16/11/2021

கண்ணம்மா என் குழந்தை (கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 47)


பாரதியின் பாடல் முன்குறிப்புகள்:
ராகம்: பைரவி
தாளம்: ரூபகம்

(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

ஸ ஸ ஸ-ஸா ஸா-பபப
    தநீத-பதப-பா
பபப-பதப-பமா-கரிஸா
    ரிகம-ரிகரி-ஸா

என்ற ஸ்வர வரிகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.
***
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
    செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
    ஏற்றம் புரிய வந்தாய்! 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
    பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
    ஆடி வருந்தேனே! 2

ஓடி வருகையில் - கண்ணம்மா
    உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
    ஆவி தழுவு தடீ! 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
    ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்கு தடீ! 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
    உன்மத்த மாகு தடீ! 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
    சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
    நெஞ்சம் பதைக்கு தடீ! 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
    உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
    என்னுயிர் நின்ன தன்றோ? 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
    துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
    மூர்க்கந் தவிர்த்திடு வாய். 8

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
    ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
    ஆகுமோர் தெய்வ முண்டோ? 9

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
    வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
    செல்வம் பிறிது முண்டோ? 10


No comments:

Post a Comment