18/10/2021

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் இதழ்களின் பங்கு

-ஈரோடு சரவணன்

பாரதியின் ‘இந்தியா’ இதழில்
கருத்துப்படம் (கார்ட்டூன்)

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, பொது மக்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு பரவவும், இதழியல் துறை பெரும் பங்காற்றியது. தாய்மொழியில் தோன்றிய சுதேசமொழி இதழ்கள் பாரதவாசிகளுக்கு எழுச்சியூட்டின. இதன் ஆபத்தை உணர்ந்து ஆங்கில அரசு, 1878-ல் அன்றைய கவர்னர் ஜெனரல் லிட்டன் பிரபு, சுதேசி பத்திரிக்கைகள் சட்டம் கொண்டுவந்து ஒடுக்கத் துவங்கினார்.

இந்திய விடுதலைப் பேரியக்கத்தை தாதாபாய் நௌரோஜி, திலகர், பெசன்ட், காந்தி என்று பல வளர்ச்சிக் கட்டங்களாக எவ்வாறு பகுக்க முடியுமோ, அதேபோல, அதன் சாயல்களோடு தமிழ் பத்திரிகை வரலாற்றையும், ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க., கல்கி என்று வகுக்க முடியும். ஆரம்பகால தமிழ் இதழியல் வரலாற்றின் உயிர்நாடி, இந்திய விடுதலைப் பேரியக்கமாகும்.

தமிழகத்தில் விடுதலைக் காலகட்டத்தில், சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, தேசபக்தன், நவசக்தி, தமிழ்நாடு, தினமணி, சுதந்திரம், ஜனசக்தி, விமோசனம், ஞானபானு, பிரபஞ்சமித்திரன், இந்திய தேசாந்திரி, சேலம் சுதேசாமானி, சர்வஜனமித்திரன், ஆனந்த விகடன், தமிழ் நேஷனல் பத்திரிகை, வந்தே மாதரம், ஊழியன், குமரன், சுதேசி, ஸ்வராஜ்யா, தாய்நாடு, தேசபந்து, இளந்தமிழன், சுயராஜ்ய பேரிகை, காந்தி நவ இந்தியா போன்ற இதழ்கள் வெளி வந்தன.

இந்த இதழ்களின் போராட்டக் காலத்தில் ஆங்கில அரசால் துன்பத்திற்குள்ளான இதழ்கள் வெகு சிலவே. சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு, தினமணி, தினசரி, பாரததேவி, நவஇந்தியா, தேசபக்தன், நவசக்தி, சண்டமாருதம் ஆகிய நாளிதழ்கள் சுதந்திரப் போருக்கு குரல் கொடுத்தவற்றுள் முதன்மையானவை.
 
காங்கிரஸ் வினா – விடை:

தமிழ் இதழ்கள் துவங்கப்படுவதற்கு முன்னதாகவே, சுதந்திர தாகத்தை உருவாக்க முயன்றார்கள். அந்த வழியில் காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளரும், இந்து பத்திரிகை நிர்வாகியுமான முடாம்பி வீரராகவாச்சாரியார் தமிழில் எழுதிய ‘காங்கிரஸ் வினா – விடை’ என்னும் பிரசுரத்தின் முப்பதாயிரம் பிரதிகளை மக்களிடையே விற்று மாநாட்டு நிதிக்கு பணஞ்சேர்த்ததுதான் ஆங்கிலோருக்கு அதிக அதிர்ச்சியைத் தந்தது.

தி இந்து ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் 1883-இல் எழுதி வெளியிட்ட ‘சுய அரசாட்சி வினா-விடை’ என்றும் நூலும் சென்னை காங்கிரசின் போது , தமிழ் மக்களிடையே பரப்பப்பட்டது. 42 வினா விடைகளைக் கொண்டதான இந்தப் பிரசுரம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 

(ஆதாரம்: விடுதலைப் போரில் தமிழகம் 
–ம.பொ.சிவஞானம்; பாகம் 1; பக்கம் 129, 130 )

1967-இல் எழுதி வெளியிடப்பட்ட ‘காந்தி சகாப்தத்துக்கு முற்பட்ட காங்கிரஸ்காரர்கள்’ என்னும் நூலில் காங்கிரஸ் வினா- விடை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அது வருமாறு:

“இந்நூலிலுள்ளது போன்ற விமர்சனம் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளை வெறுப்படையச் செய்ததோடு புண்படுத்தவும் செய்தது. ஒளிவு மறைவில்லாத இதைப் போன்ற பேச்சைக் கேட்டு அவர்களுக்குப் பழக்கமில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடையே அவர்கள் தாய்மொழியில் நேர்முகமாக வேண்டுகோள் விடுத்ததே, பிரிட்டிஷ் அதிகாரிகளை அச்சுறுத்தியது, சிறுபான்மையினரான படித்தவர்களின் ஆரவாரங்களை அவர்களால் பொருட்படுத்தாமல் இருக்க முடியும். ஆனால் புறநகர்களில் வாழும் லட்சக் கணக்கான மக்களின் ஆதரவை காங்கிரஸ் நாடியபோது, அதனை ஒடுக்க முயன்றனர்” என குறிப்பிட்டுள்ளது.

(ஆதாரம்: விடுதலைப் போரில் தமிழகம் - பாகம் 1; பக்கம் 135 )

1905 வங்கப் பிரிவினைக்கு பின்னர், ‘இந்தியனாக இரு, இந்தியப் பொருள்களையே வாங்கு’ என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதி, வங்கத்திலே பிறந்த சுதேசி இயக்கத்தை வரவேற்றார். பங்கிம் சந்திரரின் ‘வந்தேமாதரம்’ பாடலைத் தமிழில் மொழிபெயர்த்து, தமது ‘சக்கரவர்த்தினி’ மாத இதழில் வெளியிட்டார். தாமாகவே சுயமாகவும் வந்தேமாதரம் பாடலொன்றைப் புனைந்தார். ‘இந்தியா’ என்ற பெயரில் வார இதழொன்றையும் வெளியிடலானார்.

சுதேசமித்திரன்:

முற்றிலும் அரசியல் இதழாக, பொதுமக்களிடம் பொதுக் கருத்தை உருவாக்க அறிவின் பால பாடங்களைத் தமிழில் கற்பித்த முதல் இதழ் சுதேசமித்திரன். தமிழ் மட்டுமே அறிந்த பாமர வாசகர்களிடையே கொண்டுசேர்த்த முதல் அரசியல் நாளிதழாகும். இந்த இதழின் ஆசிரியர்களாக ஜி.சுப்பிரமணிய ஐயா், அ.அரங்கசாமி அய்யங்கார், சி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் இருந்து விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாறாக சுதேசமித்திரனை உருவாக்கினர்.

1918-இல் ‘தமிழ்நாட்டின் விழிப்பு’ என்ற தலைப்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதிய கட்டுரையில், “ராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகார்த்தாக்களாக விளங்கினர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

13.1.1908 முதல் 25.6.1908 வரை சுதேசமித்திரனில் வெளிவந்த செய்திகள் பல ராஜத்துவேஷக் குற்றச்சாட்டுகளுக்கு உரியனவாக சென்னை ஆங்கில அரசினால் கருதப் பெற்று வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றுள் 16 செய்திகள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி மீது ஏவப்பட்டஅடக்கு முறைகள் மீதான கண்டனங்கள் ஆகும். தென்னாப்பிரிக்க இந்தியர்களின் அறப்போர் தொடர்பான செய்திகள் நான்கும், ராஜத்துவேஷத்துக்கு உரியனவாகத் தொகுக்கப்பட்டன. இறுதியாக ஆறு கட்டுரைகள், அதாவது ‘மிதவாதிகளுக்கு சவுக்கடி (14.1.1908), வனத்துறையினர் விளைவித்த துன்பங்கள் (9.4.1908), உயர்ந்தவர் யார் இந்தியரா? அல்லது ஐரோப்பிய நாயா? ( 27.4.1908), இரு நாள்களில் ஒரே சாப்பாடு (20.5.1908), மோசமான மாஜிஸ்டிரேட் ( 3.6.1908), ஆங்கிலேயரின் அறியாமை ( 6.6.1908)’ ஆகிய தலைப்புகளில் ஆங்கில அரசுக்கு எதிராக சுதேசமித்திரனின் கட்டுரை வெளிவந்த குற்றத்திற்காக, ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் கைது செய்யப்பட்டார்.

வங்கப் பிரிவினை அமலுக்கு வருவதற்கு முன்னமே, அதனால் பாதிக்கப்படும் வங்க மாநிலத்திற்கு வாழ்த்துக் கூறி மகாகவி பாரதி பாடல் இயற்றினார். அதுதான் சுதேச மித்திரனில் வெளியான அவரது முதல் பாடல்.

சுதேசாபிமானத்தை சாதரண மக்களிடம் சரியாக எடுத்துச்சென்று சமூக்க்
கடமையைச் செய்த ஜி.சுப்பிரமணிய ஐயர் தான், மதுரையிலுள்ள சேதுபதி பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாரதியாரை சென்னைக்கு அழைத்துவந்து, சுதேசிமித்திரனின் துணை ஆசிரியராக்கி, பாருக்கே அறிமுகம் செய்தார். பற்றிக்கொள்ளும் நெருப்பு போல பத்திரிகைத் தளத்தில் கருத்துகளைப் பரப்பியவர் பாரதி. சுதேசக் கருத்துகளைப் பரப்புவதையே சுவாசமாக்கிக் கொண்ட பாரதி, சுதேசமித்திரனை சுதந்திர வேட்கைக்கான போர்வாளாக மாற்றினார்.

இந்தியா:

சுதந்திரப் போராட்டக் காலத்தில், அரசியல் தமிழ் இதழியல் வரலாற்றில் சுதேசமித்திரனுக்குப் பிறகு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய இதழ் என்றால், அது இந்தியா இதழ்தான். பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னையிலும், பிரெஞ்சு இந்தியாவில் புதுச்சேரியிலுமாக ‘இந்தியா’ இதழ் இரண்டு கட்டங்களில் வெளிவந்தது.

மண்டையம் குடும்பத்தினரின் முயற்சியால் ‘இந்தியா’ இதழ் வெளிவந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா என்று அழைக்கப்படும் ஊரின் பெயரே தமிழில் மண்டையம் என்பதாகும். சென்னையில் ராமகிருஷ்ணர் இயக்கம், தீவிர தேசியவாத இயக்கம், கல்வி- கலாசார இயக்கம் , இதழியல் துறையில் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். பத்திரிகைத் துறையில் திலகரின் தீவிர தேசியவாதத்தை உறுதிபட ஆதரித்தவர்கள் இவர்கள். இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், எஸ்.என். திருமலாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், எஸ். சீனிவாசச்சாரியார், எஸ்.பார்த்தசாரதி ஐயங்கார், எம்.பி.டி.ஆசார்யா ஆகியோர். இவர்கள், இந்தியா, விஜயா, பாலபாரத் ஆகியனவற்றைத் தொடங்கி நடத்தினார்கள்.

மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட 'இந்தியா' இதழின் ஆசிரியராக மகாகவி பாரதி பொறுப்பேற்ற ஆண்டு ஆண்டு 1907. அந்த ஆண்டில்தான் இந்திய தேசிய காங்கிரஸானது தீவிரவாதிகள்- மிதவாதிகள் என இரண்டாகப் பிளவுபட்டது. தீவிரவாதிகளின் அணியில் இருந்த பாரதியார் திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு, தீப்பிழம்பாக இந்தியாவில் கட்டுரைகளை எழுதினார். இதனால் இந்தியா இதழை அசிட்டவரான சீனிவாசனை ஆங்கில அரசு கைது செய்து, ஐந்து வருடம் சிறையில் அடைத்தது. பாரதி தப்பிச்சென்று பாண்டிச்சேரியில் அடைக்கலமானார். புதுச்சேரியிலிருந்து கொண்டே ‘இந்தியா’ இதழை மூன்றாண்டுகள் மும்மரமாகக் கொண்டுவந்தார் பாரதியார். அந்நாளில் 'இந்தியா' இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள் தான் என்றபோதிலும், ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது.

தென்னாட்டைத் தட்டி எழுப்பிய பெருமை பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு உண்டு என திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் ஆவேச நடையில் எழுதப்பட்டாலும், அதிலும் நையாண்டியும் கலந்து எழுதினார். 17.2.1907-ல் வெளிவந்த கட்டுரையில், “எங்களுடைய தேசத்திலே நாங்கள் அளவிறந்த பக்தி செலுத்துகின்றோம். இது ராஜ துரோகமா? இந்தியா அநாகரீக பூமியாக தலைகவிழ்ந்து நிற்பதை மாற்ற முயலுகின்றோம். இது ராஜ துரோகமா? அர்ஜூன், பீமன், ராமன், பிரதாபன், சிவாஜி, விக்கிரமாதித்த வீரர்களின் புத்திரர்களாகிய நம்மவர்கள் தான் இழந்து போன ஆண்மையை மறுபடி கைக்கொள்ள வேண்டுமென்கிறோம். இது ராஜ துரோகமா? புதிய கட்சியார் எல்லா ஜனசங்களின் மீதும் அன்பு கொண்டவர்கள். ஆனால் ஸ்வதேச ஜனங்களின் மீது மற்றோரைக் காட்டிலும் அதிகமாக அன்பு கொண்டவர்கள்” என எழுதினார் பாரதி.

இந்தியா பத்திரிகையில் வெடித்தெழுந்த சொற்கள் மற்றும் சொற்றொடர்களில் சில, ஓயாமல் குலைத்துக் கொண்டிருக்கும், கூனிப் பத்திரிகை, வஞ்சக் கிழவிப் பத்திரிகை, ஜீரணம் ஆவதற்கே தெருத்திண்ணையில் உட்கார்ந்து வீண்வாதம் பண்ணும் சோம்பேறிகள், எவ்விதமாக ஊளையிட்ட போதிலும், சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்தல், கோழைத்தனமான ராஜ தந்திரிகள், மூடர்கள், கோழைகள், துரோகிகள், ருத்ராட்சப் பூனைகள் போன்ற வார்த்தைகள், சொற்றொடர்கள் பாரதியின் கட்டுரைகளில் இடம் பெற்றன. இவ்விதமாக எழுதிய நடைகளும், நடையைத் தீர்மானம் செய்த கட்டுரைகளும்தான், ‘இந்தியா’ மீது ராஜத் துவேஷ வழக்குள் தொடுக்கப்படக் காரங்களாயின.

‘இந்தியா’ பத்திரிகையின் மீது இந்தியன் பீனல்கோடு 124ஏ, 153 ஏ, 505 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. 29.2.1908லிருந்து 27.6.1908 வரையில் வெளிவந்த 20 கட்டுரைகள் ராஜத் துவேஷக் குற்றத்திற்கு உரியன என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தக் கட்டுரைகளுக்குள், 2.5.1908-ல் வெளிவந்த ‘மஹாபாரதக் கதைகள்’, 23.5.1908-இல் வெளிவந்த ‘எத்தனையோ கொள்ளைகளில் இதுவுமொரு கொள்ளை’,, 2.6.1908-ல் வெளிவந்த ‘ஏன் காலத்தை வீணாக்க வேண்டும்?’ ஆகியவை ராஜ துரோகத்திற்குரிய கட்டுரைகள் எனக் கூறி ஆங்கில அரசு வழக்கு தொடுத்தது.

‘எத்தனையோ கொள்ளைகளில் இதுவுமொரு கொள்ளை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், “அந்நியர்கள் கரங்களில் நாம் நமது அரசாங்கத்தை எப்பொழுது ஒப்படைத்து விட்டோமா, அப்பொழுதில் இருந்து நமது வாழ்கை பாழாகி விட்டது. நாளுக்கு நாள் வறுமையுற்று பஞ்சம், பிளேக் நோயினால் கோடிக் கணக்கான மக்கள் மடிவதைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். ரயில்களும், தபால்- தந்திகளும் பிரிட்டிஷ் ஆட்சியின் பயன்கள் என்று சில மூடர்கள் கூறுவார்கள். ரயில்கள் மூலம் நமது நாட்டுச் செல்வம் வெள்ளையர்களால் உறிஞ்சப்பட்டு இங்கிலாந்திற்குச் செல்கிறது” என பாரதி எழுதினார்.

சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சி. தோற்றுவித்தது கண்டு ஆங்கில வணிக முதலாளிகளும் அதிகார வர்க்கமும் அஞ்சின; அதனால், சுதேசி கம்பெனிக்குக் குத்தகை முறையில் கப்பல் கொடுத்துதவ முன்வந்த ஷாலைன் கம்பெனியாரைப் பயமுறுத்தி, கப்பல்களைக் கொடுக்காதபடிச் செய்ய முயன்றன. இதன் காரணமாக, இரு பெரும் கப்பல்களை வாங்குவதில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசியப் பத்திரிகைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகையிலே, ‘வந்தேமாதரம்’ எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன் காலியா, லாவோ கப்பல்கள் தூத்துக்குடித் துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கூடி, ‘வீரச் சிதம்பரம் வாழ்க ’ எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இதை வரவேற்று பாரதியார் எழுதியது:

“வெகு காலமாகப் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால் எத்தனை அளவற்ற ஆனந்தமடைவாளோ, அத்தனை அளவற்ற ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாரததேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண்ணமே. ஸ்ரீ. வி.ஒ.சிதம்பரம் பிள்ளையும் அவருடன் நின்று உதவிய மற்ற நண்பர்களும் தாம் பிறந்து வளர்ந்த தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டார்கள்.” - இந்தியா- ஆனி, 1907. 

 (ஆதாரம்: விடுதலைப் போரில் தமிழகம்- பாகம் 1; பக்கம் 162 )

காலியா, லாவோ என்ற பெயர்கள் பாரதிக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. சுதேசி கப்பல்களுக்கு விதேச மொழிப் பெயரா? என்று கேட்ட பாரதி, இது பற்றி இந்தியா இதழிலில் எழுதியவை: “இந்தக் கப்பல்களுக்கு இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களே எப்போதும் இருப்பனவா? அல்லது சுதேசி இயக்கத்திற்கிணங்க வேறு பெயர்கள் கொடுக்கப்படுமா? நம் கொள்கைகளுக்கிணங்க பெயர்களை மாற்றுவதும் பொருத்தமென்றெ எண்ணுகிறோம். இவ்வித அபிப்பிராயம் கம்பெனியாருக்கு இருக்கும் பட்சத்தில் ‘சிவாஜி’, ‘தாதாபாய்’, ‘பாலகங்காதர் அல்லது திலகர்’, ‘கய்க்கிவார்’ இந்த நான்கு பெயர்களுள் இரண்டை எடுத்துக் கொள்ளலாமென்று பிரரேபிக்கின்றோம். -இந்தியா- ஆனி, 1907. 

(ஆதாரம்: விடுதலைப் போரில் தமிழகம்- பாகம் 1; பக்கம் 163).

1906-இல் காங்கிரஸ் கட்சியில் தீவிரவாதிகள் – மிதவாதிகள் இடையே நடந்த கோஷ்டிப் பூசலை அடுத்து, மிதவாதிகள் பழைய கட்சியார் என்றும், தீவிரவாதிகள் புதிய கட்சியார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதில் தமிழகம் விதிவிலக்காக இல்லை. சென்னை மாகாணத்தில் மிதவாதிகளுக்கு வக்கீல் வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைவராக விளங்கினார். தீவிரவாதிகளுக்கு தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார் தலைவரானார். தி இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகள் எந்த ஒரு பிரிவையும் சாராமல் நின்றன; ஆனாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்தன. மெயில், இந்தியன் பேட்ரியாட், சண்டே டைம்ஸ் ஆகிய அரசாங்கச் சார்புடைய ஆங்கில நாளேடுகள் மிதவாதிகளை ஆதரித்து நின்றன. பாரதியின் ‘இந்தியா’ என்ற தமிழ் வார ஏடும், ‘பால பாரதா’ என்ற ஆங்கில வார ஏடும் தீவிரவாதிகளுக்கான போர் முரசங்களாக ஒலித்தன.

காங்கிரஸ் தோன்றிய நாள்தொட்டே அதன் வருடாந்திரத் தலைவர் பதவிக்கு ஆங்கிலேயரும் தேர்ந்தடுக்கப்படுவது ஆட்சேபிக்கப்படாமல் அமலிலிருந்து வந்தது. 1907இல் பிரிட்டிஷாரிடம் கடும் வெறுப்புக் கொண்ட தீவிரவாதிகள் காங்கிரசுக்குள்ளேயே தோன்றி விட்டமையால் வெள்ளையரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.

இது சம்பந்தமாக ‘இந்தியா’ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பாரதி 6.10.1906-இல் ஸ்டெட் துரைமகனுக்கு எதிராகத் தலையங்கம் எழுதினார். அதன் ஒரு பகுதி வருமாறு:

“காங்கிரஸ் தலைவராக யாரை நியமிக்கப்போகிறார்கள், காங்கிரஸ் சமயத்தில் இங்கு வரப்போகிற மிஸ்டர் ஸ்டெட் என்ற பிரிட்டிஷ் பத்திராதிரபரையே வைத்து விடலாம என்று சிலர் யோசிக்கிறார்களாம். இது என்ன மூடத்தனம்? ‘ரெவ்யூ ஆப் ரெவ்யூஸ்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகையின் தலைவரும் மிகுந்த நீதி அபிமானச் செல்வாக்குடையவருமான ஸ்டெட் மிகவும் சிறந்த மனிதர் தாம் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவருக்கு இந்திய காங்கிரசிலே என்ன அலுவல்? இந்திய ஜனங்கள் தமது காரியங்களைப் பற்றி ஆலோசனை புரிந்து தீர்மானங்கள் செய்யும் மகாசபையில் ஒரு அன்னிய தேசத்தான் தலைமை வகிக்கும் பொருட்டு ஏன் வர வேண்டும்? ஏன் திலகரை வைக்கக் கூடாது? தாதாபாய் நவுரோஜியை நியமிக்க வேண்டுமென்று கல்கத்தா தலைவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அவர்கள் இஷ்டப்படி செய்து கொள்ளட்டும் என்று நாம் சும்மாயிருந்தோம். நமக்கு திலகரும், தாதாபாய் நௌரோஜியும் ஒன்று போலவேதான். தேசபக்தி விஷயத்தில் அவர் திலகருக்கு குறைந்தவரில்லை என்றும் நாம் நன்றாக அறிவோம். இப்போது நவுரோஜியையும் விட்டு எங்கயோ கிடந்த ஒரு ஆங்கிலேயனைக் கொண்டுவந்து வைக்க விரும்புகின்றவர்கள் இந்தியாவின் பரம சத்துருக்கள் என்றே நாம் நம்புகிறோம்.” என எழுதினார்..

1906 கல்கத்தா காங்கிரசிலே சுதேசிப் பொருள்களை ஆதரிப்பதோடு, விதேசிப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை காங்கிரசின் நாக்கு என பெயர்பெற்ற விபின்சந்திரபாலர் முன்மொழிந்தார். விதேசிப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டியதன் அவசியத்தை தக்க சான்றுகள் காட்டி வலியுறுத்தினார். சென்னை மாகாண மிதவாதிகள் தலைவர் திரு.வி.கிருஷ்ணசாமி ஐயர் குறுக்கிட்டு, “அந்நியப் பொருள்களைப் பகிஷ்கரிப்பதை உங்கள் வங்க மாகாணத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். சென்னை மாகாணத்தவரிலே ஒருவர் கூட அதைச் செய்யமாட்டார்” என்று ஆவேசத்துடன் கூறினார். கல்கத்தா காங்கிரசிலே அன்னியப் பொருள் பகிஷ்காரத் தீர்மானம் முன்மொழியப்படு முன்பு சென்னை மாகாணப் பிரதிநிதிகளைத் தனியாகக் கூட்டி வைத்து, அன்னியப் பொருள்களைப் பகிஷ்கரிக்கும் தீர்மானத்தை எதிர்க்க வேண்டுமென்று ஐயர் கூறினாராம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார், ஐயர் கருத்தை ஆட்சேபித்து வெளி நடப்புச் செய்தார். இது பற்றி ‘இந்தியா’ பத்திரிகையில், கல்கத்தாக் காங்கிரசிலே சென்னை மாகாண மிதவாதிகள் கடைப்பிடித்த போக்கானது தென்னிந்தியாவுக்கே அவமானத்தைத் தேடியதாகும் என்று, பின்வருமாறு எழுதினார்:

“கல்கத்தா காங்கிரசில் சென்னை பொதுஜனங்களின் பொருட்டுப் பேசினவர்கள் அனைவரும் சென்னை வாசிகளுக்குத் தெரியுமா? சென்னை வாசிகள், அதாவது பொதுஜனங்கள் மேற்கூறிய கனவான்களை தமது உண்மையான பிரதிநிதி என்று தேர்ந்தெடுத்தார்களா? சுதேசிய விஷயமாய் பேசப்பட்ட பொழுது, அன்னிய நாட்டு சரக்குகளை விலக்க வேண்டுமென்று பாபு விபின்சந்திரபாலர் வாதித்த பொழுது, அவ்வாறு செய்ய சென்னைவாசிகளால் முடியாது என்று ஒரு பிரதிநிதி வாதித்தாரம். இவர் இவ்வாறு முடியாதென்று கூறியது தன்மட்டிற்கா அல்லது ராஜதானி பொது ஜனங்கள் அனைவருக்குமா? அப்படியானால், சென்னை பொது ஜனங்கள் அன்னிய சரக்கை முற்றும் விலக்க முடியாதென்றும், அவ்விதமாக காங்கிரஸ் சபையிலே பேசும்படியம் மேற்கூறிய கனவானிடம் சொல்லி அனுப்பினார்களா? அல்லது அக்கனவான் ஜனங்களிடம் கேட்டு அனுமதி பெற்றிருந்தாரா?

“தூத்துக்குடி ஜனங்கள் அன்னிய சரக்கை முற்ற விலக்கி வருகிறார்கள். வங்காளத்துக்கு ஏற்பட்ட துக்கம் தமக்கு வந்ததாக தூத்துக்குடியார் எண்ணுகிறார்கள். அப்படியானால் தூத்துக்குடி போன்ற இடங்களை விலக்கியல்லா பேசியிருக்க வேண்டியது நியாயம்? மேற்படி விஷயம் காங்கிரசில் தருக்கிக்கப்பட்டபொழுது தூத்துக்குடிப் பிரதிநிதி ஒருவர் இருந்திருந்தால் அன்னிய சரக்கை முற்றிலும் வெறுத்து விலக்க ஆலோசனை செய்திருப்பார். இப்படியிருக்கும் பொழுது சென்னை வாசிகள் ஒருவராலும் முடியாதென்று மொத்தமாயக் கூறுவதற்கு நியாயமென்ன? வங்காளிகள் மட்டும் அன்னிய சரக்கை விலக்குவதானால் தங்களுக்கு சம்மதமென்றும், ஆனால் தங்களால் மட்டும் விலக்க முடியாதென்றும் சென்னைப் பிரதிநிதிகள் சொன்னார்களாம். இதன் பொருள் என்ன? வங்களாளிகளால் செய்யக் கூடிய காரியம் சென்னையர்களால் ஏன் செய்ய முடியாது? இவர்களும் இந்தியர்களே என்பதில் சந்தேகமுண்டா? அல்லது இவர்களுக்குத் தேசாபிமானம் இல்லையா?” என எழுதினார்.

வ.உ.சி. சிறைப்பட்ட பின் சுதேசிக் கப்பல் கம்பெனி ஆட்டம் கண்டது. அதற்கு நிதி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிதி திரட்ட இயலாமல் சுதேசிக் கப்பல் கம்பெனியை விற்க முற்பட்டபோது ‘ இந்தியா’ பத்திரிகையில் பாரதியார் விடுத்த வேண்டுகோளுக்கு வெற்றி கிடைக்காத போது, அவர் வேதனைப்பட்டு, தமது ‘இந்தியா’ பத்திரிகையில் இவ்வாறு எழுதினார் பாரதி:

“சுதேசிக் கப்பல் நிதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டுமென்று நாம் திரிகரண சுத்தியுடன் ஜனங்களிடம் விண்ணப்பம் செய்தோம். இரண்டு லட்சம் கேட்டதற்கு இரண்டு நூறு வந்திருக்கிறது. என்ன செய்யலாம் – பொது ஜனங்கள் இந்த நாட்டிலே பரம ஏழைகள். அவர்களுக்கு இவ்வித புண்ணியத் தொழிலிலே அபிமானமிருந்த போதிலும் அவர்கள் உதவி செய்ய திராணியில்லாதவர்களாக இருக்கிறார்கள். செல்வர்களைப் பற்றியோ யோசிக்க வேண்டியதில்லை.

“சுதேசி கப்பல் கம்பெனி நிர்வாகிகளுக்கு அதைத் தொடர்ந்து நடத்தத் துணிவில்லாததாலும், எதிர்பார்த்த நிதியுதவி பொதுமக்களிடமிருந்து கிடைக்காததாலும், கம்பெனி கலைக்கப் பட்டு விட்டது. இது கூடப் பெரிதல்ல, வ.உ.சி. பம்பாய்க்கே சென்று, அங்கு எந்தக் கப்பலை விலைக்கு வாங்கி அதிலே தூத்துக்குடித் துறைமுகம் வரை பயணம் செய்து வந்து லட்சக்கணக்கான மக்களால் அந்த வெற்றி வீரர் வரவேற்கப் பட்டாரோ அந்த ‘காலியா’ என்ற கப்பலானது விலைக்கு விற்கப்பட்டு விட்டது. யாருக்கோ அல்ல, சுதேசி கப்பல் கம்பெனியை அழிக்கவும், சிதம்பரனாரைச் சிறையில் தள்ளவும் காரணமாக இருந்த பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கே விற்கப்பட்டு விட்டது”.

‘ஜனத் தலைவர் யார்?’ என்பது பற்றி பாரதியார் 12.1.1907 ஆம் தேதி இந்தியா இதழில் எழுதியது இது…

காங்கிரஸ்களும், கான்பிரன்சுகளும் ஒன்றுக்குப் பத்தாக மலிந்து கிடக்கும் இந் நாட்களில் ஜனத் தலைவர்களும் புற்றீசல் போல் மலியத் தொடங்கினர். பொருள் உள்ளவர்களும், இங்கிலீஷ் பாஷையில் குளறிக் குளறியாவது பேசப் படித்தவர்களும் இன்னும் இப்படிப்பட்ட பலரும் தாங்களும் ஜனத் தலைவர்கள் என்று வாய்ப்பறை யறிவிக்கின்றனர். யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப் பகல் வருந்துகின்றானோ, யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறார உண்பதற்கு உணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களோ என மனமிரங்கிக் கண்ணீர் சொரிகிறானோ, யாவன் ஒருவன் பொது ஜனங்களுக்கு வந்த சுப துக்கங்களும், கஷ்ட, நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ, இன்னும் யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராயிருக்கின்றானோ அவன் ஒருவனே ஜனத் தலைவன். அவன் ஒருவனே தேசாபிமானி. அவன் ஒருவனே தேசத்தார் வணங்கும கண்கண்ட தெய்வமல்லாமல், கேவலம் பொருளைக் கொண்டும், வாயாடியைக் கொண்டும், தேசாபிமானி எனவும் ஜனத் தலைவர்கள் எனவும் பிதற்றுவோர்கள் உண்மையான ஜனத் தலைவர்கள் ஆகமாட்டார்கள் ”.

தேசபக்தன்:

திரு.வி.க.வின் ‘தேசபக்தன்’ விடுதலைப் போருக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. தேசபக்தன் சுதந்திரத்தை விரும்புகிறான். சுய ஆட்சி கேட்கிறான் என திரு.வி.க. தம் இதழின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேசபக்தனில் எழுதுவதை பற்றி , “யான் உருத்திரன் ஆனேன், என் எழுதுகோல் பாசுபதம் ஆயிற்று” என திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.

தேச பக்தன் இதழ் துவங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது முக்கியமான கேள்வியாகும். அன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் வெளியான திராவிடன் இதழே, ‘ தேசபக்தன்’ இதழ் துவக்கப்பட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது.

“தேசிய திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாயுள்ள அபிப்பிராயங்களையும், விபரீதக் கொள்கைளையும் பேசித் தெளிந்து உண்மையைச் சாதித்து நிலைநிறுத்துவதே திராவிடனாகிய இப் பத்திரிகையின் திருத்தமுள்ளதொரு நோக்கமாகும். நமக்கு எவ்வளவோ நன்மை தந்துதவிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் மீது இடையறாத அன்மையும், தளர்வுறாத விஸ்வாஸத்தையும் என்றென்றும் காட்டிச் செல்வதே இணையில்லாத நமது நோக்கமாயிருக்கும்” என்பது திராவிடன் இதழின் நோக்கமாக சுட்டிக் காட்டப்பட்டது.

திராவிடன் இதழின் பிரசார வேகம், தமிழக தேசிய அரசியல் பிரசாரத்திற்கு ஓர் அறைகூவலாக அமைந்தது. மொழியுணர்வு, சமூக சீர்திருத்தவுணர்வுகளில் திராவிடனோடு போட்டி போடத்தக்க அளவில் தேசிய அணியில் சக்திவாய்நத அரசியல் இதழ்கள் இல்லை. சுதேசமித்திரனின் நோக்கம் நடையும், காலமாறுதலுக்கேற்ற வேகத்தைப் பெற்றிருக்கவில்லை. இந்தச் சூழலில் சென்னையில் ‘ஜஸ்டிஸ்’ இதழின் பிரசாரத்திற்கு எதிர்ப் பிரசாரம் செய்வதில் முன்னின்றிருந்த அன்னிபெசண்ட் அம்மையாரின் ‘நியூ இந்தியா’ என்னும் நாளேட்டைச் சார்ந்தவர்கள், திராவிடனுக்கு எதிராக ஒரு தமிழ் நாளேட்டைக் கொணர்ந்திடத் திட்டமிட்டனர். நியூ இந்தியாவில் துணையாசிரியாரக இருந்த சுப்பராய காமத் என்பவரின் முயற்சியின் காரணமாக திரு.வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘தேசபக்தன்’ தோன்றியது.

‘தேசபக்தன்’வாணிப நோக்குடன் நடத்தப்படும் பத்திரிகை அன்று என்றும், அப்பத்திரிகை கிளர்ச்சியின் பொருட்டுத் தோன்றியது என்றும் கூறப்பட்டது. ‘தேசபக்தன்’ முதல் இதழில் எழுதப்பட்ட தலையங்கமே தேசபக்தனின் முதன்மையான நோக்கத்தை பிரதிபலித்தது. “தெய்வ பக்திக்கும், இராஜபக்திக்கும் அடிப்படையாய் இருப்பது தேசபக்தி” என குறிப்பிட்டு தலையங்கம் எழுதப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ், திலகர்- பெசண்ட் இவர்களின் ஹோம்ரூல் இயக்கக் கொள்கைகளை தேசபக்தன் எதிரொலித்தது.

தேசபக்தனின் முகப்பு இலச்சினையிலும், தலையங்கப் பகுதியிலுள்ள இலச்சினையிலும் ‘ தெய்வ மிகழேல்’, ‘சக்கர நெறி நில்’, ‘தேசத்தோடொத்து வாழ்’ என்ற சொற்றொடர்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுள் சக்கர நெறி நில் என்பது அரசனுடைய ஆணைச் சக்கரத்தைக் குறிப்பதாகும். முகப்பில் இரு கந்தரலங்காரப் பாடல்களும், தலையங்கப் பகுதியில் திருவாசகப் பாடலும் அச்சிடப் பட்டிருப்பது தெய்வ பக்திக்கு அளிக்கப்பட்டுள்ள ஏற்றத்தைக் காட்டுவதாகும்.

தேசபக்தன் பத்திரிக்கையில் அன்னிபெசண்ட் அம்மையாரிடம் கொண்டிருந்த பெருமதிப்பை, வெ.சாமிநாதசர்மா, “தேசபக்தன் பெசண்டம்மையாரைப் பற்றி எழுதுகிற போதெல்லாம் அன்னிபெசண்ட் என்று குறிப்பிடாது, அன்னை பெசண்ட் என்றே குறிப்பிடும்” என எழுதினார். காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கத்தை அன்னி பெசண்ட் அம்மையார் கடுமையாக கண்டித்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தேசபக்தனில் 16.6.1919-இல் ‘ஐயோ தெய்வமே’ என்று தலைப்பிட்டு துணைத் தலையங்கம் எழுதினார். ஆசிரியர் உரை என்பது தேசபக்தனில் தலையங்கத்தின் பெயராகும். அன்னிபெசண்ட் அம்மையார் ஹோம்ரூல் கிளர்ச்சியின் காரணமாக வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டதைக் கண்டித்து டாக்டர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கு 24.6.1917-இல் கடிதம் எழுதியதுடன், பிறகு தனது ‘ஸர்’ பட்டத்தையும் துறந்தார். இதைப் பாராட்டி 21.6.1918-இல் தேச பக்தனில் தலையங்கம் எழுதினார் திரு.வி.க.

டாக்டர் வரதராஜூலு நாயுடு மதுரையில் சிறைப்பட்ட போதும், தேச பக்தனில் வீர முழக்க்க் கட்டுரைகள் எழுதப்பட்டன. இதைப்போல பாலகங்காதர திலகரின் வாயை அடக்குமுறை ஒடுக்கிய வேளையிலும், ஹார்னிமென் நாடு கடத்தப்பட்ட காலத்திலும் தேசபக்தனில் பக்திக்கனலை விதைக்கும் விதமாக கட்டுரைகள் வெளிவந்தன. திலகர் பெருமான், காந்தியடிகள் முதலியோர் சென்னை வரும்போதெல்லாம் ‘தேசபக்தன்’ ஆசிரியக் கட்டுரைகளில் தேசபக்தி பொங்கி வழியும்.

நவசக்தி:

‘வீடுபெற நில்’, ‘மாற்றானுக்கு இடங்கொடேல்’, ‘ஏற்பதிகழ்ச்சி’ என்பன திரு.வி.கவின் ‘நவசக்தி’ இதழின் லட்சிய நெறிமுறைகளாக அச்சாகியுள்ளன. அதாவது ‘நவசக்தி’ இதழில் தலையங்கப் பக்கத்தில், தலையங்கத்திற்கு மேல் நிற்கும் கோலத்தில் பாரத மாதாவின் படமும், படத்தின் சுற்று வளைவில் இதழின் முற்கூறிய இலட்சிய நெறிமுறைச் சொற்றொடர்களும், படத்தின் பீடத்தில் நவசக்தி என்றும் அச்சாகியுள்ளன.

காந்திய இயக்கத்தைத் தெய்வீக இயக்கமென்று ஏற்றிப் போற்றி, காந்தியடிகளின் ஒத்துழையாமை, சத்தியாக்ரக இயக்கங்களின் செய்திகளை விரிவாக வெளியிடுவதை முக்கிய கடமைகளுள் ஒன்றாகக் கருதிய பத்திரிகை ‘நவசக்தி’.

பல பரிமாணங்களையும், பன்முகத் தன்மைகளையும் கொண்ட ‘நவசக்தி’யின் தலையங்கங்கள் சிலவற்றில் சுதந்திர போராட்டத்தின் தன்மையை எவ்வாறு எழுதப்பட்டு, தமிழக மக்களிடம் நாட்டுப் பற்றை ஏற்படுத்தினார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

1920 நவம்பர் மாதம் 26ஆம் தேதி வெளி வந்த நாளிதழிலில் ‘சுதந்திரமும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில் சில வரிகள்…

“காந்தியடிகளின் தெய்வீக இயக்கம் வட இந்தியாவில் ஒருவாறு வேரூன்றி வருகிறது. நமது தமிழ்நாட்டில் அவ்வியக்கத்தைக் கொலை புரிய பலர் கங்கணங்கட்டித் திரிகின்றனர். தமிழநாட்டில் தோன்றியுள்ள சாதிப் பகைகள் சுதந்திர தேவியையும் தலைகாட்ட விடவில்லை. சாதிப்பகைமை பாராட்டிச் சுதந்திரத்தைக் கொலை செய்ய முந்துஞ் சகோதரர்களுக்கு இரங்குகிறோம்!” என எழுதியுள்ளனர்.

பிராமணர் – பிராமணரல்லாதார் போராட்ட உணர்வில் sபிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரவிக்காமல் தேசிய விடுதலைப் போராட்ட உணர்விற்கு ஊறு செய்த நீதிக்கட்சியின் அரசியல் கொள்கையைக் கண்டிப்பதே மேற்படி தலையங்கத்தின் நோக்கமாகும்.

1920 டிசம்பர் 3-ஆம் தேதி வெளிவந்த நாளிதழிலில் ‘ அரசியல் கட்சியும் சாதி அரசியலும்’ என்னும் தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், “மாண்டேகு – செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் எனும் அரசியல் சாசன சீர்திருத்தம் பற்றிய அறிக்கை 1918இல் வெளியாயிற்று. இது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியில் பிறந்தது என்னும் விமர்சனத்திற்கும் ஆட்பட்டதாகும். வகுப்புவாத அரசியலுக்கு ஆக்கம் அளிப்பதாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதினர்” என எழுதி, ஒவ்வொரு சாதியாரும் தத்தமக்குச் சட்டசபையில் பிரதிநிதி ஸ்தானம் வழங்க வேண்டுமென்று முழக்கஞ் செய்யும் காலம் வரலாம் என எழுதியவர் திரு.வி.க.

ஜஸ்டிஸ் கட்சியை பற்றி 13.31929-இல் ‘இந்தியாவும் சுயராஜ்யமும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் “ஜஸ்டிஸ் கட்சி காங்கிரஸூக்கு மாறுபட்டு நிற்றலான். அது தேச நலனுக்கு மாறுபட்ட நெறியில் நிற்கக் கடமைப்பட்டுள்ளது. காங்கிரஸ் – ஒத்துழையாமை என்றால், ஜஸ்டிஸ் ஒத்துழைப்பு என்று சொல்லும்; காங்கிரஸ் பகிஷ்காரம் என்றால் ஜஸ்டிஸ் வரவேற்பு என்று கூறும்; காங்கிரஸ் வெண்மை என்றால் ஜஸ்டிஸ் கருமை என்று பகரும்; இவ்வாறு தேசநலனுக்கு இடையூறு செய்வதே ஜஸ்டிஸ் கட்சியின் தொண்டாக முடிந்தது” என திரு.வி.க. குறிப்பிட்டார்.

22.10.1926-இல் வெளிவந்த ‘பாரதியாரும் தேச பக்தியும்’ என்னும் தலையங்கத்தில், தேசபக்தியை வீழ்த்தும் பலதிறக் கிளர்ச்சிகள் தலைவரித்தாடும் இந்நாளில் பாரதியார் பாடல்களின் உள்ளக் கிடக்கைகளை நாட்டில் உலவச் செய்ய வேண்டுவது அறிஞர் கடமை என்று உணர்த்தி பாரதி பாடல்கள் சிலவற்றை மேற்கோள்களாக தலையங்கத்தில் காட்டி எழுதப்பட்டது.

‘நவசக்தி’ பத்திரிகையில் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைகள் சுதந்திரப் போராட்ட வரலாற்றை பிரிதிபலிப்பதாக அமைந்தன. தனது முதல் சிறைவாசத்தை ‘நம்பர் 888’ என்ற பெயரில் சிறுகதையாகயும் எழுதினார். அகஸ்தியன் என்ற புனைப்பெயரில் அரசியல் மாநாடுகளைப் பற்றி எழுதியுள்ளார். ராமசாமி நாயக்கர் தலைமையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டு நடவடிக்கைகளைப் பற்றி சில குறிப்புகள் என்னும் தலைப்பில் அகஸ்தியர் எழுதியது என 21.11.1924-ல் நவசக்தியில் பக்கம் 4-இல் வெளியாகியது.

தினமணி:


மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்துக்கு உதவ பத்திரிகை துவங்கச் சொன்ன காரணத்தால் 1934-இல் துவங்கப்பட்டது ‘தினமணி’. தினமணி துவக்கப்பட்ட போது முக்கியமான மூன்று கொள்கைகளைக் கொண்டதாக அறிவித்தது. ஒன்று இந்திய மக்களால் நடத்தப்படும் சுதந்திரப் போராட்டத்திற்கு இடையறாத ஆதரவை வழங்குவது; இரண்டாவது தமிழ் மக்களின் மனதில் உள்ள எல்லாவிதமான அடிமை எண்ணங்களயும் போக்குவது; மூன்றாவது நாட்டில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்குவது என்பதை லட்சியமாக கொண்டு துவக்கப்பட்ட நாளிதழ்.

சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்திய தினமணிக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவர்கள் திரு. டி.எஸ்.சொக்கலிங்கம்., திரு. ஏ.என். சிவராமன், போன்றவர்கள். 1934-ல் தினமணியை ஆரம்பிக்க வேண்டிய ஏற்பாடுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்தானம் செய்து கொண்டிருந்தார். சிறை சென்றவர்களாக நாலைந்து பேரைத் துணையாசிரியர்களாகவும், ஒருவரை ஆசிரியராகவும் பொறுக்கி எடுத்தார். இறுதியில் சொக்கலிங்கமும், சிவராமனும் மட்டுமே தினமணியில் சேர்ந்தனர். இதற்கு முதன்மையான காரணம், தினமணி தொடங்கப்பட முடிவு செய்த போதே, விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகிகளைத் துணையாசிரியர்ளாக நியமிக்க வேண்டும் என திட்டமிட்டது தான். மகாகவி பாரதியின் நினைவு தினமான செப்டம்பர் திங்கள் 11- 1934-இல். தினமணியின் முதல் இதழ் வெளிவந்தது.

முதல் இதழில் மூன்று தலையங்கங்கள் வெளி வந்தன. முதல் தலையங்கத்தில், “ நமது நாட்டில் சென்ற பதினைந்து வருஷங்களாக ஓர் அபூர்வ சுதந்திரப் போர் நடந்து வருகின்றது. அதன் நடுவில் ஏற்படும் அற்ப வெற்றிகளால் மயங்காமலும், சிறிய தோல்விகளால் தளராமலும் பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ மக்களைப் போற்றியும், தேற்றியும் தினமணி துணைபுரியும்” என எழுதப்பட்டது. தலையங்கத்தின் பின்வரும் இறுதி வரிகள், “சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் தினமணியைத் தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது எனது பூரண நம்பிக்கை ” என எழுதப்பட்டது.

1942-இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெருமளவில் பரவுவதற்கு தினமணி பெரிதும் உதவியது. ஆசிரியர் சிவராமன் சிறிது காலம் தலைமறைவாகி தமிழகம் நெடுக ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்கே தேச பக்கதர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்றறிந்து, அவர்களை ஊக்குவிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் அவர்களது நடவடிக்கைகளை பிறவிடங்களில் உள்ளவர்கள் அறியும்படி தினமணியில் கட்டுரைகள் செய்திகள் வெளியிடுவதிலும் ஈடுபட்டார். 1942-இல் சீர்காழியில் போட்மெயில் ரயில் போவதற்குள் ஒரு பாலத்தைத் தகர்க்கத் திட்டமிட்டவர்களில் தினமணி ஆசிரியர் குழுவைச் சார்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 1943-இல் மவுண்ட் ரோடிலிருந்த எக்ஸ்பிரஸ், தினமணி அலுவலகம், ஆகஸ்ட் இயக்கத்தின் தலைமையகமாக விளங்கியது.

1943-இல் ஆங்கில அரசாங்கத்தின் தணிக்கை விதிகளுக்கு உட்படுவதை விடப் பத்திரிகைகளை மூடி விடுவதே மேல் என்று மகாத்மா காந்தி யோசனை கூறினார். இதற்காக அவர் முதலில் தனது பத்திரிகைகளை மூடிவிட்டார். தமிழகத்தில் தி இந்து பத்திரிகை நிர்வாகிகள் மூட மறுத்து விட்டார்கள். ஆனால் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆந்திரப்பிரபா ஆகிய மூன்று பத்திரிகைகளும், காந்தியின் யோசனையை ஏற்று 1943 ஏப்ரல் 18-ஆம் தேதி தாமாக வெளியீட்டை நிறுத்தி விட்டன. ஆனாலும் அலுவலக ஊழியர்கள் ரகசியமாக பல தேசத் தொண்டுகள் புரிந்தனர்.

1935 பிப்ரவரி 11 இல் ‘கலப்பற்ற செய்தி’ என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், “குருடனை ராஜவிழி விழிக்கும்படி செய்ய முடியாது. அதே மாதிரி, சர்க்காரிடம் உதவி பெறும் பத்திரிகைகளையோ செய்தி கம்பெனிகளையோ தேசிய நோக்கம் கொள்ளும்படி செய்ய முடியாது. விடுதலையென்றால் ராஜீய விடுதலை மட்டுமல்ல, சமூக பொருளாதார, வர்த்தகம் முதலிய சகல துறைகளிலும் விடுதலை பெற வேண்டும். இந்தியாவின் துரதிர்ஷ்டம் உள்நாட்டுச் செய்திகளுக்கோ, வெளிநாட்டுச் செய்திகளுக்கோ சர்க்கார் தயவில் வாழும் கம்பெனிகளின் உதவியையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதுதான் செய்தி, எதை மறைக்கிறார்களோ, அது செய்தியல்ல. இந்தியாவில் எத்தனையோ பத்திரிகைகள் இருந்தும் சுதந்திரமான கலப்பற்ற செய்திகளுக்கு ஏற்பாடு செய்யாமல் இருப்பது பெரிய நஷ்டமாகும் ” என்று எழுதப்பட்டது. .

ஆங்கில அரசுக்கு எதிராக தினமணியில் வெளிவந்த தலையங்கங்கள் முக்கியமானவை. 7.11.1937-இல் ‘பூதகிவதம்’ என்ற தலைப்பிலான கட்டுரை, இதிகாசக் கதைகளை கொண்டு அரசியல் நடப்புகளை எவ்வாறு திறமையாக உயர்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கிய தலையங்கம் ஆகும். “கிருஷ்ணனைக் கொல்வதற்கு கம்ஸன் பூதகியை எப்படி அனுப்பினானோ அது போலவே பிரிட்டனின் முதலாளிகள் இந்தியாவின் சுதந்திர உணர்ச்சியையும் சக்தியையும் ஒழிப்பதற்கு ஒரு பூதகியை அனுப்புகிறார்கள். இந்தப் பூதகிக்கு 1935-ம் வருடத்து இந்திய அரசியல் சட்டம் என்று பெயர். வெளித்தோற்றத்தில் இது எவ்வளவு அழகுபடுத்தப்பட்டாலும் இதனுள்ளே இருப்து விஷம். இந்தப் பூதகியை அழித்தே தீர வேண்டும் என்பதற்காகவேதான் காங்கிரஸ் புதிய அரசியல் சட்டத்தில் ஏற்படும் சட்டசபைகளுக்குள் பிரவேசிக்கிறது. ஆகவே பூதகியைச் சமாளிப்பதாகிய இந்தத் தேர்தல் போராட்டத்தில் காங்கிரஸைத் தவிர வேறு யாருக்கும் வேலையில்லை” என எழுதிய பத்திரிகை தினமணியாகும். 

(ஆதாரம்: குமரி மலர்- மார்ச் 1980; பக்கம் 53-56)

1938 பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி ‘தீவிரவாதிகளின் பூர்வ கதை’ என்னும் தலைப்பில் வெளிவந்த தலையங்கம், காங்கிரசில் தோன்றிய சட்ட மறுப்பு அணுகுமுறை, சட்டசபை பிரவேச அணுகுமுறை என்னும் தேசிய அரசியல் விவாதத்தில் சட்டசபை பிரவேசத்தை ஆதரித்த நேருஜி போன்ற தலைவர்களின் கருத்தை ஆதரித்து எழுதப்பட்டதாகும்.

18.2.1938 –இல் காந்தியடிகளின் சட்ட மறுப்பு ப் போராட்டதைப் பாராட்டியும், வரவேற்றும் ‘புதிய போர் முறை’ என்னும் தலைப்பில் எழுதிய தலையங்கம் சிறப்பானது. ஸ்ரீ விநோபா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 21.10.1940-இல் எழுதிய தலையங்கத்தில், “தனிநபர் சத்தயாக்ரக இயக்கத்திற்கு முதல் சத்யாக்ரகியாக விநோபாவை காந்தியடிகள் தேர்வு செய்தார். காந்தியடிகளின் சர்வோதயா இயக்கத்தின் தலைமை வாரிசு விநோபா” என்று எழுதப்பட்டது.


காண்க: ஈரோடு சரவணன்

No comments:

Post a Comment