16/11/2021

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 4)

-பத்மன்



காண்க:

பகுதி-1
பகுதி-2
பகுதி-3 

***

கொன்றைவேந்தன் - 71

மாரி அல்லது காரியம் இல்லை

விளக்கம்:

மழைநீர் இல்லாமல் போனால் எந்தச் செயலும் நடைபெறாது என்கிறார் ஔவையார்.

மாரி என்பதற்கு மழை, நீர், துர்க்கை, பூராட நட்சத்திரம் எனப் பல பொருள் உண்டு. மிகுதியான பயன்பாட்டில் உள்ள பொருள் மழையும் அதன்மூலம் கிடைக்கும் நீரும். காரியம் என்பதற்கு செயல், செய்கை எனப் பொருள்.

வானில் இருந்து பொழியும் மழையும், அதனால் அமையும் நீர்வளமும் இல்லாவிட்டால் உழவு முதற்கொண்டு எல்லாச் செயல்களும் சீர்குலைந்து, எதுவுமே இல்லாமல் போய்விடும் என்கிறார்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

-என்று கூறியுள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 18). வானத்தில் இருந்து பெய்கின்ற மழைநீர் வறண்டு போனால் வானோர் எனப்படும் தெய்வங்களுக்கே சிறப்பான பூசைகளும் நடைபெறாது என்கிறார் வள்ளுவர். வானம் கைவிட்டால் வானோர் வழிபாட்டையும் மனிதர் கைவிடுவர் எனில் வேறு எந்தச் செயல்கள்தான் நடைபெறும்?

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

-என்று மற்றொரு குறளில் (திருக்குறள்- 20) எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.

நீரில்லாமல் போனால் இந்த உலகம் நில்லாமல் போகும் என்பதைப் போல வானம் பொய்த்துவிட்டால் மானுட ஒழுக்கமும் தவறிப் போகும் என்று எச்சரிக்கிறார்.

நீர்நிலைகளான நதிக்கரைகளில்தான் நாகரிகம் வளர்ந்தது. அத்தகைய நீர் இல்லாமல் போனால் அநாகரிகம் தலைதூக்குவதோடு பண்பாடும், பாடுபடும் உழைப்பும்கூட பறிபோகும். குடிப்பதற்கும்கூட தண்ணீர் இல்லையேல் அந்த இடத்தில் என்ன செயல்தான் நடந்தேற முடியும்?

அதனால்தான் ‘மாரி அல்லது காரியம் இல்லை’ என்றுரைத்துள்ளார் ஔவையார்.

(பின்குறிப்பு: மாரி என்றால் சாவு என்றும் காரியம் என்றால் இறுதிக்கடன் என்றும் வேறு பொருள் உண்டு. இதனால் சாவு இல்லையேல் இறுதிக்கடன் இல்லை என்றுதான் ஔவையார் கூறியிருக்கிறார் என வருங்காலத்தில் யாரும் வாதிட வேண்டாம்.)

***
கொன்றைவேந்தன்- 72

மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை

விளக்கம்:

மின்னலுக்குப் பின்னால் மழை பொழிவது உறுதி என்று கூறியதன் மூலம், முயற்சிக்குப் பின்னால் வெற்றி நிச்சயம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் ஔவையார்.

இதுதான் வேற்றுப்பொருள் வைப்பு அணி. சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லாமல், தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் கூறி, சொல்ல வேண்டியதை மறைமுகமாக உணர்த்துவதே, வேற்றுப்பொருள் வைப்பு. செய்யுளுக்கு இது ஓர் அணிகலன்.

வானத்தில் மின்னல் வெட்டும் போதெல்லாம் இதற்குப் பின்னர் மழை பொழியும் என்பதை அனுபவத்தால் அறிந்து கொளகிறோம். மின்னல் என்பது, வானில் மேகங்கள் மோதுவதால் ஏற்படும் ஒளிவீச்சு. இதனைத் தொடர்ந்து மேகங்கள் மோதியதன் பயனாகிய மழை பொழிகிறது. இதேபோல உழைப்பு என்பது கடின முயற்சியின் ஒளிவீச்சு. இதனைத் தொடர்ந்து இதன் பயனாகிய ஆக்கம், வளம் நம்மைக் கட்டாயம் வந்துசேரும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

-என்று திருவள்ளுவரும் (திருக்குறள்- 619) உரைத்திருக்கிறார். தெய்வமே கைவிட்டாலும்கூட நாம் முயற்சி எடுத்து மேற்கொண்ட கடின உழைப்பானது அதற்கான பயனைக் கட்டாயம் தந்து தீரும் என்பது இதன் பொருள். முயற்சியாலான கடின உழைப்பை மின்னலாகவும் பயனாகிய ஆக்கத்தை மழையாகவும் உருவகப்படுத்தியுள்ளார் ஔவையார்,

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதைப் போல, முன்னே வரும் மின்னல், பின்னே வரும் மழைக்குக் கட்டியம் கூறுகிறது. இதனைப்போல பின்னே கிடைக்கவிருக்கும் ஆதாயத்தை, நல்விளைவை முன்னே பிரகாசிக்கும் கடின உழைப்பு உறுதி செய்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்-73

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

விளக்கம்:

செலுத்துவதற்கான தலைவன் இல்லாத கப்பல் கடலில் இயங்காது என்கிறார் ஔவையார்.

இதுவும் வேற்றுப்பொருள் வைப்பு அணியே.

மீகாமன் என்பது கப்பல் தலைவன் (கேப்டன்) அல்லது தலைமை மாலுமி என்பதைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல். அலைபாயும் கடலில், கொந்தளிப்பு, புயல் போன்றவற்றைச் சமாளித்து கப்பலையோ படகையோ சரியான திசையில் செலுத்தி கரையை அடைய அதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த மீகாமன் அவசியம். அப்போதுதான் கப்பலில் இருக்கும் நபர்களோ சரக்குகளோ பத்திரமாக கரைசேர முடியும்.

அதேபோல குடும்பம் என்ற கப்பலை இயக்குவதற்கு நல்வழியில் அதனைச் செலுத்தும் குடும்பத் தலைவன் அவசியம். மேலும், தேசமாகிய பெரிய கப்பலை அதன் இலக்கை நோக்கிச் செலுத்துவதற்கும் தகுதியும், திறமையும், நல்லெண்ணமும் கொண்ட தலைவர் அவசியம். அப்போதுதான் பல்வேறு கொந்தளிப்புகள், திசைதிருப்புதல், தடைகள் ஆகியவற்றைச் சமாளித்து தேசமாகிய கப்பல் வெற்றிநடை பயில முடியும்.

இதைத்தான் பூடகமாக ‘மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது’ என்றுரைத்து அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 74

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

விளக்கம்:

முதலில் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கான பலன்களே அதற்குரிய விளைவுகளாக நம்மைப் பின்னர் வந்தடைகின்றன என்கிறார் ஔவையார்.

நாம் செய்யும் செயல்களாகிய வினைகளே நமக்குக் கிடைக்கும் பலன்களுக்கான விதைகள். எதை விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்கிறோம்.

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழி இதனைத் தெளிவாக உணர்த்தும்.

‘வித்தொன்று போட சுளையொன்று முளைக்குமோ’ என்ற கேள்வியாய் அமைந்த பழமொழியும் இதே கருத்தையே தெரிவிக்கிறது.

ஆகையால் வினை நல்லதோ கெட்டதோ அதற்கேற்பவே பலன்களும் இருக்கும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த வரிகள் இடம்பெற்றுள்ள  சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலின் அடுத்த வரிகள் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கின்றன. (புறநானூறு- 192) நமக்கு வரும் நன்மை, தீமைகள் பிறர் நமக்குக் கொடுப்பதல்ல, நமது வினைகளின் பலன்களே அவை என்பதே இதன் பொருள்.

ஔவையார் குறிப்பிட்டுள்ள முற்பகல் என்பது வினை புரியும் காலத்தையும், பிற்பகல் என்பது அதற்கான பலன்களை அனுபவிக்கும் காலத்தையும் சுட்டிக் காட்டுகிறது. காலக்கணக்கில் எந்த வினையும் தப்பாது. அதற்கான விளைவுகள் வந்தடைய வேண்டிய காலம் வேண்டுமானால் மாறுபடும். கடவுளே வந்து மண்ணுலகில் அவதாரம் எடுத்தாலும் அவரும் வினைப்பயனுக்குத் தப்ப முடியாது.

நாம் செய்யும் வினைகளே நமக்கான ஊழாக மாறுகின்றன. ஊழ் என்றால் வினைப்பயன், முதிர்வு, முடிவு என்று பொருள். நமக்கான விதி அது. யாரும் அதிலிருந்து தப்பிக்க இயலாது. இதைத்தான் சிலப்பதிகாரம் ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்று கூறியுள்ளது.

கர்ம வினை என்று கூறுவதும் இந்த ஊழ்வினைப் பயனையே. இந்தக் கர்ம வினையை ‘பிராரப்த கர்மா’ என்னும் அனுபவித்தாக வேண்டிய நுகர்வினை, ‘சஞ்சித கர்மா’ என்ற முன்வினை, ‘ஆகாம்ய கர்மா’ எனப்படும் வருவினை என மூவகையாக ஞானியர்கள் பகுத்து உரைப்பர்.

நமது வினையே நமது விதியாகி நமக்கான விளைவைத் தீர்மானிக்கிறது. நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் அதற்கான சிறந்த பலன்களை நமக்குத் தருகின்றன. அதேபோல, தீமைகளும் பாவங்களும் தீய பலன்களை நமக்குக் கொடுக்கின்றன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாமல் தவிர்க்கலாம். இதன்மூலம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய தீமையையும் நாம் தடுக்கிறோம்.

ஆகவேதான் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 75

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்

விளக்கம்:

பெரியோர் சொல்லி வைத்துள்ள வார்த்தைகள் அமிர்தம்போல இனிமையும் நன்மையும் தருபவை என்கிறார் ஔவையார்.

மூத்தோர் என்றால் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் முதிர்ந்த பெரியவர்கள். மூத்தோர் என்ற சொல், நமது முன்னோரையும் குறிக்கிறது.

அமிர்தம் என்பதற்கு இறவாத்தன்மை என்று பொருள். தேவலோக அமிர்தமானது சாகாத்தன்மை தரக்கூடியது, மூப்படையாமல் தடுக்கக் கூடியது எனப் புராணங்கள் போற்றுகின்றன. இனிய சுவையும் மருந்தாகப் பயன்படுவதுமான தேன், நெல்லிக்கனி போன்றவையும் அமிர்தம் என்று மதிக்கப்படுகின்றன.

மூத்தோர் சொன்ன வார்த்தை என்பது பரந்த பொருள் கொண்டது. நமக்காக, வேதம், உபநிஷதம், இதிகாசம், இலக்கியங்கள், தத்துவங்கள், சித்த– ஆயுர்வேத மருத்துவ முறைகள், வான சாஸ்திரம், ஜோதிடம், சிற்ப சாஸ்திரம், சங்கீதம் போன்ற கலை, இலக்கிய ஆய்வு நூல்கள்; தேவாரம், திருவாசகம், திவ்யப்ரபந்தம் போன்ற ஆன்மிகப் பனுவல்கள்; திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விவேக சிந்தாமணி போன்ற அறநூல்கள்; பழமொழிகள், சுபாஷிதங்கள் எனப் பல்வேறு தகவல்கள் கொண்ட அறிவுப் பொக்கிஷத்தை நம் முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர். இவையெல்லாம் மூத்தோர் சொன்ன வார்த்தைகளே. இவை சாகா வரம் பெற்றவை. இவை, அமிர்தம் போல இனிமையானதாகவும் அருமையானதாகவும் அமைந்து, நமது வாழ்க்கையை நாம் சிறப்பாகவும் பயனுள்ள வகையிலும் வாழ்வதற்கு உதவுகின்றன.

ஆகையால்தான் ‘மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்’ என்று நமக்கு எடுத்துரைத்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 76

மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

விளக்கம்:

மெத்தென ஆக்கியதில் படுத்தல் நிம்மதியான உறக்கத்துக்குச் சிறந்தது என்கிறார் ஔவையார்.

அப்படியானால் பஞ்சணை மெத்தையில் படுத்தல் சிறந்தது எனப் பொருள் வருகிறது. இதிலே என்ன நீதிமொழி இருக்கிறது?

நிம்மதியான உறக்கமின்மை மனவியாதிக்கும் உடல்நலக் கோளாறுக்கும் வழிவகுக்கும். கணினிப் பயன்பாடு, இரவில் கண்விழித்தல், வேலைக்காக நெடுந்தூரப் பயணம், மன அழுத்தம் மிகுந்துவிட்ட இக்காலத்தில் இளம் தலைமுறையினர்கூட உறக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.

குழந்தை நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் தாய் அரவணைப்பாக இருக்கும் தூளியில் போட்டுத் தாலாட்டுப் பாடுகிறாள்.

வளர்ந்துவிட்டவர்களுக்கு? அவர்களுக்காகத்தான் மிருதுவான பஞ்சால் ஆன மெத்தை. அந்தப் பஞ்சணையில் படுப்பது நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுப்பதால் நித்திரைக்குச் சிறந்தது என ஔவையார் கூறியிருப்பதாக பொருள் கொள்ளலாம்.

இளையவளான ஸ்ரீதேவியைப் போலவே மூத்தவளான ஜேஷ்டா தேவியை வணங்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது. துடைப்பத்தை ஆயுதமாகவும், அண்டங்காக்கையை வாகனமாகவும் கொண்ட அம்மன் ஜேஷ்டாதேவி. தூக்கத்துக்கும் மறதிக்கும் இவளே தெய்வம். துக்கத்தை மறந்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும். இரண்டையும் அருள்பவள் இத்தெய்வம். அந்த அளவுக்கு நிம்மதியான உறக்கம், அமைதியான வாழ்வுக்கும் சிறப்பான செயல்பாட்டுக்கும் அவசியம். அதனால்தான் மெத்தையில் படுத்தலை ஔவையார் சிபாரிசு செய்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதேநேரத்தில் ‘மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு’ என்பதே சரியான பதம் என்று கூறுவோரும் உண்டு. மெத்தென என்றால் அரக்கப்பரக்க இன்றி நிதானமாக, மென்மையாக என்று பொருள். என்னதான் களைப்பு இருந்தாலும் தடாலெனப் படுத்தால் தூக்கம் வராது; வேறு பிரச்னைதான் வரும். தியானத்தின் மூலமும் அலுப்பைப் போக்கும் சிறு பயிற்சிகள் மூலமும் மனத்தையும் உடலையும் மெத்தென ஆக்கிவிட்டுப் பின்னர் படுத்தல் உறங்குவதற்கு ஏற்றது. ஆதலால் மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு என ஔவையார் உரைத்திருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

மேலும், மெத்தையில் என்றே ஔவை கூறியிருந்தாலும்கூட ‘மெத்தென ஆக்கியதில்’ என்பதே அதன் உட்பொருளாக இருக்கிறது. இதிலே மெத்தை புறக் காரணி. உடலையும் மனத்தையும் மெத்தென ஆக்குதல் அகக்காரணி. புறக்காரணியான பஞ்சணை மெத்தை சிலருக்குக் கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் அகக்காரணியான உடலையும் மனத்தையும் மெத்தென ஆக்குதல் எல்லோருக்கும் இயல்வது.

ஆகையால் மெத்தையில் என்ற சொல்லுக்குக்கூட மெத்தென ஆக்கியதில் என்று பொருள் கொள்வதே ஏற்றதாக உள்ளது. பஞ்சணை மெத்தையில் படுத்தாலும் பாயை விரித்து தரையில் படுத்தாலும் மெத்தென ஆக்குதல் நித்திரைக்கு ஏற்றது.

இதனைத்தான் ‘மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு’ என ஔவையார் அழகுபட உரைத்திருக்கிறார்.

***
கொன்றைவேந்தன்- 77

மேழிச் செல்வம் கோழை படாது

விளக்கம்:

கலப்பையைப் பிடித்து உழவால் உருவாக்கப்படும் செல்வம் ஒருபோதும் குறைபட்டுப் போய் விடாது என்கிறார் ஔவையார்.

மேழி என்றால் கலப்பை என்று பொருள். மேழிச் செல்வம் என்பது உழுது உருவாக்கப்படும் விவசாயச் செல்வத்தைக் குறிக்கிறது. செல்வம் என்பது வெறும் பணம் மாத்திரமல்ல, பொருள் வளத்தையே அது முக்கியமாகக் குறிக்கிறது.

பொருள் வளத்தில் வேளாண் விளைபொருள் மிக முக்கியமானதல்லவா? தொழில் வளத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை, இந்த வேளாண் செல்வந்தானே!

கோழை என்றால் கபம், பயந்து நடுங்குதல் என்ற வெளிப்படையான பொருள்கள் இருந்தாலும், நுணுகிப் பார்த்தால் நுட்பமான பொருள்கள் புலப்படும்.

அவ்வகையில் கோழை என்ற சொல்லுக்கு இளகுதல், குறைவுபடுதல், சிறுமையுறுதல் ஆகிய பொருள்கள் அறியப்படுகின்றன. அவ்வகையில், விவசாயத்தால் கிடைக்கும் செல்வம் ஒருபோதும் சிறுமை அடையாது எனப் பொருள் கொள்ளலாம்.

விவசாயப் பொருள்கள், பல தொழில்களுக்கு மூலப்பொருள்களாய் இருப்பதாலும் மானுடர் பசியைப் போக்குவதாலும் அதற்கு ஒருபோதும் மதிப்புக் குறைவதில்லை. மற்ற தொழில்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் விவசாயத்தை நம்பியிருக்க, விவசாயமோ தன்னைச் சார்ந்தே இயங்குகிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவாகாத காலத்திலும் விவசாயம் இருந்தது. எதிர்காலத்தில் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் வந்தாலும்கூட விவசாயத்துக்கான தேவை அகன்று போய் விடாது. ஆகையாலும் மேழிச் செல்வத்துக்கு குறைவு ஏற்பட்டு விடாது.

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றுரைத்துள்ளார் திருவள்ளுவர். உலகம் வெவ்வேறு மாற்றங்களில் சுற்றிச் சுழன்றாலும் எக்காலத்திலும் ஏர் பிடிக்கும் உழவுத் தொழிலைப் பின்பற்றிதான் மற்ற தொழில்கள் நடக்க முடியும் என்பது இதற்குப் பொருள். ஆகையால் உழவுக்கு ஒருபோதும் குறைவில்லை.

அதனால்தான் ‘மேழிச் செல்வம் கோழை படாது’ என ஆணித்தரமாக மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 78

மைவிழியார் தம்மனை அகன்று ஒழுகு

விளக்கம்:

பொய்மையால் மயக்கும் விழிகளைக் கொண்ட விலைமாதர் வீட்டுப் பக்கம் செல்லாமல் அகன்று, நல்லொழுக்கத்துடன் வாழ் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

மை என்பதற்கு கண்ணில் தீட்டப்படும் அஞ்சனம், கருமை நிறம், இருள், அழுக்கு, மாயம், மயக்குதல், குற்றம் எனப் பல பொருள் உண்டு.

மை விழியார் என்பது கண்களில் மை தீட்டிக்கொண்ட விழியார் என்ற பொருளை மட்டும் குறிக்கவில்லை. சாதாரணமாகப் பல பெண்கள் கண்ணுக்கு அழகூட்ட மை தீட்டுவர். ஆனால் பொய் அழகு புனைந்து பிறரை மயக்கிப் பணம் பறிக்க வேண்டும் என்பதற்காக கண்களுக்கு மை தீட்டுபவர்கள் பரத்தையர் எனப்படும் விலைமாதர். மேலும் அவர்களது கண்களிலே, சிக்கியவரை மயக்குகின்ற, ஏமாற்றுகின்ற, பொய்யன்பு காட்டுகின்ற குற்றச் செயல், கபட உணர்வு மறைந்திருக்கும். ஆகையால் விலைமாதரை மைவிழியார் என்றார் ஔவையார்.

அத்தகைய விலைமாதர் வீட்டுப்பக்கம் செல்லாதே என ஔவையார் வலியுறுத்துகிறார். இதேபோல தமது ஆத்திச்சூடியிலும் ‘மைவிழியார் மனையகல்’ என அவர் கூறியிருக்கிறார்.

ஆயினும் அது போதாதென்று கருதினார் போலும்! ஆகையால் இக் கொன்றை வேந்தனில் ‘மைவிழியார் தம்மனை அகன்று ஒழுகு’ என உரைத்திருக்கிறார்.

அதாவது பரத்தையர் வீடு இருக்கும் திசைப் பக்கமே செல்லாத நல்லொழுக்கத்தைக் கடைபிடி எனக் கூடுதலாக மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 79

மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

விளக்கம்:

சான்றோர் கூறும் அறிவுரைகளை ஒருவர் கேளாமல் மறுத்தால் அவர் ஆற்றுகின்ற செயல் அழிய நேரிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

மொழிவது என்றால் கூறுவது, உரைப்பது என்று பொருள். இது மேலோர், பெரியோர் எனப்படும் சான்றோர்களின் அறிவுரைகள், வேதம் உள்ளிட்ட நீதி நூல்கள் கூறும் அறக் கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. கருமம் என்பது ஒருவரது செயல், ஆற்றும் வினை, தொழில், கடமை ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலோர் உரைகளை நிராகரித்துவிட்டுச் செயல்படும்போது ஒருவர் தனது கடமையில் இருந்து பிறழ்கிறார். அவர் செய்கின்ற செயல், நெறிமுறை தவறுவதால் அழிவை நோக்கிச் சென்றுவிடும் என்கிறார் ஔவையார்.

மேலும் ஒருவர் தான் கூறியதை மறுத்துவிட்டு மாற்றிப் பேசும்போது அல்லது தான் கூறியதற்கு மாறாகச் செயல்படும்போது அவரது செயல்திறன் அழியும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆக ஒருவர், பெரியோர் சொல்லைத் தட்டிவிட்டுச் செயல்படும்போதும், வாய்மை மீறிச் செயலாற்றும்போதும் அவர் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறார் என்று அர்த்தம். இதனைத்தான் ‘மொழிவது மறுக்கின் அழிவது கருமம்’ என எச்சரித்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 80

மோனம் என்பது ஞான வரம்பு

விளக்கம்:

மௌன நிலையே ஞானத்தின் உச்சம் என்று போதிக்கிறார் ஔவையார்.

மோனம் என்பது மௌனம் ஆகும். இது பேசாப் பெருநிலை. அமைதியை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதையும் குறிக்கிறது.

மோனம் என்பது ஒருமித்தலையும் குறிக்கிறது. பரம்பொருளுடன் ஒன்றுதல் மோனநிலை. முனிவர்கள் அமைதியாகத் தவமிருப்பதன், மௌன விரதம் பூணுவதன் நோக்கம், சித்த சலனத்தை வென்றெடுத்து அந்த மோன நிலையை – இரண்டற்ற ஒன்று என்ற நிலையை எட்டுவதற்காகத்தான்.

மௌனம் என்ற சொல், தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் ஒரேபோன்ற பொருளையே குறிக்கிறது‌. சம்ஸ்கிருதத்தில் அமைதி, சலனமற்று இருத்தல் எனப் பொருள்.

முன்னுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருள். தீவிரமாக முற்படுதல், அடைதல் என்ற பொருள்களும் இதற்கு உண்டு. இந்த முன்னுதல் என்ற சொல்லில் இருந்து எழுந்ததே மோனம், மௌனம். அதனைச் சாதிப்பவர் முனிவர். மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கும் நிலையே மௌனம். அதற்காகத் தீவிரமாக முற்படுவதே தவம். அதன் மூலம் ஒருமை நிலையை எட்டுவதே மோனம்.

மோனநிலை என்பது என்ன என்பதை இறைவனே நமக்கு எடுத்துக்காட்டத் தான் ஆலமரத்தின் கீழ் உறையும் ஆசானாக, தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் காப்புச் செய்யுளில் ‘மௌனவாக்யா ப்ரகடித பரப்ரும்ம தத்வம்’ என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

மௌனத்தின் மூலமாக பரப்ரும்ம தத்துவத்தை அறிவிக்கிறார் தக்ஷிணாமூர்த்தி என்பது இதன் பொருள். அந்த பரமாத்மா தன்னைப்போல மௌனமாக இருந்தால் தன்னை அடையலாம் என்பதைச் செயல்வடிவில் உணர்த்துகிறார்.

இதே பொருளில்தான், மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடி அறநூலுக்கான காப்புச் செய்யுளில் ‘மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்’ என்று இறைவனைச் சுட்டுகிறார்.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இந்த மோனநிலையை ‘சும்மாயிரு சொல்லற’ என்று சுட்டுகிறார். ‘சும்மா இருப்பதே சுகம்’ என்கிறார் திருமந்திரம் சாற்றிய திருமூலர். இருவரும், சும்மா இருத்தல் என்று குறிப்பிடுவது சிந்தை கடந்த மௌன நிலையையே.

ஔவையாரே தனது விநாயகர் அகவலில், ‘வாக்கும்மனமும்இல்லா மனோலயம்’ என மோனநிலையை விளக்குகிறார். ஒருமித்த பிறகு அங்கே நான்- நீ என்ற பேத பாவம் ஏது? அங்கே மனமும் அற்றுப் போகிறது. அந்த மௌன நிலையை எட்டுவதுதான் மெய்ப்பொருளைத் தேடி அடைகின்ற ஞானத்தின் உச்ச நிலை.

இதனைத்தான் கொன்றைவேந்தனில் ஔவையார் ‘மௌனம் என்பது ஞான வரம்பு’ என மொழிந்துள்ளார்.

***
கொன்றைவேந்தன்- 81

வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துண்

விளக்கம்:


செல்வ வளமை மிகுதியாக உடையவனாக இருந்தாலும், தகுந்த அளவை அறிந்துகொண்டு அதற்கேற்ப செலவழித்து அனுபவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

வளவன் என்ற சொல் நீர் வளத்தால் நெல் வளம் மிகுந்த சோழநாட்டு அரசனைக் குறிக்கும் சிறப்புச் சொல். அதேநேரத்தில் விளைச்சல் அதிகமுள்ள வேளாளன், செல்வ வளமுடையவன் என்பதே இதன் உட்பொருள்.

அனைத்து ஆக்கமும் அழிவின் மேலேயே கட்டமைக்கப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சமே அழிவில் இருந்து தொடங்கி, மீண்டும் மீண்டும் அழிந்து ஆகுவதே.

அதேபோல எந்த ஒன்றைப் பெறுவதற்கும் நாம் அதற்குரிய நேரம், பொருள் ஆகியவற்றைச் செலவழிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பொருள் அதாவது பணத்தைச் செலவழித்தல் சுகபோகத்துக்கு அவசியமாகிறது. இந்நிலையில் வரவறிந்து செலவழித்தல் மிக முக்கியம்.

‘குந்தித் தின்றால் குன்றும் மாயும்’ என்பது பழமொழி. அதாவது, மலையளவு செல்வம் இருந்தாலும் வரவை அதிகரிக்காமல் தின்றுகொண்டே இருந்தால், அனுபவித்துக்கொண்டே இருந்தால் மலையளவு செல்வமும் மறைந்து போகும்.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி

-என்றுரைக்கிறது திருக்குறள் (477). செயலாற்றும்போது அதற்குரிய அளவை அறிந்து செலவழிப்பதே, பொருளின் மதிப்பை உணர்ந்து செலவு செய்யும் நெறிமுறையாகும் என்கிறார் திருவள்ளுவர்.

பிறிதோர் இடத்தில் வரவு குறைவாக இருந்தாலும் செலவை அதற்குள் சுருக்கிக் கொள் என்பதை,

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை

-என்று பகர்ந்துள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 478).

இந்நிலையில் எளியோர் மட்டும்தான் செலவைச் சுருக்க வேண்டும் என்பதல்ல, செல்வ வளமுடையவனும் அளவறிந்து செலவழித்தல் அவசியம் என்பதை அறிவுறுத்துகிறார் ஔவையார்.

கண்மூடித்தனமாகச் செலவழித்தல் அழிவுக்கு வழிவகுத்துவிடும். எந்த அனுபவித்தலுக்கும் அதற்கான செலவழித்தலுக்கும் ஓர் அளவு, வரம்பு உண்டு. அந்த எல்லையை மீறாதே என எச்சரிக்கிறார் ஔவையார். உண் என்பது இங்கே சாப்பிடுவதை மட்டும் குறிக்கவில்லை, இதர எல்லா வகை துய்ப்புகளையும் சுட்டுகிறது.

ஆகையால் தேவையை, அதன் அளவை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு உட்பட்டே அதற்கான செலவும் இருக்க வேண்டும், அனுபவிப்பும் இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இந்த அளவை மீறிச் செல்லக் கூடாது.

இதனைத்தான் ‘வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்’ என நயம்பட நவின்றுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 82

வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

விளக்கம்:

வானம் பொழியும் மழையின் அளவு குறைந்து போனால், அதன் தொடர் விளைவாக தான தருமங்கள் உள்ளிட்ட நற்செயல்களும் குறைந்து போய்விடும் என்கிறார் ஔவையார்.

மண்ணுயிர்கள் வாழ்வதற்கு வான்மழை அவசியம். மழைநீரே ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் இருப்பாகவும், நிலத்தடி நீராகவும் மாறி, நம் குடிநீர்த் தேவையையும் விவசாயத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வயல் விளைச்சலுக்கு மழை இன்றியமையாதது. தொழில் வளர்ச்சிக்குக் கூட நீர்தேவை. ஆக பல வழிகளிலும் வானத்தின் கருணை வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழலில் வானம் சுருங்கிவிட்டால்? அதாவது மழையின் அளவு குறைந்துவிட்டால்? விவசாயம் குறையும், தொழில்கள் நசியும். உணவுப் பஞ்சமும், குடிநீர்த் தட்டுப்பாடும் தலைவிரித்தாடும். சமூகத்தில் அமைதி குலைந்து, மலியும். அந்நிலையில் பிறர் பசியை, வறுமையை, பிணியைப் போக்கும் தானம் உள்ளிட்ட நற்செயல்களை மேற்கொள்ள பலரும் முன்வர மாட்டார். அதற்கு வாய்ப்பும் இல்லை.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

-என்று கூறியுள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 18). வானம் மழை பொழியாது வறண்டு போனால், மக்களின் சுபிட்சம் கெட்டுப் போகுமாதலால் வானில் வாழும் தெய்வங்களுக்கே சிறப்பான பூஜை, திருவிழாக்களை மக்கள் செய்யாது விட்டுவிடுவார்கள் – என்கிறார் திருவள்ளுவர். அப்படியிருக்க மழை சுருங்கின் சகமனிதருக்கு உதவும் கருணை, மனிதரிடம் எப்படி சுரக்கும்? அதுவும் சுருங்கிவிடும்.

இருப்பினும் எந்நிலையிலும் விடாது நன்மை செய்யும் ஒருசிலர் இருக்கத்தான் செய்வர். அவர்களுக்காவே மழை சிறிதேனும் பெய்யும். அதனால்தான் மழைக்கும் சரி, தானத்துக்கும் சரி, சுருங்கும் என்ற சொல்லை ஔவையார் பயன்படுத்தியுள்ளார்.

ஆக தானம் போன்றவை சிறக்க வானமும் நன்கு கண்திறக்க வேண்டும். இல்லையேல் அவை குறையும். இதனைத்தான் ‘வானம் சுருங்கின் தானம்’ சுருங்கும்’ என்று உரைத்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 83

விருந்து இல்லோர்க்கில்லை பொருந்திய ஒழுக்கம்

விளக்கம்:

விருந்தினரை உபசரித்து அறியாத இல்லத்தாருக்குத் தேவையான ஒழுக்கம் இருக்காது என்கிறார் ஔவையார்.

இதைப் பார்த்ததும் இக்காலத்தவர்களான நமக்குத் தலை சுற்றும். விருந்து என்றால் நல்ல சாப்பாடு. அதைக் கொடுக்காவிட்டால் நம்மிடையே ஒழுக்கம் இருக்காதா? விருந்து என்ற பெயரில் வீடுகளிலும் விடுதிகளிலும் அடிக்கும் லூட்டிகளில் தானே ஒழுக்கக் கேடு மலிந்து கிடக்கிறது! அப்படியிருக்க, விருந்து அளிக்காதது ஒழுக்கமின்மையா? எனக் குமுற வேண்டாம். விருந்து என்ற சொல்லுக்கான பொருளை நாம் புரிந்து கொண்டுள்ள லட்சணம் இது.

விருந்து என்றால் நல்ல சாப்பாடு, வீட்டுக்கு வரும் உறவினர்கள் என்று நாம் தற்போது பொருள் கொள்கிறோம். விருந்து என்பதில் உணவு பரிமாறல் உண்டு. ஆனால் உறவினர்களுக்கு உணவளித்தல் என்று அதற்குப் பொருள் அல்ல! பிறகு?

விருந்து என்பதற்கு புதுமை எனப் பொருள். நமக்கு முன்பின் அறிமுகமில்லாத புதியவர்களே விருந்தினர் என அக்காலத்தில் கருதப்பட்டனர். நம்மால் இயன்ற அறுசுவை உணவை இப்புதியவர்களுக்கு வழங்கி உபசரித்தலே விருந்தோம்பல்.

திருமணம் போன்ற தினங்களில், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய உறவுமுறைகளுக்கு முறை செய்வதல்ல விருந்து. முன்பின் தெரியாத வெளிநபர்களுக்கு முகஞ்சுழிக்காமல், சிறந்த உணவளித்துப் பசியாற்றி 
உபசரிப்பதே விருந்து.

இல்லறத்தாரின் ஐந்து கடமைகளில், தென்புலத்தார் (பித்ருக்கள்), தெய்வம் என்ற வரிசையில் திருவள்ளுவர் மூன்றாவதாகக் குறிப்பிடும் விருந்து என்பது இத்தகைய புதியவர்களையே. நாலாவதாகக் குறிப்பிடும் ஒக்கல் உறவினர்கள், நண்பர்களையும்; ஐந்தாவதான தான் என்பது தம் குடும்பத்தாரையும் குறிக்கிறது.

உபசரிக்க வேண்டிய கடமைகளில் முன்னோர், தெய்வம் ஆகியவற்றுக்கு அடுத்தநிலையில் விருந்தாக இருப்போர் வழிப்போக்கர்களான, முன்பின் அறிமுகமில்லாத புதியவர்களே.

இதைத்தான் ‘அதிதி தேவோ பவ’ என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர். விருந்தினர்களைத் தெய்வமாய்க் கருது என்பது இதன் பொருள்.

திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.

ஆக, தமிழகம் உட்பட பாரதம் முழுவதிலுமே விருந்தினர்களை உபசரித்துப் பசியாற்றும் பண்பாடு உண்டு.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் ஹோட்டல்கள் எனப்படும் பணத்துக்கு உணவை விற்கும் கடைகள் கிடையாது. பணம் வாங்கிக்கொண்டு தங்கிக்கொள்ள இடமளிக்கும் விடுதிகள், லாட்ஜுகளும் கிடையாது. விலையின்றி உணவும், தங்க இடமும் கொடுக்கும் சத்திரங்கள்தான் உண்டு. அதுமட்டுமல்ல, புனித யாத்திரையாகவும் இதர பயணத்துக்காகவும் வரும் வெளியாட்களுக்கு, தெரியாதவர்கள் இல்லங்களிலும் உபசரிப்புக் கிடைக்கும்.

வரும் விருந்தினர் அமர்ந்து ஓய்வெடுக்கவே வீடுகளில் பெரிய திண்ணைகள் கட்டப்பட்டன. நம்மை யாரென்று கேட்காமலேயே திண்ணையில் அமர்வோருக்கு பெரிய குவளையில் பாலோ, மோரோ வழங்கும் வழக்கம், நமது கிராமங்களில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட இது வழக்கத்தில் இருந்தது. சோத்துக்கடைகளை அப்போதும் பாவமாகக் கருதினர். தண்ணீர் விலைபொருளாக இருக்கவில்லை.

40-50 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறெனில், சில பல நூற்றாண்டுகளுக்கு முன், புதியவர்களான விருந்தினரை உபசரிப்பது புண்ணியச் செயலாகவே மதிக்கப்பட்டது.

ஆகையால், அத்தகைய விருந்தினர் ஒருவரது இல்லத்துக்கு வரவில்லை என்றால் அவர்களிடம் நற்பண்பு இருக்காது என்று அர்த்தம். நற்பண்பு இல்லாதோர் எப்படி ஒழுக்கத்தைப் பேணுவார்கள்?

ஆகையால்தான் ‘விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்’ என்றுரைத்துள்ளார் அறத்தை வலியுறுத்தும் அக்காலத் தமிழ்ப் புலவரான ஔவை மூதாட்டி.

***
கொன்றைவேந்தன்- 84

வீரன் கேண்மை கூரம்பாகும்

விளக்கம்:

வீரனுடன் நட்புக் கொண்டிருப்பது கூர்மையான அம்பை கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாகும் என்கிறார் ஔவையார்.

வீரன் என்பது வீரமுடையவன் என்பதைப் பொதுவாகக் குறித்தாலும் படைவீரன், ராணுவ வீரன், காவலன், பாதுகாவல் பணி செய்வோன் என்பதைச் சிறப்பாகக் குறிக்கிறது.

கேண்மை என்றால் நட்பு என்று பொருள். உறவு, இரக்கம், (நடைமுறையில் உள்ள) வழக்கம் ஆகிய பொருள்களும் உள்ளன. நட்பு, உறவு ஆகிய பொருள்களே இவ்விடத்தில் பொருந்தும்.

அம்பு என்பது இங்கே ஆயுதத்தைக் குறிப்பிடுகிறது. கூர் அம்பு என்பது இருவேறு பொருள்களைத் தாங்கி நிற்கிறது. கூர்மையான ஆயுதத்தைக் கையில் தாங்கி இருப்பது நமக்கு பலத்தைத் தருகிறது. அதேநேரத்தில் எச்சரிக்கையாகக் கையாளாவிட்டால் அது நம் கைகளையே பதம் பார்த்துவிடும்.

அதேபோல்தான் வீரனுடைய நட்பும் நமக்கு பலமாக அமைந்து நம்மைப் பாதுகாக்கிறது. அதேநேரத்தில் வீரனின் நட்பால் நமக்கு ஆபத்துகளும் ஏற்பட்டுவிடும். வீரர்கள் பொதுவாக முரட்டுத்தனமாக இருப்பதால் அவர்களோடு நெருக்கமாகப் பழகும்போது அவர்களது முன்கோபத்துக்கு சிலசமயம் நாம் ஆளாக நேரிடும். மேலும் வீரர்களுக்குப் பல எதிரிகளும் இருப்பர். வீரனுக்கு நண்பர் என்பதால் அவர்கள் நம்மையும் எதிரியாகக் கருதி தாக்கக் கூடும்.

இல்லையேல் நாமேகூட வீரன்தான் நம் நண்பனாயிற்றே என்று தேவையில்லாத திமிருடன் நடந்துகொண்டு பிறரது பகையைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடலாம்.

ஆகையால் இருமுனைக் கூர் ஆயுதமான வீரனது நட்பை லாவகமாகக் கையாள வேண்டும்.

குளிருக்கு இதமாகத் தீமூட்டி குளிர் காய்வோர் எப்படிச் சரியான தொலைவில் அமர்ந்து குளிர் காய்வார்களோ, அதேபோல வீரனுடன் தேவையான இடைவெளியைப் பேணியபடி நட்புப் பூண வேண்டும். அதாவது, குளிர் காய்வோர் நெருப்புக்கு மிக அருகே சென்றால் சுட்டுவிடும். மிகத் தள்ளி அமர்ந்தாலோ நெருப்பின் சூடு உறைக்காததால் பயனிருக்காது. ஆகையால் இதமான சூடு கொடுத்தாலும் நம்மைச் சுட்டுவிடாத சரியான தொலைவில் அமர்ந்து குளிர்காய வேண்டும். அதேபோல கூர் அம்பாகத் திகழும் வீரனுடனான நட்பையும் நமக்குப் பாதிப்பு ஏற்படுத்திவிடாதபடி எச்சரிக்கையாகவும், நமக்குப் பாதுகாப்புத் தரும் வகையில் ஏற்றமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனைத்தான் ‘வீரன் கேண்மை கூர் அம்பாகும்’ என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 85

உரவோர் என்கை இரவாது இருத்தல்

விளக்கம்:

வலிமை உடையவர் என்பதற்கு அடையாளம், யாரிடமும் போய் யாசகம் கேட்காமல் இருத்தலே ஆகும் என்கிறார் ஔவையார்.

உரம் என்பதற்கு வலிமை, திடம், திண்மை, ஊக்கம் என்று பொருள். விளைச்சலுக்கான வலிமையை மண்ணுக்குத் தரும் ஊட்டச்சத்துப் பொருளுக்கு உரம் என அதனாலேயே பெயர் வந்தது. நெஞ்சத் துணிவு, மன வலிமைக்கும் உரம் என்றே பெயர். அவ்வகையில் உரவோர் என்பது மன உறுதி பெற்றவர், வலிமை உடையவர், வல்லமையாளர், துன்பங்களுக்குத் துவண்டு விடாமல் ஊக்கத்தோடு முயற்சி செய்பவர் எனப் பொருள் அமைகிறது.

இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல், யாசகம் கேட்டல் எனப் பொருள். பொது நன்மைக்காக தானம் பெறுதல் வேறு. பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவது, பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்தல் என்பது வேறு. இரத்தல் என்பது பிச்சை ஏற்றலையே குறிக்கிறது.

ஈதல் எனப்படும் பிறருக்குப் பொருள் வழங்குதல் என்பது எவ்வளவு சிறப்பானதோ அதே அளவுக்குப் பிறரிடம் பொருளை பிச்சை வாங்கி உண்ணுதல் இழிவானது.

மன உறுதி உடையவர்கள், முயற்சி உடையோர், ஊக்கமுடையோர், திறனுடையோர் ஒருபோதும் பிறரிடம் கையேந்த மாட்டார்கள். இதனைத்தான் ‘உரவோர் என்கை இரவாது இருத்தல்’ என்று மொழிந்துள்ளார் ஔவையார்.

இதை வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒருவருக்கு இறை நம்பிக்கையாலும், அறத்தைப் பின்பற்றுவதாலுமே உண்மையான உரம், எதற்கும் கலங்காத துணிவு கிடைக்கப் பெறுகிறது. அத்தகைய உரவோர், எனக்கு இது வேண்டும் எனப் பிறரிடம் மட்டுமல்ல, இறைவனிடம் கூட யாசிக்க மாட்டார்கள். அவர்களது இறை நம்பிக்கையும், உறுதியான பக்தியும் ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றிருக்கக்கூடிய திடச்சித்தத்தைத் தந்துவிடும். அத்தகைய பக்திமான்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாசிக்காமல் திட சங்கல்பத்தோடு கிடைப்பதில் திருப்தியாக இருப்பார்கள்.

ஆகையால் தன்னம்பிக்கையாலும் இறை நம்பிக்கையாலும் வலிமை பெற்றுத் திகழ்பவர்கள் எதையும் இரந்து பெறுவதில்லை. இதனைத்தான் ‘உரவோர் என்கை இரவாது இருத்தல்’ என மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 86

ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு

விளக்கம்:

தளராத உறுதியோடு முயற்சி செய்வதே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறார் ஔவையார்.

ஊக்கம் என்றால் தூண்டுதல், மன எழுச்சி, இடைவிடா முயற்சி, தன்னம்பிக்கை, உயர்வான எண்ணம், வலிமை எனப் பொருள். ஆக்கம் என்பதற்கு படைப்பு, வளர்ச்சி, உற்பத்தி, செல்வம், உயர்வு, முன்னேற்றம் எனப் பல பொருள் உண்டு.

ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.

அவ்விதம் ஊக்கத்தோடு செயலில் ஈடுபடுவர்களுக்கு வளர்ச்சி வந்து சேரும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். முன்னேற்றத்தின் வாசல்கள் அடுத்தடுத்து திறக்கும்.

இதைத்தான் ஆக்கத்தை உருவாக்கும் சிறப்பையும், வளர்ச்சி என்ற பெருமையையும் தருவது ஊக்கமே என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஔவையார்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை

-என்று இதனையே திருக்குறள் (594) கூறும். அதாவது ஊக்கம் உடையவனின் முகவரியைத் தேடிப்பிடித்து வளர்ச்சி வந்துசேரும் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். மற்றொரு குறளில் (593)

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்

-என்றும் உரைத்துள்ளார். ஊக்கம் உடையவர் தான் தேடிவைத்த செல்வம் பறிபோனாலும் துயரப்பட்டு புலம்ப மாட்டார் என்கிறார். ஏனெனில் உற்சாகத்தோடு புதிய முயற்சிகளில் உறுதியாக ஈடுபடும் இயல்புடையவர் என்பதால் இழந்தவை திரும்பி வருவதோடு, புதிய ஆக்கங்களும் அவர் வீட்டு வாசல் கதவுகளை வந்து தட்டும்.

இவற்றை உட்பொருளாகக் கொண்டுதான், ‘ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு’ என மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 87

வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

விளக்கம்:

தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு வஞ்சகத்தனமான எண்ணம் இருக்காது என்கிறார் ஔவையார்.

வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம். அழுக்குச் சேர்ந்த துணிகளைத் துவைத்து கறை, அழுக்குகளை நீக்குவதை ‘வெளுத்தல்’ என்கிறோம். சுவர்களில் படிந்த கறைகளை அகற்ற வெள்ளை அடிக்கிறோம். பல வகைகளிலும் வெண்மை, வெள்ளை என்பது தூய்மையைச் சுட்டுகிறது. அவ்வகையில் வெள்ளை என்பது இங்கே கள்ளம் கபடமற்ற மனத்தைக் குறிக்கிறது.

கள்ளம் என்பதற்கு திருட்டுத்தனம், வஞ்சக எண்ணம், வஞ்சனை, ரகசியக் குற்றம், மறைவான நடத்தை எனப் பொருள்கள் உண்டு. குழந்தையைப் போல சூதுவாது இல்லாதவர்கள், இறை உணர்வில் தோய்ந்து உள்ளத் தூய்மை பெற்றவர்கள் ஆகியோரே வெள்ளை மனத்தினர். அவர்களது மனது சுத்தமாக இருப்பதால், அவர்களுக்கு கறை, அழுக்கு போன்ற வஞ்சக எண்ணங்கள் தோன்றாது.

அடுத்தவரை ஏமாற்றுதல், திருடுதல், பொய் சொல்லுதல், நம்பிக்கை துரோகம் இழைத்தல், வஞ்சித்தல், பிறரைத் துன்புறுத்தல், கெடுதி நினைத்தல், மோசடி செய்தல், பழி வாங்குதல், கையூட்டுப் பெறுதல், ஊழல் புரிதல் போன்றவை கள்ளச் சிந்தனைகள் ஆகும்.

குழந்தை போன்ற மனது இருப்பவர்களுக்கு இயல்பிலேயே தீய சிந்தனைகள் தோன்றாது. இறை நினைப்பிலும் ஆன்மிக எண்ணத்திலும் ஊறி மனத்தைப் பக்குவப்படுத்தி வெளுத்தவர்களுக்கும் கெடுதியான எண்ணம் தோன்றாது.

இதனைத்தான் ‘வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை’ என்று நவின்றுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 88

வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை

விளக்கம்:

அனைத்து அதிகாரமும் வல்லமையும் உடையவன் சீற்றம் கொண்டால், அதிலிருந்து காப்பாற்றுவதற்கு யாரும் துணைவர மாட்டார்கள் என்கிறார் ஔவையார்.

வேந்தன் என்ற சொல்லுக்கு அரசன், ஆட்சியாளன், இந்திரன் உள்ளிட்ட பொருள்கள் உள்ளன. இந்திரன் என்ற சொல்லுக்கே அரசன், தலைவன் என்றுதான் பொருள். இடி ஆயுதம் (வஜ்ராயுதம்) ஏந்தியிருப்பவனான தேவர்களின் அரசன் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டான். வேதத்தைப் போலவே சங்க இலக்கியத்திலும் இந்திரன், மருத நிலக் கடவுளாக வணங்கப்பட்டான். இந்திரனுக்கு வேந்தன் எனச் சிறப்புப் பெயரும் உண்டு. ஆக, வேந்தன் என்ற சொல் அரசனைக் குறிப்பதோடு இறைவனுக்கும் ஆகி வருகிறது.

கருணாமூர்த்தியாக இருந்தாலும் தேவையானபோது கடுமையைக் காட்டும் அந்த இறைவனுக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களோடு சர்வ வல்லமையும் உண்டு. அதைப் போன்ற குணம் கொண்டு மக்களைக் காப்பாற்றும் அரசனை உயர்வு நவிற்சியாக ‘மக்கட்கு இறையென வைக்கப்படும்’ என்றார் திருவள்ளுவர்.

அரசனை இறைவனைப்போல கருதுவதும், அரசு அதிகாரத்தை இறையாண்மை எனக் கூறுவதும் இதனால்தான்.

சீற்றம் என்பது சாதாரண கோபமோ, ஆத்திரமோ அல்ல. தவறுகளும் தீமைகளும் மலிந்துவிட்ட போது, பொறுமை எல்லை கடந்துபோய், அவற்றை அடியோடு களைந்தெறிவதற்காகத் தோன்றும் ஆவேசமே சீற்றம்.

ஆம்துணை என்றால் ஆகும் துணை, அதாவது ஆகிவரும் உதவி என்று பொருள். அதிகாரங்களை வைத்திருப்பதோடு வல்லமையும் கொண்டிருக்கும் அரசனுக்குச் சீற்றம் வந்தால், தவறிழைத்தவன் அழிந்துபோவான். அச்சத்தின் காரணமாக அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். குற்றத்துக்கான தண்டனை இது என்பதால் அவன் சார்பாக பேசக்கூட மாட்டார்கள். மண்ணுலகில் சிறு பகுதியை ஆளும் அரசனாகிய வேந்தனுக்குச் சீற்றம் வந்தாலே யாரும் துணைக்கு வர மாட்டார்கள் என்றால், அனைத்துலகையும் ஆளுகின்ற ஆண்டவனாகிய அந்த வேந்தனுக்குச் சீற்றம் வந்தால் யார்தான் உதவி செய்ய முடியும்?

எனவே அரசனுக்கோ, ஆண்டவனுக்கோ சீற்றம் வரும் வகையிலான குற்றங்களை யாரும் செய்யக் கூடாது. செய்தால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. மனிதனாகிய அரசனுக்கு உடனடியாகச் சீற்றம் வந்துவிடும். ஆனால் தெய்வத்துக்குச் சீற்றம் விரைவில் வந்துவிடாது. மிகவும் பொறுமையாக இருந்து, உலகில் குற்றம் எல்லை கடந்து போகும்போது, சீற்றம் கொண்டு, உரிய வடிவில் நின்று இறைவன் கொல்வான். அப்போது ஏற்படும் அழிவைத் தடுக்க எதுவும் துணையாக இருக்க முடியாது.

இதனைத்தான் ‘வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை’ என்று எச்சரித்துள்ளார் ஔவையார்.
***
கொன்றைவேந்தன்- 89

வைகல் தோறும் தெய்வம் தொழு

விளக்கம்:

தினந்தோறும் காலையில் தெய்வத்தை வணங்கு என்கிறார் ஔவையார்.

வைகல் என்பதற்கு நாள், அதிகாலை, வேளை ஆகிய பொருள்கள் உள்ளன. தெய்வம் என்றால் கடவுள். அறிவொளியாகவும், அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கும் சக்தியாகவும் இருப்பது தெய்வம்.

தொழுதல் என்றால் வணங்குதல் என்று பொருள். நெஞ்சுக்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதலும், விழுந்து (பணிந்து) வணங்குதலும் தொழுதல் ஆகும்.

‘நம்பு தம்பி, தெய்வம் உண்டு’ என்று சொன்ன பாரதியார் ‘அறிவே தெய்வம்’ என்றும் ‘தெய்வம் நீ என்றுணர்’ என்றும் விளக்கியுள்ளார். எல்லாவற்றிலும் உறைகின்ற இறை சக்தி நமக்குள்ளும் வீற்றிருக்கிறது. அதனை அறிந்துகொண்டு நல்வழிப்படுவதற்கே வழிபாடு. அதற்காகத்தான் பாரதி போற்றும் ஔவைப் பாட்டி நமக்கு, தெய்வம் தொழு எனக் கட்டளை இடுகிறார்.

தெய்வத்தை அறிந்துகொள்வதும், தனக்குள்ளே தெய்வத்தை உணர்வதும் ஓர் அனுபூதி. தொடர் பயிற்சியின் மூலமே அது சாத்தியமாகும். அதற்காகத்தான் தினமும் தெய்வத்தைத் தொழ வேண்டும். மேலும் அறிவின் மூலம் தெய்வத்தை நமக்குள்ளே அறிந்துகொண்டாலும் அகங்காரத்தால், எங்கும் வியாபித்திருக்கும் அதன் ஆற்றலை அறியாமல், மதியாமல் போய்விடுவோம். அது சாதகனுக்கு பாதகம். ஆகையால்தான், தான் அந்தத் தெய்வத்தின் ஒரு சிறு துளி என்பதை நினைவில் வைத்திருப்பதற்காகத்தான் தினந்தோறும் வணங்க வேண்டும்.

வைகலுக்கு வேளை என்றும் பொருள் இருப்பதால் அதிகாலை, நண்பகல், மாலை ஆகிய மூவேளைகளிலும் தெய்வத்தைத் தொழுதல் நலம். இறைசக்தியால் நடத்தப்படுவதான தோன்றுதல், இயங்குதல், மறைதல் ஆகிய மூன்றையும் குறிப்பதாக இம்மூவேளைகள் அமைந்துள்ளன. ஆகையாலும் தினந்தோறும் முக்காலமும் தெய்வத்தைத் தொழ வேண்டும்.

இதனைத்தான் சுருக்கமாக, ‘வைகல் தோறும் தெய்வம் தொழு’ என்று கூறியுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 90

ஒத்த இடத்தில் நித்திரை கொள்

விளக்கம்:

நமக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய இடத்தில் படுத்து உறங்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

ஒத்த என்றால் ஏற்ற, தகுந்த, பொருத்தமான, சரிசமமான, நேரான எனப் பல பொருள் உண்டு.

நித்திரை என்பது உறக்கம், ஓய்வு எனப் பொருள்படும். உடலுக்குத் தேவைப்படும் ஓய்வே உறக்கம். முக்கியமாக இரவு நேரத்திலே உடலின் செயல்களை நிறுத்தி ஓய்வு கொடுத்தல் அதாவது நித்திரை கொள்ளுதல் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களுக்கு இயற்கையின் விதி. இவ்வாறு உறங்கி ஓய்வெடுத்து விழிக்கும்போதுதான் உடலும் மனமும் மூளையும் புத்துணர்வு பெறுகின்றன.

எங்கே படுத்தாலும் உடனே அயர்ந்து தூங்கிவிடுதல் என்பது ஒரு வரம். அது எல்லோருக்கும் வாய்த்து விடாது. அதேநேரத்தில் சமச்சீரற்ற தரை, மேடுபள்ளமான இடம், நிம்மதியாகத் தூங்க விடாமல் ஓசை எழும்பும் இடம், நல்ல காற்றோட்டம் இல்லாத இடம் போன்ற இடங்களில் உறங்கினால் யாருக்குமே நிம்மதியான நித்திரை வராது. இடையூறுடன் கூடிய உறக்கம் எதிர்மறை விளைவைத் தந்துவிடும். புத்துணர்வுக்குப் பதிலாக பகலிலும் சோம்பிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். ஆகையால்தான் நமக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய இடத்தில் உறங்க வேண்டும் என்கிறார் ஔவையார்.

சிலருக்கு பழக்கப்பட்ட இடத்தில்தான் உறக்கம் வரும், புது இடத்தில் வராது என்பார்கள். அதற்காகத் தூங்காமல் இருக்கலாமா? பழகிய இடம் என்பது ஒரு மனப்பாங்கு, அவ்வளவே. புது இடமாக இருந்தாலும் சமதரையான, காற்றோட்டமுள்ள, இரைச்சலற்ற இடத்தில் படுத்தால் நிம்மதியான உறக்கம் வரும். இதையும் கருத்தில் கொண்டே ஒத்த இடத்தில் நித்திரை கொள் என்று உரைத்துள்ளார் ஔவையார்.

இதற்கு வேறு ஒரு கோணத்திலும் விளக்கம் காணலாம். நித்திரை என்பது மிக அமைதியான மனநிலையையும் குறிக்கும். வேறு எவ்வித நினைப்பும் இன்றி மனதை ஓரிடத்தில் குவித்து, அதிலே லயிப்பது நித்திரை. ஒத்த இடம் என்பது இறை நினைப்பு. இறை நினைப்பில் ஆழ்ந்து கிடக்கப் பழகிக் கொள் என்ற ஞானோபதேசத்தையும் ‘ஒத்த இடத்தில் நித்திரை கொள்’ என்ற வாசகத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 91

ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

விளக்கம்:

ஓதுதல் இல்லாதவர்களுக்கு நல்லுணர்வும் ஒழுக்கமும் இருக்காது என அறுதியிட்டுச் சொல்கிறார் ஔவையார்.

ஓதல் என்பதற்கு பயிலுதல், பிறருக்கு போதித்தல், எடுத்துச் சொல்லுதல், மந்திரம் ஜெபித்தல், மனப்பாடம் செய்தல் ஆகிய பொருள்கள் உள்ளன. கல்விதான் அறிவுக் கண்ணைத் திறந்து, நல்வழியைக் காட்டுகிறது.

ஆகையால் நன்கு கல்வி கல்லாத ஒருவரிடம் நல்ல உணர்வுகளோடு ஒழுக்கமும் இருக்காது என இதற்குப் பொருள் கொள்ளலாம்.

அதேநேரத்தில் ஓதல் என்பது வேதத்தோடு தொடர்புடைய சிறப்புச் சொல். வேதம் கற்றல், வேதத்தைப் பிறருக்குச் சொல்லித் தருதல் ஆகியவற்றுக்கு ஓதல் என்று பெயர். வேதம் ஓதல் என்பது வெறுமனே கற்றுக் கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், வேதச் சொற்களை மனப்பாடம் செய்தல், வேதக் கருத்துகளை விளக்கத்தோடு நன்கு புரிந்து கொள்ளுதல், மந்திரம் ஜெபித்தல், தான் கற்றதைப் பிறரின் நலனுக்காகப் பயன்படுத்துதல், பிறருக்கும் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்தல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.

வேதத்தை குருட்டு மனப்பாடம் செய்வதற்குப் பெயர் ஓதல் அல்ல. வேதத்தை இன்னார்தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்ற குருட்டு மனப்பான்மையும் ஓதல் அல்ல. ஏனெனில் அவ்வாறு செய்யும்போது, கருதும்போது வேதத்தின் அடிப்படை அடிபட்டுப் போகிறது.

அனைத்து மனிதர்கள் மாத்திரமல்ல, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுகமாக இருக்க வேண்டும், ஒரு துன்பமும் அடையக் கூடாது எனக் கூறுகிறது வேதம். ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (அனைத்து உலகங்களும் நன்றாக இருக்க வேண்டும்), ‘ஸர்வே ஜனோ சுகினோ பவந்து’ (அனைத்து மனிதர்களும் நன்றாக இருக்க வேண்டும்), ‘ஸர்வே பவந்து சுகின:’ (அனைத்துமே நலமாக இருக்க வேண்டும்), ‘மா கச்சித் துக்கபாக் பவேத்’ (யாருமே, எதுவுமே துயரமடையக் கூடாது) ஆகிய மாபெரும் உன்னத வாக்கியங்கள் வேதத்தில் ஒலிக்கின்றன. இவற்றின் உட்பொருள் அறியாமல் படித்தல் ஓதல் அல்ல. இவற்றை ஒருசிலர் மட்டுமே அறிய வேண்டும் எனக் கருதுவதும் ஓதல் அல்ல.

அதேநேரத்தில் வேதம் ஓதுவதற்கு கடுமையான நியம நிஷ்டைகள் உள்ளன. யாராக இருந்தாலும் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும். அதேபோல

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

-என்று திருவள்ளுவர் (திருக்குறள்- 292) மொழிந்திருப்பதைப் போல, தீமையை அழிப்பதும் ஒருவகையில் நன்மையை உருவாக்குவதே ஆகும்.

ஆகையால்தான் வேதக் கடவுளர்கள் நன்மையை நல்கும் கருணையோடு தீமையை ஒழிக்கும் கடுமையோடும் விளங்குகிறார்கள். இதன் உட்பொருளை நாம் தெளிவாக உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு மிகச் சரியாகப் புரிந்துகொண்டு வேதம் ஓதப்படாததால்தான், பாரதம் பல்வேறு கீழ்மைக்கும் ஆளானது. ஓதல் என்பது வெறும் கோட்பாட்டை மாத்திரமல்ல, செயல்பாட்டையும் உள்ளடக்கியது.

நான்கு வேதங்களோடு ஆயுர் வேதம் (மருத்துவம்), தனுர் வேதம் (ஆயுதப் பயிற்சி) ஆகியவையும் வேதம் என்றே போற்றப்படுகின்றன.

தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாய்மொழி, திருமந்திரம், திருப்புகழ் போன்ற நம் தமிழ் ஞான நூல்களும் வேதங்களே.

திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அறநூல்களைப் பொருளுணர்ந்து கற்றலும் வாழ்வில் கடைபிடித்தலும் ஓதலே.

ஆக, ஓதல் என்பதன் பொருள், பொருளுணர்ந்து பயிலுவதோடு செயல்பாட்டிலும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே. அவ்வாறில்லாவிடில் நமக்கு உரிய உணர்வோடு, ஒழுக்கமும் (நெறிசார்ந்த வாழ்வும்) அமையாது.

ஆக, அறிவைத் தருகின்ற கல்வியையும், அறிவின் உச்சமாகிய வேதத்தையும் (இதர ஞான, அறநூல்கள் உட்பட) ஓதாதவர்களிடம் உணர்வும் ஒழுக்கமும் இருக்காது. இதனைத்தான் ‘ஓதாதார்க்கில்லை உணர்வோடொழுக்கம்’ என்று பகர்ந்துள்ளார் ஔவையார்.

(குறிப்பு: வு,வூ, வொ, வோ ஆகியவற்றில் தொடங்கும் வகரச் சொற்கள் இல்லாததால், 85, 86, 90, 91 ஆகிய பாக்களில் முறையே உ, ஊ, ஒ, ஓ எனத் தொடங்கும் சொற்களை ஔவையார் பயன்படுத்தியுள்ளார்.)

இத்துடன் கொன்றைவேந்தன் விளக்கவுரை நிறைவடைகிறது.

(நிறைவு)


 

No comments:

Post a Comment