரிக்க அறிஞர். சும்மா முகத்தைப் பார்த்துவிட்டுப் போவதில் அப்படி என்ன இருக்க முடியும் என சோதிக்க வந்தார். அவர், அவர்களை (ஸ்ரீ அரவிந்தர் & ஸ்ரீ அன்னை) நோக்கி தரிசன வரிசையில் நகர்ந்தபோது நாலடி தூரத்தில் வரும்போதே அவர்களது சக்தி ஆகர்ஷணத்துக்கு தான் ஆட்பட்டதை உணர்ந்து பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீ அரவிந்தரின் மகாசமாதி நிகழ்வுகளை நேரில் கண்டு, அங்கு எந்த விதமான மத சடங்குகளும் நடக்கவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இறுதி தரிசனம் காணும் பேறு பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

காண்க: திருநின்றவூர் இரவிக்குமார்

.

No comments:

Post a Comment