16/11/2021

நாம் என்ன செய்யப் போகிறோம்?

-பி.ஆர்.மகாதேவன்

இருளர் சமுதாய மக்கள்

அறிமுகம்

கடந்த தீபாவளியை ஒட்டி, ஓடிடி தளத்தில் வெளியான, நடிகர் சூர்யாவின் தயாரிப்பான ‘ஜெய் பீம்’ திரைப்படம், தமிழகத்தில் பரவலான வரவேற்பையும் கடும் விமர்சனங்களையும் ஒருசேரச் சந்தித்திருக்கிறது.

இருளர் ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞர் காவல்துறையினரால் வழக்கு விசாரணையில் கொல்லப்பட்டதையும், அதைக் கேள்வி கேட்டு நியாயம் கிடைக்கச் செய்த வழக்குரைஞரையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், தேவையின்றி, ஹிந்தி மொழி மீதான வெறுப்பு, பாமக மற்றும் வன்னியர் ஜாதி மீதான வெறுப்பு, ஹிந்து சமய நம்பிக்கைகள் அவமதிப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன; இடதுசாரிகள் மட்டுமே அடித்தள மக்களின் பாதுகாவலன் என்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

உண்மையில் இவை இல்லாமல், உண்மைக்கதையை மட்டும் படமாக எடுத்திருந்தாலே, அனைவராலும் பாராட்டப்படும், குறையில்லாத திரைப்படமாக ‘ஜெய் பீம்’ விளங்கியிருக்கும். ஆனால், அண்மைக்காலமாக, நடிகர் சூர்யாவின் போக்கு தேசநலனுக்கு எதிரானதாக இருந்து வருவது கவலை அளிக்கிறது. 

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை முன்வைத்து, அது மறைமுகமாகப் பேசும் அரசியலையும், அதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கும் மதமாற்றக் கும்பல்களையும் ஆராய்கிறார்கள், எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமூக சேவகர் திரு. வி.வி.பாலா ஆகியோர். சுய ஆய்வுக்கு வித்திடும், அவர்களது முகநூல் பக்க கட்டுரைகள் இவை...

-ஆசிரியர் குழு
***
பொய்களின் முதுகில் ஏறி, போலிகள் வலம்!

நம் சமூகம் அதிக அக்கறை கொடுத்துக் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் பற்றி ‘ஜெய்பீம்’ திரைப்படம் பேசியிருக்கிறது. ஆனால், அவற்றின் உண்மைக் காரணங்களை அது துளியும் கணக்கில் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், சம்பந்தமே இல்லாமல், மொழி, ஜாதி, மத வன்மத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. எனவே பேசா விஷயத்தைப் பேசிவிட்ட ஒரே காரணத்துக்காக அந்தத் திரைப்படக் குழுவை எந்தவகையிலும் பாராட்டவே முடியாது.

போலீஸ் அராஜகம் என்பது இவர்களுக்கு மட்டுமே நடக்கும் கொடுமை இல்லை. எனவே அதுபற்றி இந்தப் படம் சார்ந்து பேச எதுவும் இல்லை. யாராக இருந்தாலும் அடிக்கக் கூடாது; சிறையில் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா முழு நேரமும் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்; முதல் தகவல் அறிக்கை பதிவானால் எப்படியாவது தீர்வு கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும்- என சில பொதுவான வழிகளைச் சொல்லலாம். காவல் துறை (குறிப்பாக உயர் அதிகாரிகள்) எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர் என அரசியல் பிரமுகர்களிடமிருந்து கணிசமான தொகையைச் சேகரித்து திருட்டுப் பொருட்களுக்கு ஈடுகட்டச் சொல்லலாம்.

ஆனால், நரிக்குறவர், இருளர், குரும்பர் போன்ற மலைவாசி, வனவாசி சமூகங்களின் உண்மைப் பிரச்னை என்பது மிகவும் பெரியது.

உண்மையில் இவர்களெல்லாம் வயலும் வயல் சார்ந்த சமூக அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள் (மீனவர்களும் இவ்வகையானவர்களே. ஆனால், அவர்கள் ஓரளவுக்கு பிற தொலைதூர சமூகங்களைவிட நிலவுடமை சமூகங்களுக்கு நெருக்கமானவர்கள்.)

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாக இவர்கள் தத்தமது வாழிடங்கள், இறை நம்பிக்கைகள், மொழி, தொழில்கள் ஆகியவற்றில் எந்தவித பேரரசு அதிகார மையத்தின் ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்தவர்கள். இது போன்ற எந்தவொரு சமூகக் குழுவுமே (இந்து சமூக அளவில் ஜாதிகளுமே) வெளியில் இருந்து எந்தவொரு ஆதிக்க சக்தியும் ஆக்கிரமிக்காத வரை தமக்கான வாழ்க்கையின் லாப நஷ்டங்களோடு தமக்கான மதிப்பீடுகளோடு சுதந்தரமாக வாழ்ந்து வந்தவர்களே.

கிறிஸ்தவம் தனது ஒற்றை இறைக் கொள்கையின் மூலமும் பொருளாதார, சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு அராஜகங்கள் மூலமும் உலகை அடிமைப்படுத்த ஆரம்பித்த பின்னர், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என பெரும் கண்டங்களில் இருந்த பூர்வ குடிகள் அனைவருமே மிகக் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டனர். இந்த அழித்தொழிப்புக்கு கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய இரண்டு முக்கிய ஆயுதங்களில் ஒன்று கல்வி. அதாவது கிறிஸ்தவக் கல்வி.

‘ஜெய் பீம்’ திரைப்படம் முன்வைக்கும் மீட்சியான கல்வியும் இப்படியானதுதான். இன்னும் உடைத்துச் சொல்வதென்றால், இந்தப் படத்தின் வெளியீட்டின்போது தயாரிப்பாளர் தூக்கிக் கொடுத்திருக்கும் ஒரு கோடி ரூபாய் என்பது, மதமாற்றும் நோக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு கிறிஸ்தவ நிறுவனத்துக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. உண்மையில் இனிமேல் அந்தக் குழந்தைகள் பைபிள் படிக்க ஆரம்பிப்பார்கள். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியானது அந்தக் குழந்தை பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதாகக் காட்டுவதன் நாசூக்கான வடிவம்தான் இது.

இந்து சமூகத்திலும் மன்னர்கள் இந்த தொலைதூர சமூகங்களுடைய வாழ்வியலில் ஊடுருவியதுண்டு. காடுகள் விளைநிலங்களாக்கப்பட்டபோது இந்த வனவாசி, மலைவாசிகள் நிச்சயம் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால், கிறிஸ்தவ காலனி அராஜகத்தை ஒப்பிடுகையில் இந்து மன்னர்களின் நடவடிக்கைகள் மிகவும் மிதமானவை.

இந்து சனாதன தர்மம் ஒவ்வொரு சமூகக் குழுவையும் அவர்களுடைய கலாசாரம், தொழில், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றோடு அங்கீகரிக்கும் குணம் கொண்டதாக இருந்ததால் உலகில் இந்துஸ்தானில் மட்டுமே பூர்வ குடிகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்புவரைகூட தமது வாழிடங்களில் தமக்கான சுய உரிமைகளுடன் அடையாளங்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இன்று இருளர், குறவர், குரும்பர் போன்ற சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்பவை பிரிட்டிஷ் பாணி அதிகார வர்க்க அரசமைப்பின் பின்விளைவுகள் மட்டுமே. அதிலும் தமிழகம் என்பது திராவிட இயக்கம் என்ற பெயரில் பிரிட்டிஷ் அடிவருடிகளால் ஆரம்பிக்கப்பட்டு, இந்துவிரோத- இந்திய விரோத சக்திகளினால் ஆட்டுவிக்கப்பட்டு வந்த மாநிலம். நாகாலந்து போன்ற கிறிஸ்த மாநிலத்துக்கும் காஷ்மீர் போன்ற இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்குள்ளான மாநிலத்துக்கும் சற்றும் குறையாத வகையில் சனாதன வேரில் இருந்து துண்டித்துக் கொண்டவர்களால் வழிநடத்தப்படும் மாநிலமே.

குரும்பர், இருளர், குறவர் இனத்தினர் இன்றும் வேட்டையாடுதல், பாம்பு பிடித்தல், தேன் சேகரிப்பு, ஊசி-பாசி விற்பனை என்றுதான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். இவர்களை கோயில் அன்னதான மண்டபங்களில் மட்டுமல்ல, பிற உணவு விடுதிகள், மத்திய, மாநில அலுவலகங்கள் , பள்ளிகள், அமைச்சரவைகள், சட்டசபைகள் என எங்குமே நாம் பார்க்கவே முடிவதில்லை. ரயில்களில் கூட மிகச் சமீப காலம் வரை இருக்கைகளில் அமர்ந்து இவர்கள் பயணித்ததில்லை.

இவர்களுக்கு வேறு எந்த வேலையைச் செய்யவும் நம் ஒட்டுமொத்த சமூகமும் அனுமதித்திருக்கவில்லை. இவர்கள் கையிலிருந்து ஒரு கவளம் உணவை எந்த முற்போக்கு நாயும் வாங்கிச் சாப்பிட்டதில்லை.

இருளர், குரும்பர், குறவர் போன்ற சமூகங்களின் இன்றைய துரதிஷ்டவசமான நிலைக்கு முழுக் காரணமும் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கமே.  ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று பத்து விஷயங்களைப் பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் இவர்களுடைய வேதனையும் ஒடுக்குமுறையுமே இருக்கும். இது முழுக்க முழுக்க திராவிட அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட/நடத்தப்பட்டுவரும் கொடூரங்களே.

உண்மையில் இந்தத் திரைப்படத்தில் இது தொடர்பான விமர்சனம் ஒரு காட்சியிலாவது வந்திருக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக கதாநாயகி அலையும்போது திராவிட இயக்கத்தின் முப்பெரும் விழா கோலாகலமாக நடப்பதாகவும் அவர்களுடைய முப்பெரும் தலைவர்களின் சுவரொட்டி மீது கதாநாயகி வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டுச் செல்வதுபோலவும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாததென்பது, ஈழப் பிரச்னை பற்றிய படத்தில் சிங்களப் பேரினவாதம் பற்றி சிறு குறிப்பும்கூட இல்லாமல், ஏதோ ஒரு ராணுவ வீரன் செய்துவிட்ட தவறுபோல சித்திருப்பதற்குச் சமமானதுதான். அது சரி...  திராவிட ஆதிக்க சக்தியின் அடியாள் வேறு எப்படிப் படம் எடுக்க முடியும்?

இந்தக் கொடுமைக்கு இரண்டாவது முக்கிய காரணம் யார் என்று பார்த்தால், இதுபோன்று நடக்கும் அநீதிகள், குறிப்பாக போலீஸ் அராஜகங்கள் குறித்து முழுவதும் தெரிந்த பின்னரும் இந்த திராவிடக் கட்சிகளுக்கு எடுபிடியாகச் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.

எளிய மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல்களில் முன்னணியில் இருப்பது திராவிடப் பண்ணையார்களும் திராவிட கார்ப்பரேட்களும்தான் என்பது தெரிந்த பின்னரும், அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு கம்யூனிஸ்ட்கள் வாலாட்டி வருகிறார்கள். அதே திராவிடக் கட்சிகளின் போலீஸ் அராஜகம், ஊழல், நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றைப் பற்றி முழுவதும் தெரிந்த பின்னரும் அவர்கள் காலடியிலேயே விழுந்து புரள்கிறார்கள்.

ராஜாக்கண்ணு விவகாரம் தொடங்கி, தமிழகத்தில் நடக்கும் போலீஸ் அராஜகங்களை எதிர்த்துப் போராடும் எளிய கம்யூனிஸ்ட்கள் வணங்கத் தக்கவர்களே. ஆனால் அவர்கள் அப்பாவிகள். தமது தியாகமும் போராட்டக் குணமும் மிக மோசமாக பேரம் பேசப்படுவது குறித்து எந்தவொரு புரிதலும் இல்லாமல் அவர்கள் இருந்துவருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இயக்கத்தின் பொலிட்பீரோ மேல்மட்ட ரெளடிகளுக்கும், களத்தில் போராடி காவலர்களின் தடியடி முதலியவற்றை ஏற்றுக் கஷ்டப்படும் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு. சுதந்தரத்துக்காக உயிரைக் கொடுத்த திருப்பூர் குமரன் போன்றவர்களுக்கும் - இன்றைய பெயில் வண்டி காங்கிரஸுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது அது.

அதோடு, கம்யூனிஸ்ட்களின் இப்படியான எளிய மக்கள் பக்கத்தில் இருந்து செய்யும் போராட்டங்கள் எல்லாம் மாவோயிஸ- நக்சலிச தீவிரவாதத்தை நோக்கிய பயணத்தின் முதல் கட்டம் என்பதால், இதை எந்த வகையிலும் சாதகமான அம்சமாகப் பார்க்கவே முடியாது. அடிபட்ட ஆட்டுக்கு மருந்துபோடும் கசாப்புக் கடைக்காரனை, அந்த ஆட்டின் மீதான கருணை கொண்டவனாகப் பார்க்க முடியுமா என்ன?

அப்படியாக, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு காவல் துறை அராஜகம் பற்றி முழுக்கத் தெரிந்த பின்னரும் அதற்குக் காரணமான திராவிட அரசியல் கட்சிகள் மீது ஒரு விமர்சனம் கூட இதுவரை வைத்தது கிடையாது. அல்லது திராவிடக் கட்சிகளின் அனுமதி பெற்றுவிட்டு அதை ஒப்புக்குப் பேசும் கயமைக் கூட்டாளிகளாகவே இருந்து வருகிறார்கள்.

மிகச் சிறந்த உதாரணம், சந்துரு என்ற முன்னாள் கிரிமினல் ஜட்ஜ் (ஜட்ஜ் மட்டுமே முன்னாள் ஆகியிருக்கிறது.)  திராவிடக் கட்சிகள் மீது இன்றும் அவர் எந்தப் பெரிய விமர்சனமும் வைப்பதில்லை.

இந்தப் பிரச்னையில் மூன்றாவது குற்றவாளி யார் என்று பார்த்தால், அது இந்து இயக்கங்கள்- இந்துத்துவர்கள்தான். வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் மூலமாக தேசத்தின் பல தொலைதூர - சென்று சேரக் கடினமான பகுதிகளில் அவர்கள் உயிரைக் கொடுத்து சேவை செய்துவருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்களின் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.

வனவாசிகள் மதம் மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் அந்தச் சேவைகளைச் செய்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதில் என்ன தவறு இருக்கிறது? மத மாற்றும் சக்திகள் மட்டும் என்ன, அன்பினாலா அந்த சேவைகளைச் செய்கிறார்கள்? அதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளும் அப்படி அரசியல் சாயம் கொண்டவையாக இருப்பதை எப்படித் தவிர்க்க முடியும்?

எனவே இந்துத்துவ இயக்கங்களின் இந்தச் சேவை - அரசியல் பணிகளை யாரும் நிச்சயம் விமர்சிக்கவே முடியாது. ஆனால், அவர்கள் இதை தமிழகம், கேரளம் போன்ற பகுதிகளில் பெரிய அளவில் முன்னெடுக்க வருவதே இல்லை. இந்தப் பகுதிகளில் எல்லாம் மத மாற்ற சக்திகள், வடகிழக்கு மாநிலங்கள், ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளைப் போல இல்லை என்பதால் இந்துத்துவ சக்திகள் அதிக அக்கறை காட்டுவதில்லை.

குறிப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் இந்த ஒடுக்குமுறையை, அலட்சியத்தை, சமூக அநீதியை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினால், அந்த விளிம்பு நிலை மக்களுக்குப் பெரும் விடுதலையாக இருக்கும்.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், மக்கள் மத்தியில் நிச்சயம் நல்ல பெயர் எடுக்க முடியும். ஆனால் அவர்களில் பலர் திராவிட அரசியலுக்கு இணக்கமாக நடந்துகொண்டு, ஈ.வெ.ரா.வின் சமூக சீர்திருத்தங்களைப் புகழ்ந்து பேசுவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

இருளர்கள், குரும்பர்கள், நரிக்குறவர்கள் போன்றவர்கள் பெரிய வாக்குவங்கி சமூகங்களும் அல்ல. எனவே இவர்களுக்குக் குரல் கொடுக்க அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. அதிலும் நரிக் குறவர் சமுதாயம் மிகவும் பிற்பட்ட வகுப்பில் (எம்.பி.சி.) சேர்க்கப்பட்டிருப்பதை எல்லாம் ஒருபோதும் நியாயப்படுத்தவே முடியாது.

ஆக, போலி சமத்துவம் பேசி ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட இயக்கங்களாலும், கூடவே இருந்து குழிபறித்துவரும் கம்யூனிஸ இயக்கங்களாலும், ஆதரவுக் கரம் நீட்டியிருக்கவேண்டிய இந்துத்துவ சக்திகளினாலும் ஒருசேரக் கைவிடப்பட்டவர்கள் இவர்கள்.

கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள் எந்த ஒரு சிறு வாய்ப்பையும் விடுவானேன் என்று இங்கும் செயல்படப் போகிறார்கள். ஏற்கெனவே ஓரளவுக்கு ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படமும் இயக்குநர் தந்த ஒரு கோடி ரூபாயும் நல்லதொரு அறுவடையை விரைவில் அவர்களுக்குத் தரும்.

ஏற்கெனவே குறவர் ஜாதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவரை அழைத்துவந்து தெளிவான திரைக்கதையுடன் நாடகம் ஆரம்பித்தாயிற்று. ‘நரேந்திர மோதியினால்தான் நாங்கள் 2000 ஆண்டுகளாக நாடோடிகளாக அலைகிறோம்’ என்று 2024 தேர்தலில் சூறாவளிப் பயணம் செய்யவும் வாய்ப்புண்டு.

இந்தப் படம் அந்த இலக்குடன் தெளிவாகத் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டது தான். ஒரு காலண்டரை வைத்து ஒட்டுமொத்த கவனத்தையும் அந்தப் பக்கம் திருப்பி, கூடவே அதற்கு அவர்கள் பாணியிலான சமரசமும் கண்டுவிட்டிருக்கிறார்கள்.

இந்துத்துவர்கள் செய்ய வேண்டிய நியாயமான விஷயங்கள் இதில் நிறைய இருக்கின்றன. இந்த விளிம்பு நிலை மனிதர்களைச் சரியான ஜாதி அடுக்கில் சேர்த்தல், ஜாதிச் சான்றிதழ் எளிதில் கிடைக்கச் செய்தல், சமூக நலத்திட்டங்களில் சேர்ப்பது, உணவு விடுதிகள் அமைக்க நிதி வழங்குதல், காவல் துறை சீர்திருத்தம், திராவிட இயக்கங்களின் பாசிஸ முகத்தை அம்பலப்படுத்தும் நிகழ்வுகளை எந்தவித திரிபும் சமரசமும் இன்றி திரைப்படங்களாக எடுப்பது என நிறையச் செய்ய வேண்டியிருக்கின்றன.

எதிர் முகாம் தனது இலக்குக்கு உகந்த வகையில் இந்தப் படத்தை எடுத்து விட்டிருக்கிறது.

வேதனையின் பள்ளத்தில் விழுந்து கிடக்கும் நமது சகோதரர்களின் மீட்சிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

பொய்களின் முதுகில் ஏறி, போலிகள் உலகை வலம் வந்துவிட்டனர்.

உண்மையின் கை பிடித்து நாம் எப்போது எடுத்து வைக்கப் போகிறோம் முதல் காலடி?

காண்க: பி.ஆர்.மகாதேவன்

***

குறவர் சமுதாய மக்கள்

(மற்றொரு பதிவு)

பொய் பீம்!

-வி.வி.பாலா

இது போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதி அவற்றிற்கு விளம்பரம் தேடித் தருவது அறிவீனம் என்பதால் இதுநாள்வரை எழுதவில்லை. நம்மால் முடிந்த அளவு இத்தகைய முயற்சிகள் தோல்வியடைய என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். ஆனால் பலரும் அடித்துத் துவைத்து, மேலும் பலர்  ‘ஆஹா ஓஹோ’ என்று சிலாகித்து ஆகிவிட்ட படியால் இனி இந்தப் படத்தின் பார்வையாளர்கள் கூடினால் அந்தப் பாவத்திற்கு நாம் காரணமாக மாட்டோம் என்ற நம்பிக்கையில் இப்போது எழுதுகிறேன்...

முதலில் இது தமிழில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஹிந்து சமய வெறுப்பைத் தாங்கி வந்திருக்கும் ஆயிரத்தி முந்நூற்றி எழுபதாவது படம். அதை மறைக்க வழக்கம் போல் ஒடுக்கப்பட்ட மக்களின் 'விடியலை' பற்றி பேசுகிறது. ஏன் பேசக்கூடாதா என்றால் பேசலாம்தான், ஆனால் இது அது போன்ற எந்த அடிநாதமும் இல்லாத ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட ஒரு கற்பனை வன்மம். கிட்டத்தட்ட மிஷனரிகளின் ஊதுகுழலாகவே ஆகிப்போன சூர்யா, அவர்களுக்கு ஹிந்து மதத்தின் மேல் உள்ள வன்மத்தை தன்னுடையதாக சுவீகரித்துக் கொண்டு விசுவாசத்துடன் கொம்பைச் சுற்றுகிறார். எதிர்மறையான, கோழையான, பேடித்தனம் கொண்ட ஒரு கதாபாத்திரம் மூச்சுக்கு மூச்சு ‘ஓம் நமசிவாய’ என்று சொல்வதன் மூலம் திரைகதையின் பின்னால் வியாபித்து இருக்கும் பரிசுத்த ஆவி நம் கண் முன்னே தெரிகிறது...

நிஜ சம்பவம்  ‘குறவர்’ சாதி நபர் சம்பந்தப்பட்டது. அதை  ‘இருளர்’ என்று மாற்றியது காரணமில்லாமல் இருக்காது. தங்கள் வாழ்வியலைத் தக்கவைத்துக் கொண்டு மரபை விட்டு விலக மறுக்கும் இருளர் சமுதாயத்தை மிஷனரிகள் குறி வைத்து இருக்கிறார்கள் என்று இதன் பொருள். அதனாலேயே தான் இருளர்கள் வழிபடும் சிவபெருமானை அப்படி நகைப்பிற்குரிய ஒரு நபரின் வழிபடு தெய்வமாகக் காட்டியிருக்கிறார்கள். 

இருளர்கள் மறுவாழ்வுக்கான ட்ரஸ்ட் ஒன்றிற்கு சூர்யா ஒரு கோடி கொடுத்தார் என்று செய்தி வந்தது. உண்மைச் சம்பவத்தில் குறவர்கள் சம்பந்தப்பட்டிருக்கையில் அவர்களுக்கு அல்லவோ கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததில், அதுகுறித்துத் தேடினேன். அதிலும் அந்தப் பணத்தை முதல்வரிடம் கொடுத்தாராம். ஏன் அவர்களிடமே கொடுத்து இருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்தது. இணையத்தில் தேடியதில் அப்படி ஒரு ட்ரஸ்ட் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் கிடைத்தால் பகிரவும். தெரிந்துகொள்ள ஆவல். அவர் நன்கொடை கொடுத்த செய்தி மட்டும்தான் இருக்கிறது. வழக்கமாக இது போன்ற ட்ரஸ்ட்களை நடத்துவதே மிஷனரிகளாகதான் இருக்கும். ஆனால் இதுகுறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அவர்களின் தெருமுனையில் இருக்கும் கோயில் எப்போதும் பூட்டியே இருக்கும். ஒடுக்கப்பட்டோருக்கான மீட்சி அங்கில்லை என்பதன் குறியீடாக அது விளங்க வேண்டும் என்ற பரிசுத்த ஆவியின் வேட்கை நமக்கு புரிகிறது. ஒடுக்கப்பட்டோருக்கும் அது ஒரு ஆழ்மனத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல் இருளர் சாதி பெயரைச் சொல்லி அவர்களை அவமானப்படுத்துவதும் காவல் நிலையத்தில் வக்கிர வெறி தீர நைய புடைப்பதும் அவர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வளவு நாட்களாக கோடிக்கணக்கில் பணம் இறைத்து பல பொய்யான வரலாறுகளை இட்டுக்கட்டி பல விதமான மாய்மாலங்களை நடத்துவித்தும் கூட, ஒரு பழங்குடி இனக் கூட்டம் மதம் மாறத் தயங்கினால் அவர்களை வெளுத்து வாங்க வேண்டும் என்று ஆவிக்கு தோன்றும் வக்கிரத்தின் வடிகாலாகத்தான் அந்தக் காட்சிகள் எனக்குத் தோன்றின.

அறிவொளி இயக்கம், கம்யூனிச மறியல் போராட்டங்கள், சந்துரு, தோழர்கள், கக்கூஸைத் தவிர மற்ற இடங்கள் எல்லாவற்றிலும் தொங்கும் மார்க்ஸ், ஈவெரா, இன்ன பிற தோழர்களின் சிலைகள் மற்றும் படங்கள் ஆகியவை நமக்கு  ‘படத்தை படமா பாருடே’ என்று காதுக்குள் தொடர்ந்து சொல்லி வலி ஏற்படுத்துகின்றன.

இந்தப் படம் குறித்து சில வலதுசாரிகள் சொன்ன கருத்து- இதுபோன்று படம் எடுக்க நம்மாட்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் ஒப்பாரி வைப்பதும் ஊளையிடுவதும் நமக்கு எந்தப் பலனையும் கொடுக்காது. இந்தப் படத்தின் makingஐப் பாருங்கள் என்றெல்லாம் சிலர் மெய்சிலிர்த்து எழுதியிருந்தனர். 

என் கருத்து... நம் தரப்பில் இதுவரை வந்தது மோகன் அவர்கள் எடுத்த இரண்டு படங்களே. இந்த படத்தைப் போல பட்ஜெட் இருந்தால் அவரும்  இதைவிட மேலான தரத்தில் தருவார் என்பது என் அபிப்பிராயம். இப்படிச் சொல்வதால் இந்தப் படம் டெக்னிகலாக சிறந்த படம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். படத்தின் ஆணிவேரே கோளாறு என்றிருக்கும் போது சிகையலங்காரத்தைப் பற்றி எதற்கு விவரணை என்றுதான் அதைப் பற்றி எழுதவில்லை. மற்றபடி அதில் நிறைய சொதப்பல்கள் இல்லாமல் இல்லை. ஆனால் படத்தில் காட்டப்படும் வரம்புக்கு மீறிய வன்முறைக் காட்சிகள் உங்கள் மனதில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் காரணமாக நீங்கள் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு சோகமயமாகிவிடுவீர்கள். குறைகள் மனதில் தங்காது அல்லது உறைக்காது.

இதற்கு எதற்கு எதிர்வினை?

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என் பள்ளியில் மருத்துவத் துறை ஏற்பாடு செய்த பரிசோதனை முகாம் ஒன்று நடந்தது. மருத்துவர் எங்கள் எல்லோருக்கும் ஒரு காக்கை இறகை வைத்து விரல் நுனி, முட்டி, முழங்கை, ஆகிய இடங்களில் குத்துவார். வலி மற்றும் உணர்வு இருக்கிறதா என்று சோதிப்பார். ஒரு மாணவனுக்கு உணர்வு இருக்கவில்லை. உண்மையில் உணர்வு இல்லையா அல்லது வலிக்காத மாதிரி நடிக்கிறானா என்பதை உறுதி செய்து கொண்ட மருத்துவர் அவனுக்கு தொழுநோய் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறி அதற்கான மருந்துகளைக் கொடுத்தார். நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். மனதில் பதிந்து போய் விட்டது.

உள்ளுக்குள் தசைகள் அழுக ஆரம்பித்தால் வெளியில் தோலில் உணர்வு இருக்காது. அதுமட்டுமல்ல தோல் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் அது நல்ல அறிகுறி அல்ல. வலியும் உணர்ச்சியும் இருக்க வேண்டும் என்றார் அந்த மருத்துவர்.

இத்தகைய சீண்டல்கள் வரும்போது ஒரு சமுதாயமாக நாம் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் உள்ளுக்குள்ளே அழுக ஆரம்பித்து இருக்கிறது என்று பொருள். நடுநிலை, கருத்துச் சுதந்திரம் என்ற பளபளப்புகள் சமுதாயம் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்.

குறிப்பு: 

திரு. வி.வி.பாலா, சென்னையில் விவேகானந்த கேந்திரத்தில் பணிபுரிகிறார்.  

No comments:

Post a Comment