02/11/2021

ஒரு சிறுகதையும், மறுப்பு அறிவிப்பும்

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 38)

அறிமுகம்:
    மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில்  ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’.

    இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும்,  முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி.

    எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நாண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார்.

    சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.  

-ஆசிரியர் குழு
***

ரெயில்வே ஸ்தானம்

(ஒரு சிறிய கதை)

வஸந்த காலம். காலை நேரம். தென்காசி ஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கேஇரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்தி பெற்ற குற்றாலத்தருவி விழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம் மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல் திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும். இரண்டு பக்கங்களிலும், செங்குத்தான மலைகளும், ஆழமான பள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச் செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப்புழைகளும் இரு பாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து, சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும் பலவகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒரு முறை பார்த்தால் பிறகு எக்காலத்திலும் மறக்க முடியாதன.

இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில் காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவி அழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத்துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்ன ஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
பிராமண விதவைகள் பலர் ஒருபுறத்திலே யிருந்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்து நின்றுகொண்டு, போவார் வருவோரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர்கள் தலைப்பாகை, கோட்டு, கெடிகாரச் சங்கிலி சகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போல தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேன்குழல், சுகியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரரும் பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது காசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு, நான்கு மடங்கு விலைவைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக் கூப்பிடுதூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லீன் சட்டை. சரிகைக்கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச்சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்த மீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு மிகவும் பரிதாபமுண்டாயிற்று. நான் போய் அவனை ஏன்அழுகிறாய் என்று கேட்டால், அதினின்றும் அவனுக்கு ஒருவேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூட யோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னே போய் நின்றுகொண்டு:- “தம்பி, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டேன்.

அவன் என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். அவனுக்கு 25 வயதுக்கு மேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான். பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைத் துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனே அவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்தில் அவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத ரூபமாகவே தென்பட்டது.

என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் “ரயில் எப்போது வரப் போகிறது?” என்று கேட்டான்.

“இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில் தாமதித்து வரப் போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்” என்றேன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம் உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். “உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப் பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே?” என்று கேட்டான்.

அதற்கு நான்:- “சிறு பிராயத்திலேயே நான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று” என்றேன்.

“காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?” என்று அந்த முஸல்மான் கேட்டான்.

அதற்கு நான்:- “ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாய ராஜாக்கள் பாரசீக பாஷையிலே தான் பெரும்பாலும் ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டு அவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்த தேசத்துப் பாஷையாகிய ஹிந்தியைப் பொது பாஷையாகக்கிக் கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதை ஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப் பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக்கொண்டு பல பார்ஸி, அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள் பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்று பெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷை என்று பொருள். எனக்கு ஹிந்திதான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படி ஹிந்தி பாஷையில் பார்ஸி, அரபிச் சொற்கள் சேர்ந்ததேயாகு மாதலால் தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன். இது நிற்க. ‘நீ வருத்தப்பட்டுக்கொண்டிருந்த காரணம் யாது?’என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன். இதுகேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்:-

“சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம் சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என்மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தைத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்து போகும்வரை மறக்க மாட்டேன்” என்றான்.

“முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும். தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்” என்றேன்.

அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:

“எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம். சிந்து மாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம் அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம். நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும்போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய ‘லாட்டரி’ ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத் தொடங்கிற்று. என் பிதா நல்ல புத்திமான். நஷ்டம் வரத் தொடங்கிய மாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார். நான் பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய் விட்டார். நான் ஒரே பிள்ளையாதலால் அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்ய எனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்தது அன்றி, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகு முன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்து வெளிக்குடும்பங்களுக்குப் போய்விடக் கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்து கொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரியென்றும், ஒரேயடியாக மூவரையும் மணம்புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அங்கு என் தாயாருடைய அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்துவைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன். அவரும் என் சொத்தில் தம்மால் இயன்றவரை இரண்டு, மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம்- கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு கடைசியில் குடி மிகுதியால் குடல் வெடித்துச் செத்துப்போனார். பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி. இந்த விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்வது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று. அதோ- பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவே யிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை யில்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதியில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் அம்மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப்படுகிறது. நான் என்ன செய்வேன்?

இதனிடையே நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி, ‘அட! இஸ்மேல்கான்! உன் பத்தினியார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்துகொள்ள விட்டுவிடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக் கொள். உன் துக்கம் தீரும்’ என்றார். நான் அந்தக் கனவைத் தெய்வ சாஸனமாகவே நம்புகிறேன். நம்முடைய மனதில் தோன்றுவதுதான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும் நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளையென்று நான் கருதுகிறேன். ஆனால் இந்த மூன்று ஸ்திரீகளிடமும் ஸமானமான பிரியம் இருக்கிறது. அவர்களும் என்னிடம் ஸமமான காதல் கொண்டிருக்கிறார்களென்றும் நினைக்கிறேன். யாரைத் தள்ளுவது, யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன்” என்று முகம்மதியப் பிரபுவாகிய இஸ்மேல்கான் சொன்னான்.

இதற்குள் ரயில், ஸ்டேஷனுக்குள் வருகிற சப்தம் கேட்டது. அவன் திடுக்கென்றெழுந்து ‘ஸலாம்! ஸலாம்!’ என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும் ‘நல்ல வேளை இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்புச் சொல்லுமுன் ரயில் வந்ததே!’ என்று மகிழ்ச்சி கொண்டு ரயிலேறப் போய்விட்டேன். முகம்மது நபி கனவில் செய்த கட்டளைப்படியே அவன் நடந்து கொள்வானென்று நம்புகிறேன்.

(சுதேசமித்திரன் 22-5-1920)

***

முகமதிய ஸ்திரீகளின் நிலைமை


இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் இஸ்லாம் மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உடையவர். எதிர்காலத்தில் இஸ்லாம் மதம் மிகுந்த மகிமையும் ஒளியும் உடையதாய் உலகத்துக்கு எண்ணிறந்த நன்மைகள் செய்யப் போகிறதென்று இவர் உறுதியாக நம்புகிறார். இவரது நம்பிக்கை நிறைவேறு மென்பதற்கு பலஅடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் பல அடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் தோன்றுவதால், நானும் இவருடைய கருத்தை அங்கீகாரம் செய்கிறேன். ஆதலால், இவருக்கும் எனக்கும் மிகுந்த நட்பேற்பட்டு வளர்ந்து வருகிறது.

இவர் அன்று மாலை என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி:-

“சென்ற 22-5-20-ல் சுதேசமித்திரன் பத்திரிகை 7-ம் க்கத்தில் ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே? அது மெய்யாகவே நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதை தானா?” என்றார்.

“வெறும் கற்பனை” என்று நான் சொன்னேன்.

“என்ன கருத்துடன் எழுதினீர்?” என்று அவர் கேட்டார்.

அதற்கு நான்:- “பொதுவாக நான் கதைகளெழுதும் போதும், வெறுமே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்களெழுதுவானேன்? கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனிலும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன. அவ்வாறே இந்த ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதினின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படி கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும்” என்றேன்.

அப்போது அந்த முஸ்லீம் நண்பர்:- “அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது” என்றார்.

“என்ன பிழை?” என்று கேட்டேன்.

“அக் கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்துகொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி ‘ஹராம்’ (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லீமும் மணம் புரிந்துகொள்ளக் கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை” என்று அந்த முகம்மதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்:- “சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்ளே உண்டாதலால், அதுபோலவே முகம்மதியர்களுக்குள்ளேயே இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன்” என்றேன்.

(‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையில் நான் மேலே கூறிய சாதாரணத் தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றி மேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லாஹூத்த ஆலா அருள் புரிவாராக.)

இதிலிருந்து சம்பாஷணை பொதுவாக முகமதிய விவகாரங்களின் விஷயத்தைக் குறித்து நடைபெறலாயிற்று. அப்பால் முகம்மதிய மாதர்களின் ஸ்தானத்தைக் குறித்துப் பேசலானோம்.

என்னுடனே ஒரு ஹிந்து நண்பர் இருந்தார். அவர் அந்த முஸ்லீம் நண்பரை நோக்கி:- “உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய (கோஷா) வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?” என்று கேட்டார்.

அது கேட்டு அந்த முகம்மதிய நண்பர்:- “முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலகிவஸல்லா) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய் விட்டது. பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்” என்றார். அப்போது நான் “மதவிஷயங்களை அதாவது அல்லாவிடம் செலுத்த வேண்டிய பக்தி முதலிய விஷயங்களைத் தவிர, விவாகம், ஸ்திரீகளை நடத்த வேண்டிய மாதிரி முதலிய ஜனசமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாமன்றோ?” என்று கேட்டேன்.

“அங்ஙனம் ஆசார விஷயங்களிலேகூடமாறுதல்கள் செய்ய எங்கள் சாஸ்திரங்கள் இடங்கொடுக்கவில்லை!” என்று அந்த முஸ்லீம் நண்பர் சொன்னார்.

“எந்த சாஸ்திரங்களுமே ஆசார நியமங்களில், அதாவது நம்மால் விதிக்கப்பட்ட புதிய ஆசார முறையில் அதற்குப் பிறகு யாதொரு மாறுதலும் ஏற்படக் கூடாதென்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால் அதன்படி எங்கும் நடப்பதில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா ஜன சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் எல்லா மதஸ்தர்களுக்குள்ளும் காலத்துக்குக் காலம் ஆசாரங்களில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன” என்று நான் சொன்னேன்.

“புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சில முகம்மதிய நபியின் காலத்தில் மாறவில்லையோ? அது போல் முகம்மது நபியின் காலத்தில் ஏற்பட்ட ஆசாரங்களை அதன் பிறகு மாற்றக் கூடாதோ?” என்று என் ஹிந்து நண்பர் கேட்டார்.

அது கேட்ட என் முஸ்லீம் நண்பர்: “'கூடாது. ஏனென்றால் முகம்மது தான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை” என்றார்.

“முந்திய நபிகளின் கட்டளைகளும் கடவுளுடைய நேரான கட்டளைகளேயன்றி அந்தந்த நபிகளின் சொந்தக் கருத்துக்களல்ல என்பதை இஸ்லாமானவர்கள் அங்கீகாரம் செய்கிறார்கள். காலத்தின் மாறுதலுக்கிணங்க, அல்லா, தன் பழைய கட்டளைகளை மாற்றி ஒவ்வொரு புதிய நபி மூலமாகவும் புதிய கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்; எனவே, முகம்மது நபி இருந்த காலத்துக்கும் தேசத்துக்கும் பொருந்த அவர் மூலமாகப் புதிய கட்டளைகள் கொடுக்கப்பட்டன. மதக்கொள்கைகள் எக்காலத்துக்கும் எந்த தேசத்திற்கும் பொது. ஆதலால் அவற்றை மாற்றக் கூடாது. வெறுமே ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்களை காலதேசங்களுக்குப் பொருந்தும்படி மாற்றலாமென்று முகம்மது நபி சொல்லவில்லையா?” என்று அந்த ஹிந்து நண்பர் கேட்டார்.

“அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள் உத்தரவு கொடுக்கவில்லை” என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

“உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமோ? நீங்கள் கொரான் முழுதும் வாசித்திருக்கிறீர்களோ?” என்று நான் கேட்டேன்.

அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- “நான் கொரான் முழுதும் ஓதியதில்லை. என் சுற்றத்தாரில் சிலர் கொரான் முற்றிலும் ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்” என்றார். பிறகு இந்த விஷயத்தை விட்டுவிட்டோம்.

அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரை நோக்கி:- “தென் ஜில்லாக்களிலே தமிழ்ப் பேசும் முஸ்லீம் (ராவுத்தர்) களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! அதன் காரணம் யாது?” என்று கேட்டேன். “இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்” என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

“எனினும் பலர் அதைப் பரிபாலிக்கவில்லையே? அதன் முகாந்திரம் யாது?” என்று கேட்டேன்.

“வேத சாஸ்திர விதிகளில் அவர் செலுத்தக் கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்கு முகாந்திரம்” என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

“அப்படியிருந்தும், தென் ஜில்லாக்களிலுள்ள இந்த முஸ்லீம்கள் மற்றப் பக்கத்து முஸ்லீம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறிதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யக்ஷ மன்றோ? அங்ஙனமாக, இவர்கள் கொரான் விதிகளில் போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுதல் நியாயம் அன்று. இந்த கோஷா விஷயத்தில் மாத்திரம் இந்த தேச சம்பிரதாயங்களைத் தழுவி நடக்கிறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்திமான்களும் அவதாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தை இக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆதலால் மதபக்தி முதலிய விஷயங்களில் மாறுதல்கள் கூடாதேயொழிய, ஆசாரங்களில் காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடும் என்று நினைக்கிறேன்” என்று நான் சொன்னேன்.

இது கேட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீளவும்:- “நான் நன்றாகக் கொரான் ஓதியவர்களை விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு சொல்லுகிறேன்” என்றார். “இடைக்காலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிக முரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாத் கொரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம் விசாரணை செய்யுங்கள்” என்றேன்.

“சரி, அங்ஙனமே செய்கிறேன்” என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக்கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, கல்வி கேள்விகளில் உயர்ந்த தேர்ச்சியுடையோராய், தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும் தாங்களே உபந்நியாஸங்கள் முதலியன நடத்தியும், உலகத்து மற்ற மாதர்களைப்போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி, விடுதலை, ஆண்களுடன் சமத்துவம் இவற்றை எய்தி மேன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப் பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்.

அப்பால் எங்கள் காலைக் கூட்டம் கலைந்துவிட்டது. என் முஸ்லீம் நண்பரும் தம் வீட்டுக்குப் போயினர்.

(சுதேசமித்திரன்)

No comments:

Post a Comment