18/10/2021

பரவுக நின்கருணை! (கவிதை)

-பத்மன்



பத்துத் தலைகளைப் பற்றித் திருகிட 
    பறந்தது நின்கணையே
பற்றுத் தளைகளை வெட்டி அறுத்திட 
    பரவுக நின்கருணை! 1
 
முன்னை முப்புரம் முக்கட் கொண்டே 
     எரித்தது நின்சிரிப்பே
முன்னை வினைகளின் மும்மலம் ஒழித்து 
    முடிப்பது நின்சிறப்பே! 2

கடலுள் புகுந்த சூர்மா தடிந்தது 
    சுடர்மிகு நின்வேலே
உடலுள் புகுந்த உயிரது கதிபெறச் 
    செய்வது நின்தாளே! 3

எருமைத் தலையன் கொடுமை முடித்திட 
    எறிந்தது நின்சூலம்!
அருமை எங்கள் வாழ்வில் உற்றிட 
    அருளுக நின்பாலம்! 4


காண்க: பத்மன்


No comments:

Post a Comment