16/11/2021

குறி சாரும் வரை...

-திருநின்றவூர் இரவிக்குமார்
 
சர்தார் உதம் சிங்
(பிறப்பு: 1899 டிச.  26 - பலிதானம்: 1940 ஜூலை 31)


நம் உண்மையான ஒற்றுமையானது நாட்டுக்கு தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளும் ஒற்றுமையில் தான் உள்ளது

- மகரிஷி அரவிந்தர்

அவரை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்ட போது,  “நான் சாவதற்கு அஞ்சவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய இடத்திற்கு ஆயிரக்கணக்கில் என் நாட்டவர் வருவார்கள். நாற்றம் பிடித்த நாய்களான உங்களை அடித்து விரட்டி, தேசத்தை விடுதலை பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று சொன்னார். 

தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்ட பின்பு அதற்குள் தலையை நுழைத்தார்.

அவர் - உதாம் சிங், ஷேர் சிங், உதி சிங், உதான் சிங், பாவா, உத்தம் சிங், உ சி சித்து, மோகன் சிங், உ சி ஆசாத், பிராங்க் பிரேசில், சிங் ஆஸாத், முகம்மது சிங் ஆசாத் - என்று தன் வாழ்நாளில் பல பெயர்களில் அறியப்பட்ட சர்தார் உதம் சிங். 

‘உதம்’ என்றால் பஞ்சாபி மொழியில் எழுச்சி, கிளர்ச்சி, எரிமலை வெடிப்பு என்று பொருள்.
 
1919 ஏப்ரல் 13 தேதி, பஞ்சாப்பில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பைசாகி பண்டிகையைக் கொண்டாடக் கூடியிருந்த அப்பாவி பொதுமக்களை- ஆண்கள், பெண்கள், குழந்தைகளை- பிரிட்டிஷ் அரசு சுட்டுக் கொன்றது.

ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்;  ஆயிரத்து ஐநூறு பேர்கள் படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டிஷ் அரசோ செத்தவர்கள் வெறும் 379 பேர், காயமடைந்தவர்கள் ஆயிரம் பேர்கள் இருக்கலாம் என்று கூறியது.

அந்த மைதானத்தில் அப்போது 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள் என்று கூறுகிறார் அனிதா ஆனந்த் என்ற பெண்மணி. அவர் எழுதிய  ‘பொறுமையான கொலையாளி’  ( Patient Assassin - 2019 ) என்ற நூலில் இத்தகவல் உள்ளது.

அப்போது அந்த மைதானத்தில் உதம் சிங் இருந்ததாகவும் படுகொலைகளை நேரில் பார்த்ததால் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டு, காரணமானவரை சுட்டுக் கொல்ல இருபத்தியோரு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி குறியை தாக்கி பழி முடிந்ததாகவும் எழுதுகிறார், அனிதா ஆனந்த். இவரது தாத்தா ஈஸ்வர் தாஸ் ஆனந்த், அப்போது ஜாலியன் வாலாபாக் கில் படுகொலை நடந்த மைதானத்தில் இருந்தவர்.

இரண்டு டையர்கள் மிக முக்கிய பதவியில் அப்போது இருந்தனர். அப்போது பஞ்சாப் மாகாணத்தின் துணை ஆளுநராக இருந்தவர் சர் மைக்கேல் பிரான்சிஸ் ஓ டையர். இவர்தான் கூட்டத்தைக் கலைக்க சுடும்படி உத்தரவிட்டவர். மற்றவர் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டையர். இவர் பிரிகேடியர் ஜெனரல், களத்தில் துப்பாக்கிச் சூட்டை முன்னின்று நடத்தியவர்;  ‘சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்’ என்று கொக்கரித்தவர். பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மனநலம் பிறழ்ந்தவராக மருத்துவமனையில் காலமானார். 

படுகொலைக்கு உத்தரவிட்ட மூலகாரணமானவரான ஆளுநர் ஓ டையரைத் தான் உத்தம்சிங் சுட்டுக்கொன்று, இந்திய விடுதலை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் என்ற கிராமத்தில் 1899 டிசம்பர் 26 பிறந்தவர் உதம் சிங். தாயார் பெயர் நரேன் கவுர். தந்தை டெஹல் சிங். ‘காம்போஜ்’ என்ற பட்டியலினத்தவர். பொதுக் கிணற்றில்/ குளத்தில் குடிநீர் எடுக்க, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாதவர். தேசிய உணர்வினாலும் தளராத முயற்சியினாலும் வரலாற்றில், தேச பக்தர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

பிறக்கும்போது அவருக்கு இடப்பட்ட பெயர் ஷேர் சிங். அவரது அண்ணனின் பெயர் சாது சிங். மூன்று வயதில் தாயும் ஏழு வயதில் தந்தையும் காலமாகி விட அமிர்தசரஸில் இருந்த மத்திய கால்சா அனாதை இல்லத்தில் இருவரையும் இவர்களது மாமா சேர்த்துவிட்டார். அங்குதான் அவருக்கு உதம் சிங் என்று பெயர் பதியப்பட்டது. 1917 ல் அவரது அண்ணன் சாது சிங்கும் இறந்து விட்டார்.

அனாதை இல்லத்தில் தச்சுத்தொழில் கற்றார். தன் அண்ணன் இறந்த பிறகு பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். பெருவாரியாக பட்டியலின சீக்கியர்களை கொண்ட சீக் பயோனியர் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். சில வாரங்களில் இவர் வேலைக்கு லாயக்கில்லை என்று அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் அவர் தச்சராக ராணுவப் பணியில் மீண்டும் சேர்ந்து பாக்தாத் நகரில் ஓராண்டுக் காலம் பணிபுரிந்தார்.

வயிற்றுப்பாட்டுக்காக கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டா ரயில்வே கம்பெனியில் பணிக்குச் சேர்ந்தாலும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பழிவாங்க வேண்டும் என உணர்வு உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு கதார் கட்சியின் தொடர்பு ஏற்பட்டது. 

‘கதார்’ என்ற பஞ்சாபி வார்த்தைக்கு கிளர்ச்சி, புரட்சி என்று பொருள். சோகன் சிங் பாக்னா என்பவரால் துவங்கப்பட்ட அதில் ஏராளமான பஞ்சாபிகள் உறுப்பினராக இருந்தனர். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ என்று பல நாடுகளில் அதன் ஆதரவாளர்கள் இருந்தனர்.

‘ஆட்கள் தேவை’ என்ற, கதார் கட்சியின் வெளியீடு தேசபக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

தேவை: இந்துஸ்தானத்தில் கதார் கட்சியை வளர்க்க உத்வேகமும் சாகச உணர்வும் கொண்ட வீரர்கள்.

ஊதியம்: மரணம்

விருது: தியாகி

ஓய்வூதியம்: சுதந்திரம்

பணிக்களம்: இந்துஸ்தான்

-மேற்கண்டது கதார் கட்சியை பற்றிய சுருக்கமான, ஆனால் சிறந்த அறிமுகம். அதில் இணைந்து பணியாற்றினார் உதம் சிங்.

அமைப்பின் பணிக்காக அவர் இங்கிலாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். அப்படித்தான் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார்.

அங்கு டக்லஸ் விமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். சில காலத்திற்குப் பிறகு ஃபோர்டு கார் நிறுவனத்தில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது தான் லூமி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னொரு கடற்பயணத்தின் போது அவளை விட்டுவிட்டுச் சென்றதாகவும் பிறகு அவளுடன் சேரவில்லை என்றும் கூறப்படுகிறது (ஆதாரம்: பொறுமையான கொலையாளி). அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மொராக்கோ, ரஷ்யா, பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளில் கட்சிப் பணிக்காகச் சென்றுள்ளார் என்று கட்சியின் வரலாறு கூறுகிறது. ஆஸ்திரேலியா தவிர மற்ற உலக நாடுகள் அனைத்திற்கும் அவர் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.

அவருக்கு பல்வேறு முகங்கள் உண்டு. வேடங்கள் உண்டு. யானைச் சிறுவன் (Elephant Boy - 1936) என்ற ஹாலிவுட் சினிமாவில் கூட நடித்துள்ளார். நீண்டநாட்கள் ஒரு இடத்தில் தங்க மாட்டார். விலாசம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் மாறாதது ஜாலியன் வாலாபாக் கனல் மட்டுமே.

அந்த நாளும் வந்தது. அது 1940 மார்ச் 13. அன்று மாலை லண்டனிலுள்ள காக்ஸ்சன் அரங்கில், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பில்  ‘ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. (80 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை பேசுபொருளாக இருப்பதில் இருந்தே வெள்ளை நிறத்தவர்களின் சதியைப் புரிந்து கொள்ளலாம்).

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட துணை ஆளுநர் மைக்கேல் ஓ டையர் இங்கிலாந்து நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று கூறப்பட்டு, ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டு, அரசின் வெகுமதி பெற்று சுகமாக வாழ்ந்து வந்தார். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவருக்கு முன்பு பஞ்சாப் ஆளுநராக இருந்தவர், இந்திய அரசுக்கான செயலாளர், முன்னாள் பஞ்சாப் ஆளுநர் என பல ஆங்கில பிரமுகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த உரை அரங்கிற்கு உதம் சிங்கும் சென்றார். ஓ டையருக்கு வெகு அருகில் சென்று இருபத்தியோரு ஆண்டுகளாக தன் நெஞ்சில் இருந்த கனலை அவன் நெஞ்சில் இறக்கினார். குண்டடிபட்ட ஓ டையர் அங்கேயே மாண்டான். உதம் சிங் ஓடாமல் அங்கேயே நின்றார்.

கண்துடைப்பு விசாரணை 1940 ஜூன் நான்காம் நாள் தொடங்கியது. “ஏன் செய்தாய்?” என்று கேட்கப்பட்டது.

“இந்திய தெருக்களில் நூற்றுக்கணக்கான ஏழைப் பெண்களையும் குழந்தைகளையும் சுட்டு வீழ்த்திய பிணக்குவியலின் மீதே உங்களுடைய ஜனநாயக, கிறிஸ்துவக் கொடி பறக்கிறது. நான் ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிரானவன். என் எதிர்ப்பைக் காட்டுகிறேன். இதுவே நான் சொல்ல விரும்பியது. மரண தண்டனை பற்றி நான் கவலைப்படவில்லை. அது எனக்கு பொருட்டே அல்ல. சாவது பற்றியோ வேறு எது பற்றியோ எனக்கு கவலையில்லை.” -என்று சொன்னார் உதம்சிங். 

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்லும் போது,  ‘புரட்சி வாழ்க ! ஆங்கில ஏகாதிபத்தியம் வீழ்க! நாற்றம் பிடித்த வெள்ளையர் நாய்கள் ஒழிக!’  என்று கோஷம் எழுப்பினார்.

சிறையிலிருந்து தப்ப முயன்றார். ஆனால் பிரிட்டிஷ் உளவாளியாகச் செயல்பட்ட துரோகியால் பிடிபட்டார். சிறையில் எல்லா விதமான கொடுமைகளையும் அனுபவித்த போதிலும் அவர் மனம் தெளிவாகவும் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருந்ததை சிறையிலிருந்து நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள் காட்டுகின்றன.

பொதுவாக, அவர் ஆங்கிலேயர்களுக்கு - ஒட்டுமொத்த ஆங்கிலேய சமுதாயத்திற்கு - எதிரானவர் என்ற பிம்பம் இருக்கிறது. அது தவறு.

உதம் சிங்கின் கோபம், இந்தியாவில் இருந்த ஆங்கில அரசின் மீதே அன்றி ஆங்கிலேயர் சமுதாயத்தின் மீது அல்ல. ‘நான் பிரிட்டிஷ் மக்களுக்கு எதிரானவன் இல்லை. எனக்கு இந்தியாவில் உள்ள நண்பர்களை விட மிக அதிகமான நண்பர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலேயர்கள்தான். இங்கிலாந்து தொழிலாளர்கள் மீது எனக்கு எப்போதும் மிகவும் பரிவும் பாசமும் உண்டு. நான் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரானவன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங்கின் முன்னுரையுடன் வெளிவந்த சிக்கந்தர் சிங் எழுதிய ‘உதம்சிங்: சிறந்த தேசபக்தரும் தியாகியும்’ நூல் சுட்டிக் காட்டுகிறது.

ஆனால், உதம்சிங் ஒட்டுமொத்த ஆங்கிலேயர்களுக்கு எதிரானவர் என்று காந்தி, நேரு உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கருதினார்கள். அவ்வாறே சித்தரித்தார்கள். உதம் சிங்கின் செயலை நியாயப்படுத்த மறுத்தார்கள். அவரைக் கண்டனம் செய்தார்கள். இதே போன்று,  ‘நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல. இந்தியா விடுதலை பெற வேண்டும். ஆங்கில அரசு விலக வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆங்கில அரசுக்குத் தான் நான் எதிரானவன்’  என்று காந்திஜி சொன்னபோது அவரை மகாத்மா என்று கொண்டாடினார்கள்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை  ‘அரக்கத்தனமான நிகழ்வு’ என்று 1920-ல் வின்சென்ட் சர்ச்சில் குறிப்பிட்டார். 1997-ல் இந்தியாவுக்கு வந்த எலிசபெத் ராணி அதுவொரு ‘சங்கடமான நிகழ்வு’ என்று கூறினார். ஆனால் உடன் வந்த அவரது கணவர் பிலிப், சாவு எண்ணிக்கை மிகைப்படுத்திப் காட்டப்படுகிறது, என்று கூறி திசை திருப்பினார். பிரதமராவதற்கு முன்பு டோனி பிளேர் இது  ‘காலனி ஆதிக்கத்தின் மோசமான விளைவுகள்’ என்று கூறியுள்ளார்.

2013ல் இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஜாலியன்வாலா பாக் சென்றார்;  “பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானகரமான நிகழ்வு. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்றார். அவர் மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தமும் தெரிவிக்கவில்லை. மாறாக,  “நான் பிறப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது. வரலாற்றில் பின்னோக்கிச் சென்று நிகழ்ந்தவற்றிக்கு மன்னிப்புக் கோருவது என்பது சரியான செயலன்று”  என்று கூறினார். ஆனால், அவர் அங்கு வந்ததே மன்னிப்புக் கோரியதாக தான் அர்த்தம் என்று ஜால்ராக்கள் வேகமாக சப்தமிட்டன.

1940 ஜூலை 31 நாள் உதம் சிங்கைத் தூக்கிலிட்டது ஆங்கில ஏகாதிபத்தியம். அப்போது அவருக்கு வயது 40. அவர் குருவாகக் கருதிய பகத் சிங் போலவே இவரும் தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டு, தலையை நுழைத்தார். 

35 ஆண்டுகள் கழித்து, 1974 ஜுலை 19 தேதி, ஆங்கில அரசு அவரது சவப்பெட்டியைத் தோண்டி எடுத்து இந்தியாவுக்கு அனுப்பியது.

அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் சங்கர் தயாள் சர்மா (பின்னாளில் ஜனாதிபதி ஆனவர்), அப்போதைய பஞ்சாப் முதல்வராக இருந்த ஜெயில் சிங் (பின்னாளில் இவரும் ஜனாதிபதியானார்) ஆகியோர் அந்த தியாகியின் சவப்பெட்டியை உரிய மரியாதையுடன் வாங்கினார்கள். பிரதமராக இருந்த இந்திரா காந்தி மலர் வளையம் வைத்து வணங்கினார்.

பஞ்சாப்பின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக அவர் பிறந்த கிராமமான சுனாமில் எரியூட்டப்பட்டது. அஸ்தி கங்கையில் சிறிதளவு கரைக்கப்பட்டது; ஜாலியன் வாலாபாக்கில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

2018 மார்ச் மாதம் ஜாலியன் வாலாபாக்கின் நுழைவாயிலில் உதம் சிங்கிற்கு பத்தடி உயர சிலையை (அப்போதைய) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள் அவரது நினைவு நாளுக்கு பொது விடுமுறை அறிவித்து இன்றும் நினைவு கூர்கின்றனர். மாயாவதி அரசு உத்தர பிரதேசத்தில் (இப்போதைய உத்தர்காண்ட் மாநிலத்தில்) உதம் சிங் மாவட்டத்தை ஏற்படுத்தி அவர் மரியாதை செய்தது. இடிபாடுகளிடையே குறுகலாக இருந்த ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை விரிவாக, புதியதாகக்ட் கட்டி சுதந்திரத்தின் அமிர்தோற்சவ (75வது) ஆண்டில், 2021 ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

ஊருக்குப் புறம்பே வைக்கப்பட்டவர் தேசப் பணிக்காக உலகைச் சுற்றி உள்ளார். கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் இன்று பாரத மாதா கோயிலில் சன்னதி கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவ,ர் இன்று மக்கள் மனங்களில் மிக உயர்ந்த நிலையில் இடம் பெற்றுள்ளார். அவர் உதம் சிங் என்ற உத்தம சிங்கன்.


No comments:

Post a Comment