16/11/2021

காணி நிலம் வேண்டும் (கவிதை)

-மகாகவி பாரதி 


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 45)

காணி நிலம் வேண்டும் பராசக்தி 
காணி நிலம் வேண்டும் - அங்கு 
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினவாய் - அந்தக் 
காணி நிலத்திடையே ஓர் மாளிகை 
கட்டித் தர வேண்டும் - அங்கு 
கேணியருகினிலே - தென்னைமரம் 
கீற்றும் இளநீரும்

 
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் 
பக்கதிலே வேணும் - நல்ல 
முத்துச் சுடர்போலே - நிலாவொளி 
முன்பு வரவேணும் - அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து 
காதிற் படவேணும் - என்றன் 
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் 
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு 
பத்தினிப் பெண்வேணும் - எங்கள் 
கூட்டுக் களியினிலே - கவிதைகள் 
கொண்டு தரவேணும் - அந்தக் 
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுற வேணும் - என்றன் 
பாட்டுத் திறத்தாலே -  இவ்வையத்தைப் 
பாலித் திட வேணும்!



No comments:

Post a Comment