16/09/2021

சின்னச் சங்கரன் கதை

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 18)
------------------------------------------------------------------------------

முதலாவது குட்டி யத்தியாயம்: 
படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை

நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடி தொடங்கிக் கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு, வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக்கொண்டு போவது வழக்கம்.

நவீன ஐரோப்பியக் கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போல கதையை நட்ட நடுவில் தொடங்குகிறார்கள். பிறகு போகப் போக கதாநாயகனுடைய பூர்வ விருத்தாந்தங்கள் தெரிந்து கொண்டே போகும்.

எங்கேனும் ஒரு காட்டில் ஒரு குளக்கரையில் ஒரு தனி மேடையில் இவன் தனது காதலியுடன் இருப்பான். இல்லாவிட்டால், யாரேனுமொரு சிநேகிதனுடன் இருப்பான். அப்போது கதையின் ஆரம்பங்களை எடுத்து விரிப்பான். இது அவர்களுடைய வழி.

நான் இக்கதையிலே மேற்படி இரண்டு வழிகளையும் கலந்து வேலை செய்யப் போகிறேன்.

சின்ன சங்கரன் - நம்முடைய கதாநாயகன் - விருத்தாந்தங்களை மாத்திரம் பூர்வத்திலிருந்து கிரமமாகவே சொல்லிவிட்டு, கதையில் வரும் மற்றவர்கள் விஷயத்தில் கொஞ்சம் ஐரோப்பிய வழியைத் தழுவிக்கொண்டு செல்லக் கருதுகிறேன். சர்வகலாநிதியாகிய சரஸ்வதி தேவி எனது நூலில் கடைக்கண் வைத்திடுக.

***
இரண்டாம் அத்தியாயம்
பிஞ்சிலே பழுத்தது.

சின்ன சங்கரன் பிஞ்சிலே பழுத்து விட்டான். நம்முடைய கதாநாயகனுடைய பெயர் அத்தனை நயமில்லையென்றும், எவரும் கவலையுறலாகாது. போகப்போக இந்தப் பெயர் மாறிக்கொண்டே போகும். கடைசியில் படிப்பவர்கள் பயப்படும்படி அத்தனை படாடோபமாக முடியும்படி ஏற்பாடு செய்கிறேன்.

சின்ன சங்கரன், சங்கரன், சங்கரய்யர், சங்கர நாராயணய்யர், சங்கரநாராயண பாரதியார் இத்யாதி இத்யாதி. 

சின்ன சங்கரன் கவுண்டனூர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே மூன்றாவது வகுப்பில் படிக்கிறான். அந்தக் காலத்தில் இதை  ‘மிடில் ஸ்கூல்’ என்பார்கள். பையனுக்கு வயது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றிருக்கும். இதற்குள் தமிழில் புலவராய் விட்டான்.

கவுண்டனூரில் ஜலம் குறைவு; பணம் குறைவு; நெல் விளைவு கிடையாது. வாழை, தென்னை, மா, பலா, இவையெல்லாம் வெகு துர்லபம்; பூக்கள் மிகவும் குறைவு; புலவர்களுக்கு மாத்திரம் குறைவில்லை. அந்தச் சரக்கு மலிவு.

தமிழில் சங்கரன் பல பல நுல்கள், பல பல காவியங்கள் படித்து முடித்திருந்தான். இவை பெரும்பாலும்  ‘சிங்கார’ ரஸம் மிகுந்திருப்பன. இந்த ஜாதிக் காவியங்கள்தான் சங்கரனுக்குப் பிடிக்கும்

கவுண்டனூர்ப் புலவர்கள் எல்லோருக்கும் இப்படியேதான். மன்மத விகாரத்தைப் புகழ்ந்து பேசியிருக்கும் நூல்களும் தனிப்பாடல்களும் அவ்வூரிலே வெகு சாதாரணம். சங்கரனுக்கும் அவை வெகு சாதராணமாயின.

 “பாஷகளிலே தமிழ் சிறந்தது. தமிழில் இருளப்ப நாயக்கன் காதல், செறுவூர்க்கோவை, பிச்சித் தேவன் உலா மடல் முதலிய காவியங்கள் நிகரற்ற பெருமையுடையன. இவற்றிலுள்ள சுவை உலகத்தில் வேறெதிலும் இல்லை”  என்பது சின்ன சங்கரனுடைய கொள்கை. சங்கரன் கொஞ்சம் குள்ளனாக இருந்தபடியால் பள்ளிக்கூடத்தில் மற்றப் பிள்ளைகள் அவனுக்கு ‘சின்ன சங்கரன்’ என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தென்பாண்டி நாட்டிலே, பொதிய மலைக்கு வடக்கே இருபது காத தூரத்தில் பூமி தேவிக்குத் திலகம் (வைத்து அது உலர்ந்து போயிருப்பது) போலக் கவுண்டபுரம் என்ற நகரம் திகழ்ச்சி பெற்றது. அதைத்தான் பாமர ஜனங்கள் கவுண்டனூர் என்பார்கள். இந்நகரத்தில் நமது கதை தொடங்கும் காலத்திலே மகா கீர்த்திமானாகிய ராமசாமிக் கவுண்டரவர்கள் அரசு செலுத்தி வந்தனர். வெளியூர்ப் பாமர ஜனங்கள் இவரை ‘ஜமீந்தார்’ என்பார்கள். கவுண்டபுரத்திலே இவருக்கு ‘மகாராஜா’ என்றும் பட்டம். கவுண்டரின் மூதாதைகளின் மீது பண்டைக் காலத்துப் புலவர்கள் பாடியிருக்கும் ‘இன்ப விஸ்தாரம்’ முதலிய நூல்களை அவ்வூர்ப் புலவர்களும், அவர்களைப் பின்பற்றி மற்ற ஜனங்களும் வேதம் போலக் கொண்டாடுவார்கள்.

ராமசாமிக் கவுண்டர் (இவருடைய முழுப் பெயரை பட்டங்கள் சகிதமாகப் பின்பு சொல்லுகிறேன்) தமிழில் அபிமானமுடையவராதலால், கவிதை பாடத் தெரிந்தவர்களுக்கு அவ்வூரில் மிகுந்த மதிப்புண்டு. சின்னச் சங்கரனுக்குப் பத்து வயது முதலாகவே கவி பாடும் தொழிலில் பழக்கம் உண்டாய் விட்டது. எப்போதும் ‘புலவர்’களுடனேதான் சகவாஸம். ஒத்த வயதுப் பிள்ளைகளுடன் இவன் சேர்ந்து விளையாடப் போவதில்லை.

எங்கேனும் மதன நூல்கள் வாசித்துப் பலர் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டால், இவனும் அங்கே போய் உட்கார்ந்து விடுவான்.

பள்ளிக்கூடத்துப் பாடங்களெல்லாம் கிருஷ்ணார்ப்பணந்தான். பூகோள சாஸ்திரம், கணக்கு, சுகவழி முதலிய எத்தனையோ பாடங்கள் கீழ் வகுப்புகளிலே இவனுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார்கள். ஒன்றிலும் இவன் கருத்தைச் செலுத்தவில்லை. இவனுக்கு எப்போதும் ஒரே சாஸ்திரம், ஒரே கணக்கு. ஒரே வழிதானுண்டு.

 “சாற்றுவதும் காமக்கலை, சாதிப்பதும்
போற்றுவதும் காமனடிப்போது”

கவுண்டனூர்ப் ‘புலவர்’ கூட்டத்திலே சங்கரன் ஒருவனாகிவிட்டான். சுருக்கம் அவ்வளவுதான். இவன் பாட்டுக்களில் சில சில பிழைகள் இருந்த போதிலும் இவனுடைய சிறு வயதைக் கருதி அப்பிழைகளை யாரும் கவனிப்பதில்லை. சுவை மிகுதியைக் கருதி இவனை மிதமிஞ்சிப் புகழ்வோர் பலராயினர். ஒரு பாட்டில் எத்தனைக் கெத்தனை அசுத்தமான வார்த்தைகள் சேர்கின்றனவோ, அத்தனைக்கத்தனை சுவை யதிகமென்பது கவுண்டனூர்ப் புலவர்களுடைய முடிவு.

எனவே, பையன் நாவும் கையும் சிறிதேனும் கூசாமல் காமுகர்களுக்கு வேண்டிய பதங்களைத் தாராளமாகப் பொழிந்து பாடல்கள் செய்யலானான். சங்கரனுடைய பந்துக்களுக்கெல்லாம் இந்த விஷயத்தில் பரமானந்தம்.

இவனுக்கு மூன்று வயதிலேயே தாய் இறந்து போய்விட்டாள். தகப்பனார் பெயர் சுப்பிரமணிய ஐயர். அவர் ராமசாமிக் கவுண்டருடைய ஆப்தர்களிலே ஒருவர். இங்கிலீஷ் படித்துப் பழைய காலத்துப் பரீட்க்ஷை ஏதோ தேறி சர்க்கார் உத்தியோகத்துக்குப் போகாமல் வியாபாரஞ் செய்து சிறிது பணம் தேடி வைத்து விட்டார். இவருக்கு இரண்டாந்தாரம் விவாகமாய் விட்டது.

எனவே இவனது தாயைப் பெற்ற பாட்டனாரும், பாட்டியும் சங்கரனைப் பிராணனாகவே நினைத்து விட்டார்கள். சங்கரன் விளையாடுவதற்கு வேண்டுமென்று கேட்டால் தாத்தா தாம் பூஜை செய்யும் சிவலிங்கத்தைக் கூடக் கொடுத்து விடுவார். அத்தனை செல்லம். ஆனால் சிவலிங்கத்தைப் பற்றி யாதொரு விதமான பயத்துக்கும் இடமில்லை. பையன் தான் விளையாட்டில் புத்தி செலுத்தும் வழக்கமில்லையே!

பையனுடைய கையும் காலும் வாழைத்தண்டைப் போலிருக்கும். பிராணசக்தி வெகு சொற்பம். நெஞ்சு அரையே மாகாணி அடி அகலம். கண்கள் ருதுவாகி நோய் பிடித்திருக்கும் கன்னிகளின் கண்களைப் போலிருக்கும். முதுகிலே கூன். ஆணாயினும், பெண்ணாயினும் ஏதேனும் ஓர் புதிய முகத்தைப் பார்த்தால் கூச்சப்படுவான். தற்காலத்தில் நமது தேசத்துப் பள்ளிக் கூடங்களிலேயே பிள்ளைகளைப் பெண்களாக்கி விடும் திறமை உபாத்திமார்களுக்கு அதிகமுண்டு. அத்துடன் ‘கவிதையுஞ்’ சேர்ந்து விட்டது - கவுண்டனூர்க் கவிதை. பையனுக்கு ஜீவதாது மிகவும் குறைந்து பொய்ம்மை நிறைந்த சித்த சலனங்கள் மிகுதிப்பட்டு விட்டன.

இந்த வினோதமான பிள்ளையைத் தாத்தாவும் பாட்டியும் ஏதுமறியாத வெறும் பொம்மை போலப் பாராட்டினார்கள். ‘பால் மணம் மாறாத குழந்தை’ என்பது அவர்களுடைய கருத்து. அவனுக்கென்று தனியாக ஒரு சுபாவமும், தனி சமஸ்காரங்களும் ஏற்பட்டதாகவே அவர்களுக்கு நினைப்பில்லை. அவனுடைய புலமை ஈசனால் கொடுகப்பட்ட வரம் என்றெண்ணினார்கள். ஏதுமறியாத குழந்தைக்கு இப்படிக் கல்வி ஏற்பட்ட ஆச்சரியத்தால் அவர்களுக்கு அளவிறந்த மகிழ்ச்சி யுண்டாயிறே யல்லாது அவன் ‘பாப்பா’ என்ற எண்ணம் மாறவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்கொரு முறை பாட்டி அவனுக்குச் ‘சாந்தி’ கழிப்பாள். சுண்ணாம்புக்கும் மஞ்சளுக்கும் செலவதிகம் - சங்கரனுக்குக் ‘கண்’ பட்டது கழியும் பொருட்டாக.

தகப்பனார் இவனைப்  ‘பையன்’ என்று பேசுவார். இவன் முற்றிப்போன விஷயம் அவருக்குத் தெரியாது. இவனுடைய ‘கீர்த்தி’ புலவர்களுக்குள்ளே பரவி கவுண்டரவர்கள் செவி வரை எட்டிப் போயிற்று. இதிலிருந்து சுப்பிரமணிய அய்யருக்கு மிகுந்த சந்தோஷம்.

ஆனால் பள்ளிக்கூடத்துப் பாடங்களை நேரே படிப்பதில்லை யென்பதில் கொஞ்சம் வருத்தமுண்டு. இவனைப் பெரிய பரீக்ஷைகள் தேறும்படி செய்து சீமைக்கனுப்பி ஜில்லா கலெக்டர் வேலைக்குத் தயார் செய்ய வேண்டுமென்பது அவருடைய ஆசை. அதற்கு இவர் புலவர்களிடம் சகவாஸம் செய்வதுதான் பெரிய தடை யென்பது அவர் புத்தியில் தட்டவில்லை.

இவனுடைய மாமனாகிய கல்யாணசுந்தரம் முதலிய சில துஷ்டப் பையன்களுடன் சேர்ந்து ‘விளையாடிக்’ கெட்டுப் போகிறானென்றும், தாய் வீட்டார் கொடுக்கும் செல்லத்தால் தீங்கு உண்டாகிறதென்றும், இவ்விரண்டையும் கூடியவரை குறைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் அவர் தீர்மானஞ் செய்தார்.

இனி, இவனுடன் ஒத்த வயதுள்ள பிள்ளைகள் ஆரம்பத்திலே சங்கரனை இகழ்ச்சியில் வைத்திருந்தார்கள். பிறகு, நாளடைவில் சங்கரன் ஒரு  ‘வித்துவான்’ ஆகிவிட்டதைக் கண்டவுடனே அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் அவனிடம் ஒருவிதமான பயமும் வியப்பும் உண்டாயின. ‘இவன் நோஞ்சப் பயல்; ஒரு இழவுக்கும் உதவ மாட்டான்’ என்று முன்போல வாய் திறந்து சொல்வதில்லை. மனதிற்குள் அவ்வெண்ணத்தை அடக்கி விட்டார்கள்.

பள்ளிக்கூடத்துக்குப் போனால் சங்கரனை உபாத்திமார், “புலவரே! பலகையின் மேல் ஏறி நில்லும்” என்பார்கள்.

பாடங்கள் நேரே சொல்லாதது பற்றி நமது சின்னப் புலவர் பலகையின் மேல் ஏறி நின்றுகொண்டு மனதிற்குள்ளே எதுகைகளடுக்கிக் கொண்டிருப்பார்.

உபாத்தியாயரும் கரும்பலகை மேல் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்.

இவன்,  “புலவன், அலவன், வலவன், பலகை, அலகை, உலகை
நில், நெல், வில், பல், சொல், அல், எல், கல், மல், வெல், வல்
கணக்கு, வணக்கு, இணக்கு” என்று தனக்குள்ளே கட்டிக் கொண்டு போவான்.

வாத்தியார் 002853...... என்று கணக்குப் போட்டு முடிவு கட்டிக் கொண்டு போகையில், சங்கரனை நோக்கி,  “சங்கரன்! புள்ளியை எந்த இலக்கத்தின் மேல் போடுகிறது? சொல் பார்ப்போம்” என்பார்.

இவன் மறுமொழி சொல்லாமல் பித்துக் கொண்டவன் போலிருப்பான். அவர்,  “என்னடா, விழிக்கிறாய்?” என்று கேட்டுத் திட்டிய பிறகு அடுத்த பையனிடம் வினவுவார்.

அடுத்தவன் ஏது சொல்கிறான் என்பதைகூடக் கவனியாமல் இவன் மனதிற்குள்,  “விழி, இழி, கிழி, பிழி, வழி, கழி, அழி, பழி, மொழி, ஒழி
புள்ளி, உள்ளி, பள்ளி, அள்ளி, கள்ளி, தெள்ளி, வெள்ளி” என்று அடுக்கிக் கொண்டே போவான்.

தமிழ்ப் பாடம் வரும்போது மாத்திரம் கொஞ்சம் கவனிப்பான். அதிற்கூட இலக்கணம் தடவும்.

இவருடைய தகப்பனாரின் மதிப்பையும் ராமசாமி கவுண்டர் இவனிடம் தயவு பாராட்டுகிறார் என்பதையும் உத்தேசித்து உபாத்திமார் இவனை அதிகமாக அடித்துக் கொல்வதில்லை.  “இவன் கடைசிவரை உருப்பட மாட்டான்” என்பது அவர்களுடைய முடிவு.

ஊரிலுள்ள பெண் குட்டிகளெல்லாம் “சங்கரன் அப்பாவி” என்று சொல்லும். இவ்வாறு அவரவர் தத்தமக்கு ஒத்தபடி நினைத்துக் கொண்டிருக்கையில், சங்கரன் பிரத்யேகமாக ஒரு வகையில் முதிர்ந்து வருகிறான். எல்லார் விஷயமும் இப்படியேதான். ஒருவனுடைய உள்ளியல்பை மற்றொருவன் முழுதும் அறிந்து கொள்ளுதல் எக்காலத்திலும் சாத்தியம் இல்லை. அவனவனுடைய இயல்பு அவனவனுக்கே தெளிவாகத் தெரியாது. பிறனுக்கெப்படி விளங்கும்?

பிள்ளைகளையும் பெண்களையும் பற்றித் தாய் தகப்பன்மார் கொண்டிருக்கும் எண்ணம் பெரும்பாலும் தப்பாகவே யிருக்கும். குழந்தைகளின் அறிவும் இயல்பும் எவ்வளவு சீக்கிரத்தில் மாறிச் செல்லுகின்றன வென்பதைப் பெற்றோர் அறிவதில்லை.

‘பாப்பா பாப்பா’ என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பதினாறு, பதினேழு வயதாகும்போது,  ‘அப் பாப்பா, அப்பப்பா’ என்கிறார்கள்.

***
மூன்றாம் அத்தியாயம் 
ராமசாமிக் கவுண்டர் திருச்சபை 

மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூரதிப ராமசாமிக் கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கருநிறம். நரைபாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத் தலையில் தவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் குழிந்த கண்கள். இமைப் புறங்களில் ‘காக்கைக்கால்’ அடையாளங்கள். பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும், புகையிலைச் சாற்றினாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகாரமான உடல். பிள்ளையார் வயிறு. ஒருவிதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள். பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு ஒரு காளாஞ்சி. ஒரு அடப்பைக்காரன் - இதுதான் ராமசாமிக் கவுண்டர்.

இவர் காலையில் எழுந்தால் இரவில் நித்திரை போகும் வரை செய்யும் தினசரிக் காரியங்கள் பின்வருமாறு:

காலை எட்டு அல்லது எட்டரை மணி வேளைக்கு எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டு ஒன்பது மணியானவுடன் பழையது சாப்பிட உட்காருவார். பழையதிற்குத் தொட்டுக்கொள்ள தமது அரண்மனையிலுள்ள கறிவகை போதாதென்று வெளியே பல வீடுகளிலிருந்து பழங்கறிகள் கொண்டு வரச் சொல்லி வெகு ரஸமாக உண்பார். (அதாவது காலை ‘லேகியம்’ முடிந்த பிறகு.. இந்த அபினி லேகியம் உருட்டிப் போட்டுக் கொள்ளாமல் ஒரு காரியங்கூடத் தொடங்க மாட்டார். பார்ப்பார் எடுத்ததற்கெல்லாம் ஆசமனம் செய்யத் தவறாதிருப்பது போல) பழையது முடிந்தவுடன் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபா மண்டபத்தருகேயுள்ள ஒரு கூடத்தில் சாய்வு நாற்காலியின் மீது வந்து படுத்துக் கொள்வார். ஒருவன் கால்களிரண்டையும் பிடித்துக் கொண்டிருப்பான். இவர் வெற்றிலைப் போட்டுக் காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார்.

எதிரே அதாவது உத்தியோகஸ்தர், வேலையாட்கள், கவுண்டனூர்ப் பிரபுக்கள் இவர்களில் ஒருவன் வந்து கதை, புரளி, கோள் வார்த்தை, ஊர்வம்பு, ராஜாங்க விவகாரங்கள் - ஏதேனும் பேசிக் கொண்டிருப்பான். சில நாட்களிலே வெளி முற்றத்தில் கோழிச்சண்டை நடக்கும்.

வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான். அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள். அரண்மனைச் சேவல் எதிரியை நல்ல அடிகள் அடிக்கும்போது, ஜமீன்தாரவர்கள் நிஷ்பக்ஷபாதமாக இரு பக்கத்துக் கோழிகளின் தாய், பாட்டி அக்காள், தங்கை எல்லோரையும் வாய் குளிர வைத்து சந்தோஷம் பாராட்டுவார். களத்திலே ஆரவாரமும் கூக்குரலும், நீச பாஷையும் பொறுக்க முடியாமலிருக்கும்.

பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம். அங்ஙனம் முடியும்போது வந்த கவுண்டன் தனது வெற்றிச் சேவலை ராமசாமிக் கவுண்டரவர்கள் திருவடியருகே வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவான்.

இவர் அச்சேவலைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு நல்ல பாகை, உத்தரீயம், மோதிரம், ஏதேனும் சன்மானம் பண்ணி அனுப்பி விடுவார். பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச் ‘சமஸ்தான வித்வானாக’ வைப்பார்கள். அடுத்த சண்டையில் மற்றொன்று வரும். எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனுர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது. ஜமீன் போஷணையிலேயே அந்த நயமுண்டாகிறது.

பகல் ஒன்றரை மணிக்கு ஸ்நானம் தொடங்கும். வெந்நீரிலேதான் ஸ்நானம் செய்வார். ராமசாமிக் கவுண்டர் ஸ்நானஞ் செய்வதென்றால், அது சாதாரணக் காரியமன்று. ஜலத்தையெடுத்து ஊற்றுவதற்கு இரண்டு பேர்; உடம்பு தேய்க்க இரண்டு பேர். தலை துவட்ட ஒருவன். உடம்பு துடைக்க ஒருவன். வேறு வேஷ்டி கொண்டு அரையில் உடுத்த ஒருவன். நேபாளத்து ராஜாவின் பிரேதத்துக்குக் கூட இந்த உபசாரம் நடக்காது.

ஸ்நானம் முடிந்தவுடனே பூஜை. ஜமீன்தார் பூக்களை வாரி வாரி முன்னே வைத்திருக்கும் விக்கிரகத்தின் மேல் வீசுவார். பூஜா காலத்தில் ஸ்தல பாகவதர்கள் வந்து பாடுவார்கள். சில சமயங்களில் சங்கீத விஷயமாக சம்பாஷணைகள் நடப்பதுண்டு. ஜமீன்தார் தாம் ‘கவனம்’ செய்த கீர்த்தனைகளைப் பாகவதர்களிடம் பாடிக் காட்டுவார். (சங்கீதத்திலும், சாஹித்யத்திலும் ராமசாமிக் கவுண்டர் புலி. அந்தச் சங்கதி ஞாபகமிருக்கட்டும்)

ஒரு சமயம் சமஸ்தான வித்வான் – அண்ணாதுரை ஐயர், தோடி நாராயணய்யங்கார், பல்லவி வேதாசலக் குருக்கள் முதலிய வித்வான்களனைவரும் வந்து கூடியிருந்தனர். அண்ணாதுரை அய்யரை நோக்கி ஜமீன்தார், “நான் அடாணாவில்,  ‘மானே யங்கே போனவகை என்னடி’  என்ற வர்ண மெட்டிலே பரமசிவன் மேல் ஒரு சாஹித்தியம் பார்த்திருக்கிறேன். (ஒரு கீர்த்தனை செய்திருக்கிறேன் என்று அர்த்தம்). அதை நீங்கள் கேட்கவில்லையே” என்றார்.

“உத்தரவாகட்டும்” என்றார் பாகவதர். (சொல்லு கேட்போம் என்று அர்த்தம்)

உடனே ஜமீன்தார் ஜலதோஷம் பிடித்த பன்னிரெண்டு குயில்கள் சேர்ந்து சுருதியும், லயமும் ஒன்றுபடாமல் பாடுவது போன்ற தமது திவ்விய சாரீரத்தை எடுத்துப் பின்வரும் கிர்த்தனையைப் பாடலாயினர். ஒரு பாகவதர் தம்பூரில் சுருதி மீட்டினார். ஜமீன்தார் அந்தச் சுருதியை லக்ஷ்யம் பண்ணவில்லை.

ராகம்: அடாணா தாளம்: ரூபகம்.

(மானே யங்கே போனவகை யென்னடி? என்ற வர்ண மெட்டு)

பல்லவி

மானே கையில் தானே தரித்தானே – ஒரு
மாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே (மானே)

(பல்லவியில் முதல் வரி பாடி முடிப்பதற்குள்ளாகவே அண்ணாதுரை பாகவதர் “பேஷான கீர்த்தனம்!” பேஷான கீர்த்தனம்! சபாஷ் சபாஷ்!” என்றார்.

“ஒரு வரி பாடுமுன்னே இது நல்ல கீர்த்தனையென்று எப்படித் தெரிந்தது? என்று ஜமீன்தார் கேட்டார்.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் பார்த்தால் போதாதா?” என்றார் பாகவதர்.

ஜமீன்தாரும் இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டுச் சந்தோஷ மிகுந்தவராய் மேலே பாடலாயினர்.)

பல்லவி

மானே கையில் தானே தரித்தானே – ஒரு
மாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே (மானே)

அனுபல்லவி

கோனே சிவனே குருவே யருவே மெய்ஞ்
ஞான பான மோனமான நாதா தாமரைப் பாதா (மானே)

(“அனுபல்லவியில் இரண்டாம் அடியில் ‘முடுகு’ வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா” என்று ஜமீன்தார் கேட்க, பாகவதர்களெல்லோரும் “பேஷ், பேஷ், பேஷ்” என்றனர்.)

சரணம்

எந்தனை மோக்ஷ கதியினில் சேர்த்திட
    இன்னமு மாகாதா? உன்னைச்
சொந்தக் குல தெய்வமென்று நித் தந்துதி
    சொன்னது போதாதா?
விந்தை யுடனிங்கு வந்தென்னை யாளவும்
    மெத்த மெத்த வாதா?
வந்தனை தந்துனைப் போற்றிடும் ராமசா
    மிக் கவுண்டராஜ – போஜனுக் கருள் செய்யும் பாதா (மானே)

“மிக்கவுண்ட ராஜபோஜநுக் கருள் செய் யும்பாதா!”

என்று கடைசியடியை இரண்டாம் முறை திருப்பிப் பாடி ராமசாமிக் கவுண்டர் மிகவும் திருப்தியுடன், தியாகையர் ‘நகுமோமு’ கீர்த்தனத்தை ஒரு சிஷ்யனிடம் முதல் முறை பாடிக் காட்டிய பிறகு புன்சிரிப்புச் சிரிப்பது போல நகைத்தருளினார்.

பாகவதர்களெல்லோரும் சபாஷ் சொல்லிக் கொட்டி விட்டார்கள்.

பிறகு அண்ணாதுரை பாகவதர், “மகாராஜா இந்தக் கீர்த்தனத்தை எழுதிக் கொடுத்தால், நான் வீட்டிலே போய்ச் சிட்டை ஸ்வரங்கள் சேர்த்துப் பாட்டையும் நன்றாகப் பாடம் செய்து கொண்டு வருவேன். இதை நித்தியம் பூஜா காலத்தில் பாட வேண்டுமென்று என்னுடைய அபிப்பிராயம்” என்றார்.

“அதுக்கென்ன? செய்யுங்கள்!” என்றார் ஜமீன்தார்.

பூஜை முடிந்தவுடனே போஜனம். பழையது தின்ன ஊரார் வீட்டுக் கறிகளெல்லாம் தருவித்த மனிதன் பகற்சோற்றுக்கு ஊரைச் சும்மா விடுவானா? கிருஷ்ணய்யங்கார் வீட்டிலிருந்து ‘உப்புச்சாறு’, கேசவய்யர் வீட்டிலிருந்து அவியல், குமாரசாமிப் பிள்ளை வீட்டுக் கீரைச் சுண்டல், இன்னும் பலர் வீட்டிலிருந்து பலவித மாமிசப் பக்குவங்கள். இவ்வளவு கோலாகலத்துடன் ஒரு மட்டில் போஜனம் முடிவு பெறும்.

ராமசாமிக் கவுண்டர், பார்ப்பார் சொல்லுவது போல, நல்ல  ‘போஜனப் பிரியன்’. மெலிந்த சரீரமுடைய ஒரு சிநேகிதனுக்கு அவர் பின்வருமாறு பிரசங்கம் செய்ததாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன.

”இதோ பாரு ரங்கா, நீயேன் மெலிஞ்சு மெலிஞ்சு போறே (போகிறாய்) தெரியுமா? சரியாய்ச் சாப்பிடவில்லை. சாப்பாடு சரியானபடி செல்ல ஒரு வழி சொல்கிறேன் கேளு! ஒரு கை நிறையச் சோறெடுத்தால் அதுதான் ஒரு கவளம். அப்படி நீ எத்தனை கவளம் தின்பே? எட்டுக் கவளம். ரொம்ப அதிசயமாய்ப் போனால் ஒன்பது கவளம் வைச்சுக்கோ, அவ்வளவுதான். சாஸ்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட வேணும். அதற்கு நீ என்ன செய்ய வேண்டு மென்றால் இன்றைக்கு ஒன்பது கவளம் சாப்பிடுகிறாயா? நாளைக்குப் பத்துக் கவளமாக்க வேணும். நாளன்றைக்குப் பதினொன்றாக்க வேணும். நாலாம் நாள் பன்னிரண்டு. இப்படி நாள்தோறும் ஒவ்வொன்றாக அதிகப்படுத்திக் கொண்டே போய் முப்பத்திரண்டாவதோடு நிறுத்திவிட வேணும். பிறகு ஒருபோதும் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குறையவே செய்யலாகாது.”

இந்த உபதேசம், மெலிந்த உடல் கொண்ட ரங்கனுக்கு எவ்வளவு பயன்பட்டதோ, அதனை அறிய மாட்டோம். ஜமீன்தாரவர்களுக்கு இந்த அநுஷ்டானம் சரிப்பட்டு வந்தது. அவர் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குறைவாக ஒருபோதும் சாப்பிடுவதில்லை. ஒருபோதும் மெலிவதுமில்லை.

பகல் போஜனம் முடிந்தவுடனே ஜமீன்தார் நித்திரை செய்யத் தொடங்குவார். அரண்மனைக்கு வெளியேகூடச் சில சமயங்களில் சத்தங் கேட்கும்படியாகக் குறட்டை விட்டுத் தூங்குவார். மாலை ஐந்து மணிக்கு விழிப்பார். விழித்தவுடன் ஆறாவது அல்லது ஏழாவது முறை “ஆசனம்”. கொஞ்சம் பலகாரம் சாப்பிடுவார்.

உடனே ஐரோப்பிய உடை தரித்துக் கொண்டு கச்சேரிக்குப் போவார். அங்கே பலர் பலவிதமான விண்ணப்பங்கள் கொண்டு கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிக் கொள்வார். அதாவது பக்கத்தில் நிற்கும் குமாஸ்தா அவற்றை வாங்கி வைக்கும்போது இவர் பார்த்துக் கொண்டிருப்பார்.

விண்ணப்பங்கள் வாங்கி முடித்த பிறகு காகிதங்களில் கையெழுத்துப் போடும் காரியம் தொடங்கும். பழைய மனுக்கள், திவான் கச்சேரிக் கடிதங்கள், இவற்றின் மேல் தனதிஷ்டப்படி எல்லாம் உத்தரவுகளெழுதி வைத்திருப்பான். அவற்றின் கீழ் வரிசையாகக் கையெழுத்துப் போட்டுக் கொண்டே வர வேண்டும். இன்னின்ன விவகாரங்களைப் பற்றிய காகிதங்களின் மேல் இன்னின்ன உத்தரவுகள் எழுதப்பட்டிருக்கின்றன என்ற சமாச்சாரமே ‘லேகிய’க் கவுண்டருக்குத் தெரியாது.

ஒரு சமயம் வழக்கப்படி உத்தரவுகள் தயார் பண்ணிக்கொண்டு வரும் குமாஸ்தா ஊரிலில்லை. அவன் இடத்திற்கு மற்றொருவன் வந்திருந்தான். ஜமீன்தார் தாமே மனுதார்களுக்கு உத்தரவு எழுதுவாரென்று அவன் நினைத்து மனுக் காகிதங்களை அப்படியே மேஜை மேல் வைத்து விட்டான். ஜமீன்தாரும் விட்டுக் கொடாதபடி அந்த மனுக்களை ஒவ்வொன்றாகத் திருப்பிப் பார்த்து மேலே உத்தரவுகள் எழுதத் தொடங்கினார்.

கவுண்டபுரத்துக்கு மேலே இரண்டு நாழிகை தூரத்திலுள்ள நடுக்கனூர் கிராமத்திலிருந்து வில்வபதிச்செட்டி என்ற ஒரு கிழவன் பின்வருமாறு மனுக் கொடுத்திருந்தான்.

“பிதா, மகாராஜா காலத்தில் நான் மிகவும் ஊழியம் செய்திருக்கிறேன். இப்போது பலவிதக் கஷ்டங்களால் நான் ஏழையாய்ப் போய், மக்களையும் சாகக் கொடுத்துவிட்டுத் தள்ளாத காலத்தில் சோற்றுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மகாராஜா அவர்கள் சமூகத்தில் கிருபை செய்து எனக்கு ஜீவனத்துக்கு ஏதேனும் மனோவர்த்திச் செலவிலே கொடுக்குபடி பிரார்த்திக்கிறேன்.”

இந்த மனுவை ஜமீன்தார் தமது குமாஸ்தாவின் உதவியினால் வாசித்து முடித்துவிட்டுப் பிறகு காகிதத்தின் புறத்திலே அடியிற் கண்டபடி உத்தரவெழுதி விட்டார்.

“தாசில்தார் குமரப் பிள்ளைக்கு வில்வபதிச் செட்டி பேருக்கு நிலம் விட்டு விடவும்”. இதை எழுதி நீளமாக ராமசாமிக் கவுண்டர் என்று கையெழுத்துப் போட்டுத் தீர்த்து விட்டார்.

இப்படிப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பித்து ஜமீன்தார் தமது கச்சேரியை முடித்து விட்டார். மறுநாள் இந்த வில்வபதிச் செட்டியின் மனு திவான் கச்சேரிக்கு வந்து சேர்ந்தது. கவுண்டருடைய உத்தரவைத் திவான் படித்துப் பார்த்தார். தாசில்தார் குமரப் பிள்ளையின் அதிகாரத்துக்குட்பட்ட பூமியில் மேற்படி செட்டிக்கு ஜீவனாம்சத்துக்கு நிலம் விட வேண்டுமென்று கவுண்டரவர்களுடைய திருவுள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்து கொண்டார்.

ஆனால், எவ்வளவு நிலம், எந்தவிதமான நிலம், என்ன நிபந்தனைகள் – முதலிய விவரங்களொன்றும் தெரியவில்லை. உத்தரவை அடித்து விட்டுத் திவான் வேறு மாதிரி எழுதிக் கொண்டு வந்து ரகசியமாகக் கவுண்டரின் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். கடைசியில் வில்வபதிச் செட்டிக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. உத்தரவில் உள்ள பிழைகளை திவான் எடுத்துக் காட்டியபோது ஜமீன்தார் குற்றம் முழுவதையும் குமாஸ்தாவின் தலையிலே தூக்கிப் போட்டு விட்டார்.

“நான் மனுவை வாசித்துப் பார்க்கவேயில்லை. வேறே பெரிய விவகாரமொன்றிலே புத்தியைச் செலுத்திக் கொண்டிருந்தேன். இந்த மனு என்ன விஷயம் என்று குமாஸ்தாவைக் கேட்டேன். ‘செட்டி மிகவும் ஏழை; அவனுக்கு உதவி செய்ய வேண்டியதுதான்’ என்று குமாஸ்தா சொன்னான். தங்களுடைய அபிப்பிராயந் தெரிந்துதான் சொல்கிறான் என்று நினைத்து உத்தரவு எழுதி விட்டேன். மனோவர்த்தியிலே பணத்துக்குத்தான் திண்டாடுதே! இதிலே இந்த இழவையும் கொண்டு போய்ச் சேர்ப்பதெப்படி? இதை யோசனை செய்துதான் குமரப்பிள்ளை இலாகாவில் நிலம் விட்டுக் கொடுக்கும்படி எழுதினேன். எனக்கு அந்த வில்வபதிச் செட்டியைப் போதுமானபடி தெரியும். அவர் சுத்த அயோக்கியப் பயல். பட்டினி கிடந்து செத்தால் சாகட்டுமே! நமக்கென்ன!” (என்று சொல்லிவிட்டார்).

சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியில் ஏறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்து கொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும், க்ஷேத்திர மகாத்மியமும் வாய்ந்த ஊராயினும், அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்து விடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் ‘வாங்கா’ ஊதுவார்கள். இந்த ‘வாங்கா’ என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். பறையர் இதனை ஊதிக்கொண்டு ஜமீன்தாரவர்களின் வண்டி உடனே குடல் தெறிக்க ஓடுவார்கள்.

சில தினங்களில் பல்லக்குச் சவாரி நடக்கும் இன்னும் சில சமயங்களில் ஜமீன்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ‘ஆட்டு வண்டி’ சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக் கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறை கொண்ட ஜமீன்தார் ஏறிக்கொண்டு தாமே பயமில்லாமல் ஓட்டுவார்.

குதிரைகள் துஷ்ட ஜந்துக்கள். ஒரு சமயமில்லா விட்டாலும் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்தச் சந்தேகமில்லை யல்லவா? இன்னும் சில சமயங்களில் ஜமீன்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்ன குதிரை மட்டம் – ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது – தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி இட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால் வாசி மூச்சு நின்று போகும். பிரக்கினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.

எனினும் இவருக்குப் பயந் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும், குதிரையை எப்படியாவது நகர்த்திக் கொண்டு போக வேண்டுமென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீன்தார் கடிவாளத்தை ஒரு கையிலும், பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார். வாங்காச் சத்தத்துக்குக் குறைவிராது. இந்த விவகாரம் ஒரு நாள் நடந்தால், பிறகு மூன்று நான்கு வருஷங்களுக்கு இதை நினைக்க மாட்டார். அதற்கப்பால் மனுஷன் க்ஷத்திரியனல்லவா? பயந் தெளிந்து பின்னொரு முறை நடக்கும்.

இவர் இப்படிக் கோழையாக இருப்பதைக் கருதி யாரும் நகைக்கலாகாது. அர்ஜூனனும், வீமனும், அபிமன்யுவும் தோன்றிய சந்திர வம்சத்தில் நேரே பிறந்ததாக இதிகாசங்களிலே கோஷிக்கப்படுகின்ற கவுண்டனூர் ராஜ குலத்தில் இவர் சேர்ந்திருந்தும், இவ்வாறு கொஞ்சம் அதைரியப் படுவதற்குச் சில ஆந்த காரணங்களுண்டு. இவருக்குப் புத்திர பாக்கியம் இல்லை. அதற்காகப் பலவித ஹோமங்கள், பூஜைகள், கிரக சாந்திகள், தீர்த்த யாத்திரைகள், யந்திர ஸ்தாபனங்கள் முதலியன செய்து கொண்டு வருகிறார். இந்த அவசரத்திலே குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிர் போய்விடுமானால் பிறகு இவருடைய சக்ராதிபத்யத்துக்கு ஒரு மகன் பிறக்க இடமே இல்லாமல் போய் விடுமல்லவா?

எத்தனை பேர் குதிரையிலிருந்து விழுந்து செத்திருக்கிறார்கள். அதையும் கவனிக்க வேண்டாமா? சில மாதங்களுக்கு முன்புகூட ருஷியா தேசத்தில் ஒரு குதிரைப் பந்தயத்தில் ஒருவன் வேலி தாண்டி விழுந்து உயிர் போய்விட்டதாகச்  ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதியிருந்த விஷயத்தை இவரிடம் யாரோ வந்து சொல்ல வில்லையா? நாலு காரியத்தையும் யோசனை செய்துதானே நடக்க வேண்டும். ஒரு தரம் போன உயிர் திரும்பி வருமா?

சாயங்காலத்துச் சவாரி முடிந்தவுடனே கவுண்டரவர்கள் அரண்மனைக்குள் வருவார். நாலைந்து பேராக இருந்து இவருடைய ஐரோப்பிய உடுப்புகளைக் கழற்றி யெறிந்து விட்டு வேஷ்டி உடுத்துவார்கள். உத்தரீயத்தைத் தாமாகவே வாங்கி மேலே போட்டுக் கொள்வார். மனுஷன் வேலைக்கு மட்டும் பின்வாங்க மாட்டார். அது ஒரு குணம் இவரிடத்தில். பிறகு கைகால் சுத்தி செய்து கொண்டு லேகியம் சாப்பிட்ட பிறகு சாய்வு நாற்காலிக்கு வந்து விடுவார். அப்பால் வெற்றிலை, புகையிலை, ஊர்வம்பு, கதை முதலியன.

இரவு சுமார் பத்து மணியாகும்போது, ஜமீன்தாருக்கு ஒருவாறு புகையிலைச் சாறும் லேகிய வெறியுமாகச் சேர்ந்து தலையை மயக்கிச் சாய்ந்தபடி, கதை கேட்கக்கூட முடியாதவாறு செய்துவிடும். வம்பு பேசும் ‘காரியஸ்தர்களுக்கும்’ நின்று காலோய்ந்து போய்விடும். எனவே கவுண்டர் எழுந்து கைகால் சுத்தி செய்வித்துக் கொண்டு ஸந்தியாவந்தனம் செய்து முடித்து, லேகியம் தின்று விட்டு அந்தப்புரத்திலே போய்ச் சாய்ந்தபடி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட்டு உடனே நித்திரைக்குப் போய்விடுவார்.

ஜமீன்தாரவர்களுக்கு ஐந்து மனைவிகளுண்டு. ஆனால் ஜமீன்தாரவர்களோ அர்ஜுனனுக்கு நிகரானவர் – விராட நகரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு – அதாவது, மகாராஜ ராஜ பூஜித மகாராஜ ராஜஸ்ரீ மகாராஜ மார்த்தாண்ட சண்ட பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்ட நகராதிப ராமசாமிக் கவுண்டரவர்கள் பரிபூரண நபும்ஸகனென்று தாத்பரியம்.

இவருடைய தினசரிக் காரியம் ஒருவாறு சொல்லி முடித்தோம். இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பம் வாய்க்குமிடத்து அப்போதப்போது சொல்லுகிறோம்.

இவ்வத்தியாயத்தின் மகுடத்திலே குறிப்பிட்டபடி இவருடைய சபையைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் விவரித்துச் சொல்லப் போகிறோம். நம்முடைய கதாநாயகனாகிய சங்கரன் இந்தச் சபையைச் சேர வேண்டியவனாக இருக்கிற படியால், ராமசாமிக் கவுண்டர் தமிழிலும் சங்கீதத்திலும், வித்வானென்று முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவருடைய சபையிலுள்ள பண்டிதர்களுடைய பெயர், இயல், சிறப்பு முதலியவற்றைச் சிறிது விஸ்தரிக்கின்றோம்.

வித்துவான் அண்ணாதுரை ஐயர், தர்காலங்கார சர்வ சாஸ்திர சாகர உபய வேதாந்த பிரவர்த்தன, நிவர்த்தன, சம்வர்த்தன காரிய பெருங்குன்றம் கிடாம்பியாசான் ஆம்ரோதனா சார்யம், முத்தமிழ்ச் சிங்கக் குட்டி முத்துக் கருப்பண பாவலர், தோடி நாராயணய்யங்கார், முடுகு பல்லவி வேதாசலக் குருக்கள், கம்பராமாயணப் பிரசங்கம், ஆறுமுகக் கவுண்டர், வேலக் கவுண்டர், மூங்கிலறுப்பு ராமச்சந்திர பாகவதர், அறுபத்து நாலக்ஷரப் பிச்சாண்டி பாகவதர், பரமபத தூஷணஸ்மத பூஷண சர்வமத பாஷான பூர்ண பரமசிவனவர்கள், தொல்காப்பியம் இருளப்பப் பிள்ளை, காமரஸ மஞ்சரி சுந்தரய்யர் இவர்களே முக்கிய வித்துவான்கள். இனிச் சில்லறை வித்வான்கள் பலருண்டு.

மேலே சொல்லப்பட்ட வித்துவான்களெல்லோரும் புடை சூழ்ந்திருக்க வானத்துப் புலவர்களுக்கு நடுவே இந்திரன் போலவும் (வானத்து மீன்களுக்கு நடுவே ஆமை - சந்திரன்) போலவும் இன்னும் எதையெல்லாமோ போலவும் கவுண்டர் கொலு வீற்றிருந்தார்.

அப்போது அடப்பை தூக்கும் தொழிலுடையவனும் ஆனால் முத்தமிழ்ப் புலவர்களுக்குள்ளே, மிகச் சிறந்த வகுப்பில் வைத்து எண்ணத்தக்கவனுமாகிய முத்திருளக் கவுண்டன் வந்து பின் வருமாறு விண்ணப்பஞ் செய்து கொள்ளலானான்.

“புத்தி” என்றான் முத்திருளன்.

(ஜமீன்தாரவர்களிடம் வேலையாட்கள் பேசும் போதே ‘புத்தி’ என்று தொடங்குவது வழக்கம். இந்தச் சொல்லை இதே இடத்தில் இந்த அர்த்தத்தில் வழங்குவதற்குள்ள விசேஷ காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும்படி தமிழ்நாட்டில் மலிந்து கிடக்கும் பாஷா பரிசோதனைப் பண்டிதர்களிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன். நான் யோசனை செய்து பார்த்ததில் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சிற்சில காரணங்கள் தோன்றுகின்றன; ஆனால் ஒரு வேளை சரியாக இருக்குமோ இராதோ என்ற அச்சத்தால் இங்கு வெளியிட மனம் வரவில்லை.)

“புத்தி” என்றான் முத்திருளன்.

“என்ன முத்திருளு உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ நல்ல சமாச்சாரம் கொண்டு வந்திருக்கிறது போல் தோன்றுகிறது, என்ன, நான் நினைத்தது சரியா, தப்பிதமா?” என்று ஜமீன்தார் கேட்டார்.

“ஐயோ! அவ்விடத்து ஊகத்திலே ஒரு வார்த்தை சொல்றது அது தப்பியும் போகிறதா? இது எங்கேயாவது நடக்கிற சங்கதியா? மனுஷ்யாளுடைய நெஞ்சுக் குள்ளிருக்கிற ரகஸ்யம் எல்லாம் மகாராஜாவுடைய புத்திக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், கண்ணிலே விழுந்திருக்கும் பூவைப் போலவும் நன்றாகத் தெரிந்து போகுமே! அடியேன் மனசிலிருக்கிறது தெரியாதா?” என்றான் முத்திருளன்.

கொஞ்சம் தெளிவு குறைந்ததும், தர்க்க சாஸ்திர விதிகளுக்கு இசையாததுமான இந்த ஸ்துதியைக் கேட்டுக் கவுண்டரவர்கள் மிகவும் சந்தோஷமடைந்து, முப்பத்திரண்டு பற்களில் விழுந்தது போக மற்றுள்ள காவி பூத்த பற்களெல்லாம், பெரியவும், சிறியவுமாகிய மாதுளங்கனி விதைகளைப் போலவும், வேறு பல உவமைப் பொருள்களைப் போலவும், வெளியே தோன்றும்படி பலமான மந்தஹாசம் புரிந்தார்.

முத்திருளன் மீது பொதுவாக எப்போதுமே ஜமீன்தாரவர்களுக்கு அன்பு அதிகம். அவன் நெடு நாளைய வேலைக்காரன்; பல தந்திரங்கள் தெரிந்தவன். தவிரவும் பாலியத்தில் ஜமீன்தாரவர்கள் கொஞ்சம் சில்லறை விளையாட்டுக்கள் விளையாடியபோது உடந்தையாக இருந்து பலவித உதவிகள் செய்தவன். இன்னும், இன்னும் காரணங்கள் உண்டு. ஆனால் பிரபுக்களின் தயவாகிய நதியின் மூலத்தை விசாரிக்கலாகாது.

“முத்திருளு, மற்றவர்களுடைய கவியும் சரி, உன்னுடைய வார்த்தையும் சரி, அவர்களுடைய கவி கேட்பதிலுள்ள சுகம் உன் பேச்சிலேயிருக்கிறது” என்று ஜமீன்தார் தனது வேலைக்காரனை மெச்சினார். அவன் தம்மைப் புகழ்ந்து பேசியதற்கு வெகுமதியாகச் சபையிலிருந்த புலவர்களுக்கெல்லாம் அடிவயிற்றிலே எரிச்சல் உண்டாயிற்று. இது முத்திருளக் கவுண்டனுக்குத் தெரியும். ஜமீன்தாருக்குக்கூட ஒருவேளை தெரிந்திருக்கலாம். அப்படியிருந்து அவர்களெல்லோரும் தமது எரிச்சலை உள்ளே அடக்கிக்கொண்டு வெளிப்படையாக ஜமீன்தாருடைய கருத்தை ஆமோதித்துப் பேசினார்கள்.

உபய வேதாந்த ஆ……...சாரியர், “ஆமாம், மகாராஜா! ஸம்ஸ்கிருதத்திலே பாணகவியைப் போல நம்முடைய முத்திருளக் கவுண்டன், அவர் தமது காதம்பரியை வசன நடையிலே தான் எழுதியிருக்கிறார். அப்படியிருந்தும் பாட்டாகச் செய்யப்பட்டிருக்கும் எத்தனையோ காவியங்களைக் காட்டிலும் அதைப் பெரியோர்கள் மேலானதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாணகவி உட்கார்ந்து புஸ்தகமாக எழுதினார். நமது முத்திருளக் கவுண்டன் சிரமமில்லாமலே பேசுகிற பாவனையில் அத்தனை பெரிய திறமை காட்டுகிறான். இவனை வசன நடையில் ஆசுகவி என்று சொல்லலாம்” என்று திருவாய் மொழிந்தருளினார்.

உடனே முத்திருளன் அவரை விரஸத்துடன் நோக்கி, “செய்யுளும் நமக்குப் பாடத் தெரியும், சாமீ! ஏதோ வாயினால் சும்மா உளறிக் கொண்டிருப்பான், பாட்டுப் பாடத் தெரியாதவன் என்று நினைத்துவிட வேண்டாம்.” என்றான். தனக்குக் கவி பாடத் தெரியுமென்பதையும் அவருக்கு அத்தொழில் தெரியாதது பற்றித் தனக்கு அவரிடம் மிகவும் அவமதிப்புள்ள தென்பதையும், அவருக்குக் குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டாக.. ஆ……...சாரியார் தமது உள்ளத்திலே எழுந்த கோபத்தை அச்சத்தினால் நன்றாக அடக்கி வைத்துக் கொண்டு, “பாணகவி செய்யுள் பாடுவதில் இளைத்தவரென்று நினைத்தாயோ? ஆஹா, முத்திருளக் கவுண்டா! நீ ஸம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். படித்திருந்தால் நீ பாணகவிக்கு நிகரானவன் என்பது உனக்கே நன்றாகத் தெரிந்திருக்கும்.” என்று திருவாய் மொழிந்தருளினார்.

(சாதாரணமாக ஆ……..சாரியாரைப் போன்று மகான்கள் பேசுவதை, ‘திருவாய் மலர்ந்தருளினார்’ என்று சொல்வது வழக்கம். அப்படியிருக்க, நாம் ‘திருவாய் மொழிந்தருளினார்’ என்று புதிதாகச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவருக்குத் தமிழ் பாஷையில் அதிக பழக்கமில்லாத போதிலும் திருவாய்மொழிப் பிரபந்தம் முழுவதையும் பாராமல் குட்டி உருவாகச் சொல்லக் கூடியவரென்பதை, நாம் ஒருவாறு குறிப்பிட விரும்புதல் சாமான்யக் காரணம்; சரியான காரணம் இன்னும் சில வரிகளுக்கப்பால் தானே விளங்கும்..) பிறகு முத்திருளக் கவுண்டன் தனக்கு ஸம்ஸ்கிருதம் தெரியாதென்பதை ஆ……..சாரியார் கேலி பண்ணுகிறார் என்று நினைத்துத் தலையை நேரே தூக்கிக் கொண்டு அவனது மீசை கிருதாக்கள் துடிக்கப் பின்வருமாறு உபந்நியாசம் செய்யலானான்.

“சாமி, அய்யங்கார்வாளே! சாமிகளே; அப்படியா வந்து சேர்ந்தீர்கள். (சபையோர் நகைக்கிறார்கள்) இந்தக் கதையா? இதெல்லாம் முத்திருளனிடம் வைத்துக் கொள்ள வேண்டாம். சென்னப் பட்டணத்தில் சி.வை.தாமோதரன் பிள்ளை என்று ஒரு மகா வித்துவான் இருந்தாரே கேள்விப்பட்டதுண்டா? அது சூளாமணி என்னும் காவியத்தை அச்சிட்ட போது அதற்கெழுதிய முகவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா? திருவனந்தபுரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகி அன்னிய பாஷைகள் ஆயிரங் கற்று நிகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்கள் ஏதேனும் ஒன்றை எப்போதாவது தலையணையாக வைத்துப் படுத்திருந்ததுண்டா? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்தது உண்டா? அப்படி மோந்து பார்த்தவர்களையேனும் மோந்து பார்த்தது உண்டா? (இந்த அற்புதமான வார்த்தையைக் கேட்டு சபை கலீரென்று நகைக்கிறது. ஆ……..சாரியார் பேசுவதற்காகத் திருவாய் மலர்ந்தருளினார். ஆனால் மலர்ந்த திருவாய் மொழிவதற்குள்ளாகவே முத்திருளன் அவரைப் பேசவொட்டாதபடி கர்ஜனை புரியலானான். )

“சாமி, சாமிகளே! அய்யங்கார்வாளே! பிறர் பேசும்போது நடுவிலே, குறுக்கே பாயக் கூடாதென்று உங்கள் ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே சொன்னது கிடையாதோ? அல்லது ஒருவேளை சொல்லி இருந்தால் அதை நீங்கள் படித்தது கிடையாதோ? சாமிகளே, மேலே நான் சொல்லிய புலவர்களும், இன்னும் ஆயிரக்கணக்கான வித்வத் சிரோமணிகளும் பதினாயிரக்கணக்கான லக்ஷக் கணக்கான கோடிக்கணக்கான பத்திராசிரியர்களும் வடமொழியைக் காட்டிலும் தமிழே உயர்ந்த பாஷையென்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிப் பசுமரத்தாணி போல நாட்டியிருக்கிறார்கள். நீவிர் அதனையுணராது குன்று முட்டிய குரீஇப் (குருவி) போல இடர்ப்படுகின்றீர்.

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்து முதலை
உண்ட பாலனை யழைத்ததும் ….ம்.......ம்…..ம்,
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ?
சாற்றீர்?” என்ற பாட்டைக் கேட்டதுண்டா?

இந்தப் பாட்டிலே சில வார்த்தைகள் முத்திருளனுக்கு சமயத்தில் ஞாபகம் வரவில்லை யாதலால் விட்டுப் பிழையாகப் பாட்டைச் சொல்லி முடித்தான்.

சபையில் பலருக்கு இந்தப் பாட்டு நன்றாக ஞாபகமுண்டு. ஆயினும் அவனைத் திருத்தப் போனால் தங்கள் மீது பாய்ந்து விடுவானென்று பயந்து புலவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்து விட்டார்கள். அவர்கள் திருத்தாமலிருக்கும் படியாகவே முத்திருளன் அவர்களைச் சுற்றி நோக்கி மிகவும் பயங்கரமானதோர் பார்வை பார்த்து விட்டு மேலே கர்ஜனை செய்கிறான்.

“இனி வடமொழியில்தான் வேதம் உளதென்று நீர் ஒருவேளை சொல்லலாம். அஃது எங்கள் தேவார திருவாசகங்களுக்கு நிகராகுமா? இந்தப் பாடலுக்கு நான் இப்போது பொருள் சொல்ல மாட்டேன். உமக்குத் தெரியாவிட்டால், வீட்டிலே போயிருந்து கொண்டு படிப்புத் தெரிந்த வாலிபப் பிள்ளை எவனையேனும் அழைத்து அவனிடம் பொருள் கேட்டுக் கொள்ளும்.

(சபை கலீரென்று நகைக்கிறது. ஆ…….சாரியர் முடி சாய்ந்து விட்டார்) “ஆங்காணும், தமிழ்ப் பாஷைக்கு நேரானதோர் பாஷை இல்லை. அதிலும், வடமொழி நமது தமிழ் மொழிக்குச் சிறிதேனும் நிகராக மாட்டாது. தமிழ் கற்றோர் அனைத்துங் கற்றோர். அறியும், அறியும், அறியும். இனி வித்துவான்களுடைய சபையிலே ஊத்தவாய் திறக்க வேண்டாம்.”

“வாயிலே நுரைக்கும்படி முத்திருளன் இவ்வாக்கியம் சொல்லி முடித்து மேலே பேச மூச்சில்லாமல் கொஞ்சம் நின்றான்.

அப்போது ஆ…...சாரியர் மிகவும் ஹீனஸ்வரத்திலே “முத்திருளா, என்ன இப்படிக் கோபித்துக் கொள்கிறாயே, நான் பாணகவிக்கு நிகரென்று உன்னை ஸ்தோத்திரமாகத்தானே சொன்னேன். விஷயத்தைக் கவனியாமலே வீண் கோபம் செய்கிறாயே” என்று திருவாய் மொழிந்தருளினார்.

***
நான்காம் அத்தியாயம் 
சங்கரன் யமகம் பாடி அரங்கேற்றியது

மேலே கூறப்பட்ட போராட்டம் முடிந்து, ஒருவாறு கவுண்டர் சபை கலைந்தது. புலவர்களெல்லாம் போனபின், தனியாக இருக்கும்போது கவுண்டர் முத்திருளனை நோக்கி, “ஏதோ ஒரு நல்ல சமாச்சாரம் கொண்டு வந்தாயே, அது சொல்லி முடியு முன்பாக, அந்த இழவு பார்ப்பான் சண்டை தொடங்கி விட்டான். நீ நல்ல போடு போட்டாய். அந்தப் பாப்பானுக்கு வேணும். அது போகுது, சொல்ல வந்த சங்கதியைச் சொல்” என்றார்.

“நம்ம சுப்பிரமணிய அய்யர் மகன் சங்கரன் சமூகத்தின் மேலே ஒரு யமகம் பாடியிருக்கிறான். நல்ல பாட்டு; அடியேனால் கூட அவ்வளவு ‘ஷோக்’கான பாட்டுப் பாட முடியாது. அதைச் சமூகத்திலே அரங்கேற்ற வேணும். மகாராஜா! பையன் சிறுவனாக இருந்த போதிலும் புத்தி ரொம்ப கூர்மை. அரண்மனைக்கு இத்தனை புலவர்கள் வருகிறார்களே, அவர்களெல்லாரையும் விட்டு அடியேனிடத்திலே வந்தால்தான் இந்தக் காரியம் சாத்யமென்று தெரிந்து கொண்டான். அவன் வயதெவ்வளவு? நம்ம மகாராஜாவினுடைய கிருபை இன்னான் மேலே பரிபூர்ணமாக விழுந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்வதென்றால் அதென்ன சாமான்யமாகச் சிறு பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய விஷயமா? மகாராஜா காலுக்கு இந்த முத்திருளுதான் சரியான நாய்க்குட்டி; இவனிடத்திலே சொன்னால்தான் நமது கவி அரங்கேறுமென்று கண்டுபிடித்து விட்டான்.

“புத்திசாலி. அந்தப் பாட்டை ஒரு நாள் சபையிலே அரங்கேற்றும்படி உத்தரவானால், அப்போது இந்த அய்யங்கார்கள், புலவர்கள் இவர்களுடைய சாமர்த்தியங்களெல்லாம் வெளிப்பட்டுப் போகும். அடியேன் ஒருவனாலேதான் அந்தக் கவிக்குப் பொருள் சொல்ல முடியும். மற்றவர்களாலே குட்டிக்கரணம் போட்டால்கூட நடக்காது. அடியேனுக்குக்கூட அந்தப் பாட்டைக் கேட்டவுடனே இரண்டு நிமிஷம் திகைப்புண்டாய் விட்டது. பிறகுதான் அடியேனுக்கு மகாராஜா கடாக்ஷமும் சரஸ்வதி கடாக்ஷமும் கொஞ்சம் இருக்குதே – கொஞ்சம் நிதானித்துப் பார்த்தேன். அர்த்தம் தெளிவாகத் தெரிந்தது” என்று முத்திருளு சொன்னான்.

ஜமீன்தார், “அப்படியா! யமகமா பாடுகிறான்! உனக்குக்கூட அர்த்தம் கண்டுபிடிக்கத் திகைத்ததென்றால் வெகு நேர்த்தியான பாட்டாயிருக்குமே, பார்ப்போம், பார்ப்போம் நம்ம புலவர்களுடைய சாயமெல்லாம் நாளை வெளுத்துப் போகும். நாளைக்குச் சாயங்காலமே வைத்துக் கொள்ளுவோம். புலவர்களுக்கெல்லாம் சொல்லியனுப்பி விடு. ஒருவன் கூட தவறக்கூடாது. எல்லோரும் வந்து சேரவேணுமென்று.”

இந்த ஆக்கினையைக் கேட்டு முத்திருளு சந்தோஷமுடையவனாய் வணங்கிச் சென்றான். மகாராஜாவும் தமது நித்திய அநுஷ்டானங்களுக்குப் புறப்பட்டு விட்டார். ‘நித்திய கர்மானுஷ்டானங்கள்’ என்று எழுத உத்தேசித்தேன். ஆனால் கவுண்டர் அவர்களுக்குக் ‘கர்மம்’ என்றுமே கிடையாது. அத்வைதிகள் சொல்லும் நிர்க்குண பிரம்மத்தின் ஜாதியைச் சேர்ந்த ஆசாமி.

யமகம் பாடிய காலத்தில் சின்ன சங்கரனுக்கு வயது மிகவும் கொஞ்சம். இவனுடைய தகப்பனார் சுப்பிரமணிய அய்யருக்கும் சமஸ்தான வித்வான் முத்திருளக் கவுண்டனுக்கும் மிகுந்த சிநேகமுண்டு. அவன் அடிக்கடி வந்து சுப்பிரமணிய அய்யரிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதுண்டு. கடனென்று சொல்லித்தான் வாங்குவான்.

ஆனால் முத்திருளன் தயவிருக்கும் வரையிலேதான் ஜமீன்தாருடைய தயவும் இருக்குமென்பதை நன்றாக அறிந்த சுப்பிரமணிய அய்யர் அவனிடம் பணத்தைத் திருப்பிக் கேட்கும் வழக்கமில்லை. அவனும் ராஜாங்க விவகாரங்களிலே புத்தியை அதிகமாக உழைப்பவனாதலால், மிக்க மறதிக் குணம் உடையவன். பணம் வாங்குவது அவனுக்குக் கொஞ்சமேனும் ஞாயகமிருப்பதில்லை.

சின்ன சங்கரன் விஷயத்தில் முத்திருளனுக்கு விசேஷ அன்பு ஏற்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. முத்திருளன் தகப்பன் எண்பது வயதுள்ள சோலையழகுக் கவுண்டன் என்பவன் கண்ணிழந்து வீட்டிலே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

இந்தச் சோலையழகு தமிழ்க் காவியங்களிலே சாக்ஷாத் நச்சினார்க்கினியருக்குச் சமமானவன் என்பது அந்தவூர்க் கவுண்டருடைய எண்ணம். சோலையழகுக் கவுண்டனிடத்தில் சங்கரன் தினம் பள்ளிக்கூடம் விட்டவுடனே போய்ப் பழைய புலவர்களின் சரித்திரங்களும், பழைய கடினமான விடுகவிகளுக்குப் பொருளும், கதைகளும் கேட்டுக் கொண்டிருப்பான். ஊரிலுள்ள பெரிய மனுஷ்யர்களிலே ஒருவராகிய சுப்பிரமணிய அய்யரின் பிள்ளை தன்னிடம் வந்து பாடம் கேட்டுக் கொள்வதைப் பற்றித் திருதராஷ்டிரக் கவுண்டனுக்கு அளவற்ற பூரிப்பு ஏற்பட்டிருந்தது. அந்தக் குடும்ப முழுதிற்குமே சங்கரன் மேல் ‘ஆசை’ அதிகம்.

மாலை ஐந்து மணி அடித்ததும் பள்ளிக்கூடத்திலிருந்து நேரே சங்கரன் ஜமீன்தாருடைய சபைக்கு வந்து விட்டான். மேலே சொல்லப்பட்ட வித்துவான்களெல்லாரும் வந்து சபையில் கூடியிருந்தனர். திவான் முருகப்ப முதலியார், தாசில் மாரிமுத்துப் பிள்ளை, இன்னும் சில கவுண்டப் பிரபுக்கள், உத்தியோகஸ்தர் எல்லோரும் வந்திருந்தனர்.

ஜமீன்தார் சங்கரனை நோக்கி, “எங்கே, தம்பி உன் பாட்டை வாசி, கேட்போம்!” என்றார்.

சங்கரன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே உருவிப் படிக்கத் தொடங்கினான்.

பையனுக்கு வாய் குழறுகிறது, உடம்பெல்லாம் வியர்க்கிறது.

சரஸ்வதிக்கு லஜ்ஜை அதிகம். லக்ஷ்மியைப் போல நாணமற்றவளன்று. சங்கரன் போன்றவர்களிடம் விளங்கும் போலி – சரஸ்வதிக்குக்கூட ஆரம்பங்களில் கொஞ்சம் லஜ்ஜை உண்டாகும். நாளாக, நாளாகத்தான் லஜ்ஜை, நாணம் எல்லாங் கெட்டுப் போய் தெருவேசிகளின் இயல்புண்டாகி விடும்.

சங்கரன் படும் அவஸ்தையைக் கண்டு முத்திருளக் கவுண்டன் அவனை உற்சாகப்படுத்தும் பொருட்டாகப் “பயப்படாதே, சாமி! தைரியமாய் வாசி. உயர்ந்த கவியாச்சுதே! இதிலென்ன வெட்கம்? மேலும் நம்ம மகாராஜாவின் முன்னிலையில் நம்முடைய படிப்பைக் காட்டாமல் யாரிடம் காட்டுவது? இதில் கூச்சப்படலாமா? என்றான்.

மகாராஜ ராஜஸ்ரீ, ராஜகுலதீப ராமசாமிக் கவுண்டர் மீது
சங்கரய்யர் பாடிய யமக அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

“கவுண்டவுண்ட தெனமாரன் கணைபொழிய மிகச் சோர்ந்து கண்ணீராற்றிற்
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை நினைந்து மனங் கரையா நின்றாள்
கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட பெருமானே கவுண்டனூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரையே விரைவினிற் கலவிசெய்யே”


இந்த யமக விருத்தம் பாடி முடிந்தவுடனே முத்திருளக் கவுண்டன் சபையோரைச் சுற்றித் திரும்பிக் காட்டிலே தனிச்சிங்கம் விழிப்பது போல ஆடம்பரமாக விழித்தான். புலவர்களுக்கெல்லாம் அடிவயிறு குழப்பமாயிற்று. ஒவ்வொருவனுக்கும் இந்தப் பாட்டுக்குத் தன்னிடம் பொருள் கேட்டு விடுவார்களோ என்ற பயமுண்டாயிற்று. யாரும் வாயைத் திறக்கவில்லை. கடைசியாக உபய வேதாந்தம் ரோதனாச்சாரியார் திருவாய் மலர்ந்து “முத்திருளக் கவுண்டா! இந்தப் பாட்டுக்கு நீதான் அர்த்தம் சொல்ல வேண்டும்” என்றார்.

முத்திருளக் கவுண்டன் பின்னும் ஒரு முறை ஒரு சுற்றுச் சுற்றி விழித்து விட்டுச் சங்கரனிடமிருந்து காகிதத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக் கொண்டு ஒரு முறை கனைத்ததன் பின்பு பின்வருமாறு வியாக்யானம் செய்யலானான்.

“இது நற்றாயிரங்கல் என்னும் துறை. (அதாவது, தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவதைக் கண்ட தாயொருத்தி மனம் பொறுக்காமல் சொல்லுவது)

“கவுண்டவுண்ட தெனராமன் கணைபொழிய மிகச் சோர்ந்து கண்ணீராற்றிற்;
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை நினைந்து மனங்கரையா நின்றாள்; 
கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட பெருமானே கவுண்டனூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரையே விரைவினிற் கலவி செய்யே”

‘கவுண்டவுண்டதென’ – கவுண் தாவுண்டதென; கவுண் கற்கள் தாவி வருவது போல, இங்கு ‘கவுண்டாவுண்ட’ என்றிருக்க வேண்டியது, குறுக்கல் விகாரத்தால் ‘கவுண்டவுண்ட’ என்றாயிற்று.

‘மாரன்’– மன்மதன், காமவேள், ‘கணைபொழிய’ – அம்புகளைப் பெய்ய, அதாவது பகழிகளைத் தூவ, அதனால் ‘மிகச் சோர்ந்தது’ – மிகவும் சோர்வு எய்தி, சாலவும் துக்கமெய்தியவளாய், ‘கண்ணீராற்றில்’- கண்ணிலே உதிக்கும் நீரினாலாகிய நதியினால்.

‘கவுண்டவுண்ட மார்பினளாய்’ – கவ்வுண்டவுண்ட மார்பினளாய், அதாவது கவ்வப்பட்ட உருண்டை மார்பினை உடையவளாய், கண்ணீர் வெள்ளத்தாலே விழுங்கப்பட்ட பயோதரத்தினளாய். இங்கு ‘உருண்ட’ என்பதில் ருகரம் கெட்டது. தொல்காப்பியத்தில் கெடுதியதிகார விதிப்படி யென்க.

‘மகள்” என்பது புதல்வி. ‘உன்னை நினைந்து மனங்கரையா நின்றாள்’ – இதன் பொருள் வெளிப்படை. ‘கவுண்டவுண்ட சீதையினை’ – இதனை, கா உண்டு, அவ் உண்டு, அ சீதையினை என்று பிரித்துப் பொருள் கொள்ளுக. இலங்கையிலே ஒரு கா (அசோகவனம்) உண்டு! அவ் – அவ்விடத்தில்; உண்டு – இருந்தாள்; ஆ – அந்த; சீதையினை – சீதா தேவியை;  ‘காவுண்டு’ என்பது ‘கவுண்டு’ எனக் குறுகியதும், ‘அச்சீதை’ யென்பதில் மெய் கெட்டதும் தொல்காப்பிய விதிப்படியே யென்க. ‘அவ்’ என்பதன் பிறகு இடத்தில் என்னும் சொல் வருவித்துக் கொள்ளப்பட்டது.

‘மாலையிட்ட பெருமானே’– (சீதா தேவியின்) நாயகனாகிய ஸ்ரீராமபிரானுக்கு நிகரானவனே; இராமன் சூர்ய குலத்தவனாகவும் நமது மகாராஜா சந்திர குலத் திலகமாகவும் இருப்பினும் பெயரொற்றுமை கருதியும், வீரியம் முதலிய குணப் பெருமைகளின் ஒப்பைக் கருதியும் கவி இங்ஙனம் எழுதியிருக்கிறார். மேலும் அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று ‘வேதங்கள்’ முழங்குதலறிக. இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரமென்றே கருதப்படுதலுணர்க.

‘கவுண்டனூரில்’ – கவுண்டமா நகரத்தின் கண்ணே; நீர்வளம், நிலவளம், பவளம் முதலியன பொருந்தியதாய், அஷ்டலக்ஷ்மிகளுக்குத் தாய் வீடாய் அமராபதி போல விளங்கும் நமது ராஜதானியிலே.

‘கவுண்டவுண்ட ராமசாமித் துரையே’ - ஏ! கவுண்டா!! (கவுண்ட வமிசத்தில் உதித்த மன்னா) உண்ட (அறுவகைச் சுவைகளும் பொருந்திய இனிய உணவை எப்போதும் சாப்பிடுகிற) ராமசாமித் துரையே! எல்லாரும் உண்பரேயாயினும் நமது மகாராஜாவுக்கு மாத்திரம் ‘உண்ட’ என்னும் அடைமொழி கொடுத்ததேனோ என்றால், எல்லாரும் உண்பது போலன்று. இவர் தேவர்களைப் போல அரிய உணவுகளை உண்ணும் பாக்கியவான் என்பதைக் குறிப்பிடும் பொருட்டே யென்க.

சின்ன சங்கரன் யமகம் பாடி அரங்கேற்றிய புகழ், கவுண்ட ராஜ்யம் முழுவதிலும் பரவித் தத்தளித்துப் போய்விட்டது. கவுண்டர் சபையில் வந்த வேடிக்கைகளை எல்லாம் மேல் அத்தியாயத்தில் நான் விஸ்தாரமாக எழுதவில்லை. கவுண்ட சபையின் வர்ணனை எனக்கே சலிப்படைந்து போய் விட்டது. படிப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? அதை உத்தேசித்து அதையே மாகாணி வேலைதான் செய்தேன்.

இப்போது சின்ன சங்கரனுடைய ‘காதல்’ விஷயம் சொல்லப் போகிறேன். சிரத்தையுடன் படிக்க வேண்டும். தேசமாகிய உடலுக்கு வித்துவானே உயிர். ஒரு ஜாதியாகிற கடிகாரத்துக்கு ‘சாஸ்திரம்’ தேர்ந்தவனே ‘வில்’. நாகரிகமாகிய கங்கா நதிக்குக் ‘கவி’யின் உள்ளமே மூல ஊற்று. ஆகவே கவியின் ‘காதல்’ உலகமறியத் தக்கது. சின்ன சங்கரன் தமிழ் தேசத்திலே ஒரு ‘கவி’. இருபது முப்பது வருஷங்களுக்கு முன் இந்த நாட்டில் கவிகளெல்லோரும் சின்ன சங்கரன் மாதிரியாகத்தான் இருந்தார்கள். இப்போதுதான் ஓரிரண்டு பேர் தமிழில் கொஞ்சம் சரியான பாட்டுக்கள் எழுதத் தலைப்பட்டிருப்பதாகக் கேள்வி. அவர்களுடைய பெயர்கூட எனக்குத் தெரியாது. நான் தமிழ் தேசத்துப் பழக்கத்தை விட்டு நெடுநாளாகி விட்டது. (இப்போது வட ஆப்பிரிக்காவிலிருக்கிறேன்).

ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன் நான் தமிழ்நாட்டில் இருந்தபோது அங்கே சின்ன சங்கரனுக்கு மேலே உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த ‘கவி’ நான் பார்த்தது கிடையாது. தேசமோ உலகத்துக்குள்ளே ஏழை தேசமாச்சுதா? பதினாயிரம் ரூபாயிருந்தால் அவன் தமிழ்நாட்டிலே கோடீசுவரன். பத்து வேலி நிலமிருந்தால் அவன் ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்டன். ஒரு ஜமீனிருந்துவிட்டால் அவன் ‘சந்திரவம்சம்’, ‘சூரியவம்சம்’, ‘சனீசுர வம்சம்’, ‘மகாவிஷ்ணுவின் அவதாரம்’, ‘பழைய பன்றி அவதாரத்துக்குப் பக்கத்திலே சேர்க்க வேண்டியது’.

இந்தத் தேசத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களெனக் கணக்குச் சொல்கிறார்கள். நான் நாலைந்து பேரைக்கூட பார்த்தது கிடையாது. அது எப்படி வேண்டுமென்றாலும் போகட்டும். ஆனால் இந்த முப்பத்து முக்கோடி தேவர்களிலே எனக்குத் தெரிந்தவரை நம்முடைய மகாவிஷ்ணுவுக்குத்தான் சிரமம் அதிகம். பன்றி விஷ்ணுவின் அவதாரம். ஆமை விஷ்ணுவின் அவதாரம். கவுண்டனூர் ஜமீன்தார் விஷ்ணு அவதாரம். அனிபெஸண்ட் வளர்க்கிற (நாராயணய்யர் இடங்கொடாத) கிருஷ்ணமூர்த்திப் பையன் அதே அவதாரம்.

மொத்தத்தில் மகாவிஷ்ணுவுக்குக் கஷ்டம் அதிகம். இப்படித் தெருவிலே கண்டவர்களையெல்லாம் மூன்று காசுக்காகப் புகழ்ந்து பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக்கிழங்கைப் போலிருக்கிறது; மோவாய்க்கட்டையைப் பார்த்தால் மாதுளம் பழத்தைப் போலிருக்கிறது; கிழவியுடைய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற்கடலைப் போல் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் காது புளித்துப் போகிற வரையில் வர்ணிப்பது; யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாக பந்தம், ரத பந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்ப்பந்தங்கள் கட்டி அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தனென்று மனோராஜ்யம் செய்து கொள்வது – இவைதான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில்.

கவுண்டனூர் ஜமீன்தாரவர்களின் அடைப்பைக்காரன், மந்திரி, நண்பன், ஸ்தல வித்வான் முதலியனவாகிய முத்திருளக் கவுண்டனுக்கு ஒரு பெண் உண்டு. வயது பதினாறு. (இப்போதல்ல, சங்கரன் கதையிலே அவள் வந்து புகுந்த காலத்தில்)

நிறம் கறுப்பு; நேர்த்தியான மைக் கறுப்பு. பெரிய கண்கள், வெட்டுகின்ற புருவம். அதிக ஸ்தூலமுமில்லாமல், மெலிந்து ஏணி போலவுமில்லாமல், இலேசாக உருண்டு, நடுத்தரமான உயரத்துடன் ஒழுங்காக அமைந்திருந்த சரீரம். படபடப்பான பேச்சு. எடுத்த வார்த்தைக்கெல்லாம் கலீரென்று சிரிக்கும் சிரிப்பு. மதுரைச் சீட்டிச் சேலை, டோரியா ரவிக்கை, நீலக் குங்குமப் பொட்டு, காதிலே வயிரத் தோடு, கழுத்திலே வயிர அட்டிகை, கையிலே வயிரக் காப்பு, நகையெல்லாம் வயிரத்திலே, மாணிக்கம் ஒன்றுகூடக் கிடையாது. மேனி முழுதுமே நீலமணி. தலையைச் ‘சொருக்கு’ப் போட்டு அதில் ஜாதி மல்லிகைப்பூ வைத்துக் கொள்வதிலேயே பிரியமுடையவள். கொஞ்சம் குலுங்கிக் குலுங்கி நடப்பாள். காலிலே மெட்டிகள் ‘டணீர்’ ‘டணீர்’ என்றடிக்கும். இவ்வளவு ‘ஷோக்’கான குட்டிக்குப் பெயர் அத்தனை நயமாக வைக்கவில்லை. ‘இருளாயி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.

இவள் மேலே சங்கரனுக்குக் காதல் பிறந்து விட்டது. சங்கரனை இதற்கு முன் சரியாக வர்ணித்திருக்கிறேனோ, இல்லையோ! நேரே ஞாபகமில்லை. எனினும் இப்போது அவனுடைய காதல் கதை சொல்லத் தொடங்கும்போது மற்றொரு முறை வர்ணனை எழுதியாக வேண்டியிருக்கிறது.

கறுப்பு நிறம், குள்ள வடிவம், மூன்று விரல் அகலம் நெற்றி. கூடு கட்டின நெஞ்சு, குழிந்த கண்கள், இரத்தமற்ற இதழ்கள், நெரிந்த தொண்டை, பின்னுகிற கால்கள், அரையிலே அழுக்கு மல்வேஷ்டி, மேலே ஒரு அழுக்கான பட்டுக்கரைத் துண்டு. இவ்வளவையும் மீறிக் கொஞ்சம் புத்திக் கூர்மையுடையவன் போல் தோற்றுவிக்கும் முகம்.

இவ்விருவருக்குள்ளே ‘காதல்’ எப்படி ஏற்பட்டதென்பதின் மூலங்கள் எனக்குத் தெரியாது. ரிஷி மூலம், நதி மூலம் விசாரிக்கப்படாது என்பார்கள்; அதாவது சின்ன ஆரம்பங்களிலிருந்து பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அர்த்தம். காதல் சமாச்சாரமும் அப்படித்தான். ஒரு பார்வை, ஒரு தட்டு, ஒரே பார்வை, ஒரே தட்டாக முடிந்துவிடும். ஒரு பேச்சு, ஒரு சிரிப்பு மரண பரியந்தம் நீங்காத பந்தமேற்படுத்திவிடும். ஆனால் இருளாயிக்குச் சங்கரன் விஷயத்தில் அப்படி நிலைத்த காதல் இருந்ததென்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.

சங்கரனுக்கு மாத்திரம் அவளிடம் பரிபூரண மோகம் ஏற்பட்டிருக்கிறது. அது மரணத்திலே போய் நிற்கவில்லை. ஏறக்குறைய மரணத்திலே கொண்டு விட்டுவிடத் தெரிந்தது.

முத்திருளக் கவுண்டனுடைய தகப்பன் ஒரு தொண்டுக் கிழவன். கண் இல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தான். அவனை மனித விவகாரங்களில்லாத ஒரு தனித் தீவாந்திரத்திலே கொண்டு விட்டு இரண்டு காணி நிலம் மாத்திரம் கொடுத்துப் பயிரிட்டுக் கொள்ளும்படி சொன்னால் அதாவது, கண்களையும் திருப்பிக் கொடுத்த பிறகு – அந்த இரண்டு காணிகளில் முக்கால் காணியை வெற்றிலைத் தோட்டமாக்குவான். ஒரு முழுக் காணியிலே புகையிலைத் தோட்டம் போட்டு விடுவான். மிஞ்சின கால் காணியிலேதான் நெல் விதைப்பான் – பாக்கு மரம் வைத்தது போக, காய்கறிகள் கூட அவசியமில்லை. அந்த இரண்டு காணிக்கு ஒரு சின்னக் குளம் கொடுக்க மாட்டார்களா? அதில் மீன்கள், நண்டு அகப்படாதா? ஒரு பார்வை பார்த்துக் கொள்வான்.

கிழ ‘திருதராஷ்டிர’க் கவுண்டனுக்குப் புகையிலையிலே எவ்வளவு பிரியமோ அவ்வளவு பிரியம் கம்பராமாயணத்திலே யுமுண்டு.

யாரேனும் வந்து கம்ப ராமாயணத்திலே ஒரு பாட்டு வாசித்து அர்த்தம் சொல்லும்படி கேட்டால் சரியாகச் சொல்லுவான். அவனும் கவுண்டனூர்த் தமிழ்ப் புலவர்களிலே ஒருவன்.

ஆனால் சங்கரன் காலத்துப் புலவர்களைக் காட்டிலும் அவன் விசேஷந்தான். அவனுக்கு வேறொன்றுமில்லாவிட்டாலும் ஒரு பெரிய காவியத்துக்குப் பொருள் சரியாகச் சொல்லத் தெரியும். பின்னிட்ட புலவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. பாட்டுக் கட்டத்தான் தெரியும்.

முத்திருளக் கவுண்டனுடைய நட்புச் சங்கரனுக்கு ருசி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, கிழக் கவுண்டனிடம் கம்பராமாயணம் கேட்க ஆரம்பித்தான். மாலைதோறும் பள்ளிக்கூடம் விட்டவுடனேயே முத்திருளக் கவுண்டன் வீட்டுக்குப் போய்ப்பாடல் கேட்கத் தவறுவதில்லை. இரவு எட்டு மணிக்குத்தான் திரும்பி வருவான். ‘தாத்தனிடம் அர்த்தம் கேக்க வருது அய்யர் வீட்டுப் பிள்ளை’ என்று இருளாயிக்குச் சங்கரனிடம் கொஞ்சம் பிரியமேற்பட்டது.

அந்தப் பிரியம் நாளுக்குநாள் பலவிதங்களில் பக்குவமடையலாயிற்று. ராமாயண பாடத்துக்குப் போன இடத்திலே சங்கரன் ‘மன்மதக் கலை’ படிக்கத் தொடங்கினான். கிழவனுக்குக் குருட்டு விழிக்குக்கூட விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரகாசமாய் விட்டது.

ராமாயணக் கதை குறைகிறது. சிரிப்பும் வேடிக்கைக் கதையும் அதிகப்படுகிறது; கிழவனுக்கு அர்த்தமாகாதா? வீட்டில் அந்தப் பெண்ணைத் தவிர வேறு ஸ்திரீயே கிடையாது. முத்திருளக் கவுண்டன் மனைவி, கிழவன் மனைவி, இருவரும் செத்து நெடுங்காலமாய் விட்டது.

இருளாயியும் சங்கரனும் சிநேகமாக இருப்பதில் கிழவனுக்கு அதிருப்தியே கிடையாது. “அய்யர் வீட்டுப் பிள்ளை! ஐயோ பாவம்! அதுக்கு என்ன சூது தெரியுமா? வாது தெரியுமா? குழந்தைகள்தானே, விளையாடிக் கொண்டிருக்கட்டும். அதிலே தப்பிதம் வராது” என்று கிழவன் தனக்குத்தானே மனதறிந்த பொய் சொல்லிக் கொண்டு சும்மா இருந்து விடுவான். ‘தப்பிதம்’ நடந்தாலும் குடி முழுகிப் போய்விடாது என்பது ‘திருதராஷ்டிர’க் கவுண்டனுடைய தாத்பர்யம்.

இருளாயிக்குப் பதினாறு வயது என்று சொன்னோம். அப்போது சங்கரனுக்கு வயது பதினேழு. ‘ஜோடி’ சரியாகவே இராது.

ஆனால் ஐரோப்பியர் சொல்வது போல, மன்மதன் குருட்டுத் தெய்வம் (கண்ணில்லாமல், குறி பார்த்து அம்புகள் போடுவது கஷ்டம். ஆனால் தெய்வத்துக்கு எதுவும் பெரிதில்லையல்லவா? மேலும் கவிகளுக்கும் புராணக் காரர்களுக்கும் கூடப் பெரும்பாலும் கண் விஷயம் அந்த மன்மதனைப் போலவேதான்)

எப்படியோ அவர்களிடையே காதல் செடி பெரிதாக வளர்ந்து பூப்பூத்துக் காய் காய்த்துப் பழம் பழுக்கத் தொடங்கிவிட்டது.

பழங்களென்றால் யாரும் தப்பெண்ணங் கொண்டு விட வேண்டாம். இவர்களுடைய காதல் செடியிலே ஏராளமாகப் பழுத்துத் தொங்கிய பழங்கள்  சங்கரன் செய்த கவிகளைத் தவிர வேறொன்றுமில்லை. இருளாயி விஷயமாகச் சங்கரன் சுமார் 2000 கவிகள் வரை பாடித் தீர்த்து விட்டான்.

இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடையூறான ஒரு செய்தி வந்து விட்டது. இவர்களுடைய காதலாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி.

***
(நிறைவடையவில்லை)

ஒரு விளக்கம்:

முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள்  ‘சின்னச் சங்கரன் கதை’யும் அடங்கும்.

இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன்முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை. அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன.

இந்தக் கதையை பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதினார்.

கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பதை  அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்துகொள்ள முடிகின்றது.

1953ஆம் ஆண்டு மதுரை பாரதி அன்பர் திரு. வி.ஜி.சீனிவாசன் அவர்களின் முயற்சியால் நூல் வடிவம் பெற்றது.

புதுச்சேரியில் பாரதியோடு பழகியவரும், மூத்த எழுத்தாளருமான திரு. வ.ரா. அவர்கள் தாம் எழுதிய மகாகவி பாரதியார் நூலில் சின்னச் சங்கரன் கதையைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்:

 “, . , பல வகைகளிலும் அமளி நேர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மகத்தான நஷ்டம் ஒன்று பாரதியாருக்கு ஏற்பட்டது. அது தமிழ் நாட்டின் நஷ்டம் என்று சொல்லவும் வேண்டுமோ?  ‘சின்னச் சங்கரன் கதை’ என்று பாரதியார் ஒரு புத்தகம் எழுதி அனேகமாக முடித்து வைத்திருந்தார். இருபத்தொன்பது அத்தியாயங்கள் கொண்ட நூல் அது என்பது என் ஞாபகம், அருமையான புத்தகம்!

அது எதைப் பற்றிய நூல் என்று கேட்கிறீர்களா? அது நாவல் அல்ல; பாரதியாரின் சுய சரிதமும் அல்ல; விகடம் நிறைந்தது. ஆனால், வேடிக்கைக் கதை அல்ல; புராணமல்ல; உபதேச உபநிஷதமும் அல்ல; நாடகம் அல்ல; முழுவதும் கிண்டலு மல்ல.

என்றாலும், நான் மேலே குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அதையே, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு என்றுகூடச் சொல்லலாம். சோக ரஸத்தில் எழுதப்பட்ட நூல் அல்ல; நகைச்சுவையும் கிண்டலும் குமிழி விட்டுக் கொந்தளிக்கும் புத்தகம்.

 ‘சின்னச் சங்கரன் கதை’ யின் கையெழுத்துப் பிரதி எப்படி மாயமாய் மறைந்து போய்விட்டது என்று தெரியவில்லை.”

 



No comments:

Post a Comment