02/11/2021

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி- 3)

-பத்மன்




காண்க:

***

கொன்றைவேந்தன்- 51

நீரகம் பொருந்திய ஊரகத் திரு

விளக்கம்:

நீர்நிலை நன்கு அமைந்துள்ள ஊரிலே குடியிரு என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்று எச்சரித்துள்ளார் திருவள்ளுவர். உணவு விளைச்சலுக்கு மட்டுமின்றி உயிர் வாழ்தலுக்கும் நீர் அவசியம்.

ஆனால் புவியின் ரத்தவோட்டம் போன்ற நன்னீர் பாய்கின்ற ஆறுகளையும், நீரைத் தேக்கிவைக்கும் இயற்கைப் பைகளான குளம், ஏரிகளையும் சுயநலத்துக்காக மனிதராகிய நாம் அழித்து வருகிறோம். நீர்நிலைகள் சுருங்குவதும் வறள்வதும் வறட்சிக்கு மட்டுமின்றி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்துக்கும் காரணமாக அமைகின்றன.

ஆகையால் நீர்சேமிப்பு அகங்களான ஆறு, குளம், ஏரி, கால்வாய் போன்றவை காப்பாற்றப்பட வேண்டும். அவ்விதம் இருந்தால் ஊர் ஊராக இருக்கும். இல்லையேல் பாலையாய்த் திரிந்து வேறாகும். இதுபோன்ற வறண்ட நிலம், மக்கள் போன்ற தோற்றத்தில் உள்ள மாக்களையே உருவாக்கும். மனித சமுதாயத்துக்கு அதனால் விளையும் இன்னல்கள் பல.

புவியின் ஈரம் காய்ந்தால் மானுட நெஞ்சின் ஈரமும் மாயும். ஊருக்கு நீரகம் பொருந்தி இருக்க வேண்டுமானால், நாம் அதற்குப் பொருத்தமாக வாழ்ந்தாக வேண்டும்.

ஆகையால்தான் நீர்நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே ‘நீரகம் பொருந்திய ஊரகத்திரு’ என உபதேசிக்கிறார் ஔவையார்.

***

கொன்றைவேந்தன்- 52

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

விளக்கம்:

மிகச் சிறிய செயலாக இருந்தாலும்கூட அதுபற்றி முழுமையாக ஆராய்ந்து பார்த்த பிறகே அச்செயலில் இறங்க வேண்டும் என்கிறார் ஔவையார்.

நுண் என்பது அளவில் மிகச் சிறியது. ஆனால் அதில்தான் நுட்பங்கள் பொதிந்திருக்கும். மிகப் பெரிய கல்லைக்கூட கையால் எளிதில் செதுக்கி, கலை வேலைப்பாடுகளைக் காட்டிவிட முடியும். ஆனால் சிறிய அளவுள்ள காதணியில், கலை வேலைப்பாடுகளைச் செதுக்குவது எளிதல்ல. ஆகையால் செயல் சிறியது என எதையும் அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது.

சிறிய நூல்கண்டும் காலை இடறிவிடும். சிறிய துரும்பும் பெரிய உறுத்தலைக் கொடுக்கும். ஒற்றைத் தாள்முனையும் ஒழுங்காகக் கையாளாவிடில் கையைக் கிழித்துவிடும். ஆகையால் செயலில் சிறியது – பெரியது என்று பாகுபாடு இன்றி அவற்றைச் செயலாற்றுவது குறித்து முறையாகச் சிந்திப்பது அவசியம்.

எண்ணுதல் என்றால் பலவாறாக யோசித்துப் பார்த்தல், ஆழமாக ஆராய்தல் என்று பொருள். துணிதல் என்பது திடமாகவும் உறுதியாகவும் முடிவெடுத்தல் ஆகும்.

இதைத்தான் ‘எண்ணித் துணிக கருமம்’ என்றுரைக்கிறார் திருவள்ளுவர். துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கைத் தந்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்.

பெரிய செயல்களை மலைப்பின் காரணமாகவே நாம் சரியாக ஆராய்ந்து திட்டமிட்டுச் செயலாற்றி விடுவோம். ஆனால் சிறிய செயல்களில்தான் அலட்சியம் காரணமாக, வாமனனிடம் மகாபலி தோற்றதைப் போல மண்டியிட்டு விடுவோம்.

எனவேதான் சிறிய செயலாக இருந்தாலும்கூட அதுபற்றி முறையாக எண்ணிப் பார்த்து, உறுதி செய்துகொண்டு, காரியத்தில் இறங்கு என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

***

கொன்றைவேந்தன்- 53

நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு

விளக்கம்:

நல்ல நூல்கள் கூறும் நெறிமுறைகளைத் தெரிந்துகொண்டு அவை கூறும் ஒழுக்கத்தைக் டைபிடித்து வாழ் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல் என்பது அதில் உள்ள நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காகவே. நூல் என்றால் நூற்பது. அணியும் துணியை உருவாக்குவதற்காக எப்படி பஞ்சை இழைத்து நூல் தயாரிக்கப்படுகிறதோ, அதுபோல அறிவைப் பெற்றுப் பயனுறுவதற்காக சொற்களை இழைத்து நூற்கப்படுவதே நூல். ஔவையார் இங்கே நூல் எனக் குறிப்பிடுவது வாழ்க்கைக்குப் பயன்படுவதும் வழிநடத்துவதுமான நூல்களையே.

நூன்முறை தெரிதல் என்றால் அத்தகைய நூல்களைக் கற்கும்போது முறையாகக் கற்க வேண்டும் எனப் பொருள். சந்தேகம், குழப்பம், தவறான புரிந்துகொள்ளல் ஆகியன இல்லாமல் கற்பதே முறையாகக் கற்றலாகும். முறையாகக் கற்கும்போது நூல்காட்டும் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் நன்கு தெரிந்துகொண்டவர்கள் ஆகிறோம்.

அந்த நூல்களைக் கற்பதன் நோக்கம் அதுகாட்டும் நல்வழியில் நிற்பதே. கற்றதைக் காற்றில் விடுவதற்காக கற்கக் கூடாது; கடைபிடித்து ஒழுகுவதற்காகக் கற்க வேண்டும். அதைத்தான் சீலத்து ஒழுகு என்று குறிப்பிடுகிறார் ஔவையார்.

கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

-என்று ஈரடியில் திருவள்ளுவர் இதனையே (திருக்குறள்- 391) வலியுறுத்தியுள்ளார். அவர் கூறிய குறளை இன்னும் சுருக்கமாகவும் நுட்பமாகவும் ஓரடியில், ‘நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு’என்று மொழிந்துள்ளார் ஔவை மூதாட்டியார்.


***
கொன்றைவேந்தன்- 54

நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை

விளக்கம்:

தனக்குத் தெரியாமலேயே எவர் ஒருவருக்கும் நாம் வஞ்சனை செய்துவிட முடியாது, மனசாட்சி சுடும் என்கிறார் ஔவையார்.

தவறு என்பது வேறு, வஞ்சனை என்பது வேறு. நம்மை அறியாமலேயே தவறு செய்துவிட முடியும். ஆனால் வஞ்சகம் என்பது அறிந்தே செய்வது.

துரோகம், கபடம், ஏமாற்றுதல், தெரிந்தே பொய் சொல்லுதல், ஊழல், பழி பாவங்களைச் செய்தல், திட்டமிட்டுக் குற்றம் இழைத்தல் போன்றவை வஞ்சகம் ஆகும். இவற்றை அறியாமலேயே எப்படிச் செய்துவிட முடியும்?

ஆத்திரம் கண்ணை மறைக்கச் செய்திடும் குற்றத்தைக்கூட வஞ்சகம் அல்ல என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், இவை குற்றம், பாவம் என்று நன்கு தெரிந்திருந்தும் அவற்றைச் செய்வதுதான் வஞ்சகம்.

இத்தகைய வஞ்சகச் செயலுக்கு முதல் சாட்சி நமது நெஞ்சே, அதாவது மனமே. யாருக்கும் தெரியாமல் ஒரு வஞ்சனையைச் செய்தாலும் தன் மனத்துக்குத் தெரியாமல் ஒளித்துவிட முடியுமா? அது வஞ்சகம் செய்தோரைக் குடைந்துகொண்டே இருக்கும்.

இதைத்தான்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

-என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள்- 293).

அந்த எச்சரிக்கையையே சற்றே கிண்டலாக, ‘நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை’ என்று உரைத்துள்ளார் ஔவையார்.

***

கொன்றைவேந்தன்- 55

நேரா நோன்பு சீரா காது

விளக்கம்:

மனம் ஒன்றி மேற்கொள்ளப்படாத விரதம் சிறப்புடையதாக அமையாது.

நோன்பு என்பது உறுதியுடன் ஈடுபடுகின்ற விரதம் ஆகும். குறிப்பிட்ட நேரம் வரை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருத்தல், ஒரு வார்த்தையும் பேசாமல் மௌன விரதம் இருத்தல், குறிப்பிட்ட காலம் வரை புலனடக்கத்துடன் இருத்தல், தவம் மேற்கொள்ளுதல் போன்றவை நோன்பு ஆகும்.

நோன்புக்கு அடிப்படைத் தகுதி, எடுத்துக்கொண்ட விரதத்தை உறுதியோடு கடைபிடித்தல் ஆகும். இதற்கு, அந்த நோன்புச் செயலிலே நமக்கு பூரண உடன்பாடு இருக்க வேண்டும். மனம் ஒப்பிச் செய்ய வேண்டும்; ஒப்புக்காகச் செய்யக் கூடாது.

நோன்புக்கு மனத்தூய்மையும் மனபலமும் மிகவும் அவசியம். நோன்பின் போது ஏற்படும் இடையூறுகளையும் கஷ்டங்களையும் வென்றெடுத்து, மேற்கொண்ட நோன்பை சிறப்புடன் நிறைவு செய்ய வேண்டும். அதற்கு அந்த நோன்போடு நாம் நேர்ப்பட வேண்டும். முறையாக அதற்கு உடன்பட வேண்டும்.

மனம் ஒன்றிச் செய்வதே நோன்பு என்பதால்தான் இறைவனிடம் வேண்டுதலின் பொருட்டு நாம் கூறுகின்ற உறுதிமொழி நேர்ச்சை, நேர்ந்து கொள்ளுதல் என்று அழைக்கப்படுகிறது. ஆக நோன்புக்கு மனம் ஒன்றுதல் மிக மிக அவசியம்.

எனவே, மனம் ஒன்றாமல் செய்கின்ற நோன்பு சீராக, அதாவது நேர்த்தியாக நிறைவடையாது. அதனைத்தான் ‘நேரா நோன்பு சீர் ஆகாது’ என எச்சரிக்கிறார் ஔவையார்.

***

கொன்றைவேந்தன்- 56

நைபவர் எனினும் நொய்ய உரையேல்

விளக்கம்:

பலவீனமானவரைக் கூட இளக்காரமாகப் பேசாதே என்கிறார் ஔவையார்.

நைதல் என்றால் கெடுதல், நிலை திரிதல், வருந்துதல், பலவீனமடைதல் எனப் பல பொருள் உண்டு.

நொய்ய என்றால் வருத்தம் ஏற்படும்படி, நோகும்படி என்று பொருள். நைபவர் என்னும் சொல்லுக்கு பலமற்றவர் என்பதோடு, தன் நிலையில் இருந்து கெட்டுப் போனவர், தன் நிலை இழந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

வசதியாக வாழ்ந்து கெட்டுப் போயிருக்கலாம், புத்தி பிசகிப் போனவராக இருக்கலாம். தன் தவறு காரணமாக பெருமை குன்றியவராக இருக்கலாம்.

இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தால் தன் நிலையில் இருந்து கெட்டுப் போனவராக ஒருவர் இருப்பினும், அவர் மனம் நோகும்படி பேசாதே என்கிறார் ஔவையார்.

பலமற்றவர், தவறிழைத்தவர் என்பதற்காக நோக அடிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்களுக்கும் மனம் இருக்கிறதே? நாம் மனம் போன போக்கில் ஏளனமாகப் பேசி விடலாமா?

இதனைத்தான் மகாகவி பாரதி, ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?’ என்று சீறுகிறார்.

நிலை இறக்கம் என்பதை ஏளனம் செய்து புண்படுத்துவது வக்கிர புத்தி. அதுகூடாது. ஆகையால்தான் நைபவர் எனினும் நொய்ய உரையேல் என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.

 ***

கொன்றைவேந்தன்- 57

நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

விளக்கம்:


மென்மையானவரும் சுட்டுப் பொசுக்கும் திண்மையுடையவராக மாறுவர் என்று எடுத்தியம்புகிறார் ஔவையார்.

நொய் என்றால் நுண்மை, மென்மை, நலிவு என்று பொருள். நுணுக்கமாக, உடைந்த அரிசி, நொய் என்று கூறப்படுவதை நோக்கவும்.

வெய் என்றால் வெப்பம், சூடு, தீ என்று பொருள். வெய்யோன் என்பது சூரியனைக் குறிக்கும். வெப்பம் மிகுந்த வலிமை உடையது. யாரையும் எதனையும் வாட்டி எடுத்துவிடக் கூடியது. ஒருவர் சினந்தால் ‘அவர் சூடாயிட்டார்’ என்கிறோம்.

ஆற்றலும் வெப்பமாகத்தான் இருக்கிறது. ஆகையால் வெய்யவர் என்பது வலிமையுடையவர், சீற்றம் கொள்பவர் என்பதைக் குறிக்கிறது. சூரியனையும் குறிப்பதால் மேன்மை தங்கியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

சிறார்களை நாம் மென்மை உடையவர்கள் எனக் கருதுகிறோம். அவர்களும் ஒரு காலகட்டத்தில் திண்மை உடையவராக மாறுகின்றனர். பெண்களையும் மென்மையானவர்கள் என்று கருதுகிறோம். ஆயினும் அவர்கள் சீறும்போது ‘பூவொன்று புயலானது’ எனக் கூறத்தக்க வகையில் திண்மை உடையவராக மாறுவர்.

உடல் வலிமையற்றவர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள், வறுமையில் உழல்பவர்கள் ஆகியோரை நொய்யவர் எனக் கருத இடமுண்டு. இத்தகையோரை அரவணைக்காமல் அலட்சியப்படுத்தினால், தொடர்ந்து அவமானப்படுத்தினால் அவர்களும் அறச்சீற்றம் கொண்டு வெய்யவர்களாக மாறுவர். அப்போது நாடு தாங்காது. ஆகையால், நலிவடைந்தவர்களும் சீற்றம் கொண்டால் வலிமையுடையவர்களாக மாறிவிடுவர் என்பதை எடுத்துரைக்கிறார் ஒவையார்.

இதனை வேறொரு கோணத்திலும் சிந்திக்கலாம். நொய்யவர் என்பதற்கு நுட்பமானவர், நுணுக்கமானவர் எனப் பொருள் எடுத்துக் கொள்ளலாம். அவ்வகையில், நுட்பமாகச் சிந்திப்பவர்கள் வலிமையுடைவர்களாக மேன்மை அடைவர் என்று கூறுகிறார் ஔவையார்.

இன்னும் வேறு ஒரு கோணத்தையும் பார்க்கலாம். நொய்யவர் என்பவர் யோகத்தில் திளைத்து உடலை நலிவடையச் செய்து, உள்ளத்தில் நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து பரம்பொருளைக் கண்டடைவர். அத்தகையவர் ஒளிபொருந்திய சூரியனைப் போல, புதியதொரு தெய்வம்போல மேன்மை அடைவர் என்றும் ஔவையார் உபதேசிக்கிறார்.

ஆக, பல்வேறு கோணங்களிலும், ‘நுண்மையுடையோர் திண்மையுடையோராகமாறுவர்’ என்பதை எடுத்துரைத்துள்ளார், ஓரடியில் உன்னதங்களை ஓதும் நமது ஔவை மூதாட்டியார்.

 ***

கொன்றைவேந்தன்- 58

நோன்பு என்பது கொன்று தின்னாமை

விளக்கம்:

பிற உயிரைக் கொன்று தின்பதைத் தவிர்ப்பதே சிறந்த விரதம் என்றுரைக்கிறார் ஔவையார்.

நோன்பு என்றால் உறுதியாகக் கடைபிடிக்கும் விரதம் எனப் பொருள்படும்.அறநெறிகளில் அசையாது நிற்றலும் நோன்பே. வேண்டுதலுக்காகவோ மனவலிமைக்காவோ ஒரு நாள் உண்பதை விலக்குவதோ, வாயடக்கம் பூணுவதோ மட்டும் விரதம் அல்ல. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து ஒழுகும் ஒழுக்கமும் விரதமே. அவ்வகையில் புலால் உண்ணாமை மிகச் சிறந்த நோன்பாகும்.

காட்டு மிருகங்கள் பசிக்காக இரையை அடித்துத் தின்பது வேறு. மனத்தால் சிந்திக்கவும் மாற்று வழிகளில் புசிக்கவும் தெரிந்த மனிதன் பசிக்காவோ ருசிக்காகவோ கொன்று தின்பது என்பது வேறு. அவ்வாறு கொன்று தின்னாமை விரதம் ஆகும்.

‘அஹிம்சா பரமோ தர்ம:’ என்கிறது உபநிஷதம். கொல்லாமையே மாபெரும் அறம். கொன்று தின்னாமை மாபெரும் விரதம். அதனால்தான் திருவள்ளுவரும் புலால் மறுத்தல் எனத் தனி அதிகாரமிட்டு பத்துக் குறட்பாக்களை மொழிந்துள்ளார்.

ஊன் உண்ணும் சிலர், ‘தான் கொல்வதில்லை, யாரோ கொல்கிறார்கள், நான் தின்கிறேன்’ என்பார்கள். அதற்காகத்தான் திருவள்ளுவர்,

தினற்பொருட்டு கொல்லா துலகெனின் யாரும்
விலைபொருட்டால் ஊன்தருவா ரில்

-என்றுரைத்துள்ளார் (திருக்குறள்- 256).

தான் தின்பதற்காகப் பிற உயிர்களைக் கொல்வதை உலக மக்கள் தவிர்த்துவிட்டால் இறைச்சியை விலைக்கு விற்கும் வழக்கமும் மறைந்துவிடும் என்கிறார். ஊன் தின்பதாலேயே பிற உயிர்கள் கொலையுறுகின்றன.

ஆகையால் கொன்று தின்னாமை என்று ஔவையார் கூறியிருப்பதும், தானே கொன்று தின்னுதல் மற்றும் பிறர் கொன்று அதைத் தின்னுதல் ஆகிய இரண்டையுமே குறிக்கிறது.

அருள் வேண்டுகின்ற மானுடர், ஊன் உண்ணாது இருத்தலை மிகச் சிறந்த கோட்பாடாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதைத்தான் ‘நோன்பு என்பது கொன்று தின்னாமை’ என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்


***

கொன்றைவேந்தன்- 59

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

விளக்கம்:

ஒருவருக்கு ஏற்படும் விளைவைக் கொண்டே அவரது நற்செயல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ஔவையார்.

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். விதை ஒன்று போட சுளை வேறு விளையாது. இவையெல்லாம் முன்னோர்தம் அனுபவ உரைகள். தீமை செய்தவன் நன்கு வாழ்வதைப் போல காட்சி தருவான். ஆனால் திகைத்திட வீழ்ச்சி அடைவான். நல்லவன் துயருறுவதைப் போலத் தோன்றும். ஆனால் அவனது தர்மம் தலைகாக்கும், தலைமுறைகளையும் காக்கும்.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்.

அவையெல்லாம் நம் கர்ம வினைகளின் விளைவுகளே. ஆகையால் நன்றே செய்ய வேண்டும்.

நமக்கு ஏற்படும் விளைவுகளே நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

விளைந்த பயிர்களைக் கொண்டு அது விளைந்த நிலத்தின் தன்மையையும் விதையின் தன்மையையும் அறிந்துகொள்ள முடிகிறதென்றால், விளைவுகளின் தன்மையை வைத்து செய்கையின் தன்மையை நிர்ணயம் செய்துவிட முடியாதா?

இதனைத்தான் ‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ என எடுத்துரைக்கிறார் ஔவையார்.

 ***
கொன்றைவேந்தன்- 60

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

விளக்கம்:

பால் பாயச விருந்தாக இருந்தாலும் சாப்பிடுவதற்குரிய காலம் அறிந்து உணவருந்த வேண்டும் என்கிறார் ஔவையார்.

வயிறு என்பது கண்டதையும் இட்டு நிரப்புகின்ற கூடை அல்ல. அது மிகச் சிறந்த இயந்திரம்.

உணவை உள்வாங்கிச் செரித்து உடலுக்குத் தேவையான ஊட்டங்களைப் பிரித்துக் கொடுத்து கழிவுகளை வெளியேற்றும் மாபெரும் தொழிற்சாலை வயிறு.

அதிலும் முறைப்படி இயங்குகின்ற ஆலையே வயிறு என்பது நாம் முக்கியமாக உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயம்.

பசியை உணர்த்தி உணவைக் கேட்பதும் வயிறே. புசித்ததைப் பயனுள்ளதாய் ஆக்குவதும் வயிறே. அது சரியான கால இடைவெளியில் இப்பணியை ஆற்றுகிறது. இந்த இயற்கையை மாற்ற முடியாது. ஒருநாள் முழுவதும் சாப்பிட்டுவிட்டு பல நாள் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது.

‘ஒருநாளைக்கு உணவை ஒழியென்றால் ஒழியாய், இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்’ என்று ஔவையாரே கிண்டலாக வயிற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

வயிறு இவ்வாறு முறையாக இயங்குவதன் மூலம் நம்மையும் முறையாக இயங்கச் செய்கிறது. ஆகையால் வாயின் ருசிக்காக வயிற்றைக் கெடுத்தல் கூடாது.

பால் உடலுக்கு நல்லதுதான். பால் கலந்த பதார்த்தங்கள் சுவையானவை தாம். அதற்காக காலம் தவறி உண்டால் பிரச்னையே. ‘அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ வயிற்றில் இருக்கும் உணவு செரிமானமாகாத காலத்தில் மேற்கொண்டு அடைத்தால் அது தீங்காகவே முடியும்.

உடல்நலம் இல்லாதபோது பால், கஞ்சி போன்ற எளிய உணவுகளையே உண்ண வேண்டியிருக்கும். அதனையும் உரிய காலத்தில் அருந்த வேண்டும். இல்லையேல் பயனில்லை.

இதனால்தான் பால் கலந்த விருந்தாக இருந்தாலும் சரி, பால் கலந்த பத்திய உணவாக இருந்தாலும் உரிய காலத்தில் முறையாக உண்ண வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

 ***
கொன்றைவேந்தன்- 61

பிறன்மனை புகாமை அறமெனத் தகும்

விளக்கம்:

பிறர் குடும்பத்துக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தாமல் இருத்தல் மிகச் சிறந்த அறமாக மதிக்கத் தகுந்ததாகும் என்றுரைக்கிறார் ஔவையார்.

பிறரது வாழ்க்கையில் மூக்கை நுழைத்து குட்டையைக் குழப்பும் டி.வி. சீரியல் கதாபாத்திரங்களை ரசிக்கும் மக்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான அறிவுரை இது.

புகுதல் என்பது குறிப்பாக வன்மையை, அடாத செயலையே குறிக்கிறது. வினை என்பது நன்மை, தீமை இரண்டுக்கும் பொது என்றாலும் சிறப்பாக தீவினையைக் குறிப்பதைப் போல, புகுதலும் பொதுச் சொல் என்றாலும் குறிப்பாக தீய பொருளைச் சுட்டி நிற்கிறது. வீடு புகுந்து கொள்ளை, வெள்ளம் புகுந்தது என வன்செயலில் இச்சொல் அதிகம் பயில்கிறது.

பிறரது வீட்டுக்குள் செல்லுதல், நுழைதல் மென்மையானவையாக இருக்கும். ஆனால் புகுதல் அடாவடியாகவே இருக்கும். கள்ளத்தனமாகப் போகுதலும் புகுதலே.

ஆக பிறன்மனை புகுதல் என்பது அறத்துக்கு ஒவ்வாத செயலையே சுட்டுகிறது. உறவினர்களும் நண்பர்களும் உறவு, நட்பு வட்டத்தின் எல்லையை மீறி ஒரு குடும்பத்துக்குள் ஊடுருவுதலும் ஆதிக்கம் செலுத்துதலும் புகுதலே. இது அறமாகாது என்கிறார் ஔவையார்.

மேலும் சமுதாய ஒழுக்கத்தைப் பெண்களுக்கு மட்டுமே சாற்றிவிட்டு, அவ்வொழுக்கத்தை தான் ஓரத்தில் சார்த்திவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேறோர் அறிவுரையையும் ஔவையார் தருகிறார்.

பிறன்மனை புகாமை என்ற வகையில் பிறர் மனைவியை விரும்பி கேடு செய்யாமை என்பது இல்லறத்தைப் பேணும் மிகச் சிறந்த அறச் செயல் என்றுரைக்கிறார்.

இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை,

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற ஒழுக்கு

-என்று கூறியுள்ளார் (திருக்குறள்- 148).

பிறர் மனைவியை சிந்தையாலும் தீண்டாத மாண்பு அறம் மட்டுமன்று, சிறந்த ஒழுக்க நெறியுமாகும் என உரைத்துள்ளார்.

ஆகையால் ஆணோ, பெண்ணோ எவ்வகையிலும் பிறர் மனைக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தாமல் இருப்பதே போற்றத் தக்க அறச் செயல் என உபதேசிக்கிறார் ஔவையார்.
 
***
கொன்றைவேந்தன்- 62

பீரம் பேணில் பாரம் தாங்கும்

விளக்கம்:


வலிமையைப் பேணினால்தான் சுமையைத் தாங்க முடியும் என்கிறார் ஔவையார்.

பீரம் என்பதற்கு வீரம், வலிமை, தாய்ப்பால் எனப் பல பொருள் உண்டு. பாரம் என்றால் சுமை, பொறுப்பு எனப் பொருள்.

உடல் வலிமையாக இருந்தால்தான் சுமைகளைத் தாங்க முடியும். உடலோடு உள்ளமும் வலிமையாக இருந்தால்தான் பொறுப்புகளைத் தாங்க முடியும், நிர்வகிக்க முடியும். உடல், மனம் ஆகியவற்றோடு புத்தி வலிமையும் இதற்கு அவசியம்.

இத்தகைய வலிமையைப் பேணிக் காக்க வேண்டும். உடலையோ மனத்தையோ அறிவையோ சரியாகப் பராமரிக்காமல் வலிமை குன்ற விட்டுவிட்டால் சுமைகள் நம்மை நசுக்கி விடும்; பொறுப்புகள் நம்மைப் பொசுக்கி விடும்.

எந்த ஒரு மனிதருக்கும் அவர் குழந்தையாக இருக்கும்போது அருந்திய தாய்ப்பாலே அவர்தம் வலிமைக்குக் காரணமாக அமைகிறது. தாய்ப்பால்தான் குழந்தைக்கு பலம். தாய், பாசத்தோடு கொடுக்கும் பால் குழந்தையின் உடல் உறுதிக்கு மட்டுமின்றி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. தாப்ப்பாலால் வலிமை பெற்ற குழந்தைகள் பிற்காலத்தில் குடும்ப பாரத்தை நன்கு சுமக்கிறார்கள். குழந்தைக்கு தாய்ப் பாலூட்டுவதன் அவசியத்தை இளம் தாய்மார்களுக்கு இக்காலத்தில் அறிவுறுத்திக் கூற வேண்டிய நிலை உள்ளது. இதைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் சிந்தித்து அறிவுறுத்தியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆக ‘பீரம்’ எனப்படும் வலிமையை முறையாகப் பேணினால்தான் பாரமாகிய சுமைகளையும் பொறுப்புகளையும் சரியாகத் தாங்க முடியும் என்று மொழிந்துள்ளார் ஔவையார்.

 ***
கொன்றைவேந்தன்- 63

புலையும் கொலையும் களவும் தவிர்

விளக்கம்:

பொய் சொல்லுதல், கொலை செய்தல், களவாடுதல் ஆகிய தீய செயல்களைத் தவிர் என்கிறார் ஔவையார்.

புலை என்பதற்கு இழிவு, தீய செயல், பொய், புலால் உள்ளிட்ட பல பொருள்கள் உள்ளன.

கொலை செய்தல் என்பது பிறரது உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல். கொலை என்பதற்கு உயிர்வதை, இம்சை, துன்புறுத்தல் ஆகிய பொருள்களும் உண்டு. ஆக கொலை என்பது உடலில் இருந்து உயிரைப் பிரிப்பது மாத்திரமல்ல. உடலைத் துன்புறுத்துவதன் மூலம் உயிரைத் துடிக்கச் செய்வது, மனதை நோக அடிப்பது ஆகியவையும் கொலையே.

களவு என்பது பிறர் பொருளை அபகரித்தல். இது பிறர் அறியாத வகையில் செய்யும் திருட்டு, அறிகின்ற வகையிலேயே செய்யும் கொள்ளை ஆகிய இரு வித களவுகளையும் குறிக்கும். அதுமட்டுமின்றி வஞ்சனையால், கபடத்தால் பிறரது உடைமைகளை அபகரித்தலும் களவே.

இவ்வாறாக, புலை என்ற வகையில்- பொய் சொல்லுதல், இழிசெயல், தீய செயல், புலால் உண்ணுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கொலை என்ற வகையில்- உயிர்வதை, துன்புறுத்துதல், மனத்தை நோவடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார். களவு என்ற வகையில் -திருடுதல், கொள்ளையடித்தல், வஞ்சனையால் பிறர் உடைமைகளைச் சுருட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு கூறுகிறார்.

மனிதரை மானுடத் தகுதியில் இருந்து கீழிறக்கம் செய்பவை புலை, கொலை, களவு ஆகிய மூன்றும். இந்த மும்மலங்களையும் தவிர்த்துவிட்டு மனிதனாக வாழ் என்று உபதேசிக்கிறார் ஔவையார்.

 ***
கொன்றைவேந்தன்- 64

பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

விளக்கம்:

இழிவானவர்களிடம் முறையான ஒழுக்கம் என்பது இருக்காது என்கிறார் ஔவையார்.

பூரிய என்றால் இழிவான, கீழ்மையான, கெட்ட என்று பொருள். சீரிய என்றால் சீரான, நேரான, சிறப்பான என்று பொருள்.

ஒழுக்கம் என்பது கடைபிடிக்கும் கொள்கை, முறையான செயல்பாடு, நேர்த்தி, நெறிமுறை, தனது மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக மேற்கொள்ளும் செயல் – அது சார்ந்த பழக்கம் எனப் பொருள்படும். இழிவான, கீழ்மையான, தீய நடத்தை உள்ளவர்களிடம் இத்தகைய உயர் குணங்களை எதிர்பார்க்க முடியுமா?

கெடுதி, புறத்தில் இருந்து வருதல் வேறு. தன் இயல்பிலேயே கேடு இருத்தல் என்பது வேறு. உயர்ந்தவர்களை, மேலானவர்களை வெளியில் இருந்து வரும் கேடுகள் வருத்தினாலும் அவர்கள் நிலை திரிய மாட்டார்கள். ஆனால் இழிவானவர்களின் தன்னியல்பே கெட்டுப் போயிருப்பதால் அவர்களுக்கு நல்லது கிடைத்தாலும்கூட திருந்திவிட மாட்டார்கள்.

முன்னவர்களான உயர்ந்தோரை ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்று தனது மூதுரையில் குறிப்பிடுகிறார் ஔவையார். கெட்டாலும் என்பது, புறக் காரணிகளால் தனது செல்வம், அந்தஸ்து, செல்வாக்கு போன்றவை கெட்டுப் போவதைக் குறிக்கிறது. அவ்வித நிலையிலும்கூட மேலோர் செம்மையாகவே நடந்துகொள்வர்.

ஆனால் கீழோர் இதற்கு எதிர்மறை. இதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒரு சுபாஷிதம் உண்டு:

‘உபதேசோஹி மூர்க்கானாம் பிரகோபாய ந சாந்தயே
பயஹ பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்த்தனம்’

இதன் பொருள்: பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நன்மைக்குப் பதில் விஷத்தையே வளர்க்கும், அதுபோல தீயோருக்குக் கூறப்படும் அறிவுரையும் பதிலுக்கு அமைதியைத் தந்து விடாது.

இதுதான் கீழ்மைக் குணம். தனக்கு வரும் நன்மையையும் தீமையாய்க் கருதி உதறும், மென்மேலும் தீங்கையே விரும்பும்.

மேன்மை- கீழ்மை என்பது தொடர் பழக்கத்தால் வருவது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அது இயல்பாக மாறி விடுகிறது. அதன்பின் மீண்டும் மாறுவது இயலாமல் போய்விடும்.

ஆகையால்தான், ‘பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்’ என்று எச்சரிக்கிறார் ஔவையார்.

 ***

கொன்றைவேந்தன்- 65

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

விளக்கம்:

மெய்ஞானம் பெற்றவர்களுக்கு தமக்கு வேண்டியவர் என்ற தனித்த விருப்பமும், பிறரை வெறுக்கின்ற கோபமும் இருக்காது என்கிறார் ஔவையார்.

பெற்றோர் என்றதும் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர் நினைவுக்கு வருவர். பிள்ளைப் பேறு பெற்றவர் என்பதால் அவர்களுக்கு பெற்றோர் எனப் பெயர். ஆயினும் பேறுகளில் பெரிய பேறு, மெய்யான பேறு, மெய்ஞானத்தைப் பெறுவதுதான். ஆகையால் அத்தகைய உண்மையான உயர் ஞானத்தைப் பெற்றவர்களையே பெற்றோர் எனக் குறிப்பிடுகிறார் ஔவையார்.
அவ்வாறான மெய்ஞானிகள் காய்தல்- உவத்தல் இன்றிச் செயல்படுவர். அதாவது வேண்டாதவர் என்று கருதி வெறுப்பதோ, வேண்டியவர் என்று கருதி விரும்புவதையோ ஞானம் பெற்றவர்கள் செய்ய மாட்டார்கள்.

மெய்ஞானிகள் நடுநிலையோடு, விருப்பு –வெறுப்பால் மாறுபடாத நிலைமனதோடு இருப்பார்கள். இவர்களைத்தான் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ‘ஸ்தித பிரக்ஞர்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மெய்ஞானிகளுக்கு வேண்டியவர்- வேண்டாதவர் கிடையாது. அவர்கள் சமபாவத்தோடு தான் யாரையும், எதனையும் காண்பார்கள். இதனை,

‘அயம் பந்துரயம் நேதி கணனா லகுசேதஸாம்
உதார சரிதானாம் து வசுதைவ குடும்பகம்’

-என்று உரைக்கிறது சம்ஸ்கிருத சுபாஷிதம்.

இதன் பொருள்: இவர் நம்மவர், அவர் அயலவர் எனக் கருதுவது குறுகிய மனப்பான்மை. தாராள மனப்பான்மை கொண்டோர் உலகமே ஒரு குடும்பம் எனக் கருதுவர்.

ஆகையால் மெய்ஞானம் பெற்றோருக்கு இவர்கள் நமக்கு வேண்டிய சுற்றத்தார், அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் என்ற பாகுபாடு இருக்காது என்று மொழிந்துள்ளார் ஔவையார்.

 ***
கொன்றைவேந்தன்- 66

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

விளக்கம்:


சூதுவாது இல்லாமல் இருப்பது பெண்களுக்குச் சிறந்த அணிகலன் போன்றதாகும் என்கிறார் ஔவையார்.

பேதைமை என்றால் அறியாமை என்றும் பொருள் உண்டு. அவ்வாறெனில் முட்டாள்தனமாக இருப்பதா பெண்களுக்கு அழகு? ஞானப்பெண்ணான ஔவையார் அந்த அர்த்தத்திலா சொல்லுவார்? இல்லவே இல்லை.

அறிந்திருந்தாலும் அறியாததுபோல அடக்கமாக இருப்பதே பேதைமை; அதுவே பெண்களுக்கு ஆபரணம் போன்றது என்று சிலர் பொருள் கூறுவர். அது ஓரளவு சரி.

எல்லாம் எனக்குத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவகையில் அணிகலன் போன்றதுதான். ஆனால் இப்பொருளில் பெண்கள் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது போன்ற நிர்பந்தம் காணப்படுகிறது.

அப்படியானால் என்ன உட்பொருள்?

பேதைமை என்பது கள்ளங் கபடமற்ற, சூதுவாது இல்லாத குணத்தையும் குறிக்கிறது. இதற்கு அப்பாவித்தனம் என்பது மேலோட்டமாகத் தெரியும் பொருள்.

ஆராய்ந்து பார்த்தால் வஞ்சனையும், தேவையின்றி வாதிடுதலும் அற்ற நற்குணம் என்பதே இங்கே ‘பேதைமை’ என்பதன் உட்பொருள். இக்காலத் தொலைக்காட்சி சீரியல்களில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் பார்த்தால், சூதுவாது அற்ற பேதைமைக் குணம் பெண்களுக்குச் சிறந்த அணிகலன் என்பது தாமாகப் புரியும்.

அதுசரி, சூதுவாது அற்ற பேதைமைக் குணம் பெண்களுக்கு மட்டும்தான் அணிகலனா? ஆண்களுக்கு அது என்ன அடிமைச் சங்கிலியா என்ற கேள்வி எழுமே, எழுகிறதே?

அதற்கு இப்படிச் சிந்திக்கலாம். ‘பேதைமை என்பது மாந்தர்க்கு அணிகலன்’. அது திரிந்து மாதர்க்கு என ஆகிவிட்டது.

இருப்பினும் அணிகலன்களை அதிகம் விரும்பி அணிவது பெண்களாக இருப்பதால், சூதுவாது அற்ற நற்குணமாகிய பேதைமை ஆனது மாதர்க்குச் சிறந்த அணிகலன் போன்றது என்பதும் பொருத்தமானதே.

 ***

கொன்றைவேந்தன்- 67

பையச் சென்றால் வையம் தாங்கும்

விளக்கம்:


நிதானமாக நடந்து கொண்டால் இந்த உலகம் நம்மைத் தாங்கும் என்கிறார் ஔவையார்.

‘பைய’ என்பது பாண்டிய நாட்டுச் சொல்வழக்கு. இதற்கு மெல்ல, மெதுவாக என்று பொருள். அவசரமின்றி நிதானமாக நடத்தலும் ‘பைய’ எனப்படும்.

மதுரையில் சிவனடியார் திருமடத்துக்கு சமணர்கள் தூண்டுதலால் தீயவர்கள் தீ வைத்தபோது அந்தத் தீயை ‘பையவே சென்று பாண்டியனுக்கு ஆகுக’ என்று திருஞான சம்பந்தர் பணித்ததாக தேவாரம் குறிப்பிடுகிறது. அரசாட்சி செய்வோர் நடுநிலையோடு செயலாற்றாவிட்டால், தவறுகளைத் தடுக்கத் தவறினால் அதற்குரிய பலனை அவர்களே அனுபவிக்க வேண்டும் என்பதால், தீயோர்கள் வைத்த தீயை ‘பையப் போய் பாண்டியனைப் பற்றுவதற்கு’ மடை மாற்றிவிட்டார் திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். மெதுவாகத் தீயதன் பலனை அனுபவிக்கும்போது தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக அப்படிச் சொன்னார்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஆக, பைய என்றால் நிதானமாக எனப் பொருள். பரபரப்பாகவோ அவசரமாகவோ செயலாற்றும்போது பதற்றம் ஏற்பட்டு சிந்தை தடுமாறி செயல் சீர்குலைய வாய்ப்புண்டு. நிதானமாகச் செயல்படும்போது சிந்தனை சீராக இயங்கி காரியம் கைகூடும். ஆகையால் நிதானமாகச் செயல்படுவோரை உலகம் தாங்கும்; ஆதரவளிக்கும்.

அவ்வாறு இல்லாமல் நிதானமின்றிச் செயல்பட்டால் உலகம் தாங்காது. பரபரப்பாக, இயந்தரகதியாக, நிதானம் தவறி மக்கள் இயங்குவதால் உலகுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களை அனைவரும் அறிவோம். அதன் பலன்களையும் அனுபவித்து வருகிறோம். இவ்வாறான நிதானமற்ற செயல்பாடுகள் தொடர்ந்தால் உலகம் நம்மைத் தாங்காது. பைய என்பதற்கு மென்மையாக என்றும் பொருள் உண்டு. அந்த மென்மை தவறி, வன்மை தலைதூக்கும்போது வையம் தாங்காது குமுறும். அது இயற்கைச் சீற்றமாகவும் வரும்; கடுமையான எதிர்விளைவாகவும் வரும்.

‘அதிர நடக்காதே, பூமாதேவி சாபமிடுவாள்’ என்று கிராமத்துப் பெரியோர்கள் எச்சரிப்பார்கள். இந்த அதிர நடத்தல் காலை அழுத்தி நடப்பதை அல்ல, அதிர்ச்சியூட்டும் வகையில் அடாவடியாக நடப்பதையே முக்கியமாகக் குறிக்கிறது.

நமது செயல்களில் நிதானமும், மென்மையும் வேண்டும். அப்போதுதான் உலகம் நம்மைக் கொண்டாடும்; தாங்கிக் கொள்ளும். இதனைத்தான் ஔவையார் ‘பையச் சென்றால் வையம் தாங்கும்’ என எளிமையாகக் கூறியுள்ளார்.

 ***

கொன்றைவேந்தன்- 68

பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்

விளக்கம்:


தீயவை என்று கருதுவதற்கு இடமுள்ள அனைத்தையும் தவிர்த்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

பொல்லாங்கு என்பதற்கு தீது, தீங்கு, குறை, குற்றம், பொல்லாதது, ஈனம், கெடுதி, மறதி எனப் பல பொருள் உண்டு. எல்லாம் என்ற சொல்லுக்கு அனைத்து வகையிலான என்று பொருள். தீமை என வகைப்படுத்தக் கூடிய அனைத்தும் என எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒருவகையில் தீயது என இனம் காணக் கூடிய எல்லா விஷயங்களையும் இவ்வகையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொய் சொல்லல், புறம் கூறல், கோள் மூட்டுதல், பொறாமைப் படுதல், பேராசை கொள்ளுதல், சந்தேகித்தல், சந்தர்ப்பவாதம் பேசுதல், வம்பளத்தல், வதந்தி கிளப்புதல், வில்லங்கம் செய்தல், வீண்சண்டை இழுத்தல், குற்றமாய்க் காணுதல், குறை கூறிக் குத்துதல், கபடமாய் நடித்தல், வஞ்சித்தல், திருடுதல், கொள்ளையடித்தல், கையூட்டுப் பெறுதல், ஊழல் புரிதல், ஏமாற்றுதல், துரோகம் இழைத்தல், கொல்லுதல், சதித் திட்டம் தீட்டுதல் - இப்படியாக பொல்லாங்கை வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

எனவே, எல்லா வகையிலான துன்பம் விளைவிக்கும் தீங்குகளையும், ஈனத்தை ஏற்படுத்தும் இழிசெயல்களையும் கண்டறிந்து அவற்றை ஒதுக்க வேண்டும்; செய்யாமல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.
 
***

கொன்றைவேந்தன்- 69

போனகம் என்பது தானுழுது உண்ணல்

விளக்கம்:


உணவு என்பது தன்னுழைப்பில் கிடைப்பதை உண்ணுவதையே குறிக்கும் என்கிறார் ஔவையார்.

‘போனகம்’ என்பதற்கு உணவு, உணவு வகை எனப் பொருள். உழவு என்பது வேளாண் தொழிலை முக்கியமாகக் குறித்தாலும், வேறு எல்லா வகை கடின உழைப்புப் பணிகளையும் குறிக்கும். உழை என்பதற்கு வருந்தி முயற்சி மேற்கொள்ளல், கடினமாகப் பணியாற்றல் என்று பொருள். மற்ற எல்லாத் தொழில்களையும் விட விவசாயத்துக்கே அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் ‘உழை’ என்பதை வேர்ச் சொல்லாகக் கொண்ட உழவு என்ற சிறப்புச் சொல், விவசாயத்துக்கு அமையப் பெற்றது.

ஆகையால் ஔவையார் இங்கே ’தான் உழுது உண்ணல்’ என்று கூறியிருப்பதன் பொருள், தனது கடின உழைப்பால் கிடைக்கும் வருவாயில் உண்பது என்று பொருள்படும்.

பிறர் அன்போடு அளிப்பது விருந்து. அது ஓரிரு நாள்களுக்குச் சரி. தினசரி பிறர் கொடுப்பதை உண்டால் அது பிச்சை. உண்மையான துறவிகள் பிச்சை ஏற்றாலும் அவர்களுக்குக் கொடுத்தாலும் புண்ணியம், மேன்மை. பிறர் பிச்சை ஏற்பது அவமானம். (உழைக்க இயலாதவர்கள் இதற்கு விதிவிலக்கு.)

அதைவிட அவமானம், உழைக்கத் தெம்பிருந்தும் வாய்ப்பிருந்தும் அதனைத் தவிர்த்து பிறர் உழைப்பில் உண்பது.

இங்கே கடின உழைப்பு என்பது உடல் உழைப்பை மாத்திரமல்ல, அறிவைக் கொண்டு உழைப்பதையும் குறிக்கிறது. புலவர்களை ‘சொல்லேர் உழவர்’ என்றே சான்றோர் குறிப்பதால், புலமை, கலைத் திறமை போன்றவையும் கடின உழைப்பே.

வளர்ந்த மனிதர் எவ்வகையினாலும் தன் உழைப்பில் உண்ண வேண்டும். அப்போது தான் அது உணவு என்றே சொல்லத் தகும்.

இதனைத்தான் ஔவைப் பிராட்டியார் ‘போனகம் என்பது தானுழுது உண்ணல்’ என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
***
கொன்றைவேந்தன்- 70

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

விளக்கம்:


உண்பது அருமருந்து என்னும் அமுதமாக இருந்தாலும்கூட உற்றார், உறவினர், சுற்றத்தோடு உண்பதே மேல் என்கிறார் ஔவையார்.

மருந்து என்பது உயிர் காப்பது; உடல்நலம் பேண உதவுவது. அதிலே நீண்ட ஆயுட்காலம் திடகாத்திரமாக வாழ உதவும் அமிர்தமானது ‘மருந்து’ என்ற பெயரிலேயே சிறப்பித்துப் போற்றப்படுகிறது.

அத்தகைய உயர்ந்த தேவாமிர்தம் ஆகினும் தனித்து உண்ணாமல் பலரோடு சேர்ந்து உண் என்கிறார் ஔவையார். இது, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனாகிய புலவன் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை நினைவுறுத்துகிறது:

“உண்டால் அம்ம இவ்வுலகம்
இந்திரன் அமிழ்தம் இயைவது ஆயினும்
தமியர் உண்டலும் இலரே”

-என்பது அப்பாடல்.

இதன் பொருள்: “இந்திர லோகத்து அமிழ்தமாக இருந்தாலும்கூடத் தனியாக உண்ணாமல் சேர்ந்து உண்ணும் உயர்ந்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது.”

நமது முன்னோர்களின் அத்தகைய உயர்ந்த உள்ளம் நமக்கும் வேண்டும் என்பதற்காகத் தான் ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.

மற்றொரு கோணத்திலும் இதனை நாம் நோக்கலாம். மருந்து என்பதற்கு சிறிய அளவு என்றும் பொருள் உண்டு. ஏதேனும் ஒரு பொருள் சிறிதளவேனும் இல்லை என்பதைக் குறிக்க, அப் பொருள் மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்வது வழக்கம். மருந்து, மாத்திரைகளை அள்ளிச் சாப்பிட மாட்டோம்; சிறிய அளவிலேயே உட்கொள்வோம். ஆகையால் மருந்து என்ற சொல், சிறிய அளவையும் சுட்டிக்காட்டுகிறது.

நம்மிடம் மருந்தைப் போல சிறிய அளவில் மட்டுமே உணவு இருந்தாலும்கூட அதை சுயநலமாக தானே உண்ணாமல், பசியோடு வந்திருக்கும் விருந்தினர்களை உபசரித்து, பகிர்ந்து உண்பதே சிறந்தது என்றும் ஔவை சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம்.

ஆக, விலை மதிப்பிட முடியாத உயர்ந்த வகை அரிய உணவாக இருந்தாலும் சரி, சொற்ப அளவிலான எளிய உணவாக இருந்தாலும் சரி, விருந்தினர்களோடு பகிர்ந்து அளித்து உண்பதே பண்பு என்று பகர்கிறார் ஔவையார்.

(தொடர்கிறது...)

 
***

No comments:

Post a Comment