16/11/2021

ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ய ஸ்தலங்கள்

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 63)

இப்போது நமது பாரத நாட்டில் அநேக திவ்ய ஸ்தலங்கள் உண்டாயிருக்கின்றன. நமது நாட்டில் ஏற்கனவே அநேக திவ்ய க்ஷேத்ரங்களும் புண்ணிய தீர்த்தங்களும் யாத்திரை ஸ்தலங்களும் இருக்கின்றன. நெடுநாளாய் நமது தேசத்தில் 108 விஷ்ணு ஸ்தலங்களும் 1008 சிவஸ்தலங்களும் 50 சக்தி பீடங்களும் 216 கணபதி குஹாத்தியர்கள் க்ஷேத்திரங்களும் இருக்கின்றன. கங்கை, யமுனை, ஸரஸ்வதி, ஸிந்து, நர்மதை, காவேரி முதலான புண்ணிய நதிகளும் குண்டங்களும் தீர்த்தங்களும் இருக்கின்றன. இதுவுமல்லாமல் அநேகமான ஸித்தர்களின் தபோவனங்களும் ஆச்ரமங்களுமிருக்கின்றன. ஜைநர்களுக்கும் பவுத்தர்களுக்கும்கூட நமது பாரத நாட்டில் புண்ணிய க்ஷேத்திரங்களிருக்கின்றன. இதே மாதிரி மஹமதீயர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கூட இருக்கின்றன. இந்த இடங்களெல்லாம் எப்படி புண்ணிய ஸ்தலங்களாகிவிட்டன? ஏதோ ஒரு கால விசேஷத்தில் மஹாதேஜஸ்வியான ஒரு மகான் செய்த தவத்திற்கு மெச்சி கடவுள் அம்மகானுக்கு இஷ்ட பூர்த்தியருளிய இடம் [இவை].

அதேமாதிரி நமது பாரத நாட்டில் ஸ்வதந்திரக் கிளர்ச்சியாரம்பித்துக் கொஞ்சம் நாள்தான் ஆயிற்று. எனினும் அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டாய் விட்டன. இந்தப் புண்ணிய ஸ்தலங்களின் விசேஷம் என்னவென்றால் இவைகள் பாரத நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் பொதுவானவைகள். பாரத நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த தேசபக்தர்களின் ஆச்ரமங்கள் தோன்றியிருக்கின்றன.

ஆமதாபாத்திலிருக்கும் ஸாபர்மதி சிறைச்சாலையை நோக்கும்போது எந்த பாரதனுக்குத்தான்  “இது பாரத பரமபக்தரான மஹாரிஷி ஸ்ரீமான் பாலகங்காதர திலகரின் பொன்னடிகளால் புனிதமாக்கப்பட்ட திவ்விய க்ஷேத்ரம்” என்று தோன்றாது? மகாராஷ்டிர பாஷையில் பேர் பெற்ற ‘கால்’ பத்திராதிபரான ஸ்ரீமான் சிவராம மகாதேவ பராஞ்ஜபி 101 நாள் வாசம் செய்த ஸித்தாச்ரமமும் இந்த ஸாபர்மதி சிறையே என்று ஞாபகப்படுத்திக் கொள்ளாதவர்கள் யார்? அல்லது அலிப்பூர் சிறைச்சாலையைப் பார்க்கும்போதே பாரத தேசபக்த சிரோன்மணியான ஸ்ரீமான் அரவிந்த கோஷுக்கு ஸ்ரீ பகவான் தனது திவ்விய ஸ்வரூபத்தைக் காட்டிக் காத்து ஆட்கொண்ட மகா பரிசுத்தமான புண்ணிய ஸ்தலமென்று எவன்தான் எண்ணாமலிருப்பான்? கோயம்புத்தூர் சிறைச்சாலையைப் பார்க்கப் போகின்றவர்களில் யார்தான் நமது தக்ஷிண தேசாபிமானச் சிங்கமான ஸ்ரீயுத சிதம்பரம் பிள்ளையைப் பற்றிச் சிந்திக்காமலிருக்க முடியும்?

நமது பாரத நாட்டின் எல்லைக்கு வெளியேயுள்ள பர்மா தேசத்தின் பிரதான பட்டணமான மாண்டலே நகரத்துக் கோட்டைக்குள் செல்பவர்களில் யார்தான் ஸ்ரீயுத லாலா லஜபத் ராயையும் சர்தார் ஸ்ரீ அஜித் ஹிம்ஹரையும் ஸ்ரீமான் அச்வினீ குமார தத்தரையும் ஸமரிசிக்காமலிருப்பார்கள்? பர்மாவின் ஒரு மூலையிலிருக்கும் தாயெட்மேயோவுக்குச் செல்பவர்கள்  ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் பிரபல பத்திராசிரியரான பரம வைதீக வாலிப தேசபக்தரான ஸ்ரீமான் சியாம ஸுந்தர சக்ரவர்த்தியின் பெயரை யார் மறக்க முடியும்? தென்னாப்பிரிக்காவில் திரான்ஸ்வால் நாட்டிலிள்ள ஜொஹானஸ்பர்க் நகரத்திற்கு போகின்றவர்களில் எந்த மனுஷ்யன்தான் ஆத்மசக்தி ஸம்பூரணமாய் நிறைந்த பாரத புத்ரர்களான ஸ்ரீமான் மோ.க.காந்தி, ஜனாப் டாவுத் மஹமத், ஜனாப் அங்கிலயா, ஸ்ரீ ரஸ்தோம்ஜி முதலானவர்களின் நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்து புனிதமாக்கப்பட்ட வீதி இதுதான், அவர் தமது வாஸத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட திவ்ய ஸ்தலமான சிறைச்சாலை இதுவே, நமது பாரத ஸஹோதரிகள் பலவிதத்திலும் இடுக்கண் படுத்தப்பட்டவிடம் இதுவே என்று யாருக்குத்தான் மனசில் ஸ்மரணை வராது?

இப்போது நாம் புதிய திவ்ய ஸ்தலங்களெல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி முடித்துவிடவில்லை. நம்மாலும் முடியாது. ஆனால் நமது பாரத நாட்டின் ஸ்தந்திர முயற்சியில் உண்மையை நம்மவர்களுக்கு போதித்து வந்ததற்காக எத்தனை மகான்கள் எப்படி எப்படிக் கஷ்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை ஒரு தூக்குத் தொகையாய் காட்டினோம்.

எப்படி பாரத ஸ்வராஜ்யப் பெருமுயற்சியானது எல்லோருக்கும் பொதுவான மதமாக இருக்கிறதோ, அப்படியே இந்த திவ்ய ஸ்தலங்களும் பாரதவர்களனைவர்களுக்கும் பொதுவான திவ்ய ஸ்தலங்கள் என்பதே நாம் சொல்ல வந்தது. பிரிடிஷ் தன்னரசானது இன்னும் அனேக ஸ்தலங்களையும் தேசபக்த அடியார்களையும் உலகத்திற்கு தெரிவிக்கப்போகிறது !

ஆஹா ! என்ன மாறுதல் ! என்ன காலத்தின் கோலம் ! சிறையின் கோரங்களும் பயங்கரமான எண்ணங்களும் மாறி ஒவ்வொரு சிறையும் புண்ணிய ஸ்தலமாய் விட்டது ! உலகத்தில் ஸ்வதந்திர ஸ்தாபனம் செய்ய ஸ்ரீ பகவான் திருவவதரித்தருளியபோது அவர் ஜன்மபூமி கம்ஸனுடைய சிறைச்சாலை; அதையொட்டியே நவீன பாரதக் கிளர்ச்சியும் மஹான்களின் சிறைவாசத்தால் நாட்டினில் பலப்பட்டுக் கொண்டே வருகிறது. நமது பாரத நாட்டினர்களின் மீட்சி எனும் பெருந்தவ முயற்சியில் பல புண்ணிய க்ஷேத்திரங்கள் இதிஹாஸங்களுடன் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன !

-விஜயா, இந்தியா, 8 ஜனவரி 1910

No comments:

Post a Comment