16/11/2021

கைக்கிளை (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்



***

உன்மேல் பாய்ச்சும்
என் மின்சாரப் பார்வையை
அணில் போல ஏன் அடிக்கடி
அறுத்து விடுகிறாய்?

காதலை வளமையாக்க
ஐந்து நபர் ஆலோசனைக் குழுவை
நீயேன் அமைக்கக் கூடாது?
உன் விருப்பமெனில் சொல்...
ஒன்றியமென்று என் பெயரை
மாற்றிக் கொள்கிறேனே...

என் முடிவு எப்போதும்
மத்திய அரசு சட்டம் போல.
சட்டமன்றத் தீர்மானம் போல
அதை நீக்கி விடாதே.

ஆடி காரில் வந்து உனக்காக
காத்திருக்கிறேன்.
இலவசப் பயணப் பேருந்துக்காய் நீ
கால்வலிக்கக் காத்திருக்கிறாய்.

நான் எப்போதும்
நுழைவுத்தேர்வுகளுக்கு
அஞ்சுவதில்லை.
என் பதில்களை எழுதிவிட்டேன்.
உன் கேள்விகளையாவது
கேட்டுத் தொலையேன்.

கொரோனா கால
காய்கறி வண்டி போலுன்
வீடு தேடி வருகிறேன்.
தடுப்பூசி மையம் போல
தாளிட்டுப் போகிறாயே?

பெட்ரோல் விலை
வேகமாய் உயர்கிறது.
நம் சந்திப்பு வேகமேன்
மைலேஜ் போல் குறைகிறது?

உன் தரிசன நேரத்தை
தவறவிடக்கூடாதென
இரண்டு கடிகாரங்களில்
மணி பார்த்திருக்கிறேன்.
ஒரு கடிகார நேரப்படியாவது
ஒழுங்காய் நீ வரக்கூடாதா?

GST நிலுவைத் தொகை போல
என்னை நிறுத்தி வைக்கலாமா?
‘ஜெய்ஹிந்த்’ வார்த்தை போல
என்னை ஒதுக்கிவைக்கலாமா?

நெல்மூட்டைகளாய்
விரக்திமழையில் வீணாகிறேன்.

வேறுவழியில்லை...
2,500 கோடி பூங்காங்களில்
புல்தரையாகிவிடுகிறேன்.
பாதம் பதிய நடப்பாயல்லவா?
பரமகதி அடைவேனல்லவா?





No comments:

Post a Comment