16/09/2021

சிறையிலும் சம உரிமை கோரிய புரட்சியாளர்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்


ஜதீந்திரநாத் தாஸ்
(
1904 அக். 27 - 1929 செப். 13)


ஜதீந்திர நாத் தாஸ், வங்க மாகாணம், கொல்கத்தாவில் பங்கிம் பிஹாரி, என்பவருக்கு 1904, அக். 27-ஆம் தேதி மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே, புரட்சி இயக்கமான ‘அனுசீலன் சமிதி’யில் சேர்ந்தார். 1921-ல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.

கொல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் கல்லூரியில் பயின்று வந்தபோது, அரசியல் நடவடிக்கைகளுக்காக 1925, நவம்பரில் கைது செய்யப்பட்டு மைமேன் சிங் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். அந்த சிறைச் சாலையில் அடைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக் கைதிகள் மனிதாபிமானமற்ற முறைகளில் நடத்தப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். இவருடைய உண்ணாவிரதம் 20 நாட்கள் தொடர்ந்த நிலையில் சிறை அதிகாரி (சூப்பிரண்டெண்ட்) மன்னிப்புக் கேட்க உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
நாட்டின் பிற பாகங்களில் உள்ள மற்ற புரட்சியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்காக குண்டு தயாரித்துத் தர ஒப்புக்கொண்டார் ஜதின் தாஸ். இந்த நிலையில் 1929-ஆம் ஆண்டு, ஜூலை 14-ஆம் தேதி அன்று புரட்சிகர நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப் பட்டு லாகூர் சிறையில் அடைக்கப் பட்டார். லாகூர் சதி வழக்குடன் இணைந்த துணை வழக்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

லாகூர் சிறையில் இந்திய அரசியல் போராட்டக் கைதிகளுக்கு, அங்கேயே சிறையிலுள்ள ஐரோப்பியக் கைதிகளுக்கு அளிக்கப்படும் வசதிகள் சம உரிமையுடன் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரத்தைத் தொடங்கினார் ஜதின் தாஸ். அதற்குக் காரணம் இந்திய அரசியல் கைதிகளின் நிலைமை சிறைச்சாலைகளில் உள்ளே மிகவும் பரிதாபகரமாக இருந்ததே ஆகும். 

நன்றாகத் துவைத்து வெளுக்கப் படாமல் அழுக்கேறிய உடைகளை அளித்தும், எலிகள், கரப்பான் பூச்சிகள் போன்ற ஜந்துக்கள் அடைந்து கிடக்கும் சமையல் அறையில் பாதுகாப்பற்ற சூழலில் சமைக்கப்பட்ட உணவை வழங்கியும் பிரிட்டிஷ் அரசு இந்திய அரசியல் கைதிகளை பாரபட்சமாக நடத்தி வந்தது. அதே நேரம், ஆங்கிலேயக் கைதிகளுக்கு சிறப்பு அந்தஸ்துடன், நன்கு பராமரிக்கப்பட்ட உணவு மற்றும் உடைகளை வழங்கி வந்தது.

ஜதீந்திர நாத் தாஸ் 1929, ஜூன் 15 அன்று, சிறையில் சம உரிமை கோரி தொடங்கிய உண்ணாவிரதம் நீடித்த நிலையில், சிறை அதிகாரிகள் உண்ணா விரதம் மேற்கொண்டவர்களுக்குக் கட்டாயமாக உணவு அளிக்க முடிவெடுத்தனர். சிறை கமிட்டி ஜதீந்திர நாத் தாஸை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அதை உடனே நிராகரித்தது. அதே சமயம் அவரை ஜாமீனில் வெளிவிட ஒப்புக் கொண்டது.

ஜதின் தாஸ் அதை ஏற்காத நிலையில் உண்ணாவிரதம் 63 நாட்களை எட்டிய போது 1929 செப். 13 அன்று மதியம் உயிர் நீத்தார். அவருடைய உடலைப் பெற்றுக்கொண்ட பகவதி சரண் வோராவின் மனைவியும், HSRA என்ற ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கன் அஸோஸியேஷன் அமைப்பைச் சேர்ந்த போராளியுமான துர்காவதி தேவி, லாகூரில் இருந்து ரயில் வண்டி மூலம் கொல்கத்தா கொண்டு வந்தார். வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஜதின் தாஸின் பூத உடலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். 

கொல்கத்தா நகரில் அவரது உடல் இரண்டு மைல் நீள ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு எரியூட்டப் பட்டது. ஜதீந்திர தாஸின் மரணம் பிரிட்டிஷாரின் சட்ட விரோதமான கைது நடவடிக்கைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
அன்றைய வைஸ்ராய் பிரிட்டனுக்கு அனுப்பிய செய்தியில், ஜதீந்திர நாத் தாஸ் உண்ணாவிரதத்தால் 13.09.1929 அன்று பகல் ஒரு மணிக்கு உயிர் நீத்ததாகவும், மற்ற ஐந்து கைதிகள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாகவும் பகத் சிங், பாகேஷ்வர் தத்தா ஆகிய இருவர் மட்டும் உண்ணா விரதத்தைத் தொடர்வதாகவும் கடிதம் அனுப்பினார்.

மத்திய சட்டசபையில் (பாராளுமன்றம்) மோதிலால் நேரு கவன ஈர்ப்புத் தீர்மானமும் கண்டனத் தீர்மானமும் கொண்டு வந்தார். வாக்கெடுப்பில் அதற்கு 55 பேர் ஆதரவாகவும் 47 எதிராகவும் வாக்களிக்க, கண்டனத் தீர்மானம் நிறைவேறியது.

ஜவஹர்லால் நேரு  தமது அறிக்கையில், சுதந்திரப் போராளிகளின் நீண்ட வரிசைப் பட்டியலில் மற்றொரு பெயர் பொறிக்கப் பட்டுள்ளதாகவும், போராளிகளுக்கு மேலும் உறுதியும் தெம்பும் வேண்டிப் பிரார்த்திப்பதாகவும், விளைவுகள் எப்படி இருந்தாலும் போராட்டம் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜதீந்திர நாத் தாஸ் அவர்களின் உயிர்த் தியாகத்தை ஒட்டி பஞ்சாப் மாகாண அசெம்பிளியில் இருந்து முகமது ஆலம், கோபி சந்த் ஆகியோர் ராஜினாமா செய்தனர். 

நாட்டின் சுதந்திரத்துக்காக தன் 24ஆம் வயதில் உயிர்த் தியாகம் செய்தவர் ஜதீந்திர நாத் தாஸ்.



No comments:

Post a Comment