16/09/2021

இத்தேசத்தின் ஞானச்சித்தன்

-ஸ்டான்லி ராஜன்



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 10)

சித்தர்களும் சில வரம்பெற்ற மனிதர்களும் இந்து மதத்தில் அடிக்கடி தோன்றுவார்கள்; அவர்களின் காலத்தில் அவர்களைப் புரிந்துகொள்வார் யாருமிலர். பிரிதொருநாளில் அவர்களைத் தேடும்பொழுது அவர்கள் இருக்க மாட்டார்கள்.

100 வருடங்களுக்கு முன் அப்படி ஒரு சித்தன் இருந்தான். அவன் பிரபஞ்சத்தில் கரைந்த பெரும் ஞானியாய் இருந்தான். சாதாரண மனிதரில் இருந்து அவன் வேறுபட்டு இருந்தான்.

‘ஞானிக்கு வேந்தன் துரும்பு’ என்பதில் சரியாக இருந்தான். ராஜாதிராஜன் என்றாலும் அவன் தள்ளிப்போ என்றான்; பணமோ இதர உலக மாயைகளோ அவனை மயக்க முடியவில்லை.

அவனுக்கு தேசநிலை புரிந்தது; இந்துமத நிலை புரிந்தது; எதிர்காலம் தெரிந்தது. அவன் மானிடரை நேசித்தான்; இந்த மண்ணை அதைவிட அதிகமாக நேசித்தான்.

அவன் எல்லா மொழிகளும் படித்தான்; தமிழை நேசித்தான்.  எல்லா நாட்டையும் கவனித்தான்; பாரதத்தைக் கொண்டாடினான். அவன் எல்லா மதத்திலும் நுழைந்தான்; சக்தியின் பக்தனாய் ஹிந்துவாய் நின்றான்.

அந்த ஞானச்சித்தன், தான் உணர்ந்ததை சித்தன் போல எழுதி வைத்தான், காவியமாய்ப் பாடலாய் செதுக்கி வைத்தான்.

விவேகானந்தர் எனும் மாபெரும் மகானுக்கும் பாரதி எனும் சித்தனுக்கும் ஒரு வித்தியாசம் காண முடியாது, அந்த ஞானப் பரதேசிகள் இந்நாட்டின் தத்துவ சிகரங்கள்.

இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு;  அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனை மிக்க தேசியவாதிகள் குறைவு;  அதிலும் தன்னலமற்ற சிந்தனைவாதிகள் அபூர்வம்.

ஆனால் ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல அந்தச் சிறு கூட்டம் பேரொளியினை இங்கு ஏற்றியது. அவர்கள் கொடுத்த வீச்சும் ஏற்றிவைத்த புரட்சித் தீயும் கொஞ்சமல்ல‌.

ஒருவன் காலமான பின்னும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும், அவன் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு சிலரே.

அதில் ஒருவன் எங்கள் பாரதி. நெல்லை மண் கொடுத்த எங்கள் சிங்க நிகர் பாரதி.

பாட்டுச் சித்தனாக அவன் பாடி நின்றான். அந்தப் பாடலையும் அவன் தனக்காகப் பாடவில்லை. அவனது பாடலெல்லாம் தேசம், சமூகம், தெய்வம் என இந்த மூன்று பிரிவில்தான் வருமே தவிர, தனக்காகவோ தன் குடும்பத்துக்காகவோ அவன் பாடவில்லை.

தகுதியில்லோரை காசுக்குப் புகழும் அதர்மத்தை அவன் ஒருகாலமும் செய்யவில்லை.

அந்த ஞானச்சூரியன்,  தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம்; நிச்சயமாகச் சொல்லலாம், அறிவுச் சூரியன்.

ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓட ஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்ச் சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு. அதில் அவன் தவறு என்ன இருக்கிறது?

விதி, அறிவிருப்பவனெல்லாம் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் அழுது சாக வேண்டும் எனும் கொடும் விதி.

நெல்லையின் வறண்ட பகுதியில் வளரும் மரமெல்லாம் நீருக்கு ஏங்கித் தவிக்க வேண்டும் என்பதும், தமிழகத்தில் இருக்கும் அறிவாளியெல்லாம் ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கித் தவிக்க வேண்டும் என்பதும் விதி.
அந்தக் கொடுமைக்கு அவனும் தப்பவில்லை.

ஆச்சரியமானவன் அந்த சுப்பிரமணி; 6 வயதில் கவிதை எழுதினார். நெல்லையில்தான் தமிழைக் கற்றார். பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார். ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், வங்கம் என பலமொழிகளைப் படித்ததனால் தான் திமிராகச் சொன்னார்:

 “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம்”

உண்மைதான். பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான், சுவையான நீர் எது என்று தெரியும். அது அவருக்குத் தெரிந்தது.

வெறும் தமிழை படித்துவிட்டு தமிழ் உயர்ந்தது என சொல்வதில் என்ன இருக்கின்றது?  உலகமொழியெல்லாம் சொன்னானே பாரதி, அதில் இருந்தது உண்மை.

அவர் பல மொழியும் கற்றது போல தமிழைக் கற்றார்; தமிழ்க் கவிதைக்கு தலைகீழ்த் திருப்பம் கொடுத்தார், பல்லாண்டு கால இலக்கிய உலகுக்கு திடீர்த் திருப்பமும் அவரே கொடுத்தார்.

பாரதியின் வாழ்வில் நாம் கண்ட விஷயம், அம்மனிதனிடம் உண்மை இருந்தது. அது அநீதியினைக் கண்டபொழுதெல்லாம் பொங்கச் சொன்னது. இந்த தேசத்துக்காக அவனை எழுதச் சொன்னது.

சில உண்மைகளை இன்னொருவர் மூலம் தெய்வம் உணர்த்தியபொழுது, அதை ஏற்கும் மனமும் பாரதிக்கு இருந்தது, அருட்சகோதரி நிவேதிதாவை கொல்கத்தாவில் கண்டார்; உண்மை உணர்ந்து பெண் விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார்.

தேசம் மேல்நாடுகள் போல வளர, நிலைக்க‌ பெண்ணுக்கும் எல்லா உரிமையும் வேண்டும் என்ற முதல் குரல் அவரிடமிருந்தே வந்தது.

பாரதி பணத்துக்காகவும் வாய்ப்புக்காகவும் வாழ்ந்திருந்தால் அவர் வாழ்வு எப்படி இருந்திருக்கும்?

எந்த வம்பு தும்புக்கும் போகாமல் எழுதுவதை  மட்டும் செய்து கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞராகக் கொண்டாடபட்டிருப்பார்.

ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞராக வரலாற்றில் இருந்திருப்பார், இங்கல்ல லண்டனில். அவரது ஆங்கிலப் புலமை அப்படி.

ஆம், மிகப் பெரிய கவிஞராக அவரால் லண்டனில் வலம் வந்திருக்க முடியும்;  பெரும் சுகபோகத்துடன் வாழ்ந்திருக்க முடியும்.

ஏன், எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளுக்கு 2 பாடல் எழுதியிருந்தால்கூட, இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையையும், தூத்துகுடியினை ஆண்டு கொண்டிருந்திருக்கும்.

அவ்வளவு ஏன், ஆசிரியப் பணியினை ஒழுங்காகச் செய்திருந்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவுக்கு உயர்ந்திருப்பார்.

அந்தப் பத்திரிகையையாவது அரசி எதிர்க்காமல் ஒழுங்காக நடத்தியிருந்தால், இன்று அது தொலைகாட்சிகள் நடத்தும் அளவுக்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.

அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால், இரண்டே காரணம் தான்.

ஒன்று,  இந்த நாட்டைத் தீவிரமாக நேசித்தது.  இன்னொன்று தேசம் போராட்டத்தில் இருக்கும் பொழுது சமூகம் அமைதியாக, தன்னலமாக  இருத்தல் கண்டு அவர் பொங்கியது.

ஆம் உண்மை பேசினார்;  நாட்டை நேசித்தார்; அதனால் வாழ்வை இழந்தார்.

அவரது தேசப்பற்று ஆட்சியாளர்களின் கோபத்தைக் கிளறியது; சமூகப்பற்று சொந்த மக்களையே பாரதியை விரட்ட வைத்தது.

அவர் போராடினார்; நம்பினார்;தன்னாலும் வாழமுடியும் என நம்பினார். ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கினார்.

அவரைப் புரிந்துகொள்ள கெஞ்சினார். ஆனால் அவரது ஏழாம் அறிவுக்கும் இங்கிருந்தோரின் ஐந்தாம் அறிவுக்கும் பொருந்தவே இல்லை.

வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும், விரட்டியும் வாழ வேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார்; மனித நேயத்தோடு வாழ்ந்தார்.

உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குத்தான் பொருந்தும், அது பாரதியினை நினைத்தால் ஒவ்வொருவர் மனதிலும் தானாக வரும்.

பிரிட்டிஷார் விரட்டினர்- ஓடினான், வறுமை விரட்டியது ஓடினான், சமூகக் கொடுமைகள் விரட்டியது ஓடினான், ஓடினான், முடிந்தவரை ஓடினான், முடியவில்லை. இறுதியில் இறந்தான்.

ஒரு மனிதனுக்கு தாங்க முடியாத அவமானம் என்பது அவனது திறமையைப் பரிகசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை.

அதைத்தான் இந்தச் சமூகம் பாரதிக்குச் செய்தது, பாவம் அவர்! ‘நல்லதோர் வீணை செய்தே’ என அவரால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது;  ‘சக்திகொடு’ என கெஞ்சத்தான் முடிந்தது.

அவருக்கிருந்த அறிவுக்கு அவரோடு சமமாகப் பேசகூட யாருமில்லை, பேசினாலும் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர் தன் சோகத்தை கழுதைகளோடு பேசிக் கழித்த காலமும் இருந்தது.

ஒருவன் கையில் எவ்வளவு இருக்கின்றது, சொத்து-பத்து எவ்வளவு இருக்கிறது என, காணும் செல்வங்களையே கணக்கிட்ட உலகம் அவரது பெரும் அறிவுச் செல்வத்தைக் கண்டு கொள்ளவில்லை.

கொண்டாடப்பட வேண்டியவரை பைத்தியம் என ஒதுக்கினார்கள், விரட்டினார்கள்; அவர் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தார்.

அங்குமிங்கும் ஓடினார். இந்தச் சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடிக்கலாம் என நம்பினார். முடியவில்லை.

உலகிலே மிகக் கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால், ஒரு அறிவாளியை 10 முட்டாள்களோடு வாழவிடுவது. அதுதான் பாரதிக்கும் நடந்தது.

குடும்பமும் வறுமையும் அவரை பணம் சம்பாதிக்கக் கட்டாயப்படுத்தின, அவரும் முடிந்ததை எல்லாம் செய்துபார்த்தார். காலம் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

அந்த வறுமையிலும் கண்ணனை நினைத்துப் பாடி மகிழ்ந்தார்.  அப்பொழுதும் பாரதப் போரையும் இந்திய சுதந்திரத்தையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுதத் துணிந்தார்.

ஆம், பாஞ்சாலி சபதம் துஷ்டர்களிடம் சிக்கிய பாரத மாதாவை விடுவிக்கும் கவி யாகமே. அவர்தான் அங்கே பங்கு கொண்டு யுத்தம் நடத்தும் வீரனாகவே நினைந்து மாபெரும் விடுதலை உணர்ச்சியாய் எழுதினார்.

ஆனாலும் கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று.

கனவு வேறு, கடமை வேறு, வாழ்க்கை வேறு என்பது மெல்ல விளங்கிற்று.

அதை அழுத்தமாக‌ உணர்த்தியது அவரது தோழரான‌ வ.உ.சி.யின் சிறைக்கொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடிய இறுதிக்காலமும்.

விளைவு ஒரு பெரும் கவிஞர், பன்மொழி ஆசிரியர், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் கொண்டவர், ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார்.

அந்த யானை விறகு பொறுக்கக் கிளம்பியது; அந்தச் சிங்கம் எலி வேட்டைக்கு சென்றது; அந்தச் சூரியன் ஓர் அறைக்கு விளக்காக முயன்றது.

இறுதிக்காலத்தில் பித்துப்பிடித்தவர் என்றும், வாழத் தெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர்; அப்போதும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.  அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்திப் பாடல்களும், இன்னும் பல அழியாப் பாடல்களும்.

ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களைத் தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறு பாடல்களில்லை.

ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது; எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள். எந்தப் பாடல் 1911இல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியதோ, சர்சையில் சிக்கிய‌ அதே பாடல்,  ‘ஜன கண மன’ எனும் அந்த பெரிய பாடல் தேசிய கீதமானது.

அன்று தாகூர் எழுதியது மிகப் பெரும் பாடல், அதைப் பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம். அதனை 5 நிமிடமாகச் சுருக்கி ‘இந்திய தேசிய கீதம்’ என அறிவித்துவிட்டார்கள்; பாடுகின்றோம்.

தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய ‘நோபல் பரிசு’; பாரதியோ வெள்ளையர் விரோதியாக பாண்டிச்சேரியில்  ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என பாடிக் கொண்டிருந்தார். அவருக்கு வெள்ளையன் கொடுத்தது  ‘ராஜத்துரோகி’ பட்டமும் சிறைத் தண்டனையும்.

பாரதி இந்தியாவை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன என்பதற்கு அவரது பாடல்களே சாட்சி.  பாரதி, தேசத்தின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றையும் மனதால் உணர்ந்த ஞானக்கவிஞன்.

இன்றும் ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என அவர் பாடியதே நடந்து கொண்டிருகிறது. அவரது கனவுப்படியே இந்தியா சுதந்திரம் பெற்றது.

தேசமும் இச்சமூகமும் முன்னேற அன்றே வழிகள் பல பாடி போதித்தவர்  பாரதி.

அவர் பாஷையில் சொல்வதென்றால் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு’.

அவர் வைத்த அந்த‌ அந்தத் தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.

பாரதியின் வாழ்க்கை கொடுமையானது, அவராவ‌து அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிப்பட்டார் விதி; ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை! வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான்.

வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்கப் பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கை, குருவிக்கு வீசி கவிதை பாடுவது; உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார் - பிள்ளைகளுக்காக அல்ல, பிஜி தீவில் கரும்புக்காட்டில் அவதிப்படும் இந்தியருக்காக‌.

உலகின் கஷ்டத்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை. புரியவும் புரியாது. காரணம், அவர் மனநிலை அப்படி.  புரிந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு நிலை.

இறுதியாக, சென்னை- திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டு குடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார்; செல்லம்மாள் தவித்து கொண்டிருந்தார்.

அப்பொழுதும் அனுதினமும் திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சுவது அவர் வழமையாய் இருந்தது.  
அவருடன் யானை விளையாடியதில் அடிபட்டு பிழைத்திருந்தார்; ஆனால் மனதாலும் உடலாலும் தளர்ந்திருந்த பாரதி எளிதில் காயமடைந்தார்.

அந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து அவரது காலம் முடிந்தது; 1921 செப். 11ஆம் தேதி முடிந்தது; 100 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது.

மொத்ததில் இந்தியா பிளவுபட்டதைப் பார்த்தால் பாரதி தாங்க மாட்டார்;  அதுவும் நாத்திக கோஷ்டிகளின் அட்டகாசத்தைக் கண்டால் அவர் செத்தே விடுவார் என முன்னறிந்த தெய்வம் அவரை எடுத்துக் கொண்டது.

இன்று அவர் பெரும் கவிஞர்; இனி எந்தக் கவிஞனும் பிடிக்க முடியாத இடத்துக்கு சொந்தக்காரர், கம்பனுக்குப் பின் தமிழகம் கண்ட பெரும் மகா கவிஞன்;  எந்த உணர்ச்சியில் பாட்டெழுதுகின்றாரோ அதே உணர்ச்சியை அந்த‌ப் பாடலைக் கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாயச வித்தைக்கு சொந்தக்காரர்.

38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர். தமிழ் இலக்கியம் உள்ள காலம் மட்டும் பாரதியார் வாழ்வார். அப்படி ஒரு சூரியனைக் கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்கள் பெருமை அடையலாம்.

தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார். அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழராய் அஞ்சலி செலுத்துவோம்.

வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டப்பட்டார்.  சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதற்காக அவரது புகழ் திட்டமிட்டு மறைக்கபட்டது.

பாரதியைக் கொண்டாடினால் அவரது தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவையும் கொண்டாடவேண்டுமே என்ற தயக்கத்தில் அவர் திட்டமிட்டு மறைக்கப்பட்டார். காங்கிரஸுக்கு எதிரி என்பதால் அந்தக் கட்சியும் பாரதியாரை அதிகம் கண்டுகொள்ளவில்லை.

இப்பொழுது தமிழகத்தில் பாஜக குரல் எழும்புகின்றது. இந்த பாஜகவினராவது அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கட்டும்.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.  பாரதிக்கான மிகப் பெரும் அங்கீகாரம் அது. இந்த நிலை தொடர வேண்டும்,  

நல்லவர்களும் ஞானிகளும் வாழும் பொழுதை விட காலமான பின்னரே விஸ்வரூபம் எடுப்பார்கள்.

அந்த தென்னக ஞான வீணை நலங்கெட புழுதியில் எறியப்பட்டாலும், அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும்.  நாட்டிற்காகவும் இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீனை அது.

தமிழ்ச் சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். மாபெரும் தேசப் பற்றாளனுக்னேயே வீர வணக்கம்!

‘பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!”

என்பது அவரது வேண்டுகோள். அவரது குரலுக்கு தேசாபிமானியாய் செவிசாய்ப்பதே அந்த தேசப்பித்து பிடித்த ஞானச்சித்தனுக்கு செய்யும் மாபெரும் அஞ்சலி.

வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

 

குறிப்பு:

திரு.
ஸ்டான்லி ராஜன், முகநூலில் தொடர்ந்து எழுதி வரும்m இளைஞர். 


No comments:

Post a Comment