02/11/2021

நாட்டை ஒன்றிணைக்கும் தீபாவளி!

-முத்துவிஜயன்


அன்றாட வாழ்வின் இயந்திரத்தன்மையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்ளவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் பண்டிகைக்கு தத்துவார்த்தக் காரணமும், பாரம்பரிய வரலாறும் இருக்கும்போது அந்தப் பண்டிகை சிறப்புப் பெற்றுவிடுகிறது. பாரதத்தில் பண்டிகைகளின் அரசனாக தீபாவளி விளங்குவது அதனால்தான்.

‘தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை (தீப+ ஆவளி) எனப் பொருள் என்று அனைவருக்கும் தெரியும். இன்றும் நாட்டின் பல மாநிலங்களில் தீபாவளியன்று அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவனை வழிபடுவது மரபாக உள்ளது.

தமிழகத்திலும் தீப வழிபாடு சிறந்து விளங்கியுள்ளது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், ‘இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ- நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…’ என்று பாடுகிறார் நக்கீரர் (நெடுநல்வாடை: 42- 43). சங்க காலத்தில் தமிழகத்தில் தீப வழிபாடு நிலவியதற்கு இப்பாடல் சான்றாகும்.

தமிழகத்தில் தீப வழிபாடு கார்த்திகை தீப நன்னாளில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசையில் வரும் தீபாவளிக்கும், கார்த்திகை மாத பௌர்ணமியில் வரும் திருக்கார்த்திகை விழாவுக்கும் 15 நாட்கள் மட்டுமே வித்தியாசம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாம் இன்று கொண்டாடும் தீபாவளிக்கு குறைந்தபட்சம் 9,300 ஆண்டு கால சரித்திரப் பின்னணி உள்ளது என்கிறார்கள் மானுடவியல் ஆய்வாளர்கள். 14 ஆண்டுகால வனவாசம் முடிந்து, ராவணவதம் முடித்து, சீதையுடன் ராமன் அயோத்தி திரும்பியபோது, அந்நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு தீபங்களை ஏற்றி அவரை வரவேற்றதாக ராமாயணத்தில் பதிவாகி இருக்கிறது.

ராம காவியத்தைப் படைத்த வால்மீகி மகரிஷி, அதில் பல இடங்களில் ஒவ்வொரு நிகழ்வும் நடந்த காலத்தில் இருந்த வானியல் கிரக நிலைகளை சுலோகங்களில் கூறிச் சென்றிருக்கிறார். ராமன் பிறப்பு, சீதையுடன் மணம், வனவாசம் துவக்கம், சீதை அபகரிப்பு, அனுமன் விஜயம், சேது பந்தனம், ராவணனுடன் யுத்தம், போரில் வெற்றி, நாடு திரும்பியது போன்ற நிகழ்வுகளை வால்மீகி வர்ணிக்கும்போது, அன்றைய கிரக நிலைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

திரேதா யுகத்தில் ராமாயண கதை நிகழ்ந்தது என்பது பொதுவான நம்பிக்கை. ராமாயணத்திலுள்ள கிரக நிலைகளைக் குறிப்பிடும் சுலோகங்களை மட்டும் ஆராய்ந்த அறிஞர்கள், ராமன் கற்பனை நாயகன் அல்ல; பொ.யு.மு. 7,300-களில் வாழ்ந்த மன்னனே என்று கூறுகிறார்கள்.

அதன்படி, கி.மு. 7,292-இல் ராமன் அயோத்தி திரும்பியதாகக் கணக்கிட்டிருக்கிறார், மராட்டியில் ‘வாஸ்தவ ராமாயணம்’ நூலை எழுதிய டாக்டர் பி.வி.வர்த்தக். வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளியின் துவக்கம் என்ற நம்பிக்கை நம் நாட்டில் உண்டு. எனவே, தற்போதைய நமது தீபாவளிக்கு குறைந்தபட்ச வயது 9,300 என்று சொல்லலாம்.

இதற்கு அடுத்து வருவதே நாம் பொதுவாகக் கூறி வரும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த நரகாசுர வதம். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த, இல்லங்களில் தீபமேற்றும் பண்டைய வழக்கத்தை அனுசரித்தே, கிருஷ்ணனிடம் நரகாசுரன் ‘தீபாவளி வரம்’ கேட்டதாகவும் கருதலாம்.

சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நன்னாளும் ஐப்பசி மாத அமாவாசையே! பொ.யு.மு. 599 முதல் பொ.யு.மு. 527 வரை வாழ்ந்தவர், வைஷாலி நாட்டு மன்னராக இருந்து சமணத் துறவியான மகாவீரர். இவர் பவபுரி என்ற இடத்தில் பொ.யு.மு. 527, அக். 15-இல் மோட்சம் அடைந்தார். இதற்கு, பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்ய பத்ரபாகு எழுதிய ‘கல்பசூத்ரா’ என்ற நூல் ஆதாரம். மகாவீரரின் பரிநிர்வாண மோட்ச தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவது ஜைனர்களின் மரபு.

முதன்முதலாக இலக்கியத்தில் காணப்படும் ‘தீபாவளி’ என்ற சொல், சமண இலக்கியமான ஹரிவம்ச புராணத்தில் காணப்படும் ‘தீபாளி கயா’ என்பதே. இதை எழுதியவர், சக வருடம் 705-இல் வாழ்ந்த ஜீனசேனர் என்ற சமணத் துறவி. இந்தச் சொல்லின் பொருள், ‘உடலிலிருந்து ஒளி விடைபெறுவது’ என்பதாகும். இதையே ஜைனர்கள் ‘தீபாலிகா’ என்று தீபங்களேற்றிக் கொண்டாடுகின்றனர். தீபாவளியைத் தொடர்ந்து ஜைனர்களின் புத்தாண்டு தொடங்குகிறது. இந்நாளில் புது வர்த்தகக் கணக்குகளை ஜைனர்கள் தொடங்குகின்றனர்.

இதேபோல, மாமன்னர் அசோகர் (பொ.யு.மு. 274 – பொ.யு.மு. 232) புத்த மதத்துக்கு மாறிய நாளாக, புத்த மதத்தினரால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நேபாளத்திலுள்ள புத்த மதத்தினர் இதை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பௌத்த மதத்தில் இந்நாள் ‘அசோக விஜயதசமி’ என்று குறிப்பிடப்படுகிறது. இன்றும் புத்த மடாலயங்களில் மகான் புத்தருக்கு சிறப்பு ஆராதனைகள் தீபாவளியன்று நிகழ்த்தப்படுகின்றன.

சீக்கிய மதத்தினரும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடும் விழா தீபாவளி. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த சிங், 52 இளைஞர்களும் பொ.யு.பி. 1619-இல் இதே நாளில்தான் குவாலியர் கோட்டையிலிருந்து விடுதலையாகினர். இதையடுத்து அமிர்தசரஸ் பொற்கோயிலில் தீபங்கள் ஏற்றும் வழிபாட்டை அவர் துவக்கினார். இன்றும் அவ்வழக்கம்,  ‘பந்தி சோர் திவஸ்’ என்ற பண்டிகையாகத் தொடர்கிறது.

சீக்கியர்களின்கால்சா இயக்கத்தை நிறுவிய பத்தாவது குருவான குரு கோவிந்த சிங், பைசாகி பண்டிகைக்கு அடுத்த முக்கியமான சீக்கியர் திருவிழாவாக 1699-ஆம் ஆண்டு அறிவித்ததிலிருந்து, சீக்கியர்களின் முக்கியமான பண்டிகையாக தீபாவளி மாறிவிட்டது.

சீக்கியரின் பொற்கோயிலான ஹர்மந்திர் சாகிப்பின் நிர்வாகியாக இருந்த பாயி மணிசிங், அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிபணியாததால், 1737-ஆம் ஆண்டு தீபாவளி நாளில் லாகூரில் கொல்லப்பட்டார். எனவே சீக்கியர்கள் இந்நாளை தியாக தினமாகவும் அனுசரிக்கின்றனர்.

இவ்வாறாக, தீபாவளி பண்டிகையின் பின்புலத்தில் இதிகாசக் காலம் முதல் சரித்திரக் காலம் வரையிலான பல்வேறு அரிய நிகழ்வுகள் ஒளிர்கின்றன.

ஆண்டு முழுவதும் பல்வேறு நாட்களை நமது வாழ்வில் கடக்கிறோம். தனிப்பட்ட வகையில், பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர் நினைவு நாட்களை நாம் ஆண்டுதோறும் நினைவுகூர்கிறோம். அதுபோல, இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் நினைவுகூர்வதற்கான, கொண்டாடுவதற்கான பெருமிதத் தருணமாக விளங்குவது தீபாவளி நன்னாள் என்று சொன்னால் மிகையில்லை.

காண்க: முத்துவிஜயன்


No comments:

Post a Comment